14 பிரமாண நூல்கள் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

அந்தப் பதினான்காவன:‍‍- நான்கு வேதங்கள்; வேதங்களின் ஆறு அங்கங்கள்; அதோடு, மீமாம்ஸை, நியாயம், புராணம், தர்மசாஸ்திரம் என்ற நாலு.

வேதத்தைப் பற்றியும் ஆறு அங்கங்களைப் பற்றியும் reference-‍ஆவது கேட்டிருப்பீர்கள்.

“வேதமோ டாறங்க மாயினானை”

என்று தேவாரம் சொல்லுகிறது. நாலு வேதமும், ஆறு அங்கமுமான இந்தப் பத்தும் ஈச்வர ஸ்வரூபம் என்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இவை போக பாக்கி நான்கு: மீமாம்ஸை, ந்யாயம், புராணம், தர்மசாஸ்திரம்.

‘சதுர்தசம்’ என்றால் பதினான்கு. சதுர்-நான்கு; தசம்-பத்து, ஆகவே பதினான்கு தர்மப் பிரமாணங்களை “சதுர்தச வித்யா” என்பார்கள். இந்தச் சதுர்தச வித்தைகளை நளன் கற்றுக் கொண்டான் என்று [நள சரித்திரமாகிய] “நைஷத”த்தில் சொல்லி இருக்கிறது. அங்கே சிலேடையாக அந்த விஷயம் சொல்லப்படுகிறது. “நளன் சதுர்தச வித்தைகளுக்குச் சதுர்தசையைக் கொடுத்தான்” என்று வார்த்தை விளையாட்டுப் பண்ணியிருக்கிறார் கவி! சதுர்-தசமான இந்தப் பதினான்கு வித்தைகளுக்கும் நான்கு தசைகளை (சதுர்தசைகளைக்) கொடுத்தானாம்! அந்த நான்கு தசைகள்: படிப்பது, படித்ததை புரிந்து கொள்ளுவது, படித்ததன்படி நடப்பது, மற்றவர்களை நடக்கச் செய்வது என்பவை.

சதுர்தசத்வம் க்ருதவான் குத: ஸ்வயம்

ந வேத்மி வித்யாஸு சதுர்தசஸ்வபி||

(நைஷத காவ்யம், I)

இந்தப் பதினான்கு வித்தைகளிலே அறிவு அடங்கி இருக்கிறது.

இன்னும் நான்கு வித்தைகள் இருக்கின்றன. அவைகளையும் சேர்த்துக் கொண்டால் பதினெட்டாகும். அஷ்டாதசம் என்றால் பதினெட்டு. இந்த அஷ்டாதச வித்தைகளில் அடங்காதது ஒன்றுமேயில்லை. லோகத்திலுள்ள ஸகல வித்தைகளும் அவைகளுக்குள்ளே அடங்கிவிடும். இந்தப் பதினெட்டில் நேராக தர்மத்தைச் சொல்லுபவை முன்பு சொன்ன பதினான்குதான். மீதமுள்ள ஆயுர்வேதம், அர்த்த சாஸ்திரம், தநுர்வேதம், காந்தர்வ வேதம் ஆகிய நான்கும் நேராக தர்மத்தைச் சொல்வன அல்ல. ஆயினும் அவையும் அறிவு தருவதால் வித்யா ஸ்தானங்களாக மட்டும் உள்ளன. மேலே சொன்ன பதினாலோ தர்ம ஸ்தானம், வித்யா ஸ்தானம் இரண்டாகவும் இருப்பவை.

ஆத்ம லோகத்தில் இன்பத்தை அடைவதற்கு ஏற்பட்ட ஸாதனங்கள் இவை.

தர்ம ஸ்தானம், வித்யா ஸ்தானம் என்பதோடு இவற்றை எல்லாம் பொதுவில் “சாஸ்திரம்” என்கிறோம். சாஸ்திரம் என்பதற்கு அர்த்தம் ‘கட்டளையாக இடப்பட்டிருப்பது’ என்பது. ராஜாங்க சாஸனம் என்கிற போது, சாஸனம் என்றால் கட்டளை என்று அர்த்தம். தர்மபுத்திரருக்கு பீஷ்மர் தர்மக் கட்டளைகளையெல்லாம் எடுத்துச் சொல்கிற பர்வத்துக்கு மஹாபாரதத்தில், ‘அநுசாஸன பர்வா’ என்றே பெயர். ஐயனார் என்பவரை சாஸ்தா என்று சொல்வது, அவர் உத்தரவு போட்டுப் பரமேச்வரனின் பூதகணங்களை எல்லாம் அடக்கி வைத்துக் கொண்டிருப்பதாலேயே! நம்மை ஒரு கட்டுப்பாட்டில், நெறியில் கொண்டு வந்து அடக்கி வைக்கிற கட்டளைப் புஸ்தகங்களே சாஸ்திரங்கள் எனப்படுபவை.

இந்தப் பதினாலும் நமக்கு ஆதார நூல்கள் என்றாலும், இவற்றில் வேதம்தான் தலைமையானது. மற்ற மதஸ்தர்கள் பைபிளை, குரானை, ஜெண்டவஸ்தாவை, த்ரிபிடகத்தை, க்ரந்த ஸாஹேபைத் தங்கள் மூல நூல் என்கிற மாதிரி நம் மதத்துக்கு எது என்றால், முக்கியமாக அது வேதம்தான்.

நாலு வேதத்தை மையமாகக் கொண்டு மற்ற பத்து வித்யைகளும் ஏற்பட்டிருக்கின்றன. இந்தச் சதுர்தச வித்யைகளுமே பூர்ணமாக நம் மதத்துக்கு சாஸ்திரங்களாகின்றன.