“சங்கர சம்பிரதாயம்” : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர்களை அநுஸரிக்கிற அத்வைதிகளுக்கு “ஸ்மார்த்தர்கள்” என்ற பெயரே இருக்கிறது. இப்போது ஸ்மார்த்தர்களாக இருக்கப்பட்ட இளைஞர்களிலேயே பலபேருக்கு இந்த [ஸ்மார்த்தர் என்ற] பெயர் தெரியவில்லை! தங்களை “ஐயர்” என்றே சொல்லிக் கொள்கிறார்கள்.

வைஷ்ணவர்கள், விசிஷ்டாத்வைதிகள் என்றால் ஐயங்கார். த்வைதிகள் ராவ்ஜிகளாக இருக்கிறார்கள், அதாவது பேருக்குப் பின்னால் ‘ராவ்’ போட்டுக் கொள்கிறார்கள். அல்லது ‘ஆச்சார்’ போட்டுக் கொள்கிறார்கள். இவர்கள் ஸ்ரீ மத்வாசாரியாரைப் பின்பற்றுவதால் ‘மாத்வர்’ என்கிறோம். இவர்களும் விஷ்ணு பக்திகாரர்கள்தான். ஆனால் வைஷ்ணவர்கள் என்றால் ஸ்ரீ ராமாநுஜாசாரியாரின் மதத்தை சேர்ந்தவர்கள் என்றே நினைக்கிறோம். மத்வர்கள் ‘ஆச்சார்’ போட்டுக் கொள்வதுபோல், ஸ்ரீ வைஷ்ணவர்களும் ‘ஆசாரியார்’ என்று போட்டுக் கொள்கிறார்கள். ‘ராஜகோபால ஐயங்கார்’ ‘ராஜகோபாலாசாரியார்’ இப்படி இரண்டு தினுசாகவும் போட்டுக் கொள்கிறார்கள். மத்வர் என்று ஸ்ரீ மத்வாசாரியார் பெயரை வைத்தே அந்த மதஸ்தவரை சொல்வது போல், ஸ்ரீ சங்கரர், ஸ்ரீ ராமானுஜர் இவர்களின் சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களை அந்தந்த ஆசார்யார் பெயரால் குறிப்பிடக் காணோம். ‘சங்கராத்வைதின்’ என்று ஏதாவது இங்கிலீஷ் ஃபிலாஸஃபி புஸ்தகத்தில் வேண்டுமானால் இருக்கும்; லெக்சரில் இந்த வார்த்தை அடிபடலாம். நடைமுறையில் இல்லை. த்வைதிகள் ராவ், விசிஷ்டாத்வைதிகள் ஐயங்கார், அத்வைதிகள் ஐயர் என்று இப்போது வைத்துக்கொண்டிருக்கிறோம்.

பொதுவாக ஸ்மார்த்தர்கள்தான் சாஸ்திரி, சர்மா என்றெல்லாமும் போட்டுக் கொள்கிறார்கள். தீக்ஷிதர்கள் என்று போட்டுக் கொள்பவர்களும் நம் பக்கத்தில் பெரும்பாலும் ஸ்மார்த்தர்களில் சிலர் மட்டும்தான். யாகம் பண்ணினவருக்கும், அவர் குடும்பத்துக்கும் ஏற்பட்டது இந்த ‘தீக்ஷிதர்’ பட்டம். (சிதம்பரத்து தீக்ஷிதர்கள் ஸமாசாரம் வேறு.) பொதுவில் அத்வைதிகள் ஐயர் ஜாதி என்றே இப்போது தங்களை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பேருக்குப் பின்னாடிப் போட்டுக் கொள்கிற ஜாதியைக் கொண்டு இப்படிச் சொல்லிக்கொள்கிறோம். இந்தத் தலைமுறைக்காரர்கள் ஜாதிப் பெயர் போட்டுக் கொள்வதில்லை. அது நிஷித்தமாகிவிட்டது! போன தலைமுறையிலும் ராவ்ஜிகளின் அளவுக்கு மற்றவர்கள் போட்டுக்கொள்ளவில்லை. ஆனால் தாத்தா காலத்துக்குப் போனால் நாம் எல்லோரும் ஒரு ஐயருக்கோ, ஐயங்காருக்கோ, ராவ்ஜிக்கோ பேரன் என்று ஆகும். ‘ஆச்சார்’ போட்டுக் கொண்டவர்களும், ‘நாங்கள் ஆச்சார் ஜாதி’ என்று சொல்லவில்லை. ராவ் அல்லது மாத்வர் என்றுதான் சொல்லிக் கொள்வார்கள். அப்படியே, ‘ஆசாரியார்’ என்று போட்டுக் கொள்ளும் வைஷ்ணவர்களும் தங்களை ஆசாரியார் ஜாதி என்று சொல்லிக் கொள்வதில்லை. ஐயங்கார் என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள். ஸ்மார்த்தர்கள் ஐயர் என்கிறோம். சர்மா ஜாதி, சாஸ்திரி ஜாதி என்று சொல்லிக் கொள்வதில்லை.

சங்கர பகவத்பாதாளை அநுஸரிக்கிறவர்கள் தங்களுக்குப் பெயர் ஸ்மார்த்தர் என்பதையே தெரிந்து கொள்ளாத மாதிரி, இன்னொரு முக்கியமான விஷயமும் தெரிந்து கொள்ளாமலே இருக்கிறார்கள். தங்களுக்கென்று ஆசாரியாள் இதுதான் தெய்வம் என்று எந்த ஒரு தெய்வத்தையும் வைக்காமல், எல்லா தெய்வங்களையும் ஸமமாகப் பார்க்கச் சொன்னார் என்பது அத்வைதிகளில் பலபேருக்கே தெரியவில்லை. தங்களுடைய உபாஸனா மூர்த்தியாகப் பரமசிவனைத்தான் ஆசார்யாள் வைத்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு தங்களை சைவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இப்படி நினைப்பதற்கு ஒரு காரணம் தோன்றுகிறது

த்வைதி, விசிஷ்டாத்வைதி இரண்டு பேருமே விஷ்ணுவை உபாஸிக்கிறார்கள். இதனால்தான் அத்வைதியாக இருக்க‌ப்பட்ட இந்தக் காலத்து ஸ்மார்த்தர்க‌ள், தாங்கள் அந்த இரண்டு பேருக்கும் மாறுபட்டவர்களாதலால், தங்களை சைவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஆனால் இது தப்பு.

ஐயர், ஐயங்கார், ராவ் என்பன ஸம்ஸ்கிருதப் பெயர்களாக இல்லை. எனவே ஸம்ஸ்கிருத்தில் தன் ஜாதியைச் சொல்கிறபோது ஐயங்கார் தன்னை வைஷ்ணவர் என்று சொல்கிறார். ராவ்ஜி மாத்வர் என்று சொல்கிறார். அப்படி அவர்கள் சொல்வதில் தப்பு இல்லை. ஆனால் அத்வைதியான இந்த ஐயர் ஜாதிக்காரன் மட்டும் தப்பாகத் தன்னை சைவன் என்று சொல்லிக் கொள்கிறான். மற்றவர்களுக்கும் இப்படியேதான் தப்பபிப்பிராயம் இருக்கிறது.

என்னைக்கூட ரொம்பப் பேர் சைவ ஆசாரியர் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பானிலிருந்து ஒரு ப்ரொஃப‌ஸர் [Hajime Nakumura] என்பவர் என்னிடம் வந்திருந்தார். அவர், “ஆசார்யாளுடைய ஸூத்ர பாஷ்யம், கீதா பாஷ்யமெல்லாம் படித்திருக்கிறேன். அதிலெல்லாம் அத்வைதம்தான் சொல்லியிருக்கிறதே தவிர சிவனைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. ஆனால் நீ ஏன் சைவமாக இருக்கிறாய்?” என்று என்னைக் கேட்டார். ‘என்னை எதனால் சைவன் என்கிறாய்?’ என்று நான் அவரைத் திருப்பிக் கேட்டேன். அதற்கு அவர், “நீ விபூதிதானே இட்டுக் கொள்கிறாய்? சிவ பூஜை (சந்திர மெளளீச்வர பூஜை) தானே பண்ணுகிறாய்? எல்லா சங்கராசாரியார்களுமே இப்படித்தானே சைவமாக இருக்கிறீர்கள்? அத்வைதத்தில் சிவன், விஷ்ணு என்ற பேதமே ஆசாரியாள் சொல்லாதபோது நீயும், இன்னும் மற்ற சங்கர மடத்துக்காரர்களும் ஏன் சிவச் சின்னங்களைப் போட்டுக்கொண்டு சிவபூஜை பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அவருக்கு நான் பதில் சொன்னேன்.

சில சரித்திர பூர்வமான உண்மைகளுக்குப் போனால்தான் இதற்குப் பதில் கிடைக்கும்.

ஆசார்யாள் அவதாரம் பண்ணுவதற்கு முந்தி தேசத்தில் என்ன மதம் அல்லது மதங்கள் இருந்தன? வைதிக மதமான ஸநாதன தர்மமும், எழுபத்திரண்டு துர்மதங்களும் இருந்தன என்று “சங்கர விஜய” புஸ்தகங்களிலிருந்து தெரிகிறது. ஆனால் வைதிக மதத்துக்கு மாறானவற்றில் முக்கியமானதாக பெளத்தம்தான் இருந்தது. பொது மக்களிலும் சரி, பெரும்பாலோர் ஸநாதன வைதிக தர்மத்திலோ, இல்லாவிட்டால் பெளத்தத்தைச் சேர்ந்தவர்களாகவோதான் இருந்தார்கள். மற்ற மதங்களுக்கு ஏதோ அங்கங்கே ஒரு கூட்டத்தில் (group-ல் ) மட்டும் following (பின்பற்றுதல்) இருந்தது. அந்தச் சின்னக் கூட்டத்துக்காரர்கள், அந்தச் சில்லறை மதங்களை ரொம்பவும் தீவிரமாகப் பின்பற்றினாலும் கூட (இப்போது கூட இப்படிப் பல‌ “இஸம்’கள் ‘ஸ்கூல்’களுக்கு ஆள்பலம் கொஞ்சமாக இருந்தாலும், அவ‌ர்கள் ரொம்பவும் தீவிரமாக அந்தந்தக் கொள்கையைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோமல்லவா?) பொதுவில் வைதிக மதம், பெளத்த மதம் என்று இரண்டாகவே பெரிய அளவில் பிரித்து விடும்படியாக இருந்தது.

இந்த ஸநாதன தர்ம வைதிக மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு “ஸ்மார்த்தர்கள்” என்றே பேர். ஸ்மார்த்தர்கள் என்றால் ஸ்மிருதியைப் பின்பற்றுகிறவர்கள் என்று அர்த்தம் ஸ்மிருதி என்றால் தர்ம சாஸ்திரங்கள். வேதத்தில் அங்கங்கே பரவலாகச் சொன்ன தர்மங்களை ஒரே இடத்தில் ஒன்று சேர்த்து, இன்னும் அதில் வெளிப்படையாகச் சொல்லாத விஷயங்களையும் அதற்கு அநுஸரணையாகவே சேர்த்து, நன்றாக வகை தொகை பண்ணி, பாகுபடுத்தி, சமூகத்தில் இன்னின்னார் இப்படியிப்படி நடக்கவேண்டும் என்று – ஒரு ஜீவனானது மாதாவின் கர்ப்பத்தில் வைக்கப்படுவதிலிருந்து, அது பிறந்து, வளர்ந்து, வித்யாப்யாஸம் பண்ணி, விவாஹம் செய்து கொண்டு, புத்திரோத்பத்தி பண்ணி, கடைசியில் மரணமடைந்து தஹனம் ஆகிறவரைக்கும் என்னென்ன செய்யவேண்டும் என்று – ‘ரூல்’ களைப் போட்டுக் கொடுப்பது தர்ம சாஸ்திரம்தான். அவையே ஸ்மிருதிகள். அவற்றை பின்பற்றுபவர்களே ஸ்மார்த்தர்கள். இப்போது “ஹிந்து” என்ற பெயரில் சொல்லப்படுகிற வேத மதஸ்தர்களுக்கு ஆதியில் இதுதான் பெயர்.

தர்ம சாஸ்திரங்களில் விஷ்ணுவைத்தான் உபாஸிக்கவேண்டும் என்றோ, சிவனைத்தான் உபாஸிக்க வேண்டும் என்றோ சொல்லவில்லை. வேதப் பிரதிபாத்யமான [வேதத்தில் சொல்லப்பட்ட] எல்லா தெய்வங்களும் இங்கே சமம்தான். எதை உபாஸித்தாலும் தப்பில்லை. எல்லாவற்றையும் ஒன்றே என்று புரிந்துகொண்டு உபாஸிப்பது விசேஷம். ‘ஆதித்யம்-அம்பிகாம்-விஷ்ணும்-கணநாதம்-மஹேச்வரம்’ என்பதாக ஸூரியன், அம்பாள், மஹாவிஷ்ணு, பிள்ளையார், பரமேச்வரன் ஆகிய ஐந்து மூர்த்திகளையும் ஸ்மார்த்தர்கள் பூஜை பண்ணுவார்கள். ஐந்து மூர்த்திகளை வழிபடுவதால் இதற்குப் ‘பஞ்சாயதன பூஜை’ என்று பேர். இஷ்ட தெய்வம் என்று ஒன்றிடம் அதிகப் பிரீதி வைக்கலாம். ஒரே வீட்டிலேயே அண்ணனுக்கு பரமசிவன் இஷ்ட தெய்வமாயிருக்கும். தம்பிக்கு மஹாவிஷ்ணு இஷ்ட தெய்வமாயிருக்கும். இதற்காக சைவர் – வைஷ்ணவர் என்று இரண்டு மதமாக பிரிந்து போகமாட்டார்கள். சிவ உபாஸ‌னைக்காரர்களும், விஷ்ணு உபாஸனைக்காரர்களும் தனிஜாதியாக இல்லாமல், பரஸ்பரம் விவாஹ ஸம்பந்தமும் வைத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் எல்லோருக்கும் பொது, வேதம். அதில் சொல்லியிருக்கப்பட்ட கர்மாநுஷ்டானங்கள் எல்லோருக்கும் பொது.

வேதத்தில் எல்லாரும் யக்ஞ கர்மாநுஷ்டானம் பண்ணி ஹோம பஸ்மாவை இட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. தர்ம சாஸ்திரங்களிலும் இப்படிச் சொல்லியிருக்கிறது. அதனால் ஆதியில் எல்லா ஸ்மார்த்தர்களும் பஸ்மதாரணம் [விபூதி இட்டுக் கொள்ளுதல்] தான் செய்து கொண்டார்கள் — விஷ்ணுவை இஷ்ட தெய்வமாக உபாஸிக்கிறவர்களும் கூடத்தான். இப்போதும், வைஷ்ணவர்களும், மாத்வர்களும் யாகம் செய்கிறபோது, ஹோம பஸ்மா இட்டுக் கொள்ளத்தான் வேண்டும்.

நாமம் போடுவது, அதில் பாதம் வைத்துப் போடுவது, பாதம் இல்லாமல் போடுவது இதெல்லாம் பிற்பாடு வந்த வைஷ்ணவ ஆசாரியர்கள் பண்ணின ஏற்பாடுதான் என்று வைஷ்ணவ‌ர்கள் சொல்கிற குரு பர‌ம்பரைக் கதைகளிலிருந்தே தெரிய வருகிறது. பிற்பாடு விஷ்ணுவை மட்டும் முழுமுதல் தெய்வமாக வைத்து, அந்த அடிப்படையின் மேல் தனி மதம், தனி ஜாதி என்றே பிரித்தபோது, அதில் சேர்ந்தவ‌ர்களுக்கு புது அடையாளம் தரும்படி ஆகிவிட்டது. இதே போல் மத்வாசாரியாரின் மதஸ்தர்களுக்கும் கோபிசந்தனம், சாந்து என்று புதிதாக அந்த ஸம்பிரதாயம் தனி ஸமூகமாக உருவானபோது ஏற்பட்டது. இந்த ஸம்பிரதாயங்களில் பிரிந்து போகாமல் பகவத்பாதர்களை அநுஸரித்து ஆதியான வைதிக வழியிலேயே நின்றுவிட்டவர்களுக்கு வைஷ்ணவர், மாத்வர் என்பது போன்ற பெயர்கள் ஏற்படவில்லை. ஸ்மார்த்தர் என்ற பழைய பெயரே நீடித்தது. அதே போல, ஆதியிலிருந்து, வேதத்திலேயே சொல்லப்பட்டு, வழி வழியாக வந்த பஸ்மதாரணம் ஸ்மார்த்தர்களிடம் நிலைத்து நின்றுவிட்டது. விபூதியை குழைத்துப் போட்டுக்கொள்வதற்குதான் வேதத்திலேயே மந்திரம் சொல்லியிருக்கிறது.

அதாவது, ஸ்மார்த்தர்கள் விபூதி இட்டுக் கொள்வதால், அவர்களெல்லோரும் சைவர்கள் என்று தற்காலத்தில் தப்பபிப்பிராயம் ஏற்பட்டிருந்தாலும், வாஸ்தவத்தில் ஸ்மார்த்தர்களின் விபூதி தாரணம் சிவ சம்பந்தம் உடையதல்ல; வேத சம்பந்தம் உடையது என்றே சொல்ல வேண்டும்.

ஸ்ரீ ராமாநுஜர் விசிஷ்டாத்வைதத்தைத் தனி சம்பிரதாயமாக ஆக்கியதற்கு முந்தி பரம பக்தியோடு விஷ்ணுவையே இஷ்ட தெய்வமாக ஆராதித்த வைதிகர்களும், ஸ்மார்த்தர்களாக இருந்து பஸ்மதாரணம்தான் பண்ணீயிருப்பார்கள். ஸந்நியாஸிக்கு ய‌க்ஞம் பண்ணும் அதிகாரம் இல்லை. அதனால் அவன் ஹோமம் பண்ணி பஸ்மா தரிப்பதற்கில்லை. ஆயினும் விபூதியே இட்டுக் கொள்வான்.

இப்போதும் வைஷ்ணவர்களின் பாஞ்சராத்ர தீக்ஷையில் அவர்கள் ஹோம பஸ்மத்தை இட்டுக் கொண்டாக வேண்டும்.

புத்தர் வேத மதத்தை ஆட்சேபித்தார். யக்ஞாதி கர்மாநுஷ்டானங்கள் கூடாது என்றார். புத்தர் ஈச்வரனைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அதனால் பெளத்ததில் வைதிக கர்மமும் இல்லை. பக்தியும் இல்லை. அவர் காலத்தில் ஸ்மார்த்தர்கள் ஏராளமாக கர்மாநுஷ்டானம் செய்தார்கள். புத்தர் ஈச்வரனைச் சொல்லவில்லை என்றால், இந்த கர்ம மார்க்கக்காரர்களும், “ஈச்வரன் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? நமக்கு வேதம் சொன்ன கர்மா இருக்கிறது. அதைச் செய்துவந்தாலே சிரேயஸ்” என்று நினைத்தவர்களாக இருந்தார்கள். இவர்களைப் பூர்வ மீமாம்ஸகர் என்பார்கள். இவர்களுக்குக் கர்மா மட்டும் தான் உண்டு. பக்தியும் கிடையாது, ஞானமும் கிடையாது. பரம ஸத்தியத்தை நினைத்து நினைத்து தியானம் பண்ணுவது, ஆத்ம விசாரம் பண்ணுவது, சகல கர்மாக்களையும் விட்டு விட்டு ஸந்நியாஸியாகி எப்போதும் பரமாத்ம சிந்தனையிலேயே இருப்பது – என்கின்ற அத்வைத ஞான மார்க்கம் இவர்களுக்குப் பிடிக்காது. இந்த பூர்வ மீமாம்ஸகர்களில் குமாரில பட்டர் என்பவர் மஹா பெரியவராக வந்து பெளத்ததைத் தீவிரமாகக் கண்டித்து, வேத கர்மாக்களை நிலைநாட்டினார். பெளத்தம் கர்மாவைச் சொல்லாததற்காக அதை இவர் கண்டித்தார். இதே மாதிரி, பெளத்தம் ஈச்வரனை, பக்தியைச் சொல்லாததற்காக அதை இன்னொரு பெரியவர் கண்டனம் செய்தார். அவர் பெயர் உதயனாசாரியர் என்பது. நியாய சாஸ்திரம் எனப்ப‌டும் தர்க்க சாஸ்திரத்தில் அவர் வல்லவர். லோக விவகாரங்களுக்குக் காரணமாக ஈச்வரன் என்று ஒன்று இருந்தேயாக வேண்டும் என்பதை இவர் யுக்தி மூலமாக வாதம் பண்ணி நிலைநாட்டி ஏராளமாக எழுதினார்.

இப்போது பள்ளிக்கூடப் புஸ்தகங்களிலிருந்து ஆரம்பித்து, எங்கேயும் புத்தரைப் பற்றித்தான் சொல்லியிருக்கிறதே தவிர குமாரில பட்டர், உதயனாசாரியார் முதலானவர்களின் பேர்கூட ஒருத்தருக்கும் தெரியாதபடி செய்திருக்கிறது! வெள்ளைக்காரர்களின் ஆட்சியின் போது இப்படி வேண்டுமென்றே செய்து விட்டார்கள். அவர்களுக்கு வைதிக மதத்தை எப்படியாவது மட்டம் தட்டி, எல்லாரையும் கிறிஸ்துவ மதத்துக்கு இழுத்து விடவேண்டும் என்பது ஆசை. ‘கிறிஸ்துவ மதத்துக்கு இழுக்க முடியாவிட்டால் கூடப் பரவாயில்லை. வைதிகத்தை எப்படியாவது மட்டம் தட்டிவிட வேண்டும். நம்மால் ஆளப்படுகிற இந்த ஹிந்துக்களுக்குத் தங்கள் மத‌த்தையும், கலாசாரத்தையும் பற்றிப் பெருமிதம் இல்லாமல் பண்ணிவிடவேண்டும்’ என்று அவர்களுக்கு எண்ணம். தங்களுக்கு நாகரிகமே தெரியாத ஆதிகாலத்தில் இப்போது தங்களால் ஆளப்படும் ஹிந்துக்கள் மஹோன்னத‌மான நாகரிகம் படைத்தவர்களாக இருந்தது அவர்களை ரொம்பவும் உறுத்திக் கொண்டிருந்தது. அதனால் இப்படி நினைத்தார்கள். வைதிக மதத்தின் பெருமைகள், அதில் வந்த பெரியவர்கள் ஆகியனபற்றி ஹிந்துக்களுக்கு ஒன்றுமே தெரியாமல் செய்யும் விதத்தில், எலிமென்டரி ஸ்கூல் பாட கட்டத்திலிருந்து ஆரம்பித்து விட்டார்கள்! அதனால்தான் வேத விருத்தமாக [வேதத்துக்கு முரணாக] புத்தர் மதம் ஸ்தாபனம் செய்ததை மட்டும் குழந்தைகள் படிக்கிற காலத்திலேயே அவர்கள் தெரிந்து கொள்ளும்படியாகப் பெரிசாகப் பிரபலப்படுத்தினார்கள். வேதமதத்தில் வந்த மஹான்களைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டு விட்டார்கள். குமாரில பட்டர் வேதப் பிராமாண்யத்தை [வேதமே பிரமாண நூல் என்பதை]யும், வேத கர்மாக்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி, இந்த இனங்களில் மாறுபட்ட பெளத்தத்தைக் கண்டித்தார். உதயனர் பெளத்தர்களின் நிரீச்வரவாதத்தைக் கண்டித்து ஈச்வரன் உண்டு என்பதை நிலை நாட்டினார். கர்மம்‍-பக்தி-ஞானம் என்ற மூன்றில் இப்படிக் கர்மத்தையும் பக்தியையும் பற்றிய பெளத்தக் கொள்கையை இருவர் நிராகரணம் பண்ணின பிறகே, ஞானமார்க்கத்தை வேத வழிப்படிப் புதுப்பித்துக் கொடுத்த நம் பகவத்பாதாள் அவதாரம் பண்ணினார்.

ஞானரீதியில் பெளத்தமும் அத்வைதமும் ஒரே மாதிரிதான் என்று இவ்விரு ஸித்தாந்தகளையும் சேர்த்து ஆக்ஷேபிக்கிற விசிஷ்டாத்வைதிகள், த்வைதிகள் ஆகியோர் சொல்வதுண்டு. நம் ஆசார்யாளையே மாறுவேஷத்திலிருக்கிற பெளத்தர் — “ப்ரச்சன்ன பெளத்தர்” — என்று அவர்கள் சொல்வதுண்டு. ஆனால், இந்த அபிப்பிராயம் சரியே இல்லை. பெளத்தம், அத்வைதம் இரண்டும் லோகத்தை மாயை என்று சொல்வதாலும், அத்வைதத்தில் ரொம்பவும் ஞானநிலை அடைந்தபோது அங்கே ஈச்வர உபாஸனையும் நின்றுவிடுவதாலும் இப்படி ஆசார்யாளையே “மாறுவேஷ பெளத்தர்” என்று சொல்பவர்கள் சொன்னாலும், கொஞ்சம் யோசனை பண்ணிப் பார்த்தாலும் இது ரொம்பப் பிசகு என்று தெரியும். லோகம் மாயை என்கிறபோது, ஆசாரியாள் பெளத்தர்கள் மாதிரி எல்லாம் ஒரே சூன்யம் என்று சொல்லிவிடவில்லை. லோகம் தாற்காலிக உண்மைதான். அதையே பரம ஸத்தியமாக எண்ணிவிடக் கூடாது என்றுதான் சொன்னார். மாயையான இந்த லோகம் சூனியத்தில் கரைந்து போய்விடுவதல்ல; மாறாக லோகம் நிரந்தர ஸத்யமல்ல என்று தெரிந்து கொள்கிறபோது, இந்த லோகமும் அதை மாயையாகத் தெரிந்துகொள்கிற நாமும்கூடப் பரம ஸத்யமும் பூர்ணமுமான பிரம்மமே என்று தெரியும் என்றார். பெளத்தர்களின் மோக்ஷமான நிர்வாணம் என்பது எதுவுமே இல்லாத சூனிய நிலை. ஆசார்யாளின் மோக்ஷமான அத்வைதமோ பேருண்மையாகவும், பேரறிவாகவும், பேரானந்தமாகவும், அதாவது ஸத்-சித்-ஆனந்தமாக ஆகிவிடுகிற பரிபூர‌ண நிலை. இந்த இரண்டையும் ஒன்றென்பது தப்பு.

ஆசார்யாளின் பெருமை என்ன? அவர் எல்லா மார்க்கங்களையும், ஸித்தாந்தங்களையும் ஒவ்வொரு ‘லெவலி’ல் ஒப்புக்கொண்டு, இவை எல்லாமும் சேர்ந்து உச்சத்தில் ஞானமார்க்கத்தில் கொண்டு விடுகிறது என்று காட்டியதுதான். பெளத்தர்கள் வேதகர்மாக்களை விட்டவர்கள்; ஆக்ஷேபித்தவர்கள். ஆசாரியாளோ வேத கர்மாக்களை விசேஷமாக ஆதரித்தவர். “வேதோ நித்யம் அதீயதாம்; தத் உதிதம் கர்மஸு அநுஷ்டீயதாம்” என்பதுதான் அவருடைய ‘உபதேச ஸார’த்துக்கு ஆரம்பமே ஆகும். ஞானம் வரும் முன்பு மனஸ் ஒருமைப்பட வேண்டும். இதற்கு பக்தி உபாஸனை அவசியம். பகவானிடம்தான் மனஸ் அப்படியே ஒருமுகப்பட்டு நிற்கும் என்பதால், பக்தியைப் பூர்வாங்கமாக விதித்தார். அதற்கும் முந்திக் கர்மாநுஷ்டானம் ரொம்பவும் அவசியம். வேதம் சொன்னபடி, கர்மாவிலேயே ஈடுபட்டிருக்கிறபோதுதான் சித்தத்தின் அழுக்குகள் போகும் என்றார். கர்மா செய்யச் செய்யத்தான் சித்த சுத்தி ஏற்படும். சித்த சுத்தி ஏற்பட்டபின் செய்கிற பக்தியால் அந்தச் சித்தமானது ஒருமுகப்படும். அப்புறம்தான், இப்படி ஒருமுகப்பட்ட மனம் தன்னையே இழந்து கொண்டு பரம ஸத்தியமான ஞானத்தில் கரைய முடியும் என்று ஆசார்யாள் வரிசைப்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

கர்மாவைச் சொல்லும் பூர்வ மீமாம்ஸை, ஈச்வரனைச் சொல்லும் நையாயிக மதம் [நியாய‌க் கொள்கை], கர்மாவும் ஈச்வரனுமில்லாத பெளத்தத்தின் தியான விசாரம், எல்லாம் ஆசார்யாளின் அத்வைத‌த்தில் இருக்கின்றன. ஆனாலும் இவர்கள் ஒவ்வொரு லெலவலை மட்டும் பிடித்துக் கொண்டு, அந்த லெவலோடு நின்று விட்டபோது, ஆசார்யாள்தான் எல்லாவற்றையும் ஸமன்வயப்படுத்தி [இசைவித்துக்] கொடுத்தார். மற்ற ஸித்தாந்தங்கள் ஒரு லெவலில் மட்டும் நின்று விடுவதால் அவற்றோடு சண்டையும் போட்டார். வைதிக கர்மா ஆசார்யாளுக்கு ஸம்மதம்தான். ஆனாலும், ‘பக்தியும் வேண்டாம், ஞானமும் வேண்டாம்’ என்று பூர்வ மீமாம்ஸகர்கள் இருந்ததது அவருக்கு ஸம்மதமில்லை. ‘நீங்கள் செய்கிற கர்மா தானாக பலன் தந்துகொள்ள முடியாது. கர்மா ஜட வஸ்து. ஆனதால் கர்மாவுக்குப் ப‌லன் தருவது ஈச்வரனே. அவன்தான் லோக வியாபாரம் ஒரு ஒழுங்காக நடப்பதற்காக வேதத்தின் மூலம் கர்மாக்களையே கொடுத்திருக்கிறான். எந்தக் கர்மா செய்தாலும், அந்தப் பலனை அவனிடம்தான் ஒப்பிக்க வேண்டும் லோக க்ஷேமத்துக்காக நமக்கு அவன் தந்திருக்கிற‌ கர்மாவை, நாம் நிஷ்காம்யமாக [ஆசை வாய்ப்படாமல்] செய்து, அவனுக்கே அர்ப்பண‌ம் பண்ணவேண்டும், அப்படிப் பண்ணினால்தான் கர்மாவால் நம‌க்குக் கிடைக்கிற பலனைவிடப் பெரிதாக, இந்தக் கர்மப‌லத் தியாகத்தால் சித்த சுத்தி என்ற மஹா பெரிய ப‌லன் கிடைக்கும்” என்று மீமாம்ஸகர்களுக்கு ஆச்சர்யாள் எடுத்துச் சொன்னார். அதே மாதிரி, நையாயிகர்களிடமும், “ஈச்வர‌ன் இருக்கத்தான் வேண்டும் என்று தர்க்க ரீதியில் நிரூபித்து மட்டும் பிரயோஜனம் இல்லை. அந்தத் தர்க்கம் அநுபவமாக வேண்டும். ஈச்வரனை நேருக்கு நேர் அநுபவிப்பது என்பது, கடைசியில் அவனைத் தவிர வேறொன்றுமில்லை என்ற அநுபவத்தில்தான் கொண்டு விட்டாக வேண்டும். அதாவது, அவனுக்கு பேதமாக நாமும் இல்லை என்கிற அத்வைதாநுபவம்தான் ஈச்வர பக்தியின் முடிவு” — என்று வாதம் பண்ணி ஸ்தாபித்தார்.

“நாம் என்ன, ஸத்தியம் என்ன, துக்கம் என்பது என்ன?” என்றெல்லாம், ஆசாபாசங்களை விட்டு விட்டு, எப்போது பார்த்தாலும் விசாரணை பண்ணிக் கொண்டே, தியானம் பண்ணிக் கொண்டேயிருந்தால், புத்தருக்கு வந்த மாதிரி நமக்கும் ஒரு தெளிவு பிறக்கத்தான் செய்யும். ‘புத்தர் நேராக ஈச்வரனைப் பற்றி சொல்லவில்லையே தவிர அவர் ஈச்வரனை ஆக்ஷேபிக்கவும் இல்லை. ஆனதால், அவர் அத்வைத ஞானம் அடைந்தும் இருக்கலாம். ஆனால் அதை அவருக்கு வார்த்தைகளில் சொல்லத் தெரியவில்லை. அவ்வளவுதான்’ என்றுகூடச் சொல்வதுண்டு. ஆனாலும் இப்படித் தியானமும் விசாரமும் எல்லாரும் பண்ணமுடியுமா? அதற்கு ஒரு பக்குவம் வேண்டாமா? வேண்டும். இதற்காகத்தான் வேத தர்மத்தில் கர்மா, பக்தி என்று முதலில் வைத்திருக்கிறது. இதுகளால் சித்த சுத்தியும், ஐகாக்ரியமும் [ஒருமைப்பாடும்] ஏற்பட்ட அப்புறம்தான் ஸத்ய‌ தத்வத்தைப்பற்றி ஞான வழியில் நின்று விசாரம் பண்ண முடியும். கர்மாவை லோக க்ஷேமார்த்தமாகவும், பல தினுசான ஜீவர்களின் பக்குவத்தைப் பொறுத்தும் வர்ண தர்மம், ஆசிரம தர்மம் என்றெல்லாம் வேதமும், ஸ்மிருதிகளும் பிரித்துக் கொடுத்திருக்கின்றன. அதாவது இன்னின்னார் இன்னின்ன மாதிரி செய்தால்தான், அவரவருக்கும் சிரேயஸ், லோகத்துக்கும் க்ஷேமம் என்று ‘அதிகாரி பேதம்’ பார்த்துப் பல கர்மாக்களையும், உபாஸனா மார்க்கங்களையும் பிரித்து வைத்திருக்கிறது. இதையெல்லாம் புத்த மதம் மாதிரி அலக்ஷ்யம் பண்ணி, வேத கர்மா, உபாஸனை எல்லாவற்றையும் தள்ளிவிட்டு, அதிகாரி பேதம் பார்க்காமல் எல்லோருக்கும் தியானம்_விசாரம் என்று விதித்தால், லோக காரியம் கெட்டுப் போகும். புத்தர் மாதிரி யாரோ இரண்டொருத்தரைத் தவிர யாருக்கும் தெளிவு உண்டாகிவிடாது. முன்னேயே சொன்ன மாதிரி ஏற்கனவே குமாரில பட்டரும், உதயனாசாரியாரும் பெரிய அளவுக்குச் செய்திருந்த பெளத்த மத கண்டனத்தை ஆசார்யாள் பூர்த்தி பண்ணினார்.

பெளத்தம் என்பது இம் மூவராலும் நலிந்த பிறகு, தேசத்தில் நம் ஆசார்யாளின் வழியே நிலைப்பட்டது. அதாவ‌து ஸ்மார்த்த ஸம்பிரதாயம் என்கிற ஸநாதன வேதமதம் மட்டுமே மறுபடியும் நிலைப்பட்டு விட்டது. உபநிஷத்துக்களில் சொல்லப்பட்டு, ஆசார்யாளால் விஸ்தாரமாக விளக்கி நிலைநாட்டப்பட்ட அத்வைத ஞானம்தான் அதன் உச்சநிலை.

ஆனால் அத்வைதாநுபவம் என்பது எல்லாருக்கும் ஸாத்யமானதல்ல. பெரும்பாலும் பொதுஜனங்கள் வைதிக கர்மாக்களைப் பண்ணிக் கொண்டும் ஈச்வர உபாஸனை செய்து கொண்டுந்தான் இருந்தார்கள். ஆனால், பூர்வ மீமாம்ஸகர்களைப் போல், “கர்மாவேதான் எல்லாமும்; ஸ்வாமி கூட வேண்டாம்” என்று நினைத்து இவர்கள் கர்மா செய்யவில்லை. ஆசார்யாள் காட்டியபடி, ஈச்வரனை ஒப்புக் கொண்டு, ஈச்வரார்ப்பணமாகவே கர்மாக்களைச் செய்தார்கள்.

இப்போது எந்தக் கர்மா செய்தாலும், ஆரம்பத்தில் நாம் அது பரமாத்மாவின் பிரீதிக்காகவே (“பரமேச்வர ப்ரீத்யார்த்தம்”) செய்யப்படுவதாக ஸங்கல்பத்தில் சொல்கிறோமல்லவா? இந்த ஸங்கல்பம் நம் ஆசார்யாள் செய்து கொடுத்ததுதான். அவருக்கு முந்தி அப்படியில்லை. கர்மா பண்ணினால் கிடைக்கிற பலன் நமக்குத்தான் என்றும், அந்தப்பலனை ஈசவரன் தராமல், தானாகவே பெற்றுக்கொண்டுவிடலாம் என்றும் நினைத்துவிடக் கூடாது என்றே ஆசார்யாள் இப்படி வைத்தார். ஸாதாரண கர்மாவிலிருந்து யாக யஜ்ஞம் உட்பட எல்லாவற்றையும் ஈச்வரார்ப்பணம் பண்ண வைத்தார்

ஆதியிலிருந்த வேத மதம், பிறகு வேதத்தை தழுவி ஏற்பட்ட ஸ்மிருதிகளான தர்ம சாஸ்திரங்களை அநுசரித்தபோது ஸ்மார்த்த மதம் என்று பெயர் பெற்றது. இரண்டும் வேறு அல்ல. வேத மதமேதான் ஸ்மார்த்தம். வேதத்தில் கர்மாவானது சித்த சுத்திக்காக ஈச்வரார்ப்பணமாகத்தான் உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. பின்னால் வந்த பூர்வ மீமாம்ஸகர்கள்தான் குழறுபடி செய்தார்கள். அதை ஆசார்யாள் சரி பண்ணிவிட்டார். அதாவது ‘ஒரிஜினலா’ன பழைய ஸ்மார்த்த மதத்தையேதான் நன்றாகப் புத்துயிரூட்டி நிலைநாட்டினார்.

இதேபோல, உபாஸனை என்று எடுத்துக்கொண்டாலும் வேதத்தில் விஷ்ணுதான் உசத்தி, சிவன் தாழ்த்தி என்றோ, சிவன்தான் உசத்தி, விஷ்ணு தாழ்த்தி என்றோ இல்லை. வேதத்தில் ஸகல தெய்வங்களையும் ஒரே பரமாத்மாவாகத்தான் ஏற்றத்தாழ்வில்லாமல் சொல்லியிருக்கிறது. ருத்ரத்தில் எல்லாம் சிவஸ்வரூபமே என்று சொல்லியிருக்கும். புருஷ ஸூக்தத்தில் எல்லாம் விஷ்ணுஸ்வரூபமே என்று இருக்கும். இன்னோரிடத்தில் வருணனையே பரமாத்மா என்று சொல்லியிருக்கும். இந்திரனையே பரமேச்வரன் என்று சொல்லியிருக்கும்; அக்னிதான் முழு முதற் கடவுள்; சூரியன் முழுமுதற் கடவுள் __ என்றிப்படி எந்த தெய்வத்தைச் சொல்லும்போதும், வேத ஸுக்தங்கள் அதைப் பரமாத்மாத்வாகவேதான் சொல்லும். முடிவாக, ஒரு ஸத்யம்தான் இருக்கிறது. அதற்குத்தான் ஞானிகள் பல பேர் கொடுத்திருக்கிறார்கள்: ‘ஏகம் ஸத் விப்ரா: பஹூதா வதந்தி’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டது.

வேதத்தை அப்படியே பின்பற்றும் தர்மசாஸ்திரங்களும் (ஸ்மிருதிகளும்), இந்த தெய்வம்தான் பெரிசு என்பதாக சிவனையோ, விஷ்ணுவையோ, அம்பாளையோ, வேறு எந்த தெய்வத்தையோ சொல்லவில்லை.

ஆனாலும், இஷ்ட மூர்த்திக் கொள்கை என்பதாக, அவரவரும் தங்கள் மனஸ் விருப்பத்தோடு எந்த மூர்த்தியில் அன்பாக லயிக்கிறதோ, அந்த மூர்த்தியையே முழுமுதல் தெய்வமாக வழிபடுவதை வேதமும் ஸ்மிருதிகளும் ஆதரிக்கின்றன. இப்படியே ஸ்மார்த்தர்கள் இஷ்ட தேவதையை விசேஷமாக உபாஸிக்கிறபோதே, மற்ற தேவதைகளை நிந்திக்காமல் பஞ்சாயதனமாகப் பூஜித்து வந்தார்கள்.

வேதத்தின் கர்மக் கொள்கை குழறுபடியாகி, “கர்மாதான் எல்லாமும்” என்று பூர்வ மீமாம்ஸகர்கள் வைத்துவிட்ட மாதிரி, வேதத்தின் உபாஸனா மார்க்கமும் பிற்காலத்தில் குழறுபடியாகி, அவரவரும் தங்கள் இஷ்ட தெய்வந்தான் பெரிசு என்று சண்டை போடுகிற ஸ்திதியும் ஏற்பட்டது.

இப்படி கர்மா, பக்தி இரண்டும் குழம்பி, பெளத்தர்களினால் ஞானமார்க்கமும் குழறுபடியான சமயத்தில்தான் ஆசார்யாள் அவதாரம் பண்ணி, எல்லாவற்றையும் சீர்பண்ணி, ஒன்றுக்கப்புறம் ஒன்று என்று வரிசைப்படுத்திக் கொடுத்தார். பழையபடிதான் ஆசார்யாள் சீர் பண்ணிக் கொடுத்தாரேயொழிய தாமாக புது வழி ஒன்றை ஏற்படுத்தவே இல்லை. ஸ்மார்த்த ஸம்பிரதாயம் என்ற ஸநாதன வேததர்ம வழியில் கல்லும் முள்ளும் மண்டிப் போனபோது கல்லையும் முள்ளையும் அப்புறப்படுத்தி, அந்த ஸ்மார்த்த வழியையேதான் சுத்தப்படுத்திக் கொடுத்தாரேயன்றி, புதிதாக ஒரு வழி போடவில்லை.

வேதம் சொல்கிற இஷ்ட தெய்வ வழிபாட்டு முறையை ஒப்புக்கொண்டு, பிள்ளையாரையே முழுமுதற் கடவுளாக வழிபடும் காணபதர்கள், ஸுப்ரம்மண்யரை அப்படி வழிபடும் கெள‌மாரர்கள், அம்பாளை வழிபடும் சாக்தர்கள், ஈச்வரனை வழிபடும் சைவர்கள், விஷ்ணுவை வழிபடும் வைஷ்ணவர்கள், ஸூரியனை வழிபடும் ஸெளரர்கள் ஆகிய இவர்களுக்கு, இந்த ஆறு வழிகளை சுத்தப்ப‌டுத்தி வைதிகமாக ஆக்கிக் கொடுத்தார். இதனால் தான் அவரை “ஷண்மத ஸதாபகர்” என்பது. இன்னொரு தெய்வத்தை நிந்திக்காமல் தங்கள் இஷ்ட தெய்வத்தை அவரவரும் வழிபடவே ஷண்மத ஸ்தாபனம் பண்ணினார். ஸ்மார்த்தர்கள் யாவரும் பழையபடி — ‘ஆதித்யம் – அம்பிகாம் – விஷ்ணும் – கணநாதம் – மஹேச்வரம்’ என்றபடி — ஐந்து மூர்த்திகளையும் வைத்துப் பஞ்சாயதன பூஜை பண்ணும்படியாகச் செய்தார். அக்னி சம்பந்தமான வைதிக கர்மாநுஷ்டானங்களெல்லாம் ஸுப்ரமண்யருக்குப் போய்ச் சேருகிறது என்பதால், ஷண்மதங்களில் விட்டுப் போன ஸுப்ரமண்யரைப் பஞ்சாயனத்தில் சேர்க்காமல் விட்டு விட்டார் என்று வைத்துக் கொள்ளலாம்.

ஆதலால் சங்கர சம்பிரதாயம் என்று ஒன்று புதிதாக ஏற்படவே இல்லை. பழைய ஸ்மார்த்த ஸம்பிரதாயம் என்கிற வேத நெறியேதான், நடுவே சிதிலமடைந்தபோது சங்கரரால் முன்னைவிட ஜீவசக்தியுடன் புத்துயிரூட்டப்பட்டது. ஆகையால், “சங்கர சம்பிரதாயம்” என்று யாராவது சொன்னால் தப்பு; நானே சொல்லியிருந்தாலும்கூடத் தப்பு.

இப்போது எப்படி நம்மில் சிஷ்டர்களாக இருப்பவர்கள், ‘புதிதாக எவரேனும் எதாவது கொள்கையைச் சொன்னால் எடுத்துக் கொள்ளக்கூடாது; மரபுப்படி, சம்பிரதாயப்படி வந்ததா என்று பார்க்கவேண்டும்’ என்கிறார்களோ அப்படியேதான் நம் ஆசார்யாளும் தாம் எழுதிய பாஷ்யம் நெடுகிலும் சம்பிரதாயத்தைப் போற்றி வந்திருக்கிறார். அங்கங்கே, இதுதான் சம்பிரதாயம்; இப்படித்தான் சம்பிரதாயிகர்கள் அபிப்ராயப்படுகிறார்கள்; அதனால் இதுவே ஏற்கத்தக்கது என்று ரொம்பவும் மரியாதையுடன் சொல்வார். இயேசு கிறிஸ்துவைப் பற்றி, அவர் ‘பழைய மதங்களை அழிக்க வரவில்லை; அவற்றைப் பூர்த்தி பண்ணவே வந்தார்’ என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். ஆசார்யாளும் பழைய வைதிக ஸ்மார்த்த ஸம்பிரதாயத்தை உள்ளபடி ஸ்திரப்படுத்தத்தான் வந்தாரே தவிர, தாமாக ஒன்றை ஸ்தாபிக்கவில்லை. “சங்கர சம்பிரதாயம்” என்று சொன்னால், அதை அவர் அபசாரமாகவே நினைப்பார்.

அவரது முடிந்த முடிவான அத்வைதக் கொள்கையைக்கூட அவர் சம்பிரதாயமாக வந்த உபநிஷத்துக்கள், கீதை, பிரம்மஸூத்திரம் இவற்றின் பிரமாணத்தில்தான் முழுக்க முழுக்க நிலைநாட்டியிருக்கிறாரே தவிர, தம்முடைய சொந்தக் கொள்கை என்று தப்பித் தவறிக்கூடச் சொல்லமாட்டார்.

இதனால்தான் நம் ஆசார்யாளை அநுஸரிக்கிறவர்களுக்குப் புதுப்பெயர் ஒன்றும் ஏற்படாமல் ஸ்மார்த்தர் என்ற பெயரே நின்றுவிட்டது. ஸ்ரீ ராமாநுஜர், ஸ்ரீ மத்வர் முதலியவர்கள் தோன்றுவதற்கு முன்பு ஸ்மார்த்தர்களிலேயே விஷ்ணுவை இஷ்ட தெய்வமாகக் கொண்டவர்களும் இருந்தார்கள்.

இதிலே ஒரு வேடிக்கை: ஆசார்யாள் சொன்ன மாதிரி பரதெய்வ நிந்தை பண்ணாமல் பஞ்சாயதன பூஜையுடன் இஷ்ட தெய்வத்தை விசேஷமாக உபாஸிக்கிற அளவுக்குப் பக்குவம் இல்லாதவர்களும் ஸ்மார்த்தர்களில் இருந்திருக்கிறார்கள். அதாவது தங்கள் தெய்வம் ஒன்றே முழுமுதல் தெய்வம் என்று நினைத்தவர்களும், ஃபிலாஸஃபி என்று வரும்போது அத்வைதத்தை ஒப்புக் கொள்பவர்களாக இருந்திருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களில் தீவிர வைஷ்ணவர்களும் அத்வைதிகளாக இருந்திருக்கிறார்கள். இது எப்படித் தெரிகிறதென்றால், உங்களுக்கு தெரியாத ஒரு விஷயம் சொல்கிறேன். இப்படிப்பட்ட அத்வைத வைஷ்ணவர்களின் பரம்பரையில் வந்தவர்கள் சில பேர் இப்போதும் இருக்கிறார்கள். இவர்கள் என்னைத்தான் ஆசார்யராக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஸித்தாந்தம் என்ன என்று கேட்டால் அத்வைதம்தான். இவர்கள் நாமம் போட்டுக்கொள்ள மாட்டார்கள். விபூதிக்கு என்ன இருந்தாலும் சிவசம்பந்தம் சேர்ந்துவிட்டது என்பதால் விபூதியும் இட்டுக் கொள்ளமாட்டார்கள். நாமமும் இல்லாமல், விபூதியும் இல்லாமல் கோபி சந்தனம்தான் இட்டுக்கொள்வார்கள். இன்னும் சில பேர் வடகலை, தென்கலை இரு நாமமுமாக இல்லாமல் “கீற்று நாமக்காரர்கள்” என்ற பேரோடு அத்வைதிகளாக இருக்கிறார்கள்! ஆனாலும் அத்வைதிகளான இவர்கள் ஸ்ரீ ராமாநுஜ ஸம்பிரதாயத்தில் வந்த வைஷ்ணவர்களைக் காட்டிலும் வீர வைஷ்ணவர்களாக இருக்கிறார்கள்! ராமாநுஜ – வைஷ்ணவர்கள்கூட சிவன் கோவிலுக்குப் போகிற இந்தக் காலத்திலும், என்னை ஆசாரியராக வைத்துக் கொண்டிருக்கிற இந்த அத்வைத – வைஷ்ணவர்கள் சிவன் கோவிலுக்குப் போவதில்லை! “இதிலிருந்தே என்னை சைவனாகச் சொல்வது எவ்வளவு தப்பு என்று தெரிகிறது பார்!” என்று அந்த ஜப்பான் ப்ரொஃபஸருக்கு எடுத்துக் காட்டினேன். இதேமாதிரி வீரசைவர்களிலும் அத்வைதிகள் உண்டு. தத்துவம், Philosophy என்று வருகிற போது ஆசார்யாளின் அத்வைத ஸிந்தாந்தத்தை இவர்கள் ஏற்றுக்கொண்டாலும், உபாஸனை, Theology என்கிற‌போது அவர் சொன்ன ஸாமரஸ்யத்தை [ஸமரஸபாவத்தை] ஏற்கமுடியாமல் விஷ்ணுவோ, சிவனோதான் ஒன்றைக் காட்டிலும் மற்றது பெரிசு என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும், பொதுவாக, அத்வைதிகள் என்றால் சைவர் என்ற எண்ணம் ஏற்பட்டதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. பகவத்பாதாளுக்குப் பிற்பாடு ஸ்ரீ ராமாநுஜாசாரியார் விசிஷ்டாத்வைதத்தைப் பிரசாரம் பண்ணினார். ‘ஜீவனும் பிரம்மமும் ஒன்றாகப் போய் அத்வைதமாகிவிட முடியாது. ஜீவன் தனக்குள் அந்தர்யாமியாக பிரம்மமே இருந்து இயக்கி வைக்கிறது என்பதைக் கொஞ்சம் பேதமாக இருந்துதான் மோக்ஷ நிலையிலும் அநுபவிக்கிறான். பிரம்மம் என்பதும் சங்கரர் சொன்னபடி குணம் குறியில்லாத, காரியமில்லாத நிர்குண வஸ்துவல்ல. அது ஸகுணமானதுதான் [குணத்தோடு கூடியதுதான்]. காரியம் பண்ணுவதுதான். ஜீவனையும் காரியம் பண்ணவைப்பது அந்தர்யாமியாக உட்புகுந்திருக்கிற அதுதான்’ என்ற கருத்துக்களை உடையவர் ஸ்ரீ ராமாநுஜர். இது வரைக்கும், எந்த தெய்வத்தை வழிபடுபவர்களுக்கும் பொதுவான மாதிரி, ஃபிலாஸஃபியாக, தத்வமாக மட்டும் இருக்கிறது. ஆனால் இங்கே அப்படிப்பட்ட ஸகுணப்பிரம்மம் மஹாவிஷ்ணுதான்; சிவனோ வேறு தெய்வமோ இல்லை என்றும் சொல்லி, ஸ்ரீ ராமாநுஜர் ‘தியாலஜி’ப்படி ஒரு குறிப்பிட்ட இஷ்ட தெய்வக்காரர்கள் மட்டுமே விசிஷ்டாத்வைதத்தை ஏற்கும்படிப் பண்ணிவிட்டார்.

ராமாநுஜ ஸித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள், அதுவரை ஸ்மார்த்தர்களாக இருந்தவர்கள்தான். வைதிக மதம், ஹிந்து மதம் என்பதே அவர் நாள்வரையிலும் ஸ்மார்த்த மதம்தானே? ஆகையினால், விஷ்ணு தான் பரதெய்வம் என்று அவர் ஏற்படுத்திய ஸிந்தாந்தத்துக்குப் போனவர்கள் ஸ்மார்த்தர்களிலிருந்துதானே போயிருக்க வேண்டும்? விசிஷ்டாத்வைத தத்வத்தை (Philosophy) ஏற்றுக் கொண்டு அதில் போனவர்கள் போயிருப்பார்கள். அது தவிர தங்களுடைய இஷ்ட தெய்வமான மஹாவிஷ்ணுவுக்கு உத்கர்ஷத்தை [மேன்மையை]ச் சொல்லியிருக்கிறது என்பதற்காகவே, தத்வத்தைவிட வழிபாட்டுமுறை (Theology)யை முக்கியமாகக் கவனித்தும், விஷ்ணுவை இஷ்ட தெய்வமாகக் கொண்ட பல ஸ்மார்த்தர்கள் ஸ்ரீ ராமாநுஜ சம்பிரதாயத்தைத் தழுவியிருக்கக் கூடும். பிற்பாடு ஸ்ரீ மத்வாசாரியார், ஸ்ரீ வல்லபாசாரியார், ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் முதலானவர்கள் வந்து, தத்வரீதியில் வெவ்வேறு ஸித்தாந்தங்களைப் பிரசாரம் செய்தார்கள். அந்தர்யாமியாக ஜீவாத்மாவுக்குள் பரமாத்மா இருக்கிறதைக் கூடச் சொல்லாமல். இரண்டும் அடியோடு வேறானவை என்றே மத்வர் ஸித்தாந்தம் செய்தார். அதுதான் த்வைதம். வல்லபாசாரியார், சைதன்யர் ஆகியவர்களின் ஃபிலாஸஃபியைச் சுருக்கமாகச் சொல்லிப் புரியவைப்பது சிரமம். அந்த ‘டிஸ்கஷன்’ இப்போது வேண்டாம். மொத்தத்தில் நான் சொல்ல வந்த விஷயம் என்னவென்றால், இந்த மூன்று பேருங்கூட தத்வம் என்று ஒன்றை வைக்கிறபோதே வழிபாட்டிலும் “இதுதான் தெய்வம்” என்று ஒன்றை வைத்துவிட்டார்கள். மத்வ மதத்திலும் விஷ்ணுதான் பரமாத்மா. மற்ற இருவருக்கும் பிரம்மம் அல்லது பரமாத்மா என்பது க்ருஷ்ணன்தான். அதனால், இதெல்லாமும் விஷ்ணுவை உபாஸிக்கும் மதங்கள்தான். இந்த சம்பிரதாயங்களுக்கும் ஸ்மார்த்தர்களிலிருந்துதானே போயிருக்கிறார்கள்? இவர்களிலும் தத்வத்துக்காகப் போனவர்கள் மட்டுமில்லாமல், தங்களுடைய விஷ்ணுவுக்கு உத்கர்ஷம் தந்திருக்கிறது என்பதற்காகவே போன ஸ்மார்த்த வைஷ்ணவர்களும் இருந்திருப்பார்கள் அல்லவா?

ஆக, ஸ்மார்த்தர்களிலிருந்துதான் பிற்பாடு ராமாநுஜ ஸித்தாந்தம், மத்வ ஸித்தாந்தம், வல்லப ஸித்தாந்தம், சைதன்ய சம்பிரதாயம், (நிம்பார்க்கர் என்று ஒருத்தர் உண்டு – அவரும் கிருஷ்ண பக்திக்காரர்தான். அவருடைய ஸித்தாந்தம்) ஆகிய இத்தனை வைஷ்ணவ பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் போயிருக்கிறார்கள். இதனால் ஸ்மார்த்தர்களாகவே தங்கிவிட்டவர்களில் விஷ்ணுவை இஷ்ட தெய்வமாகக் கொண்டவர்கள் குறைந்து போய், ஈச்வரனை [சிவனை] இஷ்ட தெய்வமாகக் கொண்டவர்களே அதிகமாகியிருப்பார்களல்லவா? இதனால்தான் அத்வைதிகள் சிவமத‌ஸ்தர் என்று நினைக்கும்படியாகி விட்டிருக்கிறது.

வெள்ளைக்காரர்கள் ஆட்சி தொடங்கி பத்திரங்கள் எழுதும் நாளிலிருந்தே, ஸ்மார்த்தர்கள் தங்களை ஸ்மார்த்தர் என்று போட்டுக் கொள்ளாமல் “சிவ மதம்” என்று போட்டுக் கொள்ளும்படியாக ஆகியிருக்கிறது !

ஏதோ இந்தக் காலத்தில், நம் மதத்தைப்பற்றி அடியோடு அறிந்து கொள்ளாத புதுத் தலைமுறை ஸ்மார்த்தர்கள்தான் தங்களை சைவர்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதில்லை. போன நூற்றாண்டிலேயே ராஜாங்கத்தில் செல்லுபடியாகிற பத்திரங்களில்கூட இப்படியே குறித்து வந்திருக்கிறார்கள்!

அது மட்டுமில்லை. இதற்கெல்லாம் ரொம்பக் காலம் முந்தி, ராமாநுஜர் வைஷ்ணவ சம்பிரதாயத்தை பலப்படுத்திய நாளில், ஸ்மார்த்தர்களில் விஷ்ணு பக்தர்களாக்கப்பட்டவர்களில் அநேகர் அந்த வழியை அநுசரிக்க ஆரம்பித்தபோதே, அத்வைதிகள் என்றால் சைவர்கள் என்று நினைக்கும்படியாக ஆனதாகத் தோன்றுகிறது. ஏன் இப்படி சொல்கிறேன் என்றால், ஸ்ரீ ஸ்ரீகண்டாசார்யார் என்பவர் ராமாநுஜர் காலத்தை ஒட்டியே வந்தவர் என்று சொல்கிறார்கள். தத்வரீதியில் இவரும் விசிஷ்டாத்வைதம் மாதிரித்தான் சொல்கிறார். ஆனால் முக்தி நிலையைச் சொல்லும்போது அத்வைதத்துக்கு இன்னம் கொஞ்சம் கிட்டே போயிருக்கிறார். உபாஸனா ரீதியில் இவருக்கு சிவன்தான் பிரதானம். ராமாநுஜருக்கு எப்படி நாராயணந்தான் பரமாத்மாவோ, அப்படி இவருக்குப் பரமசிவன்தான் பரமாத்மா. இப்படி இவர் ஒரு சைவ-விசிஷ்டாத்வைத மதத்தை ஸ்தாபித்த போதிலும், ஸ்மார்த்த வைஷ்ணவர்கள் ராமாநுஜ ஸித்தாந்தத்தைத் தழுவிய அளவோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மிகமிகக் குறைவாகத்தான் ஸ்மார்த்த சைவர்கள் (அதாவது பரமேச்வரனை இஷ்டமூர்த்தியாகக் கொண்ட ஸ்மார்த்தர்கள்) ஸ்ரீகண்டரின் சைவமான ஸித்தாந்தத்தை தழுவியிருக்கிறார்கள். ஏனென்றால், ராமாநுஜருடன் பல வைஷ்ணவர்கள் பிரிந்து போனவுடனேயே, ஸ்மார்த்தர்கள் தங்களை முக்கியமான சைவர்கள் என்றே நினைத்திருக்க வேண்டும். அதனால்தான் சைவமான ஸித்தாந்தமாகவே ஒரு மதத்தை ஸ்தாபித்தபோது அதற்கு மாறவேண்டும் என்று இவர்கள் நினைக்கவில்லை போலிருக்கிறது. இந்த சைவ விசிஷ்டாத்வைதத்தின் மோக்ஷமும் அத்வைதத்துக்கு கிட்டவே இருந்ததால், தங்களுடைய அத்வைதத்தை விட்டுவிட்டு, அதே மாதிரியான ஸித்தாந்தத்துக்கு ஏன் போகவேண்டும் என்றும் நினைத்திருக்கலாம்.

தத்வம் ரொம்பக் கொஞ்சம் பேருக்குத்தான் முக்கியமாக இருப்பது; அப்பீல் ஆவது. பெரும்பாலாருக்கு பக்தியும், உபாஸனா மூர்த்தியும்தான் முக்கியம். அதனால்தான் விஷ்ணு உத்கர்ஷம் கூறப்பட்ட ஸித்தாந்தங்களுக்கெல்லாம் ஸ்மார்த்த மதத்திலிருந்து தீவிர விஷ்ணு பக்திக்காரர்கள் போயிருக்கிறார்கள். இதனாலேயே அத்வைதம் சிவ-உத்கர்ஷத்துக்கு ஏற்பட்டது என்ற அபிப்பிராயம் உண்டாகி, சிவ உத்கர்ஷத்திற்கென்றே ஒரு ஸித்தாந்தம் ஏற்பட்டபோது, அதில் விசேஷமாக ஸ்மார்த்தர்கள், அதாவது ஸ்மார்த்த மதத்திலிருந்த தீவிர சிவபக்திக்காரர்கள் சேராதபடி ஆகியிருக்கிறது. இப்போதுள்ள அடியோடு விஷயம் தெரியாதவர்களோ, அத்வைதிகள் என்றாலே சைவர் என்று நினைத்துவிடுமளவுக்கு ஆகியிருக்கிறது!

(ஸ்ரீ சங்கர)மடங்களில் சந்திர மெளளீச்வர பூஜைதானே நடக்கிறது என்றால், அது ஒரு காரணத்தினால் ஏற்பட்டது. ஆசார்யாளுக்கு பரமேச்வரனே ஐந்து ஸ்படிக லிங்கங்களைக் கொடுத்து, அவற்றின் ஆராதனை லோகத்தில் எந்நாளும் இருக்கும்படியாகப் பண்ணவேண்டும் என்றார். அவற்றில் இரண்டை ஆசார்யாள் சிருங்கேரியிலும், காஞ்சீபுரத்திலும் உள்ள மடங்களில் வைத்தும், பாக்கி மூன்றை நேபாளம், கேதாரிநாத், சிதம்பரம் ஆகிய இடங்களில் ஆலயங்களில் வைத்தும், அவிச்சின்னமாக (முறிவு படாமல்) ஆராதனை நடக்க வழி செய்தார். சங்கர மடம் என்றால், எல்லா மடங்களிலும் யூனிஃபார்மிடி இருக்க வேண்டாமா? அதனால் மடங்களில் சந்திர மெளளீச்வர பூஜையை வைத்தார். ஆசார்யாளுக்கு லக்ஷ்மீ நிருஸிம்ம மூர்த்தி ஒரு சாளக்ராமம் கொடுத்தார். ஈசுவரனே தம் ஸ்வரூபமான ஸ்படிக லிங்கம் தந்ததுபோல, நரஸிம்மமூர்த்தி தன் ஸ்வரூபமான சாளக்ராமத்தைக் கொடுத்தார். ஸ்படிக லிங்கத்தைப் பூஜையில் வைத்த மாதிரியே இந்த சாளக்ராமத்தையும் ஆசார்யாள் மடத்துப் பூஜையில் வைத்திருக்கிறார்.

அவருக்கு சிவ – விஷ்ணு பேதம் கொஞ்சமும் கிடையாது. சிதம்பரத்தில் ஸ்படிக லிங்கம் ப்ரதிஷ்டை பண்ணின மாதிரியே, பத்ரிநாத்தில் நாராயணனைப் பிரதிஷ்டை பண்ணியிருக்கிறார். அங்கேயே ஒரு மடம் ஸ்தாபித்திருக்கிறார். அவர் மடங்களை ஸ்தாபித்த இடங்களில் புரி ஜகந்நாதமும், த்வாரகையும் விசேஷமான கிருஷ்ண க்ஷேத்ரங்களே. அவர் சிவ ஸஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் பண்ணவில்லை; விஷ்ணு ஸஹஸ்ர நாமத்துக்குத்தான் பாஷ்யம் பண்ணியிருக்கிறார். சிவகீதை, தேவிகீதை எல்லாம்கூடப் புராணங்களில் இருந்தாலும் கிருஷ்ண பரமாத்மா உபதேசித்த பகவத் கீதைக்குத்தான் நம் ஆசார்யாள் பாஷ்யம் பண்ணியிருக்கிறார். ஈசுவரனையும் அம்பாளையும் போலவே மஹாவிஷ்ணு, ராமர், கிருஷ்ணர், மஹாலக்ஷ்மி எல்லாரைக் குறித்தும் ஸ்தோத்திரங்கள் செய்திருக்கிறார். இதையெல்லாம் சரியாக கவனிக்காததால், அவரை சைவர் என்று சொல்லிவிடுகிறார்கள்.

ஆசார்யாளின் மடத்தில் நடப்பது வெறும் சிவபூஜை மட்டுமில்லை. ஆரம்பத்திலேயே சொன்னேனே, அந்தப் பஞ்சாயதன பூஜைதான் மடத்துப் பூஜையும். ஆசாரியாள் ஈச்வரனும் அம்பாளும் சேர்ந்து எடுத்த அவதாரம்; உமாமஹேச்வரர்களே அவருக்கு கைலாஸத்தில் பஞ்சலிங்கங்களைக் கொடுத்தார்கள்; ஆகையால் அவர் நடுநாயகமாக ஈச்வரனையும் அம்பாளையும் மடத்துப் பூஜையில் வைத்தார். ஆனாலும் சிவ பஞ்சாயதன முறைப்படி மஹாவிஷ்ணு, கணபதி, சூரியன் ஆகியோர்களும் பூஜையில் இடம் பெற்றிருக்கிறார்கள். இங்கே சிவராத்ரி, நவராத்ரி மாதிரி, ராமநவமி, கோகுலாஷ்டமி, நரசிம்ம ஜயந்தி முதலானவற்றையும் கொண்டாடுகிறாம்.

மடத்தில் ஸ்ரீமுகம் அனுப்பும்போது என்ன சொல்கிறோம்? இன்ன காரியத்தைக் குறித்து, “க்ரியதே நாராயண ஸ்மிருதி:” என்று ஸ்ரீமுகத்தில் சொல்கிறோம். அதாவது எந்தப் புஸ்த‌கத்துக்கு அல்லது காரியத்துக்கு ஆசீர்வாதமாக இந்த ஸ்ரீமுகம் அனுப்பப்படுகிறதோ அது நல்லபடியாக நடப்பதற்காக நாராயணனை ஸ்மரிக்கிறோம் என்று சொல்கிறோம். சிவனை ஸ்மரிப்பதாகச் சொல்லவில்லை. நீங்கள் எனக்கு நமஸ்காரம் பண்ணும்போது என்ன சொல்கிறேன்? “நாராயண நாராயண” என்றுதான் சொல்கிறேன். எல்லா சங்கராசாரியர்களும் இப்படித்தான் சொல்கிறோம். இது ஆதி ஆசார்யாளே பண்ணின ஏற்பாடு. ஜகத் பரிபாலன கர்த்தா என்கிற ரீதியில், லோகத்தில் நல்லது நடப்பதற்கெல்லாம் நாராயணனைத்தான் ஸ்மரிக்க வேண்டும் என்று வைத்திருக்கிறார்.

இத்தனை நாழி, அத்வைதிகள் என்றால் சைவர் என்று அபிப்பிராயம் ஏற்பட்டிருப்பதைப் பற்றிச் சொன்னேன். இதற்கு நேர்மாறாக சங்கரர் மஹாவிஷ்ணுவைத்தான் உபாஸித்தவர் என்கிறவர்களும் உண்டு. அவர்கள் இந்த நாராயண ஸ்மரணம், விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம் முதலான விஷயங்களை தங்களுக்கு ஆதரவாகச் சொல்கிறார்கள். இதோடுகூட, ஆசார்யாள் பாஷ்யங்களில் இந்த லோக வியவகாரத்தை எல்லாம் செய்யும் ஸகுணப் பிரம்மமான ஈச்வரனைப் பற்றிப் பிரஸ்தாபிக்கிறபோது, அவனை ‘நாராயணன்’ என்றே சொல்லியிருப்பதையும் எடுத்துக்காட்டுகிறார்கள்.

ஆனாலும் ஆசாரியாளை சைவர் என்றோ, சாக்தர் என்றோ, வைஷ்ணவர் என்றோ எப்படிச் சொன்னாலும் அது அவரை குறுக்குகிற காரியந்தான். அப்படியெல்லாம் ஏதோ ஒரு தெய்வத்துக்கு மட்டும் அவர் பக்தர் என்பது சரியில்லை ஏன் அத்வைத பாஷ்ய கிரந்தங்களில் ஸகுணப் பிரம்மம் என்றால், நாராயணன் என்று சொன்னார் என்றால், முத்தொழில் என்று பிரித்துக் கொடுக்கிறபோது மஹாவிஷ்ணுவுக்குத்தான் லோக ரக்ஷணப் பொறுப்புத் தந்திருக்கிறது. எவன் ரக்ஷிக்கிறானோ அவனையே பிரபஞ்சத்தையெல்லாம் நடத்தும் சக்தியாகச் சொன்னார் என்றுதான் சொல்லவேண்டும்.

ஆசாரியாள் சைவர், வைஷ்ணவர், சாக்தர் எல்லாம்தான். அவருடைய சிஷ்யர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஸ்மார்த்தர்களான நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஸ்மார்த்தர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருப்பவர் முத்துஸ்வாமி தீக்ஷிதர். அவர் மாரியம்மனும், ஐயனாரும், நவக்கிரஹங்களும் உள்பட அத்தனை தெய்வங்களையும் பரமாத்ம ஸ்வரூபமாகப் பார்த்து கீர்த்தனங்களால் ஸ்தோத்திரம் செய்திருக்கிறார். அத்தனை தெய்வங்களுமான ஏக பரமாத்மாதான் நமக்கு உபாஸ்யம். அதை அத்தனை ரூபங்களிலும் ஏற்றத்தாழ்வில்லாமல் பாவிக்கிற மனப்பான்மை நமக்கு வரவேண்டும். ஆதிகாலத்திலிருந்து அத்வைதிகளிலேயே வீரசைவர்களும், வீரவைஷ்ணவர்களும் இருந்திருக்கிறார்கள் என்று சொன்னாலும், அது ஆசார்யாளின் மனோபாவத்துக்கும், அவர் நமக்கு போட்டிருக்கிற ஆக்ஞைக்கும் சம்மதமானதல்ல. அத்வைதிகளிலேயே அப்பைய தீக்ஷிதர் பரம சாம்பவராகவும் [சிறந்த சிவபக்தராகவும்] லீலாசுகர் பரம பாகவதராகக் கிருஷ்ணனிடமே பரம ப்ரீதியும் வைத்திருந்த மாதிரி, நாம் ஏதாவது ஒரு இஷ்ட தெய்வத்திடம் அதிக பக்தி வைப்பதில் தப்பில்லை. ஆனால் இந்த மஹான்கள் எப்படி இன்னொரு தெய்வத்தை நிந்திக்காமலே தங்கள் இஷ்ட தெய்வத்திடம் பக்தியில் உருகினார்களோ, அப்படி நாமும் எந்த ஒரு தெய்வத்தையும் நிந்திக்காமல், நம் இஷ்ட மூர்த்தியிடம் விசேஷ பக்தியோடு இருக்கவேண்டும்.

வேத மதம் என்ற ஸ்மார்த்த மதத்தின் மூலக் கொள்கைகளில் இது ஒன்று: இன்னொரு தெய்வத்தைத் தாழ்த்திச் சொல்லித் தன் தெய்வம்தான் தெய்வம் என்று சொன்னால் அப்போது அது வேத ஸம்மதம் உடையதாகாது. இந்த ‘டெஸ்ட்’படிப் பார்த்தால் ஆசார்யாளை அநுஸரிக்கிற ஸ்மார்த்த மதஸ்தர்களான நாம்தான் பூரண வைதிகர்கள். இப்படி நான் சொல்லவில்லை. நான் சொன்னால் அது தப்பு. இது என் சம்பிரதாயம் என்பதற்காக உயர்த்திச் சொல்கிறேன் என்றாகிவிடும். ஆதலால் இது என் அபிப்பிராயமில்லை. மூன்று பூர்வகாலப் பெரியவர்களுடைய அபிப்பிராயம் இப்படி இருந்திருக்கிறது.

த்வைதி, அத்வைதி, விசிஷ்டாத்வைதி எல்லோருக்கும் மூல புருஷரான வியாஸ மஹரிஷியின் அபிப்பிராயமே இப்படித்தான் இருந்திருக்கிறது. பாரதத்தில் அநுசாஸனபர்வாவில் பீஷ்ம பிதாமஹரின் வாயிலாக அவர் பிராசீனமாக இருந்து வந்த ஐந்து மதங்களின் பெயரைச் சொல்லும்போது, ஸாங்க்யம் யோக: பாஞ்சராத்ரம் வேதா: பாசுபதம் ததா என்கிறார். இவற்றில் ‘வேதா:’ என்பதுதான் வேத மதம்; பிற்காலத்திய ஸ்மார்த்த மதம். அதில் ஸகல தெய்வ ஆராதனையும் உண்டு. கர்மம்-பக்தி-ஞானம் மூன்றும் உண்டு. தத்வங்களை ஆராய்ச்சி பண்ணுகிற ஸாங்கியமும் அதில் அடக்கம். யோக ஸாதனையும் அதிலே தியானத்தின் அங்கமாக வருவதுதான். இது அத்தனையும் ஆசார்யாளினால் புத்துருப்பெற்ற ஸ்மார்த்த ஸம்பிரதாயத்திலும் உண்டு. ‘சிவானந்த லஹரி’, ‘ஸெளந்தர்ய லஹரி’, ஸ்ரீ மஹாவிஷ்ணுவைக் குறித்த ‘ஷட்பதி’ ஸ்தோத்திரம் முதலானவற்றில் நம் அத்வைத ஆசாரியாளே த்வைதம், விசிஷ்டாத்வைதம் முதலியவற்றையும் ஒவ்வொரு நிலையில் ஒப்புக் கொண்டிருக்கிறார். “யோக தாராவளி” என்ற நூலில் ஒரேடியாகப் பாதஞ்ஜல யோக நுட்பங்களைக் கொட்டியிருக்கிறார். ஸாங்கியர்களின் இருபத்து நாலு தத்துவங்களையும் அவர் பாஷ்யங்களின் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். வியாஸர் சொன்ன ஐந்தில் வேதம், ஸாங்கியம், யோகம் போக மீதமுள்ளவை பாஞ்சராத்ரமும், பாசுபதமும். பாஞ்சராத்ரத்தில் விஷ்ணு மட்டும்தான் தெய்வம் என்று சொல்லியிருக்கிறது. பாசுபதத்தில் பரமேச்வரன் மட்டும்தான் தெய்வம் என்று சொல்லியிருக்கிறது. இவை மற்ற தெய்வங்களை மட்டம் தட்டி இப்படி ஒவ்வொரு தெய்வத்துக்கு மட்டும் உத்கர்ஷம் சொல்கின்றன. அதனால் இவை வேத மதத்தைச் சேர்ந்தவை ஆகா என்று வியாஸாசார்யாள் அபிப்பிராயப்படுகிற மாதிரிதான் “வேதா:” என்று வேத மதத்தைச் சொல்லிவிட்டு, ‘பாஞ்சராத்ரம், பாசுபதம்’ என்று இவற்றை வேதத்திற்கு வேறான சம்பிரதாயங்களாகத் தனியே சொல்லிவிட்டார். ஸாங்கியம் வெறும் தத்வ வாதம்தான். அதில் கர்மாவுமில்லை; பக்தியுமில்லை; அநுபவ ஞானத்துக்கும் வழியில்லை. யோகம் ரொம்பவும் உசந்தது என்றாலும், அதிலும் வைதிக உபாஸனை, கர்மா எல்லாம் பூர்ணமாக வரவில்லை; ஞானம் என்று எடுத்துக்கொண்டாலும், உபநிஷத்தில் சொன்ன மாதிரி அதில் பரமாத்ம தத்வத்தைப் பற்றி தெளிவாகச் சொல்லவில்லை. அதனால்தான் இந்த நாலுமே ஏதோ ஒரு தினுசில் அபூர்ணம் என்பதால், எல்லாவற்றையும் எடுத்துக் கொண்ட பூர்ணமான வேதத்திலிருந்து அவற்றைப் பிரித்துச் சொல்லிவிட்டார்.

வியாஸர் மஹரிஷி, பரமஞானி. அவர் அபிப்பிராயம் இப்படி என்றால், இன்னொருத்தர் கந்தர்வராக இருந்து அம்பாள் சாபத்தால் மநுஷ்யராகப் பிறந்து மிகப் பெரிய சிவபக்தராகி ஈஸ்வரனை ஸ்தோத்திரம் பண்ணி அதன் பலனாக ஈச்வரனையே அடைந்து நித்ய கைலாஸ வாஸம் செய்தவர். அவருக்கு புஷ்பதந்தர் என்று பேர். அவர் பண்ணின ஸ்தோத்திரத்துக்கு “சிவ மஹிம்ன ஸ்தோத்திரம்” என்று பேர். ‘சிவனின் மஹிமையைக் கூறும் துதி’ என்று அர்த்தம். புனாவுக்கு அப்புறம் கொஞ்சம் வடக்கே போய்விட்டால் போதும். வடஇந்தியா முழுக்க பக்தர்கள் என்றால் சிவ மஹிம்ன ஸ்தோத்திரம் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். (நான் எத்தனையோ சொல்லியும், புஸ்தகமாகவே அச்சுப்போட்டுக் கொடுத்தும்கூட, நம் பக்கங்களில் திருப்பாவை..திருவெம்பாவையோ, திருமுருகாற்றுப்படையோ, விநாயகர் அகவலோ அந்த அளவுக்கு பிரபலமாகவில்லை.) அந்த “சிவ மஹிம்ன” ஸ்தோத்திரத்திலேயும், வியாஸர் சொன்ன மாதிரிப் பல மதங்களைப் பற்றிய பிரஸ்தாவம் வருகிறது. மஹாபாரத சுலோகத்தை நினைத்துக்கொண்டே புஷ்பதந்தர் பாடின மாதிரி இருக்கிறது:

த்ரயீ ஸாங்க்யம் யோக: பசுபதி மதம் வைஷ்ணவம் இதி

‘த்ரயீ’ என்றால் வேதமதம். அப்புறம் ஸாங்கியம், யோகம். பசுபதி மதம் என்பதுதான் மற்ற தெய்வங்களை மட்டம் தட்டி சிவனே பெரிசு என்கிற பாசுபத மதம். இதே மாதிரி பரதெய்வ நிராகரணம் பண்ணி விஷ்ணு உத்கர்ஷம் சொல்வது வைஷ்ணவம். வியாஸர் இதைத்தான் பாஞ்சராத்ரம் என்றார்.

வியாஸரும் சரி, புஷ்பதந்தரும் சரி இந்த ஐந்து மதங்களையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவை ஒரே சமுத்திரத்தில் கொண்டு சேர்க்கிற ஐந்து நதிகள் மாதிரி என்று சிறப்பித்தே பேசுகிறார்கள். ‘எங்கள் தெய்வம்தான் உசத்தி’ என்கிறவர்களையும் ஒப்புக் கொண்டுதான் பேசியிருக்கிறார்கள். ஆனாலும்கூட இந்த மனோபாவம் வேதமதத்துக்கு உகந்ததல்ல என்பதால், இவற்றை வேதத்திலிருந்து வேறாகவே சொல்லியிருக்கிறார்கள். புஷ்பதந்தர் விஷயத்திலே இது ரொம்பவும் ரஸமாயிருக்கிறது. ஏனென்றால் அவரே பரம சாம்பவர்தான். சிவ மஹிமைதான் அவருடைய ஸ்தோத்திரத்தின் விஷயம். ஐந்து மதங்களும் பரமேச்வரன் என்கிற ஒரே ஸ‌முத்திரத்தில் கலக்கும் நதிகள்தான் என்றே இந்த ச்லோகத்தில் சொல்லியிருகிறார். அப்படியிருந்தும் பசுபதி மதமான சைவமே நம்முடைய ஸநாதன தர்மமான வேதமதம் என்று அவர் சொல்லவில்லை. எதையும் தள்ளாததுதான் வேதமதம். எல்லாவற்றையும் கொள்ளுவதுதான் வேதமதம் என்பதால், இப்படி அதைப் பாசுபதத்துக்கு வேறானதாகச் சொல்லியிருக்கிறார்.

மூன்றாமவர் ஒரு கவி. மும்மதஸ்தருக்கும் முக்கியஸ்தரான வியாஸர் வாக்குக்கு ஒரு மதிப்பு உண்டு என்றால், சைவரான புஷ்பதந்தரே சிவனை மட்டும் சொல்லும் மதத்தை வேதத்துக்கு வேறாகச் சொல்வதில் ஒரு விசேஷம் உண்டென்றால், எந்த மதத்தையும் சேராமல், எந்த தெய்வத்தையும் பெரிசு சின்னது என்று சொல்லாமல், நடுநிலைமையிலிருந்து பார்க்கிற கவி வாக்குக்கும் ஒரு அலாதிச் சிறப்பு இருக்கத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட ஒரு கவியின் கருத்தை இங்கே பார்ப்போம். அந்தக் கவி யார்? நைஷதம் என்கிற நள சரித்திரத்தை எழுதிய ஸ்ரீஹர்ஷர். ரொம்பவும் காவிய ரஸம், இலக்கியச் சுவை நிரம்பிய ஒரு கட்டத்தில் உபமானம் சொல்கிறபோது அவரும் ஐந்து மதப் பிரஸ்தாவம் பண்ணுகிறார்.

தமயந்திக்கு ஸ்வயம்வரம் நடக்கிறது. அவளுக்கு நளன்மேல்தான் பிரேமை. ஸ்வயம்வரத்துக்கு வந்துள்ள நளனுக்கே மாலை போடவேண்டும் என்பது அவளுடைய உத்தேசம். தமயந்தியின் மேல் இந்திரன், வருணன், அக்னி, யமன் ஆகிய நாலு தேவர்களுக்குங்கூட ஆசை. அவள் தங்கள் பத்னியாக வேண்டும் என்று ஆசை. இவளுக்கோ நளனிடம்தான் பிரியம் என்று அவர்களுக்குத் தெரியும். அதனால் அவர்களும் (அவர்களின் ஒவ்வொருவரும்) தத்ரூபம் நளனைப் போலவே வேஷம் போட்டுக் கொண்டு வந்துவிட்டார்கள். ஐந்து நளன்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள் – ஸ்வயம்வர மண்டபத்திலே. எது நிஜ நளன் என்று தமயந்தி எப்படித் தெரிந்து கொள்ள முடியும்?

இந்த இடத்திலேதான் ஸ்ரீஹர்ஷர் ஐந்து மதங்களுக்கு நடுவே ஸத்யதரமான அத்வைதம் இருக்கிற மாதிரி, ஐந்து நளன்களுக்கிடையே இருந்த ஸத்யமான நளனைப் புரிந்து கொள்ள முடியாமல் தமயந்தி திகைத்து நின்றாள் என்கிறார்: பஞ்சம கோடி மாத்ரே…. மதானாம் அத்வைத தத்வ இவ ஸத்யதரேபி லோக:

‘தரம்’ என்றால் ஒப்பிட்டு உயர்த்தி கூறுகிற comparitive degree. மற்ற நாலு மதங்களும் தப்பானவை என்று கவி சொல்லவில்லை. வியாஸர், புஷ்பதந்தர் மாதிரி இவரும் அவற்றை ஸத்தியமானவை என்று ஒப்புக் கொள்கிறார்.ஆனாலும் அவற்றோடு ஒப்பிட்டு, அவற்றினும் ஸத்தியத்தில் உயர்ந்தது அத்வைதமே என்பதால் “ஸத்யதர அபி அத்வைத” என்று அதைச் சிறப்பித்துச் சொன்னார். எப்படி நம் ஆசார்யாள் ஸத்யத்திலேயே மூன்று தினுசு பிரித்தாரோ* அப்படியே ஸ்ரீஹர்ஷரும் சாதாரண ஸத்யம், உத்தமமான ஸத்யம் என்று பிரித்து, பாரதத்தில் சொல்லப்பட்ட ஐந்து மதங்களில் மற்ற நாலும் ஸாதாரண ஸத்தியம், அத்வைதமே உத்தம ஸத்தியம் என்கிறார்.

பாரதத்தில், பீஷ்ம வசனத்தில் “அத்வைதம்” என்று இல்லை. “வேதா:” என்றுதான் இருக்கிறது. ஆனாலும் விஷ்ணுதான் தெய்வம், சிவன்தான் தெய்வம் என்று கட்சி கட்டினால், அந்த மதம் வேதத்துக்கு வேறானது என்கிற அபிப்பிராயம் அங்கு வந்து விட்டது. புஷ்பதந்தர் வாக்கிலும் இதே கருத்து வந்திருக்கிறது. அங்கும் “த்ரயீ” என்று வேதத்தைச் சொல்லியுள்ளதே தவிர, “அத்வைதம்”, என்றில்லை. ஆசார்யாளுக்குப் பிந்தி சைவம், வைஷ்ணவம் என்று ஒன்றைத் தாழ்த்தி இன்னொன்றை உயர்த்திச் சொல்கிற மதங்கள் வந்துவிட்ட நிலையில், அத்வைதிகளின் ஸ்மார்த்த மதம்தான் எல்லாவற்றையும் ஒத்துக்கொள்கிற பூர்ண வேதமாக ஆகிவிட்டது. அதனால்தான் ஸ்ரீ ஹர்ஷர் ‘வேதமதம்’ என்று போடுவதற்குப் பதில் ‘அத்வைதம்’ என்றே போட்டு விட்டார்!

ஒரு பக்கத்தில் அத்வைதிகள் சைவர்கள் என்ற தப்பபிப்பிராயம் வந்து கொண்டிருந்தாலும், பிற்கால ஆசார்யர்கள் அத்வைதத்துக்கு மாறான ஸித்தாந்தங்களை ஏற்படுத்திய நாளாக அத்வைதந்தான் பூர்ணமான வேதமதம் என்கிற ஒரு அபிப்பிராயமும் இருந்திருக்கிறது. அத்வைதிகளுக்கே ஸ்மார்த்தர் என்ற பொதுவான ஆதிப் பெயர் நீடித்து வந்திருப்பது இதற்கு ஒரு அத்தாட்சிதான்.

ஸ்மார்த்தர் என்ற வார்த்தைக்கு ‘அத்வைத ஸித்தாந்தத்தை மேற்கொண்டவர்’ என்றோ, ‘சங்கரரை அநுஸரிப்பவர்’ என்றோ root meaning இல்லை.; அர்த்தமில்லை. பூர்ண வைதிகமான தர்மசாஸ்திர ஸ்மிருதிகளைப் பின்பற்றுபவர் என்றுதான் அர்த்தம். இதே மாதிரி சர்மா, சாஸ்திரி முதலான பொதுப்பேர்களும் முக்கியமாக ஸ்மார்த்தர்களுக்குத்தான் நீடித்திருக்கிறது. ஆசார்யாள் தோன்றுவதற்கு ரொம்பவும் பூர்வ காலத்திய சாஸ்திரங்களிலிருந்தும் ‘சர்மா’ என்பதே பிராம்மணனுக்குரிய ஜாதிப் பெயர் என்று தெரிகிறது. பிராம்மணனை ‘சர்மா’ என்றும், க்ஷத்ரியனை ‘வர்மா’ என்றும் சொல்வது பிராசீனமான வேதமத வழக்கு. ரவிவர்மா என்று சைத்ரிகர் இருந்தார் என்றால் அவர் க்ஷத்ரியர் என்று அர்த்தம். இப்போதும் ஒரு பிராம்மணப் பிள்ளைக்கு உபநயனம் ஆனால், தனது வேதசாகையையும், ஸூத்திரத்தையும், கோத்திரத்தையும் சொல்லி அவன் நமஸ்காரம் பண்ணும்போது, “என்ன சர்மன்?” என்று கேட்கிறோம். “இன்ன சர்மன்” என்றே அவன் பெயரைச் சொல்கிறான். ஐயங்கார், மாத்வர் எல்லோருக்கும் இப்படித்தான். ஆனாலும் எப்போதும் தன் பேரின் பின்னாடி ஜாதிப் பெயராக சர்மா போட்டுக் கொள்கிறவன் பெரும்பாலும் அத்வைதிதான். இது, இவன்தான் பூர்ணமாக வேத மதஸ்தன் என்று காட்டுகிறது.

‘சாஸ்திரி’ என்றால் ‘சாஸ்திரத்தை அநுசரிப்பவன்’. சாஸ்திரம் என்றால் வேத – தர்ம சாஸ்திரங்கள்தான். இந்தப் பெயரையும் அத்வைதியான ஸ்மார்த்தன்தான் போட்டுக்கொள்கிறான்.

விதிவிலக்காக, அபூர்வமாக ஒரு மத்வரோ, வைஷ்ணவரோ சர்மா என்று போட்டுக் கொள்ளலாம். ஆனால் D.S. சர்மா, ரைட் ஆனரபிள் சாஸ்திரி என்கிற மாதிரி பேரைச் சொன்னாலே அவர்கள் ஸ்மார்த்தர்கள்தான் என்று எடுத்துக்கொள்கிறோம்.

ஒருத்தர் ராமாநுஜ ஸித்தாந்தத்தைச் சேர்ந்தவர், அல்லது மத்வ ஸித்தாந்தத்தைச் சேர்ந்தவர், அல்லது தமிழ் தேசத்திலுள்ள சைவ ஸித்தாந்த மடங்களுக்கு மூல புருஷராக இருக்கப்பட்ட மெய்க்கண்டாரைச் சேர்ந்தவர் என்றால், அது ஒருத்தருடைய பிறப்பையும், இந்த வழிகளில் ஒன்றில் அவருக்கு இருக்கிற நம்பிக்கையையும் மட்டும் குறித்த விஷயமல்ல. ஐயங்காருக்குப் பிள்ளையாகப் பிறந்தவன், ராவ்ஜியின் புத்திரன், சைவ மடாலயத்தைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவன் என்பதால் மட்டும் ஒருத்தன் அந்த சம்பிரதாயத்தை அநுசரித்தவனாக ஆகிவிடமாட்டான். அந்தக் கொள்கையை மனமார ஏற்றுக் கொண்டு நம்புகிறேன் என்றாலும் அந்த சம்பிரதாயக்காரனாக ஆகிவிடமாட்டான். இப்படி நான் சொல்லவில்லை. அந்த ச‌ம்பிரதாயங்களைச் சேர்ந்த ஆசார்ய புருஷர்களே சொல்லுவார்கள். “ஐயங்காராகப் பிறந்தால் மட்டும் போதாது; விசிஷ்டாத்வைதத்தை நம்பினால் மட்டும் போதாது; அப்படி பிறந்த ஒருத்தன் உடம்பிலே சங்க சக்ரங்களை முத்ராதாரணம் பண்ணிக் கொள்ள வேண்டும். மஹாவிஷ்ணுக்குரிய மந்திரத்தை உபதேசம் செய்து கொள்ள வேண்டும். இப்படி ‘ஸமாச்ரயணம்’ செய்து கொண்டால்தான் ஒருத்தன் விசிஷ்டாத்வைதி ஆகிறான்” என்று வைஷ்ணவ ஆசார்யர்கள் சொல்வார்கள். வைஷ்ணவ சம்பிரதாயத்தில் இப்படி ஒரு முறை ஸமாச்ரயணம் செய்து கொண்டால் போதும். மத்வ ஸித்தாந்தப்படியோ தங்கள் ஆசார்யரைப் பார்க்கிற போதெல்லாம், பஞ்ச முத்ராதாரணம் பண்ணிக் கொள்ளவேண்டும். இவர்களுக்கும் மந்திர உபதேசம் உண்டு. சைவ சித்தாந்தப்படி சூல‍ – இடபக்குறிகளை முத்ராதாரணம் செய்து கொள்வது ‘கம்பல்ஸரி’ இல்லாவிட்டாலும், பஞ்சாக்ஷர உபதேசம் நிச்சயம் பெற்றாக வேண்டும். தீக்கை” என்று இதைச் சொல்வார்கள். “தீக்ஷை” என்பதன் திரிபே அது. இதர ஸம்பிரதாயத்திலும் இப்படி ஏதாவது ஒரு ஸம்ஸ்காரம் செய்ய‌ப்பட்டால்தான் ஒருவன் அதைச் சேர்ந்தவனாகக் கருதப்படுவான். பிறப்பும், நம்பிக்கையும் மட்டும் ஒருத்தனை வைஷ்ணவனாகவோ, மாத்வனாகவோ, சைவனாகவோ ஆக்கிவிடாது. அதற்கென்று ஒரு ஸம்ஸ்காரம் செய்து கொண்டாக வேண்டும். இது அந்தந்த ஆசார்யர்களே சொல்வது.

அப்படியானால், நாமம் போட்டுக் கொள்பவர்களிலும், விபூதி இட்டுக் கொள்பவர்களிலும், ஸமாச்ரயணம், முத்ராதாரணம், தீக்ஷை முதலியன பெறாதவர்களாகப் பல பேர் இருக்கிறார்களே, இவர்களை என்ன சம்பிரதாயத்துக்காரர் என்று சொல்வது?

இவர்கள் எல்லாரும் ஸ்மார்த்தர்கள்தான். இது ரொம்பப் பேருக்கு தெரியாத விஷயம்.

இப்போது ஒருவன் ஹிந்துவாக இருக்கிறான். அவன் கிறிஸ்துவ மதத்துக்கு மாறுகிறான். எப்படி மாறுகிறான்? அந்த மதத்துப் பாதிரி ஞான ஸ்நானம் (Baptism) என்று பண்ணி வைக்கிறார். அது பண்ணப்பட்டால்தான் இவன் கிறிஸ்துவனாகக் கருதப்படுவான். இல்லாவிட்டால் ஹிந்து தானே?

இப்படியே சிவ தீக்கை அல்லது ஸமாச்ரயணம் அல்லது முத்ராதாரணம் செய்யப்பட்டால்தான் ஒருத்தன் சைவ ஸித்தாந்தியாகவோ ஸ்ரீ வைஷ்ணவனாகவோ மாத்வனாகவோ ஆகிறான்.

கிறிஸ்துவ மதத்துக்கு போகிறவன் நம் வேத சாஸ்திரங்களை விட்டுவிட்டுப் போகிறான். அத்வைதம் தவிர மற்ற ஸித்தாந்தங்களுக்குப் போகிறவன், வேத சாஸ்திரங்களையும் வைத்துக் கொண்டே அந்த ஸித்தாந்தத்துக்குப் போகிறான். இந்த ஸம்பிரதாயத்து ஆசார்யர்களும் வேதங்களையும் ஸ்மிருதிகளையும் பிரமாணமாக ஒப்புக்கொண்டவர்கள்தாம். ஆனாலும் அவற்றுக்கும் அதிகமாகச் சில சடங்குகளைப் பண்ணச் சொல்கிறார்கள். அதைப் பண்ணினால்தான் ஒருத்தன் வைஷ்ணவனாகவோ, சைவனாகவோ, மாத்வனாகவோ ஆனதாக அர்த்தம்.

அல்லாது போனால் அவன் ஸ்மார்த்தன்தான்; அதாவது சங்கர பகவத் பாதாளைச் சேர்ந்தவன்தான் என்று சொல்லிவிடலாம். இபபடிச் சொல்லி நான் ஏகப்பட்ட பேரை என் சம்பிரதாயத்துக்கு வளைத்துக் கொள்கிறேனா என்ன? அத்வைதி என்பவ‌னுக்கு ஏதாவது புது ஸம்ஸ்காரம் பண்ண வேண்டும் என்று ஆசார்யாள் சொல்லியிருந்தால் நான் சொல்வது தப்புதான். ஆனால் ஆசார்யாள் அப்படிச் சொல்லவே இல்லை. அத்வைதி என்று ஒரு மதஸ்தனை அவர் பிரிக்கவே இல்லை. அநாதிகாலமாக வந்த ஸ்மார்த்த ஸம்பிரதாயத்தவராகவேதான், பூர்ண வைதிக மதஸ்தராகவேதான் தம்மை அநுஸரிப்பவர்களை வைத்து விட்டார். அத்வைதிக்குத் தனி ஸம்ஸ்காரம் எதுவும் வைக்கவில்லை. ஆகையால் வேறாகப் புது ஸம்ஸ்காரமாகாத எல்லோரும் அவரைச் சேர்ந்தவர்கள்தான்.

வேதத்தில் இந்த தீக்ஷை, முத்ராதாரணம், ஸமாச்ரயணம் எதுவும் சொல்லியிருக்கவில்லை. நேராக வேதத்தில் அதிகாரம் உள்ள மூன்று வர்ணங்களுக்கு, அந்த அதிகாரத்தைப் பெறுமுன்னர் உபநயனம் பண்ணி காயத்ரி உபதேசம் பண்ணவேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறது. பிரம்ம – க்ஷத்ர – வைச்யர்களுக்கு உபநயனந்தான் சொல்லியிருக்கிறது. நாலாவது வர்ணத்துக்கு அதுவும் இல்லை. அதுவும் இல்லாமலே அவனை வேத மதஸ்தனாக ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆசார்யாளும் இதே வழிமுறையைத்தான் வைத்துக்கொண்டார். புதிதாக எந்த ஸம்ஸ்காரத்தையும் சொல்லவில்லை.

புதிதாக நமக்கென்று ஒன்றும் இல்லையே என்று ஸ்மார்த்தர்கள் குறைப்பட்டுக் கொள்ளவே கூடாது. வேதத்தில் எது சொல்லியிருக்கிறதோ அது நமக்குப் போதும். ராமசந்திரமூர்த்தியும், க்ருஷ்ண பரமாத்மாவும் முத்ராதாரணம், ஸமாச்ரயணம் பண்ணிக் கொண்டதாகவோ, சிவ தீக்ஷை எடுத்துக் கொண்டதாகவோ ராமாயண, பாகவதாதிகளில் சொல்லியிருக்கிறதோ? இல்லை. அவர்கள் அவதார புருஷர்களானதால் அவர்களுக்கு இவை இல்லை என்று அந்த ஸித்தாந்திகள் சொன்னால், அது வாதத்துக்கு சரியாக வராது. ஏனென்றால் ராமாயணத்திலே ராமர் தம்பிகளோடு கூட வேதாத்யயனம் பண்ணினார் என்று சொல்லியிருக்கிறது1. உப‌ந‌ய‌ன‌மானால்தான் அத்ய‌ய‌ன‌ம் ப‌ண்ண‌ முடியும். அத‌னால் அவ‌ருக்கு உப‌ந‌ய‌ன‌ம் ஆன‌து தெரிகிற‌து. இப்ப‌டியே பாக‌வதத்திலும் கிருஷ்ண வ‌ஸுதேவ‌ரும் தேவ‌கியும் காராக்ருஹ‌த்திலிருந்து விடுத‌லையாகி வ‌ந்த‌வுட‌ன் உப‌ந‌ய‌ன‌ம் ப‌ண்ணினார்க‌ள் என்று சொல்லியிருக்கிற‌து2. அப்புற‌ம் கிருஷ்ண‌ர் ஸாதார‌ண‌ப் ப‌ச‌ங்க‌ளைப் போல‌வே, ஸாந்தீப‌னி என்ற‌ பிராம்ம‌ண‌ரிட‌ம் குருகுல‌வாஸ‌ம் ப‌ண்ணி, வேத‌த்தை அத்ய‌ய‌ன‌ம் ப‌ண்ணின‌தாக‌ இருக்கிற‌து. அவ‌தார‌ புருஷ‌ர்க‌ளுக்கு இதெல்லாம் ம‌ட்டும் என்ன‌த்துக்கு? நினைத்த‌ மாத்திர‌த்தில் அவ‌ர்க‌ளே ச‌க‌ல‌ வேத‌ சாஸ்திர‌ங்க‌ளையும் தெரிந்துகொள்ள‌ முடியாதா? ராம‌ர் விசுவாமித்ர‌ரிட‌மிருந்து எத‌ற்காக‌ அஸ்திர‌ ச‌ஸ்திர‌ அப்யாஸ‌ம், ப‌லை, அதிப‌லை ம‌ந்திர‌ங்க‌ள் முத‌லான‌துக‌ளைக் க‌ற்க‌ வேண்டும்? ஆகையால் ம‌நுஷ்ய‌ர்க‌ள் எப்ப‌டியிருக்க‌ வேண்டுமோ அப்ப‌டியிருப்ப‌த‌ற்கு வ‌ழிகாட்டியாக‌த்தான் அவ‌ர்க‌ள் உப‌ந‌ய‌ன‌ம் செய்து கொண்டு, அத்ய‌ய‌ன‌ம் பண்ணினார்க‌ள் என்று அர்த்த‌மாகிற‌து. அவ‌ர்க‌ள் ப‌ண்ணின‌தே ந‌ம‌க்குப் போதும். வேத‌த்திலும், அதை அநுச‌ரித்து ம‌ஹ‌ரிஷிக‌ள் செய்த‌ ஸ்மிருதிக‌ளிலும் இருப்ப‌‌த‌ற்கு அதிக‌மாக‌ ந‌ம‌க்கு எதுவும் வேண்டிய‌தில்லை என்று ஸ்ரீ ப‌க‌வ‌த்பாதாள் வைத்து விட்டார்.

மற்ற ஸம்பிரதாய ஆசார்யர்கள் வேத, சாஸ்திரங்களை ஒப்புக்கொண்டே அதிகப்படி ஸம்ஸ்காரங்களை வைத்தாலும், அவர்கள் கொள்கை காரணமாக, சிவ‍ – விஷ்ணு பேதமின்றி வேத சாஸ்திரங்கள் விதித்திருக்கிற அநேக விஷயங்களை அவர்களுடைய ஸம்பிரதாயக்காரர்கள் விடும்படி இருக்கிறது. ஆகவே புதிதாகச் சிலது சேர்ந்தாலும், பழசான சிலது விட்டுப் போகிறது. நமக்கு இரண்டும் இல்லை என்று திருப்தியாக இருக்கலாம். ‘அநாதியான சாஸ்திரத்துக்கு அதிகமாக எதுவும் சேர்க்காதே! அதில் இருப்பதை ஒன்றைக்கூட விட்டும் விடாதே!’ என்று நம் ஆசார்யாள் வைத்துவிட்டார். இருந்ததையேதான், புதிதாக நடுவில் வந்த தோஷங்களை அகற்றிவிட்டு, பழைய மூல ரூபப்படி சுத்தமாக்கி வைத்தார்.

புதிதாக ஒன்றைச் சொல்ல வரவில்லை; உள்ளதை சரிப்படுத்தித் தரத்தான் அவர் வந்தார் என்பது ஒரு புராண வாக்கிலிருந்தும் தெரிகிறது.

ஆசார்யாளைப் பரமேச்வர அவதாரமாகச் சொல்கிற புராணங்கள், இதிஹாஸங்கள் பல இருக்கின்றன. அவற்றில் “கூர்ம புராண”த்தில், கலியின் கோலாஹலம் முற்றிய சமயத்தில், ஈச்வரன் தானே அவதாரம் பண்ணி அதர்மப் பிரவாஹத்தை அடக்கப் போகிறான் என்று சொல்கிற இடத்தில்,

கரிஷ்ய(தி) அவதாரம் ஸ்வம் சங்கரோ நீல லோஹித: |

ச்ரெளத ஸ்மார்த்த ப்ரதிஷ்டார்த்தம் பக்தானாம் ஹித காம்யயா ||

என்று ச்லோகம் வருகிறது. “ச்ரெளத” என்றால் “ச்ருதி” என்னும் வேதத்தை அநுசரித்தது என்று அர்த்தம். “ஸ்மார்த்த” என்றால் அந்த வேதத்தையே ஸ்மரித்து நினைவுக் குறிப்பாகக் கொண்டு ரிஷிகள் செய்த தர்மசாஸ்திரம். இந்த வேத..தர்ம சாஸ்திரத்தைப் பிரதிஷ்டை செய்வதற்காகவே (“ச்ரெளத ஸ்மார்த்த ப்ரதிஷ்டார்த்தம்”) பக்தர்களுக்கு நல்லது செய்கிற ஆசையினால் (“பக்தானாம் ஹித காம்யயா”) நீலகண்டனான சங்கரன் தானே அவதரிக்கிறான் (“கரிஷ்யத்வதாரம் ஸ்வம் சங்கரோ நீல லோஹித:”) என்று கூர்மபுராண வாக்கு இருக்கிறது. அத்வைதத்தைப் பிரதிஷ்டை பண்ணினார்; ஷண்மதப் பிரதிஷ்டை பண்ணினார் என்றெல்லாம் (இப்போது நாம் ஆசார்யாள் என்ற மாத்திரத்தில் எவற்றை முக்கியமாக நினைக்கிறோமோ அந்த இரண்டையும்) சொல்லாமல், ச்ரெளத ஸ்மார்த்த பிரதிஷ்டையையே இங்கே சொல்லியிருப்பது விசேஷமானது. இப்படியேதான் ஆசார்ய வந்தனமாக இருக்கப்பட்ட ச்லோகத்திலும்,

ச்ருதி-ஸ்மிருதி-புராணானாம் ஆலயம் கருணாலயம் |

நமாமி பகவத்பாத சங்கரம் லோக சங்கரம் ||

என்றுதான் வருகிறது. இங்கேயும் அத்வைதம், ஷண்மதம் இவற்றைப் பற்றிச் சொல்லவில்லை. ஆனால் ஆசார்யாள் வேதத்துக்கும் (ச்ருதி), தர்ம சாஸ்திரங்களுக்கும் (ஸ்மிருதி), புராணங்களுக்கும் உறைவிடமானவர் என்று சொல்லியிருக்கிறது. வேதத்தில் சொன்னதை விதிகளாகச் சட்டம் மாதிரிப் போட்டுக் கொடுப்பது ஸ்மிருதி என்றால், இவற்றையே கதைகளாக மனஸில் ஏற்றுவதுதான் புராணங்களின் லக்ஷ்யம். அப்படிப்பட்ட வேதம், ஸ்மிருதி, புராணம் மூன்றுக்கும் ஆலயமாக இருப்பவர் ஆசார்யாள் என்று சொல்லியிருக்கிறது.

வேத மதம், ஸ்மார்த்த ஸம்பிரதாயம் என்று சொல்லிவிட்டாலே போதும். அதுதான் ஜீவபிரம்ம அபேதத்தைச் சொல்லும் அத்வைதம்; இந்த அத்வைதத்திலேயே ஒரு அங்கமாக வருவதுதான் ஸகல தேவதைகளுக்கிடையும் அபேதத்தைச் சொல்லும் ஷண்மதக் கருத்து என்பதால்தான், இந்த ச்லோகத்திலும், கூர்ம புராணத்திலும் தனியாக அத்வைதம் பற்றியும் ஷண்மதம் பற்றியும் சொல்லவில்லை என்று தோன்றுகிறது. அத்வைதத்தில் ஷண்மதம் அங்கம்தான். அத்வைதத்தைச் சொன்னால் ஷண்மதத்தைத் தனியாகச் சொல்லக்கூட வேண்டாம்.ஏனென்றால் ஜீவனும் பிரம்மமுமே ஒன்றுதான் என்கிறபோது, ஷண்மத ஏற்பாட்டின் தாத்பர்யமான சகல தெய்வங்களும் ஒன்றுதான் என்பதும் அதிலேயே உட்கட்டை(implied) தானே? ஷண்மதம் எப்படி அத்வைதத்தில் அங்கமோ, அப்படியே அத்வைதம் ஸ்மார்த்தத்தில், வைதிகத்தில் அடக்கம்தான். வேதத்தில் சகல தத்வங்களுக்கும் உச்சாணியில் அத்வைதத்தைத்தான் வைத்திருக்கிறது. சகல தெய்வங்களையும் ஒரே பரமாத்மாவாக ஆராதிப்பதுதான் வேதத்தில் நாம் பார்ப்பது. ஆகவேதான் ஷண்மதம், அத்வைதம் எல்லாமே வைதிகத்தை, ஸ்மார்த்த ஸம்பிரதாயத்தைப் பூரணமாக அநுசரிப்பதன்றி வேறில்லை. அநுசரிப்பதென்ன? அதுவேதான் இது. வைதிக மதம் என்றாலே அத்வைதிகளின் சம்பிரதாயந்தான். அத்வைதம் என்றாலே வைதிகம்தான், ஸ்ரீஹர்ஷன் இப்படித்தானே நைஷதத்தில் ‘வேதம்’ என்று சொல்ல வேண்டிய இடத்தில் ‘அத்வைதம்’ என்று சொல்லியிருக்கிறான்?

ஆகையால் த்வைதம், விசிஷ்டாத்வைதம், சைவ ஸித்தாந்தம் முதலிய சம்பிரதாயங்களுக்கென்று தனியாக ஏற்பட்ட ஸம்ஸ்காரத்தைச் செய்துகொள்ளாத எல்லாரும் ஸ்ரீ சங்கர பகவத் பாதர்களைச் சேர்ந்தவர்கள்தான். வேறு சம்பிரதாயத்துக்குப் போய்விட்டாலும் கூட, அவர்கள் ஆசார்யாளை விட்டு விட்டாலும், ஆசார்யாள் அவர்களை விட்டுவிட்டதாக ஆகாது. அந்த ஸித்தாந்தங்களையும் ஒவ்வொரு லெவலில் ஒப்புக்கொள்வதுதான் ஆசார்யாளின் ஸித்தாந்தம். ஆசார்யாளின் பரமகுருவான (அதாவது குருவுக்கு குருவான) கெளடபாதர், ‘மாண்டூக்ய உபநிஷத் காரிகை’ என்று செய்திருக்கிறார். ‘காரிகை’ என்றால் பாஷ்யத்தில் ஒருவகை… தமிழில்கூட “யாப்பருங்கலம்” என்று ஒரு புஸ்தகம் உண்டு; அதற்கு விளக்கமாக எழுதப்பட்ட ஒரு புஸ்தகத்துக்கு “யாப்பருங்கலக் காரிகை” என்று பெயர் வைத்திருக்கிறது…மாண்டூக்ய காரிகையில் ஒரு இடத்தில் கெளடபாதர், “பல ஸித்தாந்தங்கள் ஒன்றுக்கொன்று வித்யாஸப்பட்டு பரஸ்பரம் விரோதித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் நம்முடைய அத்வைதமானது அவற்றில் எதனிடமும் விரோதபாவம் பாராட்டவே இல்லை” என்று சொல்லியிருக்கிறார்:

பரஸ்பரம் விருத்யந்தே தைரயம் ந விருத்யதே |

இந்த விரோதமில்லாத மனோபாவம், ஐக்ய உணர்ச்சி, ஸமரஸம்தான் நமக்கு ஆசார்யாள் தந்திருக்கிற வழி. இதை நாம் எந்நாளும் பின்பற்றி வரவேண்டும். வேதமும், ஸ்மிருதிகளும் அப்புறம் ஆசார்யாளும் வகுத்துக் கொடுத்த மாதிரி காரியங்களிலும், அந்தக் காரியங்களுக்கு ஏற்ற ஆசாரங்களிலும் நாம் பிரிந்திருந்தாலும், மனஸால் மட்டும் ஒருத்த‌ருக்கொருத்தர் கொஞ்சம்கூட பிரிந்திராமல், எல்லாரும் ஆசார்யாளின் குழந்தைகளாகவே அன்போடு ஒன்று சேர்ந்திருக்க வேண்டும். இந்த‌ அநுக்கிரஹத்தையும் பண்ணும்படி ஆசார்யாளையே பிரார்த்தனை பண்ணுவோம்.


*உலகம் எப்படிப் பொய்?” என்ற உரையில் காண்க.

1. வைதிகாத்ய‌யனே ர‌தா: (ஸ்ரீம‌த் வால்மீகி ராமாய‌ண‌ம் பால‌காண்ட‌ம்‍‍..ப‌தினெட்டாவ‌து ஸ‌ர்க‌ம்)

2. அத‌ சூர‌ஸுதோ ராஜ‌ன் புத்ர‌யோ ஸ‌ம‌கார‌ய‌த்| புரோத‌ஸா ப்ராஹ்ம‌ணைச்ச‌ யதாவ‌‌த் த்விஜ‌ஸ‌ம்ஸ்க்ருதிம் (ஸ்ரீம‌த் பாக‌வ‌த‌ம் – 10வ‌து ஸ்க‌ந்த‌ம் – 45வ‌து ஸ‌ர்க‌ம்)