செருக்கு நீங்கும் பொருட்டும் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

ஸாதனை செய்கிறவன் dry-யாகப் போய்விடக் கூடாது என்பது ஒன்று. இன்னொன்று, அவனுக்கு அஹங்காரம் வந்து விடப்படாது; ego, தற்பெருமை, தன் ஸமாசாரம் என்ற மானாபிமானம் உண்டாகிவிடக்கூடாது என்பது. அந்தஃகரணத்தின் அங்கமாயுள்ள அஹங்காரம் போவது இருக்கட்டும் – அது பெரிய விஷயம்; முடிவாக நடக்க வேண்டியது. பேச்சு வழக்கில் ‘அஹங்காரம்’ என்கிற மண்டைக் கனத்தைத்தான் இப்போது சொல்கிறேன். வித்யாஸத்திற்காக இதை ‘அஹம்பாவம்’ என்று வேண்டுமானால் சொல்லலாம்1. சாஸ்திர புஸ்தகங்களில் அப்படி [வித்யாஸம்] இல்லை; clarity-க்காக நாம் வைத்துக் கொள்ளலாம். மூல ‘நான்’-எண்ணமான அஹங்காரத்தை ‘ஈகோயிஸம்’ என்றும், மண்டைக்கன ‘நான்’-எண்ணமான அஹம்பாவத்தை ‘ஈகோடிஸம்’ என்றும் சொல்கிறார்களென்று நினைக்கிறேன். ‘நாமாக்கும் மந்த-மத்யம அதிகாரிகளுக்கு மேலே போய், கர்மா-பக்திகளுக்கு மேலே போய் ஞான வழியில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்’ என்ற அபிப்ராயம் ஏற்பட்டதானால் போச்சு! அப்படி ஆகாமல் விநய ஸம்பத்தை ஊட்டுவதற்காகவும் பக்தியை ஆசார்யாள் வைத்திருக்கிறார். நாம் என்கிறது ஒன்றுமேயில்லாமலாகி அன்பிலே கரையணும் என்னும்போது கனத்துக்கு இடமே இல்லை! ரொம்பவும் லேசாக அது இவனை ஆக்கிவிடும். உத்தமாதிகாரிக்கே ஞானம் என்று உசத்திச் சொல்லப் பட்டிருக்கிறபடியால், அவனுக்கு அதிலே தலை கனத்துப் போய், அந்த பாரமே ஸாதனையை அழுத்தி உடைத்துவிடாமல் ஜாக்ரதை பண்ண பக்தியின் நைச்ய பாவம் [தாழ்ந்திருக்கும் பாங்கு] அவசியமாகிறது. நாம் அன்போடுகூட எத்தனை வரணம் பண்ணினாலும் அது [பிரம்மம்] தன்னை விவரணம் என்பதாக ‘ரிவீல்’ பண்ணிக் கொண்டாலொழிய கடைத்தேற முடியாது என்ற நினைப்பில், அந்த லக்ஷ்யத்தின் முன்னால் தாழ்ந்து கிடக்கும் நைச்ய பாவம் ஏற்பட பக்தியே உதவி பண்ணும். அந்த உச்சியநுபவந்தான் என்றில்லை; ‘இதுவரை ஸாதனையில் கண்ட பலனெல்லாமும் பரமாத்மா அநுக்ரஹித்துக் கிடைத்ததுதான்! நாம் பண்ணினது முயற்சி மட்டுமே; பலன் அது [பரமாத்மா] கொடுத்ததே! அப்படி முயற்சி பண்ணத் தோன்றியதும், பண்ணிக்கொண்டே போனதுங்கூட அதன் அநுக்ரஹத்தால்தான்’ என்ற நைச்ய பக்தி இருந்தாலே, அடுத்தாற்போல ஸந்நியாஸியாவதற்கு உடைமைகளைத் தியாகம் செய்ய வேண்டியிருப்பதில் ரொம்ப முக்ய உடைமையான அஹம்பாவத் தியாகம் செய்ய முடியும்.


1 இங்கு ஸ்ரீசரணர்கள் ‘அஹம்பாவம்’ என்று கூறுவதைச் ‘செருக்கு’ எனலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is உயிர் கலந்த குளுகுளு அன்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ஸாதனையில் அஹங்காரம் : இரு கட்டங்கள்
Next