ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
பெரிய திருமொழி
ஏழாம் பத்து
சிங்கமதாய்
திருவழுந்தூர்-2
இப்பகுதிப் பாடல்களும் திருவழுந்தூர் ஆமருவியப்பன் விஷயமாகப் £டப்பட்டனவே.
கலி நிலைத்துறை
நரசிங்கனை நான் கண்ட இடம் திருவழுந்தூர்
1598. சிங்கம தாயவுணன் திறலாகம்முன் கீண்டுகந்த,
சங்கமி டத்தானைத் தழலாழி வலத்தானை,
செங்கமலத் தயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற,
அங்கம லக்கண்ணனை அடியேன் கண்டு கொண்டேனே! 1
பரசுராமனை நான் கண்டு நினைத்த இடம் இது
1599. கோவா னார்மடியக் கொலையார்மழுக் கொண்டருளும்,
மூவா வானவனை முழுநீர்வண் ணனை,அடியார்க்கு,
ஆவா என்றிரங்கித் தென்னழுந்தையில் மன்னிநின்ற,
தேவாதி தேவனையான் கண்டுகொண்டு திளைத்தேனே. 2
உலகம் படைத்தவனை அடைந்து உய்ந்த இடம் இது
1600. உடையா னையலிநீ ருலகங்கள் படைத்தானை,
விடையா னோடவன்று விறலாழி விசைத்தானை,
அடையார் தென்னிலங்கை யழித்தானை அணியழுந்தூர்
உடையானை,அடியே னடைந்துய்ந்து போனேனே. 3
குன்றினால் மழை தடுத்தவனை நான் கண்ட இடம் இது
1601. குன்றால் மாரிதடுத் தவனைக்குல வேழமன்று
பொன்றா மை,அதனுக் கருள்செய்த போரேற்றை,
அன்றா வின்நறுநெய் யமர்ந்துண்ண அணியழுந்தூர்
நின்றா னை,அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே. 4
கண்ணனைக் கண்டுகொண்ட இடம் இது
1602. கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ணமங்கையுள் நின்றானை,
வஞ்சனப் பேய்முலையூ டுயிர்வாய்மடுத் துண்டானை,
செஞ்சொல் நான்மறையோர் தென்னழுந்தையில் மன்னிநின்ற
அஞ்சனக் குன்றந்தன்னை யடியேன்கண்டு கொண்டேனே. 5
யாவர்க்கும் அரியவனைக் கண்டுகொண்ட இடம் இது
1603. பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும்,
உரியானை யுகந்தா னவனுக்கு முணர்வதனுக்
கரியானை, அழுந்தூர் மறையோர்க ளடிபணியும்
கரியானை, அடியேன் கண்டுகொண்டு களித்தேனே. 6
அழுந்தூரில் ஆமருவியப்பனைக் கண்டு களித்தேன்
1604. திருவாழ் மார்வன்றன்னைத் திசைமண்ணீ ரெரிமுதலா,
உருவாய் நின்றவனை யலிசேரும் மாருதத்தை,
அருவாய் நின்றவனைத் தென்னழுந்தையில் மன்னநின்று
கருவார் கற்பகத்தைக் கண்டுகொண்டு களித்தேனே. 7
நிலமகள் கணவனை அழுந்தூரில் கண்டு களித்தேன்
1605. நிலையா ளாகவென்னை யுகந்தானை, நிலமகள்தன்
முலையாள் வித்தகனை முதுநான் மறை வீதிதொறும்,
அலையா ரும்கடல்போல் முழங்கழுந்தையில் மன்னிநின்ற
கலையார் சொற்பொருளைக் கண்டுகொண்டு களித்தேனே. 8
திருமகள் கணவனை நான் கண்டு களித்த இடம் இது
1606. பேரா னைக்குடந்தைப் பெருமானை, இலங்கொளிசேர்
வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை,
ஆரா வின்னமுதைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற,
காரார் கருமுகிலைக் கண்டுகொண்டு களித்தேனே. 9
தேவர் உலகை ஆள்வர்
1607. திறல்முரு கனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற
அறமுதல் வனவனை அணியாலியர் கோன்,மருவார்
கறைநெடு வேல்வலவன் கலிகன் றிசொல் ஐயிரண்டும்,
முறைவழு வாமைவல்லார் முழுதாள்வர் வானுலகே. 10
அடிவரவு:சிங்கம் கோ உடையானை குன்றால் கஞ்சன் பெரியானை திரு நிலை பேரானை திறல் -- திரு.
.