உக்ர தெய்வங்களை சாந்தமாக்கியது : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

க்ரூரத்தை விட்டு சாந்தமாகும்படி ஜனங்களைப் பண்ணினார் என்பது மாத்ரமில்லை; தெய்வங்களையுமே உக்ர பாவத்தை விட்டு ஸெளம்யமாக இருக்கப் பண்ணினார். அந்தக் காலத்தில் என்ன ஆயிருந்ததென்றால்: அங்கங்கே ஸாந்நித்யமாகியிருந்த தெய்வ சக்திகளில் சிலதே, ‘இப்படி ஜனஙகள் அநாதிகாலமாக இருந்து வந்திருக்கும் தர்ம வழிகளை விட்டுவிட்டுக் கண்ணை மூடிக்கொண்டு தப்பில் போக ஆரம்பித்துவிட்டார்களே!’ என்று கோபம் கொண்டிருந்தன. தப்புக்குத் தண்டிக்கவும் வேண்டியதுதானே? அதனால் சில மஹா க்ஷேத்ரங்களில்கூட, அன்புக்கே உருவமான தாய்த் தெய்வமான அம்பாள் மூர்த்தங்களே கூட, உக்ர கலைகளோடு இருக்க ஆரம்பித்தன. அப்போது க்ரூரமான உபாஸனாக்காரர்கள் அந்த ஆலயங்களைக் கைப்பற்றி தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வந்தார்கள்.

இங்கேயெல்லாம் அந்த பூஞ்சை ப்ராம்மண ஆண்டி போனார். அவருடய மஹிமை தெரியவேண்டும் என்றே தான் ஒரு வேளை அந்தத் தெய்வங்கள் உக்ரம் மாதிரி இருந்துகொண்டிருந்தனவோ என்னவோ? அவரானால், ‘தன் மஹிமை என்றும் எதுவும் தெரியவேண்டாம்! மந்த்ர சாஸ்த்ர மஹிமை லோகத்துக்குத் தெரியட்டும்’ என்று நினைத்து, அந்த இடங்களிலெல்லாம் மந்த்ர பூர்வமாக யந்த்ர ப்ரதிஷ்டை செய்து உக்ர கலைகளை சமனம் பண்ணி, அந்த மூர்த்திகளை ஸெளம்யமாக்கி விடுவார்! இப்படி அநேக இடங்களில் பண்ணியிருக்கிறார்.

காஞ்சிபுரத்தில் காமாக்ஷியே உக்ரம் மாதிரி இருந்த போது அவளுக்கு எதிரே ஸ்ரீசக்ரம் ஸ்தாபித்து அவளை ஸெளம்ய மூர்த்தியாக்கி இருக்கிறார். அவளுக்குப் பக்கத்துணையாக எட்டு காளிகள் எட்டு திசைகயிலும் போய் பலி வாங்குவார்கள். அந்த எட்டுப் பேரையும் அந்த ஸ்ரீயந்திரத்தின் எல்லைச் சுற்றிலேயே அடக்கிப் போட்டார்! அதனால் இன்றைக்கும் பரப்ரஹ்ம சக்தி என்று சொல்லப்படும் ஸாக்ஷாத் காமாக்ஷியின் உத்ஸவ மூர்த்தி புறப்பாடு செய்யும் போது ஆசார்யாள் ஸந்நிதிக்கு முன்னால் ஒரு நிமிஷம் நின்று அவரிடம் ‘பெர்மிஷன்’ வாங்கிக் கொண்டுதான் வெளியே போவது!

ஜம்புகேச்வரத்தில் (திருவானைக்காலில்) அகிலாண்டேச்வரியின் உக்ர கலைகளை சக்ர ரூபமான தாடங்கங்களில் அடக்கி அவளுக்கே கர்ண பூஷணமாகச் சார்த்தி அலங்காரம் செய்துவிட்டார்.

கொல்லூரில் மூகாம்பிகை, அஸ்ஸாமில் காமாக்யா என்றிப்படிப் பல கதைகள் இருக்கின்றன. காமாக்யா விஷயமாக ஜனங்களின் மனஸு நுட்பம் தெரிந்து என்ன செய்தாரென்றால்: ‘காட்டு வாஸிகளாக, மலை வாஸிகளாக இருக்கிற இவர்களுக்கு ஒரே ஸெளம்யமாக ஆராதனையைச் சொன்னால் ஏற்காது. இவளை அடியோடு விட்டுவிட்டு வேறே பிம்பம் வைத்துக்கொண்டு பழைய க்ரூர உபாஸனையையே தொடருவார்கள்’ என்று நினைத்தார். அதோடுகூட லோகமென்றால் நல்லதோடு கெட்டதும் சேர்ந்து இருக்கும்தானே? அப்படி உக்ர சக்திகளும் உண்டுதான். அவற்றையும் கொஞ்சம் ப்ரீதிப் படுத்த வேண்டியதுதான் என்று நினைத்தார். அதனால் ரொம்பவும் க்ரூரமாகவும், அப்பட்ட வாமாசாரமாகவும் இருந்த உபாஸனையை அங்கே ஓரளவு அப்படி இருந்துவிட்டுப் போகட்டும் என்று தணித்துக் கொடுத்தார்.

மெட்றாஸ் திருவொற்றியூரில்கூட த்ரிபுரஸுந்தரியாக (வடிவுடையம்மனாக) அம்பாளை ஸெளம்யமாக்கியது ஆசார்யாள்தான். இங்கே உக்ர சக்தியைக் கிணற்றில் அடக்கினார். வருஷத்தில் ஒரு நாள் அதற்கும் பூஜை பண்ணும்படி ஏற்பாடு செய்தார். (வட்டப்பாறையம்மன் ஸந்நிதி அதுதான்.)

ஆசார்யாள் எல்லா ஆலயங்களுக்கும் க்ஷேத்ராடனம் செய்தவர்தான் என்றாலும் இம்மாதிரி அவருடைய விசேஷ ஸம்பந்தமுள்ள ஸந்நிதிகளில் ‘வைதிக’ பூஜையே நடக்கும். அதாவது, வேதத்திற்கு விரோதமில்லாவிட்டாலும் வேதத்தில் சொல்லாததாக அநேகம் உள்ள ‘ஆகம’ பூஜையாயில்லாமல், வேத அடிப்படை பூர்ணமாக உள்ளதான பூஜை முறை நடக்கும். பூஜகர்களும் ஆதி சைவர்கள் (குருக்கள்) முதலான ஆகம தீக்ஷைக்காரர்களாக இல்லாமல் வைதிக தீக்ஷை பெற்ற ஸ்மார்த்த ப்ராம்மணர்களாக இருப்பார்கள்.

ஆசாரங்களைக் காப்பதில் ரொம்பவும் தீவ்ரமானவர்கள் நம்பூதிரிமார்களே ஆதலால் சில இடங்களில் அவர்களையே பரம்பரைப் பூஜகர்களாக ஆசார்யாள் நியமித்து இன்றைக்கும் அப்படியே நடந்து வருகிறது. திருவொற்றியூரிலேயே நம்பூதிரி உண்டு. ஹிமய மலையில் பதரி நாராயணர் ஆலயத்தில் ‘ராவல்’ என்று ராஜ மரியாதையுடன் நடத்தப்படும் பூஜகரும் நம்பூதிரிதான்.

உக்ர சமனத்துக்காகத்தான் என்றில்லாமல், பொதுவாகவே மங்கிக் கிடந்த ஸாந்நித்யம் புது சக்தியுடன் ப்ரகாசிப்பதற்காக அநேக க்ஷேத்ரங்களில் யந்த்ர ஸ்தாபனம் செய்திருக்கிறார்.

குருவாயூரப்பன் ஆலயம் உள்பட பல க்ஷேத்ரங்களில் பூஜா க்ரமம் முழுக்கவே ஆசார்யாள் வகுத்துக் கொடுத்த முறையில்தான் நடக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is அதிசயம் சாதித்த அமோக திக்விஜயம்: ஆன்மிய ஐக்கியமும் தேசிய ஐக்கியமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  தெய்வபேதம் நீக்கியது; 'பஞ்சாயதன'மூர்த்திகள்
Next