கண்ணி நுண்சிறுத்தாம்பு

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீ:
மதுரகவியாழ்வார் அருளிச்செய்த

கண்ணி நுண்சிறுத்தாம்பு

மதுர கவிகள் நம்மாழ்வாரைத் தவிர வேறு எவரையும் அறியாதவர்:அவரது பரேருள் பெற்ற உண்மைச் சீடர்;உலகில் ஆசாரிய பக்தி எப்படி இருக்கவேண்டும் என்பதையும், ஆசாரியன் செய்யும் பேருபகாரத்தையும் எடுத்துக் கூறியவர். பகவானால் செய்யமுடியாததையும் ஆசாரியர் செய்து காட்டக்கூடியவர் என்பதை அறுதி இட்டவர். மதுர கவிகளின் பாடல்கள் மதுரமானவை.

நம்மாழ்வாரின் பெருமைகளை மதுரகவிகள் அருளிய கண்ணி நுண் சிறுத்தாம்பைக் கொண்டே அறியமுடியும். மதுரகவிகள் தம் பிரபந்தத்தில் நம்மாழ்வாரை ஒன்பது முறை நம்பி என்று கூறியுள்ளார். திருவாய்மொழி ஸேவிக்கும் முன்பு கண்ணி நுண் சிறுத்தாம்பு ஸேவிப்பது வழக்கம். நாதமுனிகளுக்கு நம்மாழ்வாரைப் பெற்றுக் கொடுத்ததும் கண்ணி நுண்சிறுத்தாம்பே.

கலி விருத்தம்

நம்மாழ்வார் என்றால் நா இனிக்கும்

937. கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்

பண்ணி யபெரு மாயன்,என் னப்பனில்,

நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்,

அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே. 1

நம்மாழ்வாரே என் தெய்வம்

938. நாவி னால்நவிற் றின்ப மெய்தினேன்,

மேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையே,

தேவு மற்றறி யேன்குரு கூர்நம்பி,

பாவி னின்னிசை பாடித் திரிவனே. 2

குருகூர் நம்பிக்கு அடியவன் நான்

939. திரிதந் தாகிலும் தேவ பிரானுடை,

கரிய கோலத் திருவுருக் காண்பன்நான்,

பெரிய வண்குரு கூர்நகர் நம்பிக்காள்

உரிய நாய்,அடி யேன்பெற்ற நன்மையே. 3

சடகோபனே என்னை ஆள்கிறான்

940. நன்மை யால்மிக்க நான்மறை யாளர்கள்,

புன்மை யாகக் கருதுவ ராதலின்,

அன்னை யாயத்த னாயென்னை யாண்டிடும்

தன்மை யான்,சட கோபன் நம்பியே. 4

குறுகூர் நம்பிக்கே நான் அன்பன்

941. நம்பி னேன்பிறர் நன்பொருள் தன்னையும்,

நம்பி னேன்மட வாரையும் முன்னெலாம்,

செம்பொன் மாடத் திருக்குரு கூர்நம்பிக்

கன்ப னாய்,அடி யேன்சதிர்த் தேனின்றே. 5

குருகூர் நம்பி என்னை இகழமாட்டான்

942. இன்று தொட்டு மெழுமையு மெம்பிரான்,

நின்று தன்புக ழேத்த வருளினான்,

குன்ற மாடத் திருக்குரு கூர்நம்பி,

என்று மென்னை யிகழ்விலன் காண்மினே. 6

சடகோபன் என் பழவினைகளை அகற்றினான்

943. கண்டு கொண்டென்னைக் காரிமா றப்பிரான்,

பண்டை வல்விணை பாற்றி யருளினான்,

எண்டி சையு மறிய இயம்புகேன்

ஒண்ட மிழ்ச்சட கோப னருளையே. 7

திருவாய்மொழியே உலகில் சிறந்தது

944. அருள்கொண் டாடு மடியவ ரின்புற,

அருளி னானவ் வருமறை யின்பொருள்,

அருள்கொண் டாயிர மின்தமிழ் பாடினான்,

அருள்கண் டீரிவ் வுலகினில் மிக்கதே. 8

வேதப்பொருளை நெஞ்சுள் நிறுத்தினான் சடகோபன்

945. மிக்க வேதியர் வேதத்தி னுட்பொருள்,

நிற்கப் பாடியென் நெஞ்சுள் நிறுத்தினான்,

தக்க சீர்ச்சட கோபனென் நம்பிக்கு,ஆட்

புக்க காத லடிமைப் பயனன்றே? 9

நம்பி!திருவடிக்கு அன்புகாட்டவே முயல்கின்றேன்

946. பயனன் றுகிலும் பாங்கல ராகிலும்

செயல்நன் றாகத் திருத்திப் பணிகொள்வான்,

குயில்நின் றார்பொழில் சூழ்குரு கூர்நம்பி,

முயல்கின் றேனுன்றன் மொய்கழற் கன்பையே. 10

இப்பாடல்களை நம்புவார்க்கு வைகுந்தம் உண்டு

947. அன்பன் தன்னை னயடைந்தவர் கட்கெல்லாம்

அனபன், தென்குரு கூர்நகர் நம்பிக்கு,

அன்ப னாய்மது ரகவி சொன்னசொல்

நம்பு வார்பதி, வைகுந்தம் காண்மினே. 11

அடிவரவு: கண்ணி நாவினால் FK நன்மையால் நம்பி இன்று கண்டு அருள் மிக்க பயன் அன்பன் -- வாடினேன்.

(குறிப்பு:ஈண்டுள்ள பாடல்கள் அந்தாதித் தொடையாக அமைந்துள்ளன. ஒரு பாடலின் ஈறு அடுத்த பாடலின் முதலாக அமையத் தொடுப்பதே அந்தாதி.)

மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம்





 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is கண்ணி நுண்சிறுத்தாம்புத் தனியன்கள்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  பெரிய திருமொழித் தனியன்கள்
Next