வள்ளி மணாளன் ”விஜயவல்லீ பர்த்ரே”: அதுதான் வேடிக்கை நிஜ ஞானியுடைய வேடிக்கை அவன் வெளியிலே எப்படி வேணுமானாலும் வேஷம் போடுவான் மஹாவீரனாக

வள்ளி மணாளன்

”விஜயவல்லீ பர்த்ரே”:

அதுதான் வேடிக்கை. நிஜ ஞானியுடைய வேடிக்கை. அவன் வெளியிலே எப்படி வேணுமானாலும் வேஷம் போடுவான். மஹாவீரனாகக்கூட இருப்பான் என்றேனோல்லியோ? ச்ருங்கார நாயகனாகக் கல்யாணம் கார்த்திகை பண்ணிக் கொண்டுகூடக் கூத்தடிப்பான். திருச்செந்தூரில் வீர பராக்ரமரான சூர ஸம்ஹார மூர்த்தி, பழநியிலே ஸந்நியாஸி, ஸ்வாமி மலையில் பிரம்மச்சாரியாயிருக்கிற குருமூர்த்தி, அவரே திருப்பரங்குன்றத்தில் தேவஸேனையின் பதி, திருத்தணியில் வள்ளியையும் சேர்த்துக் கொண்ட இரட்டைப் பெண்டாட்டிக்காரர்! ‘விஜயவல்லி’ என்பது வள்ளிதான். ‘அவளுடைய பர்த்தாவுக்கு (நமஸ்காரம்)’ என்பதுதான் ‘விஜயவல்லி பர்த்ரே’. வெற்றி வேலன் என்கிறபடி அவரோடு ஜயம், விஜயம் (விசேஷமான ஜயம்தான் விஜயம்) எப்போதும் சேர்ந்திருக்கும். அவருக்கு இரண்டு பக்கங்களில் நிற்கிற பத்னிகளில் தேவஸேனைக்கு ஜயந்தி என்றே பெயர். மற்றவள் விஜயவல்லி. ஸுப்ரஹ்மண்யரைப் பற்றி ரொம்பவும் ஜனரஞ்ஜகமான விருத்தாந்தம் வள்ளி கல்யாணம்தான். அதிலேயே பரம வேதாந்தம் – இந்த்ரிய வேடர்களுக்கு நடுவில் சிக்கிக் கொண்டிருக்கிற ஜீவாத்மாவைப் பரமாத்மா விடுவித்துத் தன்னோடு அப்படியே சேர்த்துக் கொண்டுவிடுவதற்கு ரூபகமாக வள்ளி கல்யாணக் கதை இருக்கிறது.

ஒரு வேடப் பெண் பரம ப்ரேமையோடு பக்தி பண்ணினதற்காக ஸாக்ஷாத் லோக மாதாபிதாக்களின் குமாரர் தினுஸுதினுஸாக வேஷம் போட்டுக் கொண்டு கூத்தடித்துக் கல்யாணம் பண்ணிக் கொண்டது அவர் எப்பேர்ப்பட்ட தீன சரண்யர் என்பதற்குப் பெரிய சான்றாக இருக்கிறது.