வேடனே ராஜா; ஜீவனே பிரம்மம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஆசார்யாளும் பின்னால் வந்தவர்களும் சாந்தோக்ய உபநிஷத்துக்கு பாஷ்யம் பண்ணும்போது, அதில் மூன்றாவது, நாலாவது அத்தியாயங்களில் வரும் ‘மதுவித்யை’, ‘ஸம்வர்க வித்யை’ முதலானவற்றை விளக்கும் போது த்ரவிடாச்சார்யாளை quote செய்திருக்கிறார்கள்.

இந்த சாந்தோக்ய உபநிஷத்தில்தான் ‘தத்-த்வமஸி’ என்ற மஹா வாக்கியம் வருகிறது. “நீயேதானப்பா அந்த பிரம்மமாயிருக்கிறாய்” என்று ச்வேதகேதுவுக்கு அவனுடைய பிதாவும் குருவுமான உத்தாலக ஆருணி திரும்ப திரும்ப ஒன்பது தடவை செய்த உபதேசம் அது.

‘தத்-த்வம்-அஸி’ என்பதில் ‘தத்’ என்பது பரமாத்மாவான பிரம்மம்; ‘த்வம்’ என்பது ஜீவாத்மா : அதற்கு ‘பெர்ஸானிஃபிகேஷனா’க உள்ள ச்வேதகேது; ‘அஸி’ என்றால் ‘இருக்கிறாய்.’ “நீ பிரம்மமாக இருக்கிறாய்” என்று தகப்பனார் உபதேசிக்கிறார் – “ஸாதனைகளெல்லாம் செய்து என்றைக்கோ ஒருநாள் பிரம்மமாக ஆகப்போகிறாய்” என்று அல்ல! எதிர்காலத்தில் இல்லை; இப்போதும் எப்போதும் எல்லோரும் எல்லாமும் பிரம்மம்தான். இனிமேலேதான் பிரம்மமாக வேண்டும் என்பதில்லை.

‘அப்படியானால் ஸாதனை எதற்கு?’ என்றால்… பிரம்மமாக இருந்தாலும் அதை நாம் தெரிந்து கொள்ளவில்லையே! தெரிந்து கொண்டிருந்தோமானால் இத்தனை அழுகை, இத்தனை காமம், கோபம், இத்தனை பயம் நமக்கு இருக்கவே இருக்காதே! அலையே எழும்ப முடியாமல் ஆகாசம் வரை முட்டிக்கொண்டு நிற்கிற ஆனந்த சமுத்திரமாக அல்லவா பிரசாந்த நிலையில் இருந்து கொண்டிருப்போம்? அப்படி ஒரு நிலை உண்டு என்று கூடத் தெரியாதவர்களாக அல்லவா இப்போது நாம் தடமாடிக் கொண்டிருக்கிறோம்? இப்படிப்பட்ட நம்மிடம், ‘நீ இப்போதும் பிரம்மம் தானப்பா’ என்றால் எப்படி ஒப்புக் கொள்வது?

இதை ஒப்புக்கொள்ள வைப்பதற்காகத்தான் த்ரவிடாச்சார்யாள் வேடப் பையன் மாதிரி இருந்த ராஜகுமாரனின் கதையைச் சொல்லியிருக்கிறார்.

ப்ருஹதாரண்யக உபநிஷத் பாஷ்யத்தின் நடுவிலே (II-1-20) சங்கர பகவத் பாதாள், சிலந்தி தன்னிலிருந்தே நூலை இழுத்து வலை பின்னுகிற மாதிரியும், அக்னி தன்னிலிருந்தே பொறிகளை உதிர்க்கிற மாதிரியும், ஆத்மாவிலிருந்தே அத்தனை பிரபஞ்சமும் தோன்றியிருக்கிறது என்ற மந்திரத்துக்கு ரொம்ப விஸ்தாரமாக அர்த்தம் பண்ணிக்கொண்டு போகிற போது, இந்தக் கதையை மேற்கோள் காட்டுகிறார். இது த்ரவிடாசார்யாள் சொன்னது என்று பேரைச் சொல்லாமல் ரொம்பவும் மரியாதையுடன், “ஸம்பிரதாயமறிந்த பெரியவர்களின் கதை இப்படியொன்று இருக்கிறது” – அத்ர ச ஸம்ப்ரதாயவித ஆக்யாயிகாம் ஸம்ப்ரசக்ஷதே – என்கிறார். ஆசார்யாளின் பாஷ்யத்தை மேலும் விரித்து உரை எழுதின ஆனந்தகிரி என்பவரே இது திராவிடாசார்யார்கள் சொன்ன கதை என்று பேரை வெளியிட்டிருக்கிறார்.

கதையிலே வேடப் பையனாக இருந்தவன் ராஜ குமாரனாக உருமாறவா மாறினான்? Transform ஆனானா என்ன? வேடப் பையனாகவே தன்னை நினைத்துக் கொண்டிருந்த காலத்திலும் அவன் ராஜா பிள்ளைதானே? இதை முதலில் தெரிந்து கொள்ளாதிருந்தான். அதனால் வேடன் மாதிரி வாழ்க்கை நடத்தினான். உண்மையைத் தெரிந்து கொண்டு விட்டவுடன், ராஜகுமாரனாகவே எப்போதும் இருந்தவன், ராஜகுமாரனாகவே அநுபவத்தில் வாழ்ந்து காட்டினான். இரண்டுபேர் இல்லை; ஒருத்தன் இன்னொருத்தனாக மாறவில்லை. ஒரே பேர்வழிதான் முதலில் தன்னைத் தானே புரிந்து கொள்ளாமல் இருந்தான். அப்புறம் புரிந்துகொண்டு விட்டான். புரியாத நிலையில் வேடனாக எங்கேயோ கீழ்நிலையில் கிடந்தவன் புரிந்து கொண்டவுடன் ராஜகுமாரனாக உயர்வு பெற்றுவிட்டான். அப்புறம் சண்டை போட்டு ஸாம்ராஜ்யாதிபதியாகவே ஆகிவிட்டான்.

வேட வேஷத்தில் (வேட வேடத்தில்: ‘வேஷம்’ என்பது தமிழில் ‘வேடம்’ என்றாகும்) இருந்த ராஜகுமாரன் மாதிரித் தான் நாமெல்லாம் ஜீவாத்மா என்ற வேஷத்தில் ஸம்ஸாரிகளாகவே நம்மை நினைத்துக் கொண்டிருந்தாலும் வாஸ்தவத்தில் நாமும் பரமாத்மாவேதான். வேஷம் இப்படியானாலும் நமக்கு உள்ளே இருக்கிற வஸ்து இப்போதும் பரமாத்மாதான். இந்திரியங்கள் இழுக்கிற வழியில் ஓடி வேட்டையாடிக் கொண்டிருக்கிறோம். நாம் பிரம்மம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து கொண்டாலும் அதை அநுபவத்தில் கொண்டுவர முடியாதபடி இந்திரியங்கள் இழுத்துக் கொண்டே இருக்கும். ராஜகுமாரனாகவே இருந்தாலும் வாஸ்தவத்தில் அரசத்தன்மையை அடைவதற்காக அவன் அஸ்திர சஸ்திர அப்பியாஸம் பண்ணி எதிரிகளை ஜயித்து ஸாம்ராஜ்யாதிபதியான மாதிரி, நாமும் பிரம்மமாகவே எப்போதும் இருந்தாலும் அதை உணராமலிருப்பதால் கர்மத்தில் ஆரம்பித்து பக்தி வழியாக, ஞான சாதனைகளைச் செய்து, உட்பகைகளையெல்லாம் ஜயித்து, ஆத்ம ஸாம்ராஜ்யத்தில் ராஜாவாக ஆகவேண்டும். ‘ஸம்ராட்’ – அதாவது ராஜா – என்றே உபநிஷத்தில் ஆத்ம ஞானியைச் சொல்லியிருக்கிறது.

ஐஸும் ஸ்படிகமும் ஒரே மாதிரித்தான் வெளிப்பார்வைக்கு இருக்கின்றன. ஆனால் ஐஸ்தான் உருகி ஜலமாகுமே தவிர, ஸ்படிகம் ஜலமாகாது. ஏனென்றால் எது ஜலமாகவே இருந்து அப்புறம் உறைந்து வேறே வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறதோ அதுதான் உருகி மறுபடியும் தன் ஸ்வயமான பூர்வ ரூபத்தை அடைய முடியும். பிரம்மமே ஜீவனாக உறைந்து போயிருப்பதால்தான், இந்த ஜீவாத்மாவும் உருகிப் போனால் மறுபடியும் பிரம்மமாகவே அநுபவத்தில் ஆக முடிகிறது.

ஐஸ் தானாக கரைகிறது; நாம் கரைய மட்டோம் என்கிறோம்.

கல்லேனும் ஐய ஒரு காலத்தில் உருகும்

என் கல்நெஞ்சம் உருகவில்லையே!

என்று தாயுமான ஸ்வாமிகள் நம் நிலைக்கு இறங்கி வந்து நமக்காகத்தான் பாடியிருக்கிறார்.

நம்மை உருக வைக்க ஒன்று தேவைப்படுகிறது. கதையில் ராஜகுமாரனை practical- ஆக ராஜகுமாரனாக்குவதற்காக ஒரு மந்திரி வந்த மாதிரி, நம்மை உருக்கி ‘நிஜ நாமாகப்’ பண்ண ஒருத்தர் வேண்டும். அவன் ‘வரமாட்டேன்’ என்று முரண்டு செய்தாலும் வலிய இழுத்த மந்திரி மாதிரி, பாரமார்த்திகத்தின் பக்கமே போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிற நம்மைக் கட்டி இழுக்க ஒருத்தர் வேண்டும். அப்படி ஒருத்தர் இருக்கிறாரா? நம்மை நம்முடைய நிஜ நாமாக ஆக்கக்கூடிய ஒருத்தர் இருக்கிறாரா?

இருக்கத்தான் செய்கிறார்.

வேடப் பையனுக்கு “நீதானப்பா ராஜகுமாரன்” என்று சொல்லிப் புரிய வைத்து, அவனுக்கு அஸ்திரப் பயிற்சி கொடுத்து, அவனை ராஜாவாக்குவதற்காக அவனை விட ஜாஸ்தி உழைத்த மந்திரி இந்த ஒருத்தருக்குத்தான் ரூபகம் [உருவகம்]. நமக்கு நம் பரமாத்மத்வத்தை எடுத்துச் சொல்லி, அதை நாம் அநுபவமாக்கி கொள்வதற்கான ஸாதனைகளைச் செய்ய வைத்து, நம் கர்மா பாக்கி தீருவதற்காக தாமே தபஸைச் செலவு செய்து உபகாரம் பண்ணும் அந்த ஒருத்தர் தான் குரு என்பவர்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is த்ராவிட விஷயம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  குரு பக்தி
Next