கண் என்பது ஏன்? : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

நம்முடைய வைதிக மதத்திற்கு ஆதாரமாகிய பதிநான்கு வித்யாஸ்தானங்களுள் ஷடங்கங்களில் சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம் என்பவற்றைப் பற்றிச் சொன்னேன். அடுத்தது ஜ்யோதிஷம் (சோதிடம்) என்பது.

வேதபுருஷனுக்கு ஜ்யோதிஷம் நேத்திர ஸ்தானம், அதாவது கண்.

ஜ்யோதிஷ சாஸ்திரமானது மூன்று ஸ்கந்தங்கள் அடங்கியது. அதனால், அதற்கு “ஸ்கந்த த்ரயாத்மகம்” என்று பெயர்.

கர்க்கர், நாரதர், பராசரர் முதலிய பல ரிஷிகள் பல ஜ்யோதிஷ ஸம்ஹிதைகளைச் செய்திருக்கிறார்கள். ஸூரிய பகவான், அசுரத் தச்சனாகிய மயனுக்கு ஜ்யோதிஷ உபதேசம் பண்ணினதாக ஒரு கிரந்தம் இருக்கிறது. அதற்கு, “ஸூரிய ஸித்தாந்தம்” என்று பெயர். இப்படித் தேவர்களும் ரிஷிகளும் இயற்றிய பல ஜ்யோதிஷக் கிரந்தங்கள் உண்டு. மனிதர்கள் செய்த கிரந்தங்களும் இருக்கின்றன. வராஹமிஹிரர் என்பவர் பல கிரந்தங்களை எழுதியிருக்கிறார். ஆர்யபடர், பாஸ்கராசாரியார் முதலியவர்கள் பண்ணின கிரந்தங்கள் பல இருக்கின்றன. சமீப காலத்தில் சுந்தரேச்வர ச்ரௌதிகள் என்பவர் சித்தாந்த கௌஸ்துபம் என்ற ஜ்யோதிஷ க்ரந்தத்தைச் செய்திருக்கிறார்.*

ஜ்யோதிஷத்தை ஏன் வேத புருஷனுக்குக் கண்ணாகச் சொல்லியிருக்கிறது?

கண் இல்லாதவன் குருடன். கண் எதற்காக இருக்கிறது? பக்கத்திலுள்ள வஸ்துக்களைக் கையினால் தடவிப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். தூரத்திலுள்ளதன் ரூபம் தெரிய வேண்டுமானால், அப்பொழுது கண்ணினால் பார்த்தே தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இடத்திலே தூரத்தில் இருப்பதைத் தெரிந்துகொள்ள நம்முடைய கண் எப்படி உபயோகப்படுகிறதோ, அப்படிக் காலத்திலே தூரத்தில் (அதாவது பல வருஷங்களுக்கு முன்னால் அல்லது பல வருஷங்களுக்கு அப்புறம்) உள்ள க்ரஹ நிலைகளைத் தெரிந்து கொள்ள ஜ்யோதிஷ சாஸ்திரம்தான் உதவி புரிகிறது. இன்றைக்கு சூரியனும் சந்திரனும் மற்ற க்ரஹங்களும் எங்கே இருக்கின்றன என்பதைப் பிரத்யக்ஷத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். கண்ணில்லாவிட்டாலும் கையால் தடவியே கிட்டத்தில் உள்ளதன் ரூபத்தைத் தெரிந்து கொள்வதுபோல், ஜ்யோதிஷ சாஸ்திரம் தேவைப்படாமல் நம் கண்ணாலேயே பார்த்து, காலத்தில் கிட்டே, அதாவது நிகழ்காலத்தில் உள்ள கிரஹ நிலைமைகளை அறிந்து கொண்டுவிடலாம். ஆனால் 50 வருஷத்துக்கு முன்னால் அல்லது பின்னால் கிரஹங்கள் எங்கே இருக்கும் என்று தெரிய வேண்டுமானால் ஜ்யோதிஷ சாஸ்திரத்தைப் பார்த்தாலே தெரியும்!

கிட்டத்தில் உள்ளதைத் தடவிப் பார்த்து, அதன் உருவத்தை அறிகிறபோதுகூட அது பச்சையா, சிவப்பா, வேறு என்ன கலர் என்று தெரிந்து கொள்ள முடிவதில்லை. இதை அறியக் கண் வேண்டியிருக்கிறது. இதே போல, பிரத்யக்ஷத்தில் ஒரு கிரஹம் தெரிந்தால்கூட, அது அந்த நிலையில் இருப்பதால் ஏற்படுகிற பயன் என்ன, அது நம்மை எப்படிப் பாதிக்கிறது என்று நமக்குத் தெரியாது. இதை ஜ்யோதிஷந்தான் நமக்குத் தெரிவிக்கிறது.

ஆகவேதான், ஜ்யோதிஷத்தை வேத புருஷனுக்குக் கண் என்றார்கள். வைதிகக் காரியங்களைச் செய்வதற்கு, இன்னின்ன க்ரஹம் இன்னின்ன இடத்தில் இருக்க வேண்டும் என்ற விதி உண்டு. ‘நாள் பார்ப்பது’, ‘முஹூர்த்தம் வைப்பது’ என்றெல்லாம் க்ரஹ நிலைகளை ஒட்டித்தானே சடங்குகளைப் பண்ண வேண்டியிருக்கிறது? இதனால் ஜ்யோதிஷம் நேத்ர ஸ்தானத்தைப் பெறுகிறது.

ஜ்யோதிஷத்துக்கு ‘நயனம்’ என்று ஒரு பெயர் உண்டு. ‘நய’ என்றால் அழைத்துக் கொண்டு போவது (to lead). கண்ணில்லாதவனை இன்னொருவர்தானே அழைத்துக் கொண்டு போக வேண்டியிருக்கிறது? அதனால் கண்தான் அழைத்துப் போகிற லீடராக இருக்கிறது என்பது தெரிகிறது! வேத கர்மாக்களைப் பண்ணுவதற்கான காலத்தை நிர்ணயம் பண்ணி, நம்மை அந்தக் காரியத்துக்கு அழைத்துக் கொண்டு போகிற கண்ணாக இருப்பது ஜ்யோதிஷமே.


* வேத அங்க ஜ்யோதிஷம் என்றே ரிக், யஜுர் வேதங்களுக்கு இருப்பதில் இன்று கிடைத்திருப்பது விலக்க வேண்டிய முஹூர்த்தங்களை மட்டுமே கூறுகிறது. இதை விட விரிவானதாகக் கருதப்படும் ஆதர்வண ஜ்யோதிஷம் என்பது கிடைக்கவேயில்லை.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is நிருக்தம் : வேதத்தின் காது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  வான சாஸ்திரமும் ஜோஸ்யமும்
Next