ச்ரத்தை : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

[சமாதி ஷட்க ஸம்பத்தில்] அடுத்தது ச்ரத்தை. ஸம்ஸ்க்ருதத்தில் “ச்ரத்தா”, “திதிக்ஷை” மாதிரியே ‘ஆ’காரத்தில் முடியும் ‘ச்ரத்தா’வும் பெண்பால்தான். நம்பிக்கையிலே – நேர் ப்ருஃபில் இல்லை; ஒரு நம்பிக்கையின் மீது – ‘சாஸ்திரம் சொன்னால் ஸரியாய்த்தானிருக்கும், சிஷ்டர்கள் சொன்னால் ஸரியாய்த்தானிருக்கும்’ என்ற நம்பிக்கையின்மேல் ஒரு விஷயத்தில் மனப்பூர்வமாக ஈடுபட்டிருப்பதே ச்ரத்தை. புருஷர்கள் மாதிரி ஸ்திரீகளும் ரொம்பப் படிப்பு, ஆராய்ச்சி என்று போகாத வரையில் அவர்களே ச்ரத்தையில் உசந்து நின்றிருக்கிறார்கள். ஓரளவுக்கு அப்படிப் போனபின் இப்போதுங்கூட ச்ரத்தையில் ஸ்திரீகள் புருஷர்களைவிட ஒரு படி மேலே இருப்பதாகவே நினைக்கிறேன். போகப் போக எப்படியிருக்குமோ?

ச்ரத்தையினால்தான் ஆஸ்திக்யமே என்று முன்னாலேயே சொன்னேன். ஆண்களில் எவ்வளவு பேர் நாஸ்திகராகப் போயிருக்கிறார்களோ அதில் கால் பங்குகூட பெண்கள் இருக்க மாட்டார்கள். நாஸ்திகக் கட்சித் தலைவர்களின் பெண்டாட்டிகள்கூட கோவில், குளம், வ்ரதம், பூஜை முதலானதை விட்டுவிடவில்லை என்று பார்க்கிறோம். அதனால் ச்ரத்தையைப் பெண்பாலாக வைத்தது நியாயமாகவே தெரிகிறது.

ஆரம்பத்திலேயே ச்ரத்தை பற்றிச் சொன்னேன். சொல்லும்போதே, ‘இந்த ‘டாபிக்’ மறுபடி ஸாதனாந்தத்திலும் [ஸாதனை முடிவிலும்] வரும்; அப்போது இன்னம் சிலது சொல்கிறேன்” என்றும் சொன்னேன். அந்த இரண்டாவது கட்ட – ‘ஹையர் க்ரேட்’- ச்ரத்தைக்குத்தான் இப்போது வந்திருக்கிறோம்.

இப்போது ஒருவன் ஞானப் பக்குவம் பெறுவதற்காக அநேகம் பண்ணியாயிற்று. எது நித்யம் எது அநித்யம் என்று விசாரித்துத் தெரிந்து கொள்வது; அநித்யத்தில் வைராக்யம் ஸம்பாதித்துக் கொள்வது; சிந்தனை மயமாயுள்ள மனஸை அடக்கிக் கட்டுப்படுத்தி வெறுமையாக்கிக் கொள்வது, பொறுமையாக்கிக் கொள்வது- ஆகியவற்றில் அவன் முன்னேறியாயிற்று. இப்போது எதற்கு ‘ச்ரத்தை’யைக் கொண்டு வந்துவிட்டிருக்கிறது? அது ஆரம்ப ஸ்தானத்தில், ஃபௌன்டேஷன் போடும்போதே, இருக்க வேண்டியதல்லவா? ஆரம்பத்தில் ஆத்ம ஸம்பந்தமாக ஒரு அப்யாஸமும் இல்லாதபோது, “இந்த மார்க்கத்தில் அநேக விஷயங்கள் பகுத்தறிவு என்பதால், நேர் ப்ருஃபால், ஸரி பார்த்து எடுத்துக் கொள்ள முடியாது; சாஸ்த்ர ஸம்ப்ரதாயங்களின் பேரிலும், குருவின் வார்த்தையின் பேரிலுமே அநேகத்தை நம்பி எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று சொல்லி, ச்ரத்தையை விதிப்பதற்கு அர்த்தமுண்டு. இப்போது ஓரளவு உச்சகட்டம் போனவிட்டு, அதை மறுபடி கொண்டு வருவானேன் என்றால் – இப்படி முன்னேறியதாலேயே ‘ச்ரத்தை’ என்கிற நம்பிக்கையம்சத்திற்கு ஹானி ஏற்பட இடமிருப்பதால்தான்!

ஆரம்பத்தில் விவேகம், வைராக்யம், இந்த்ரிய நிக்ரஹம் எல்லாம் நமக்கும் கிடைக்குமா என்கிற ஸ்திதியில், ஒருவன் ஸைஃபராக இருந்ததாலேயே, ‘அல்பமான நம் புத்திக்கு புரிபடாமல் அநேகம் அத்யாத்ம சாஸ்திரத்தில், ஸாதனையில் இருக்கத்தான் செய்யும். நம்மையும் கடைத்தேற்ற சாஸ்திரமும் பெரியவர்களும் என்ன சொல்கிறார்களோ அதை நம்பித்தான் எடுத்துக் கொள்வோமே!’ என்ற விநயமான மனப்பான்மை இருக்கும். அதனால் ச்ரத்தையோடு இருப்பான். ஆனால் [ஸாதனையில்] முன்னேறிய பிறகு, ‘இப்போது நமக்கு புத்தி, மனக்குழப்பம் போய்த் தெளிந்து விட்டது. அதனால், இனிமேல் ஸாக்ஷாத்கார விஷயமாக நடக்க வேண்டியதெல்லாம் நமக்கே நன்றாகப் புரிந்துவிடும்’ என்ற தப்பான – அஹங்காரம் என்றே தெரியாத ஒரு தினுஸு அஹங்காரமான – அபிப்ராயம் ஏற்பட இடம் உண்டாகும். ஆனால் வாஸ்தவத்தில், ஸாக்ஷாத்காரம் கிடைக்கும் அந்த முடிந்த முடிவான நிலை வரையிலுங்கூட அநேக விஷயங்கள் எந்தப் பெரிய புத்திக்கும் புரிபடாத விதத்தில் நடந்து கொண்டுதான் போகும்! ஸாக்ஷாத்காரமே பெற்று ஞானியானவனாலுங்கூட அந்த விஷயங்களை புத்தி மட்டத்தில் தெளிவு பண்ண முடியாமலே இருக்கும்! அதுவரை அநுஸரித்த வழிகளையே கேள்வி கேட்காமல் தொடர்ந்து கொண்டு போகும்போது என்னென்னமோ சிலது நடந்துதான் ஸாக்ஷாத்காரம் ஸுர்யோதயம் மாதிரி பளிச்சென்று பீறிக் கொண்டு வரும். அந்த விஷயங்கள் பராசக்தி ஒருத்திக்கே தெரிந்த ரஹஸ்யம்! அந்தச் சிலது நடக்கிறபோது புத்தியால் விசாரிக்காமல் எளிமையாக அடங்கி அப்படியே ஏற்றுக்கொண்டு கிடக்கணும்; அது நடந்துவிக்கிற படி நடக்கணும். ‘இவ்வளவு தூரம் ஸாதனையில் வந்தோம். வருவதற்கு அநுக்ரஹித்த க்ருபா சக்தி இன்னம் மேலே ஏற்றிவிடாமல் போகாது. Final test -ஆக [இறுதிச் சோதனையாக]த்தான் நாம் புத்தியால் புரிந்து கொள்வதற்கில்லாமல் இப்போது ஒருவிதமாக நடத்துகிறது. நாம் புத்தியைக் கொண்டுவராமல் நம்பிக்கையோடு ச்ரத்தையோடு நடப்பதை ஏற்றுக்கொண்டு பாஸ் பண்ணி விடணும்’ என்று இருந்தாலே முடிவான விமோசனம் ஏற்படும். விமோசனம் பெற்ற பிறகுங்கூட, அந்த விஷயங்கள் புத்தி விசாரணைக்கு எட்டாததாகவே இருக்கும். எவரைவிட ஒரு மஹாசார்யர் இல்லையோ, இருக்க முடியாதோ, அப்படிப்பட்ட நம்முடைய ஆசார்யாள் – சங்கரபகவத்பாதாள்- கூட அந்த ரஹஸ்யத்தை புத்தியின் பாஷையில் சொல்வதற்கு [முன்] வரவில்லை. ‘நானும் சொல்வதற்கில்லை; நம்பிக்கையின் பேரிலேயே தொடர்ந்து கொண்டு போ!’ என்றுதான் இங்கே – ஸாதனையில் அட்வான்ஸான பிறகு – ‘ச்ரத்தை’ என்பதை வைத்துவிட்டார்!

எல்லா ரஹஸ்யத்தையும் அவர் சொல்லியிருந்தாரானால் அப்புறம் ராமாநுஜாசாரியார் விசிஷ்டாத்வைதம் என்று ஒன்று ஸ்தாபிக்க அவச்யமே இருந்திருக்காது. அத்வைத ஸித்தாந்தத்தில் ராமாநுஜர் ஏதோ ஒரு இடத்தில் புத்தியாலே கேள்வி கேட்டுப் பதில் கிடைக்காததால்தான் வேறே எந்த தினுசாக நினைத்தால்தான் அவருக்குப் பதில் கிடைத்ததாகத் தோன்றிற்றோ, அதை விசிஷ்டாத்வைதம் என்று வைத்தார். ஸரி, அதாவது எல்லா ரஹஸ்யத்தையும் எல்லாருக்கும் அவிழ்த்து விட்டதா? இல்லை. அதனால் தான் மத்வாச்சார்யார் த்வைத ஸித்தாந்தத்தை ஏற்படுத்தும் படியாயிற்று. அதுவும் புத்தியின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லி விடவில்லை. அதனால்தான் இன்னமும் நிறைய அத்வைதிகள், விசிஷ்டாத்வைதிகள் எல்லாரும் இருந்து கொண்டிருக்கிறோம். எல்லாருமாக ஒரே வாக்குவாதமாகப் பண்ணிக் கொண்டிருக்கிறோம். இப்படி ஒரு பக்கம் நாம் புத்திகார்யமாகச் சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் அந்தந்த ஸித்தாந்தத்திலும் பிற்பாடு வந்தவர்களில் சிலபேர், புத்தியின் உரைகல்லில் தேய்த்துப் பார்த்துத்தான் எடுத்துக் கொள்வதென்றில்லாமல், ‘நாம் இப்படி ஸ்மார்த்தனாக, அல்லது ஸ்ரீ வைஷ்ணவனாக, அல்லது மாத்வனாகப் பிறந்திருக்குமோ? நமக்கு யார் ஆசார்ய புருஷரோ அவர் சொன்னதுதான் ஸரி என்ற நம்பிக்கை, விச்வாஸம் கெட்டியாக வைத்து அந்தப்படியே நடப்போம், நினைப்போம்’ என்று ச்ரத்தையின் பேரிலேயே அந்தந்த வழிப்படி தொடர்ந்து பண்ணிக் கொண்டுபோய், அததற்கான ஒரு உயர்ந்த அநுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

இப்படி மற்ற ஸம்பிரதாயஸ்தர்கள் அடையும் அநுபவம் என்ன இருந்தாலும் ஜீவப்ரஹ்ம ஐக்யாநுபவத்திற்குக் குறைந்ததுதான் என்று ஒரு ஸ்மார்த்தன் [அத்வைத ஸம்பிரதாயத்தைச் சேர்ந்தவன்] சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும். ஆனால் ச்ரத்தையோடு ஸாதனை என்பதாக ஒன்றை அப்யஸிக்காத பெரும்பாலான ஸ்மார்த்தர்களைவிட அந்த இதர ஸம்ப்ரதாய அநுபவிகள் மேலே போனவர்கள்தான். இவன் [ஸ்மார்த்தன்] சொல்லும் உச்சாணிக் கொம்பான நிர்குண ப்ரஹ்மம் அவர்களுக்குத் தெரியாமல் போனாலும், அதுவே ஈச்வரன் என்று ஸகுண ப்ரஹ்மமாகவும் இருக்கிறதல்லவா? அந்த இதர ஸித்தாந்தங்களைச் சேர்ந்த அநுபவிகளுக்கு இந்த ஸகுண ப்ரஹ்மத்துடன் ஏதோ ஒரு தொடர்பு உண்டாகி, ஈச்வராநுபவம் ஏற்பட்டே இருக்கிறது. அதனால் அவர்களுக்கே ஒரு தெய்விக சக்தி, அநுக்ரஹ சக்தி, அருள் நெஞ்சு ஆகியன இருந்திருக்கின்றன. ஆத்ம விஷயமாகவேகூட, சும்மாவுக்காக ‘நான்தான் உச்சாணி அத்வைத ஸம்பிரதாயக்காரன்’ என்று சொல்லிக் கொண்டு வெறும் சரீரத்தையும், மனஸின் ஓட்டத்தையும் தவிர தன்னுடைய ஆத்மாவைப்பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாதவனைவிட, ‘தங்களுடைய ஆத்மா பரமாத்மாவிடம் பக்தி பண்ணவே ஏற்பட்டது’ என்று தீர்மானமாக நினைத்துக் கொண்டிருக்கும் இதர ஸித்தாந்த அநுபவிகள் எவ்வளவோ மேலே போனவர்கள்தான். ஆத்மா இன்னதென்று எந்தவிதமான அநுபவமும் இல்லாதவனை விட பக்தி என்ற நல்ல விஷயம் நிரம்பிய சுத்த மனஸை ஆத்மா என்று நினைத்துக் கொண்டிருப்பது மேல்தானே? அப்படி சுத்தமானால் அப்புறம் அந்த மனஸ் நசித்து நிஜமான ஆத்மாநுபவம் ஏற்படவும் முடியும். அப்புறம் ஆகவேண்டியது இருக்கட்டும். இப்போதே தங்களுடைய ஸம்பிரதாய சாஸ்திரங்களை ச்ரத்தையோடு பின்பற்றி அநுபவம் கண்டவர்களுக்கு தெய்வத் தொடர்பு, தங்களுக்கே கொஞ்சம் தெய்வ சக்தி, அருள்பான்மை ஆகியவை ஏற்பட்டு விடுகின்றன. அதனால்தான் எந்த ஸம்பிரதாயத்திலும் மஹான்கள் என்று பொதுவாக உலகம் போற்றுபவர்களாகப் பல பேர் இருப்பது…..

ஒரு கட்டத்தில் புத்தியின் பலத்தை விட்டுவிட்டு ச்ரத்தையின் பலத்தில் போனாலே அநுபவத்திற்கு கொண்டு விடும்படியாகப் பராசக்தியின் ‘ஞானபிக்ஷை விளையாட்டு’ நடக்கிறது! ஆகையால் அந்த கட்டத்தில் ச்ரத்தை ரொம்ப அவசியம் என்று காட்ட வந்தேன். ஆத்ம வழியில் நல்ல முன்னேற்றம் கண்டுவிட்ட ஸாதகனுங்கூட, ‘தொடர்ந்து இதே வழியில், இதை அநுஸரித்து ஆசார்யர் உபதேசித்தபடி நாம்பாட்டுக்குக் கேள்வி கேட்காமல் போய்க் கொண்டே இருந்தால்தான் லக்ஷ்யத்தை அடைய முடியும். கேள்வி கேட்டால் நம் புத்திக்குத் தானாகவும் பதில் கிடைக்காது; ஆசார்யாரும் புத்திக்குப் புரிகிற விதத்தில் பதில் கொடுக்க மாட்டார், அல்லது முடியாது’ என்று ச்ரத்தையின் மேலேயே மேற்கொண்டு ஸாதனையை நடத்திச் செல்ல வேண்டுமென்பதால்தான் மறுபடியும் ச்ரத்தையை ஸாதனாங்கமாக வைத்திருப்பது.

ஆரம்பத்தில் மட்டுமில்லாமல் முடிவு வரையிலுங்கூட, ‘நாமே தெரிஞ்சுண்டுடலாம், புரிஞ்சுண்டுடலாம்’ என்று இல்லாததாக, ‘சாஸ்திரம் இப்படி சொல்கிறதா? குரு இப்படி சொல்கிறாரா? அந்தப்படி பண்ணிக் கொண்டு போவோம், நடுவிலே என்ன நடந்தாலும் நிறுத்தாமல் பண்ணிக் கொண்டு போவோம். தானே அது லக்ஷ்யத்தில் கொண்டு சேர்த்துவிடும்’ என்ற நம்பிக்கை வேண்டும். ‘இந்த ச்ரத்தை ஸாதனையின் அநேக உபாயங்களில் ஒன்று மட்டுமில்லை. இதுதான் உச்சியான உபாயம்’: “ச்ரத்தா ச ப்ரஹ்ம விஜ்ஞானே பரமம் ஸாதனம்”1 என்றே ப்ருஹதாரண்யக பாஷ்யத்தில் ஒரு இடத்தில் ஆசார்யாள் சொல்லியிருக்கிறார். பகவானும் நன்றாக அடித்தே சொல்லியிருக்கிறார். “சிரத்தையுள்ளவன்(தான்) ஞானம் அடைகிறான்: ச்ரத்தாவான் லபதே ஞானம்”2 என்று.

ஜீவ-ப்ரஹ்ம அபேதத்தைச் சொல்லும் ‘மஹா வாக்யம்’ எனப்படும் உபநிஷத் மந்த்ரங்களுக்குத் தனிப் பெருமையுண்டு. ‘அந்த மஹாவாக்யங்களுக்குள்ளேயும் தனிப்பெருமை பெற்றது ஒரு மந்த்ரம் – ஒரு குரு சிஷ்யனுக்குப் பண்ணுவதாகவே நேர்ப்பட அமைந்திருக்கும் ஸாம வேத மஹாவாக்யம்; ஸந்நியாஸியாக இல்லாத கட்டை ப்ரஹ்மசாரிக்கு உபதேசிக்கப்பட்டது’ என்று சொன்னேனே, ‘அது’ என்கிற பரமாத்மாவாகவே ‘நீ’ என்கிற ஜீவாத்மாவாக இருக்கிறாய் என்று ஆசார்யர் சிஷ்யனுக்குப் பண்ணும் உபதேசந்தான் அது3. உபதேசம் பண்ணினவர் அப்பா உத்தாலக ஆருணி. அதை வாங்கிக் கொண்டவன் பிள்ளை ச்வேதகேது. ஒவ்வொரு மந்த்ரமாகச் சொல்லி அதன் முடிவில் ‘அதுவே நீ’ என்று முத்திரை குத்திக் கொண்டு போகும் அப்பா ரிஷி அதற்கு நடுவில் பிள்ளையிடம், “ஒரு ஆலம்பழம் கொண்டு வா” என்கிறார்.

“இதோ பகவானே!” என்று பிள்ளை பழத்தை நீட்டுகிறான்.

“பிள” என்கிறார் அப்பா.

“பிளந்தாச்சு பகவானே!” என்கிறான் பிள்ளை.

(இனி தந்தை மகன் உரையாடலை ஸ்ரீசரணர்கள் இரு பாத்திரங்கள் பேசுவது போலத் தொடர்கிறார்)

“பிளந்த பழத்திலே என்ன பார்க்கிறே?”

“அணு அணுவா விரைகள், பகவானே!”

“ஸரி கொழந்தே, அந்த விரையையும் பிள.”

“பிளந்தாச்சு, பகவானே!”

“உள்ளே என்ன பார்க்கிறே?”

“ஒண்ணுமில்லை, பகவானே!”

“ஒண்ணுமில்லைனு நீ சொல்றதிலேயேதான் கண்ணுக்குத் தெரியாத ஸுக்ஷ்ம ஸத்து இருக்கு. அதிலேருந்துதான் மஹா விருக்ஷமா ஆல மரம் உண்டாய் நிற்கிறது’ என்று சொன்ன அப்பா ரிஷி அந்த இடத்தில் பிள்ளையை “ஸெளம்யா!” என்று குளிர்ச்சியாகக் கூப்பிட்டு “நான் சொல்றதை நம்பு. அதாவது ச்ரத்தை வை. ச்ரத்தஸ்வ” என்கிறார்.

பிற்காலத்தில் யதீச்வரர்களும் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு கொண்டாடும் மஹா வாக்யத்தில் முதல் முதலாக உபதேசம் பெறுகிற அத்தனை யோக்யதை உள்ளவனிடம் அந்த உபதேசத்தைப் பண்ணும்போதே “ச்ரத்தஸ்வ” சொல்ல வேண்டியிருப்பதலிருந்து, கடைசி மட்டும், அதாவது ப்ரத்யக்ஷத்தில் ப்ரஹ்மாநுபவம் உண்டாகிற மட்டும் நம்பிக்கையில் மேலேயே ஏற்க வேண்டியதாகச் சில விஷயங்கள் இருக்குமென்று தெரிகிறது.

விஷயங்களை நம்புவது மட்டுமில்லை; அவற்றைச் சொல்லும் அந்த குறிப்பிட்ட குருவினால் தனக்கு நிச்சயம் வழி திறக்கும் என்ற நம்பிக்கையுந்தான். இது ரொம்ப முக்யமான ஒரு விஷயம். குரு ஞானியாக இருந்தாலும் இந்த லோகத்தில் அவர் பல விதத்தில் – ஈச்வராவதாரங்கள் பண்ணுவது போல – மாநுஷமாக நடிக்கவும் வேண்டிவரும். அதுவும் எவருக்கோ வழி காட்டுகிற உத்தேசத்தில்தான் இருக்கும். ஆனால் அப்படி மாநுஷமாக சிலது பண்ணும்போது அவரிடமே சிஷ்யனுக்கு ஸந்தேஹம் வந்தாலும் வந்துவிடும். “இவர் நிஜமா ஞானிதானா? பின்னே ஏனிப்படி ஸாமான்ய மனுஷா மாதிரி பண்றார்?” என்று இப்படி ஸந்தேஹப்பட்டு, அவரால் தனக்கு உய்வு உண்டாக முடியுமா என்று ஸம்சயிக்க மட்டும் ஆரம்பித்து விட்டானானால் தொலைந்தது! அதுவே (அந்த ஸம்சயமே) விச்வாகாரமாக, ஒரு பேய் மாதிரி, அவன் மூளையை ஆக்ரமித்துக் கொண்டு அவனை ஒரு ஸாதனையும் பண்ண விடாமல், “ஏமாந்து போனோமே, ஏமாந்து போனோமே!” என்று ஏங்க வைத்து லட்சியத்தைக் கோட்டை விடச் செய்துவிடும்! அதனால்தான் பகவான் “ஸம்சயாத்மா விநச்யதி”-4 ஸந்தேஹப்படுபவன் அழிந்தே போய் விடுகிறான் என்கிறார். “அச்ரத்ததானச்ச ஸம்சயாத்மா விநச்யதி” என்று முதலில் ச்ரத்தை இழந்தவனான “அச்ரத்ததான”னை அவர் குறிப்பிட்டுக் கையோடு கையாக ‘ஸம்சயாத்மா’ என்று சொல்லியிருப்பதைக் கவனிக்கணும். ச்ரத்தையற்றவனான அச்ரத்ததானன் ம்ருத்யுவின் வசப்படுத்தும் ஸம்ஸாரச் சுழலிலேயேதான் வட்டமடித்துக் கொண்டிருப்பானென்றும் இன்னோரிடத்தில் சொல்லியிருக்கிறார் – “அச்ரத்ததாநா:புருஷா: ….நிவர்தந்தே ம்ருத்யு ஸம்ஸார வர்த்மநி”5. பகவான் இப்படி ஒரே கோபமாக, ‘அவநம்பிக்கைக்காரன் அழிந்து போவான், ம்ருத்யுவிடம் திரும்ப திரும்ப மாட்டிப்பான்’ என்று சொல்வதையே, நம்பிக்கைக்காரனை வைத்து ரொம்பவும் ஹிதமாக தமிழ் வசனத்தில் அழுத்திச் சொல்லியிருக்கிறது. “நம்பினோர் கெடுவதில்லை”. அப்படியானால் நம்பாதவர்கள்? அதைச் சொல்வானேன்? எடுத்துக் கொள்ள வேண்டியது நம்பிக்கைதானே, என்று நம் வசனம் விட்டிருக்கிறது. பகவானோ அவநம்பிக்கைக்குத்தான் மநுஷ்யன் ஜாஸ்தி இடம் கொடுக்கிறான் என்பதால் கருணையாலேயே பயமுறுத்திச் சொல்கிறார்! பொய் பயமுறுத்தவில்லை. நம்பிக்கை போனால் அவர் சொல்வது நிஜமாகவே நடந்துதான் விடும். அதற்கு இடம் கொடுக்கவே கூடாது. ‘ஒரு குருவிடம் வந்து விழுந்து விட்டோம். அவர் வெளியிலே எப்படித் தோன்றினாலும் தோன்றிவிட்டுப் போகட்டும். நம்மைப் பொறுத்த மட்டில் அவர் மூலமாக விமோசனம் தராமல் ஈச்வரன் கைவிட மாட்டான்’ என்ற நம்பிக்கையை – ச்ரத்தையை – மனஸில் ஆணிவேரோட விட்டு சரணாகதி பண்ணிவிட வேண்டும். ஆரம்பத்தில் பாடம் சொல்லித் தரும் வித்யா குருவை விட கடைசியில் [ஸந்நியாஸ] ஆச்ரமம் தரும் தீக்ஷா குருவிடம் இந்த ச்ரத்தா பக்தி – சரணாகதி ரொம்ப முக்கியம்.

குருவைப் பற்றி தீர விசாரித்துத்தான் ஆச்ரயிக்க வேண்டுமானாலும், ஏமாந்துபோய் ஒரு போலியிடமேகூட போய்ச் சேர்ந்திருக்கலாம். அப்படியிருந்தால்கூட ச்ரத்தை இழக்காமல் அவருக்கே சரணாகதி என்று பண்ணி விட்டால், அவருக்கு ஞானம் வராவிட்டாலுங்கூட, அவர் மூலமாக ஸர்வாந்தர்மியான ஈச்வரன் இந்த சிஷ்யனுக்கு ஞானாநுக்ரஹம் பண்ணி விடுவான்.6

நேரே நாமே தெரிந்து கொள்வதில்தான் அது ஸத்யம் என்ற த்ருடமான புத்தி; இப்படி நாமே தெரிந்து கொள்ளாமல், சாஸ்திரம் சொல்லி அதை ஆசார்யன் எடுத்துச் சொல்லி நம்பிக்கையின் மேலே நாம் எடுத்துக் கொள்வதில் அவ்வளவு த்ருட புத்தி இல்லாமலிருப்பது என்றால் அது ச்ரத்தையே இல்லை. ‘நம் புத்திக்கு, சிற்றறிவுக்கு, எட்டாததாலேயே இதுதான் நாமாகத் தெரிந்து கொள்ளக் கூடியதை விடவும் உசந்தது; ஸத்யமானது. ஈச்வரனே சாஸ்த்ரக்காரர்களான ரிஷிகளுக்கு ‘ரிவீல்’ செய்து அவர்கள் நமக்குக் கொடுத்திருக்கும் பெரிய ஸத்யம்’ என்ற த்ருட நிச்சயம் நமக்கு வேண்டும். அப்பேர்ப்பட்ட நம்பிக்கைக்குதான் ச்ரத்தை என்று பெயர். வேதத்திலுள்ள வார்த்தைகளுக்கு நன்றாக வேர் பிரித்து அர்த்தம் செய்வதாக ‘நிருக்தம்’என்று ஒரு சாஸ்திரம் இருக்கிறது. வேதத்தின் ஆறு அங்கங்களில் அது ஒன்று7. அதைப் பண்ணியவர் யாஸ்கர். அவர் ச்ரத்தா என்பதற்கு அர்த்தம் பண்ணும்போது அது ‘ச்ரத்’ என்ற ஒரு வேர்ச் சொல்லும் ‘தா’ என்று இன்னொரு வேர்ச் சொல்லும் சேர்ந்து உண்டான வார்த்தை என்கிறார். ‘தா’ என்றால் ‘fix’ பண்ணுவது என்று அர்த்தம். ‘ச்ரத்’ என்பது ஸத்யத்தைக் குறிக்கும். ஆகையினால் ச்ரத்தா என்றாலே, ஒன்றில் அதுதான் ஸத்யமென்று மனசை fix பண்ணுவது என்று அர்த்தமாகிறது. அதாவது ‘த்ருட புத்தியோடு நம்புவது ச்ரத்தை.

‘இப்படிப்பட்ட ச்ரத்தை நாம் மனஸில் ஆழ்ந்து நினைக்க வேண்டிய, கண்ணுக்குத் தெரியாத, தத்வத்திடம் இருந்தால்தான் ஒருத்தன் ஸரியாக அம்மாதிரி நினைப்பான்; இல்லாதவன் அப்படி நினைக்கவே முடியாது’ என்று சாந்தோக்யத்தில் மந்திரமிருக்கிறது – “எப்போது சிரத்தை வைக்கிறானோ அப்போதே ஸரியாக நினைப்பது” என்று.8

ப்ரஹ்ம வித்யையை ச்ரத்தை உள்ளவர்களுக்கே உபதேசிக்க வேண்டுமென்று முண்டகோபநிஷத்தில் இருக்கிறது. யார் யார் அந்த வித்யைக்கு அதிகாரிகள் என்று அது பல யோக்யதாம்சங்களைச் சொல்லும்போது, க்ரியா வந்தர்களாக, ச்ரோத்ரியர்களாக, ப்ரஹ்மத்திலேயே நிலை பெறும் தாபமுடையவர்களாக, ச்ரத்தையுள்ளவர்களாக இருக்கிறவர்களே அதிகாரிகள் என்று சொல்கிறது.9 ப்ரச்னோபநிஷத்திலும் ஆத்மாவைத் தேடிக் கொண்டு போகிறவர்கள் தபஸாலும், ப்ரஹ்மசர்யத்தாலும், ச்ரத்தையாலும், வித்யையாலும் அதற்குத் தகுதி பெற்றவராகிறார்களென்று இருக்கிறது.

கீதையில் தெய்வகுணம், அஸுரகுணம் ஆகியவற்றை ஒரு அத்யாயத்தில் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணிவிட்டு முடிக்கிற இடத்தில், “சாஸ்த்ர விதியை மீறித் தன்னிஷ்டப்படி பண்ணுகிறவனுக்கு ஸித்தியும் கிடையாது. ஸுகமும் கிடையாது, பரகதியும் கிடையாது. அதனால் அர்ஜுனா! சாஸ்த்ரத்தையே ப்ரமாணமாக வைத்துக் கொண்டு என்ன செய்யலாம், என்ன செய்யப்படாது என்று வழிவகுத்துக் கொள்’ என்கிறார்.10 இப்படிச் சொன்னவர் அடுத்த அத்யாய ஆரம்பத்திலேயே, சாஸ்த்ர ஸம்பந்தமே இல்லாமல் கூட மநுஷ்யனின் பிறவிக் குணமாக ஏதோ ஒரு தினுஸான ச்ரத்தை இருக்க முடியும் என்று சொல்லி, சாஸ்த்ர ஸம்பந்தமில்லாத அப்படிப்பட்ட ச்ரத்தையில் கூட ரஜஸ், தமஸ் என்ற கெட்ட தினுஸுகள் மாத்ரமில்லாமல் ஸத்வமானாதாகவும் ஒரு தினுஸு இருக்கிறது என்கிறார்!11இதிலிருந்து ச்ரத்தைக்கு உள்ள தனியான இடமும் பெருமையும் தெரிகிறது.

சாஸ்திரத்திலும் குரு வாக்யத்திலும் தளராத ச்ரத்தையை ஆசார்யாள் எங்கே பார்த்தாலும் வலியுறுத்திக் கொண்டே போவார்.

ஸாதனா க்ரமத்தில் ‘சமாதி ஷட்க ஸம்பத்’ என்பதில் சமம், தமம், உபரதி, திதிக்ஷை, ஸமாதானம் என்ற ஐந்தோடு ஆறாவதாக இந்த ச்ரத்தையையும் ஆசார்யாள் சேர்ந்திருக்கிறார். ஆனால் ஐந்துக்கப்புறம் ஆறாவதாக இது என்றில்லாமல், முதல் நாலை ப்ருஹதாரண்யகத்தில் சொல்லியுள்ள ஆர்டரை மாற்றாமல் சமம், தமம், உபரதி, திதிக்ஷை என்று அப்படியே வைத்துக் கொண்டு, திதிக்ஷைக்கு அப்புறம் ஐந்தாவதாக ச்ரத்தையை வைத்து இதற்கப்புறம் ஸமாதானம் என்று முடித்திருக்கிறார்.

‘ஸமாதானம்’ என்பதற்குள்ள பல அர்த்தங்களில் ஒன்று, ஸந்தேஹங்களை நிவிருத்தி பண்ணி உண்மையான விஷயத்தை ஸ்தாபிப்பது என்பதாகும். ஒரு மதத்தில் ஒரு கொள்கை சொன்னால் இதர மதஸ்தர் அதற்கு ஆக்ஷேபமாக வாதம் செய்வார். அதற்குப் பேர் ‘பூர்வ பக்ஷம்’. அப்புறம் இந்த மதக்காரர் அந்த ஆக்ஷேபத்துக்கெல்லாம் பதில் சொல்லி, ஸமாதானம் சொல்லி, தன் கட்சியையே நிலை நாட்டுவார். அதற்குப் பேர் ‘ஸித்தாந்தம்’. இதர மதஸ்தரின் பூர்வ பக்ஷ வாதங்களைக் கேட்கும்போது இந்த மதத்தில் ஸித்தாந்தம் செய்யப் போகிறவருடைய சிஷ்யர்களுக்கே, ‘இவர் கட்சி தப்புதானோ? பூர்வபக்ஷி சொல்வதுதான் ஸரியோ?’ என்று தோன்றக்கூடும். இதுவும் அவநம்பிக்கையில், அதாவது அச்ரத்தையில் சேர்ப்பதுதானே? அந்த அச்ரத்தையை குரு சொல்லும் “ஸமாதானம்” தான் போக்குகிறது!

‘ச்ரத்தை’ என்று ஒரு ஸாதனாங்கத்தை ஆசார்யாள் சொல்லும்போதே அதில் அந்தர்கதமாக [உட்கிடையாக] அச்ரத்தையும் வந்துவிடுகிறது! ஒரு விஷயத்தைச் சொல்லி “இதைப் பற்றி ஸந்தேஹப்படாதேள்!” என்று சொன்னால், உடனே அதுவரைக்கும் ஸந்தேஹப்படாதவர்களுக்குங் கூடக் கொஞ்சம் யோசனை உண்டாகிவிடும்! நம்பிக்கை என்பது அவநம்பிக்கையைத் தவிர்க்க முடியாத ப்ரத்ங்கமாக [எதிர் அங்கமாக]க் கொண்டிருக்கிறது. அந்த அவநம்பிக்கையை, அச்ரத்தையை எதிர்த்துப் போராடி ஜயிக்கும் கட்டத்திற்குப் போவதே ‘ச்ரத்தை’ என்ற ஸாதனாங்கம். அப்புறம் ஜயித்தே விட்ட நிலையில் ஸமாதானமாயிருப்பது ஸமாதானம்! சண்டை முடிந்தால் ஸமாதானந்தானே? நடைமுறையிலேயே எல்லாரும் சொல்கிறது ‘சண்டை – ஸமாதானம்’ என்பது தானே?

அவநம்பிக்கையோடு நம்பிக்கை சண்டை போடக் கொஞ்சமாவது இடமிருக்கும் ஸ்டேஜில் “ச்ரத்தை” அதற்கப்புறம் “ஸமாதானம்”- சண்டையேயில்லாமல் ‘ஸெட்டில்’ஆன ஸ்டேஜ்.

இதையே மாற்றிச் சொன்னால் ஸமாதானத்திற்கு முன்னால் ச்ரத்தை.

அதனால்தான் ‘பேஸிக்’காக ஆரம்பத்திலிருந்தே இருக்க வேண்டிய ச்ரத்தையை ஒருத்தன் ஆச்ரமம் வாங்கிக் கொள்ளப் போவதற்கு முன்னாடி ‘ஹையர் க்ரேடி’லும் சொல்லி ஒரு ஸாதனாங்கமாக வைத்து விட்டால் தேவலையே என்று ஆசார்யாள் நினைத்தபோது ஸந்நியாஸ தீக்ஷைக்கு மனஸு நன்றாக ஸெட்டிலாகிவிடும் ‘ஸமாதான’த்திற்கு முன் அதை வைத்தால் பொருத்தமாயிருக்குமென்று நினைத்து, ஷட்க ஸம்பத்தில் சம-தம-உபரதி-திதிக்ஷைகளைச் சொல்லிவிட்டு அடுத்ததாற்போல் அதை வைத்திருக்கிறார் என்கலாம்.

சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது; அப்படியும் விடாமல் ஏறிப் ஏறிப் பார்த்து அப்யாஸம் பண்ணிச் சாண் ஏறினால் சாணளவே சறுக்குகிறது; மேலும் அப்யாஸத்தினால் சாண் ஏறினால் முக்கால் சாண்தான் சறுக்குகிறது; அரை சாண் தான் சறுக்குகிறது என்று ஸாதனை போவதில் முன்படி பின்படி என்றே ரொம்பவும் பிரித்துச் சொல்ல முடியாதுதான். மூன்றாம், நாலாம் படியிலிருந்துகூட முதல் படிக்கு உருளலாம்! ஸாதனா பலம், ஸங்கல்ப பலம், க்ருபா பலம் ஜாஸ்தியாக ஆகத் தவளை மாதிரி முதல் படியிலிருந்தே நாலாம் படிக்குக்கூடத் தாவலாம்! இப்படி மேலும் கீழுமாக, அடிக்கடி நான் சொல்லி வந்தது போல ‘ஸைட்-பை-ஸைட்’ கலந்து கலந்தும், ஸாதனையின் அங்கங்கள் இருந்தாலுங்கூட, ‘லாஜிக’லாக அவற்றைக் கொஞ்சம் ஒரு சீரான வரிசையில் வைத்துப் பார்க்கும் விதத்தில் ஆசார்யாள் வழியமைத்துக் கொடுத்திருப்பதில் இப்படி ச்ரத்தை ஸமாதானத்திற்கு முன்படியாக இருக்கிறது.

‘ஸமாதான’த்திற்கு தீர்க்கமான அர்த்தம் – ஆசார்யாளே கொடுத்த டெஃபனிஷன் – இருக்கிறது. அதை அப்புறம் சொல்கிறேன். முதலில் ச்ரத்தையை எப்படி டிஃபைன் பண்ணியிருக்கிறாரென்று பார்த்து விடலாம். அதற்கு முந்தி, ஸமாதானத்திற்கு முன்னாடி அதை வைத்ததற்குக் காரணம் பார்த்தது போல, திதிக்ஷைக்கு அப்புறம் வைத்ததற்கும் பார்க்கலாம்.

நித்ய அநித்ய வஸ்து விவேகம் பண்ணியதால் அநித்யம் என்னவென்று நன்றாக உறுதிப்பட்ட அளவுக்கு நித்யத்தைப் பற்றி உறுதி ஏற்பட்டிருக்காது. நித்யம் என்றால் ஆத்மாதானே? ஒன்றை அநுபவித்தாலன்றி அதைப்பற்றி முழு உறுதி எப்படி ஏற்படும்? ஆனால் ஆத்மாவை அநுபவிப்பதோ கடைசி கடைசியாகவே ஏற்படுவதல்லவா? விவேசனம் பண்ணியதில் – ஆத்ம வஸ்து விஷயமாக வித்யா குருமார்களின் உபதேசங்கள் கேட்டதில், உபநிஷத் மாதிரி புஸ்தகங்கள் – ஆசார்யாள் க்ரந்தங்கள் படித்து விவேசனம் பண்ணியதில் ஆத்மா என்று ஒன்று இருக்க வேண்டும், அது ஸச்சிதாந்தகனமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் புத்தி மட்டத்தில் ஒரு உறுதி பிறந்திருக்குமென்றாலும் அநித்ய வஸ்துக்களை அநுபவத்திலேயே தெரிந்து கொள்வதால் அவை அநித்யந்தான் என்று நிச்சய உறுதி பெறுகிறாற்போல ஆத்மா விஷயமாகத் தெளிவு பெற முடியாது. ஆக எதில் சேரணுமோ அதைத் தெரிந்து கொள்வதைவிட, எதைக் கழித்துக் கட்ட வேண்டுமென்பதையே நன்றாக தெரிந்து கொள்வோம். அதனால் தள்ள வேண்டிய அநித்யத்தை வெறுக்க ஆரம்பிப்பதில் வைராக்யம் ஆரம்பிக்கிறது. அப்புறம் அநாத்ம – அநித்ய வஸ்துக்களைத் தேடிப் போகாமல் இந்த வைராக்யத்தாலேயேதான் இந்த்ரியங்களை அடக்குவதும் மனஸை அடக்குவதுமான தம சமங்கள். ஒரு மாதிரி அநித்ய வஸ்துக்களில் அநுபோக அரிப்புப் போய் மனஸ் வெறுமையாக ஆகிற உபரதி, அடுத்தாற்போல. இங்கேயும் ஆத்மாநுபவம் இல்லை. அநாத்ம அநுபவக் கஷ்டம் இல்லாத வெறுமையை தவிர ஆத்மாநுபவம் ஏற்பட்ட ஆனந்த கனமில்லை. அப்போது வெளியிலிருந்து பெரிசான ஸுகதுக்காதிகள் தாக்கினாலும் பாதிக்கப்படாமல் ஸஹித்துக் கொள்வதான திதிக்ஷை. இதன்போதும் அநாத்ம நிராகரண ஸைடில்தான் முன்னேற்றமே தவிர, அடைய வேண்டிய அநுபவானந்தத்தில் இல்லை.

இங்கே இன்னொன்றையும் சொல்லத்தான் வேண்டும். அதாவது ஆத்மானந்தத்தின் லேசான சாயையும் ஆரம்பித்திலிருந்தே கொஞ்சம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். வெய்யில் அடிக்கும்போதே எங்கேயோ பெய்கிற மழையினால் அப்பப்போ ஒரு ஜில் காற்று வருகிறாற்போல அது இருக்கும்! ஈச்வரன்தான் அப்படிக் கொஞ்சம் அனுப்பி வைப்பான். அப்புறம் தூவானம், தவிட்டுத் தூற்றல் மாதிரி முன்னேற்றம் அவன் அனுக்ரஹத்தில் கிடைத்துக் கொண்டிருக்கும். ஆனாலும் அடைமழையாகப் பிடித்துக் கொள்ளாது. நிறைய வெய்யில், நடுப்புற நடுப்புற [நடுவே நடுவே] கொஞ்சம் குளிர்காற்று, ஒன்றும் இரண்டுமாகத் தூற்றல் என்றே இருக்கும். எத்தனையோ ஜன்மாந்த்ர கர்மா தீர்ந்துதான் ஆத்மாநுபவமென்றால் இப்படித்தானே இருக்க முடியும்? ஆனாலும் அத்தனை ஜன்மத்தில் நாம் ஆத்மாவை விட்டு அநாத்மாவிலேயே உழன்று கொண்டிருந்தது நமக்குப் பெரிசாகத் தெரியாமல், இப்போது “இத்தனை காலம் நாம் ஸாதனை என்று பண்ணியும் நின்று நிலைத்த பலனாக ஒன்றும் காணோமே! ப்ராணன் போகிற பசிக்குப் பருக்கை சாதம் காட்டுகிற மாதிரியல்லவா ஏதோ துளியூண்டு பலன் மாதிரித் தெரிந்து, அதுவும் ஓடிப்போய் விடுகிறது? லக்ஷ்ய ஸித்தி என்பது ஒருநாளும் வருமென்று தோன்றவில்லையே!” என்று – கடப்பாரையைத் தின்றது பெரிசாகத் தெரியாமல் சுக்குக் கஷாயம் குடித்ததுதான் பெரிசாகத் தெரிந்து – ஏக்கமும், ஏமாற்றமும் உண்டாகும்! ஓரளவுக்கு நல்ல ஸஹிப்புத்தன்மை – திதிக்ஷை அதுதான் – வந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும் ஸமயத்தில் இப்படி ஸஹித்துக் கொள்ள முடியாத ஆதங்கம், எப்படி வந்தது என்றே தெரியாமல், ஏற்படுவதுண்டு! அநுக்ரஹம் பண்ணும் ஈச்வரனே பரீக்ஷையும் வைப்பதில்தான் இப்படி ஏற்படுவது! அந்த ஸமயத்தில் நம்பிக்கை தளர்ந்து ஸாதனையை விட்டு விடாமலிருப்பதற்காகத்தான் திதிக்ஷைக்கு அப்புறம் ச்ரத்தையை – ஹையர் லெவல் ச்ரத்தையை – வைத்தது.

ச்ரத்தைக்கு ஆசார்யாள் எப்படி லக்ஷணம் சொல்லியிருக்கிறாரென்றால்:

சாஸ்த்ரஸ்ய குருவாக்யஸ்ய ஸத்ய புத்த்யாவதாரணா |
ஸா ச்ரத்தா கதிதா ஸத்பிர் – யயா வஸ்தூபலப்யதே ||12

“சாஸ்திரமும் குருவாக்யமும் ஸத்யமே என்று புத்தியினால் உறுதியாகத் தீர்மானம் பண்ணுவதே ச்ரத்தை என்று ஸத்துக்களால் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ச்ரத்தையினால்தான் மெய்ப்பொருள் அடையப்படுகிறது” என்று அர்த்தம்.

தானே ‘அதாரிடி’யாக இப்படிச் சொல்லவில்லை, ஸத்துக்களாகிற மேன்மக்கள் ஏற்கெனவே சொன்னதைத்தான் தானும் இப்போது எடுத்துச் சொல்வது என்று விநய குணத்தோடு சொல்கிறார்.

புத்தி வேலையைத் தள்ளிவிட்டு நம்பிக்கையிலேயே ஒன்றை எடுத்துக் கொள்வதுதான் ச்ரத்தை என்று பொதுவாகச் சொல்வது. இங்கேயோ, சாஸ்திரமும் குரு வாக்யமும் ஸத்யம் என்று புத்தியினால் உறுதிப் படுத்திக் கொள்வதை – ‘புத்த்யவதாரண’த்தை – அப்படிச் சொல்லியிருக்கிறது. ஆனாலும் பொதுவாகச் சொல்வதற்கு இது முரணில்லை. எப்படியென்றால்……. ‘புத்தியால் உறுதிப் படுத்திக் கொள்வது’ என்பதற்கு இங்கே, ‘சாஸ்திரத்தையும், குருவாக்யத்தையும் சரிதானா என்று சொந்த புத்தியால் ஆராய்ச்சி பண்ணிப் பார்த்து சரியாகப்பட்டாலே எடுத்துக் கொள்வது’ என்று அர்த்தமில்லை. பின்னே என்ன அர்த்தமென்றால், புத்தியே, ‘நமக்கு எல்லா விஷயமும் தெரிய முடியாது; நம்மால் எல்லாவற்றையும் ஜட்ஜ் பண்ண முடியாது; பரலோக விஷயமாகவும் ஆத்ம ஸம்பந்தமாகவும் நமக்குப் புலப்பட முடியாத விஷயங்களை ஸொந்த அநுபவத்தினாலும், ஈஸ்வரனே கொடுத்த ஞான திருஷ்டியினாலும் தெரிந்து கொண்டு சாஸ்திரக்காரர்களும், சாஸ்திரஜ்ஞரான குருவும் சொல்வதைத்தான் ஆராய்ச்சி பண்ணாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று உறுதிப் படுத்திக் கொள்வதைத்தான் “புத்தியின் அவதாரணம்” என்று சொல்லியிருப்பது. புத்தி வேலை செய்து பார்த்து உண்மையை உறுதி செய்துகொள்வது இல்லை; புத்தி ‘தனக்கு இங்கே வேலை இல்லை’ என்று உறுதி செய்து கொள்வது!

புத்தி சக்தியே இல்லாதவன் எதை வேண்டுமானால் நம்பி ஏற்றுக் கொள்கிற மாதிரி இது இல்லை. அப்படியிருந்தால் ஏமாந்தும் போய்விடுவான். ‘நித்யாநித்ய வஸ்து விவேகம்’ என்று ஆரம்பிக்கும்போது நல்லது கெட்டதை அலசி ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்ப்பதைத்தானே சொன்னது? அதற்கு புத்தி சக்தி பலமாயிருந்தால்தானே முடியும்? புத்தியால் ஜட்ஜ் பண்ணக்கூடிய விஷயங்களை ஸரியாக ஜட்ஜ் பண்ணியே ஏற்றுக்கொள்வதற்காக இவன் [ஸாதகன்] புத்தி சக்தியை விருத்தி பண்ணிக் கொண்டு அதைக் கூராக, விழிப்பாக வைத்திருக்கத்தான் வேண்டும். ஆனால் இவனுடைய புத்திக்குப் புரிபடாததாக ஒன்றை சாஸ்திரங்களும், குருவும் சொல்லும்போது ‘இங்கே தன் புத்தி வேலை பண்ணாமல், உபதேசத்தை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று உறுதியோடு இருக்க வேண்டும். தனக்குள்ள புத்தி சக்தியைக் காட்டுவதில் உறுதியாயிருப்பதைவிட இப்படி காட்டாமலிருப்பதில் உறுதியாயிருப்பது தான் கஷ்டம்! ரொம்பவும் விநயம் இருந்தால்தான் அது முடியும். அப்படி விநயத்தை வளர்த்துக் கொண்டு, ஒரு மண்டுவின் நம்பிக்கையாக இல்லாமல் புத்திமானின் நம்பிக்கையாக சாஸ்திர வாக்யத்தையும் குருவாக்யத்தையும் எதிர்க் கேள்வி இல்லாமல் எடுத்துக் கொள்வதுதான் இங்கே சொல்லப்பட்டிருக்கும் ச்ரத்தை.

‘அவதாரணம்’ என்றால் ‘ஆழ்ந்த உறுதி’ என்று ஒரு அர்த்தம். ‘லிமிட் பண்ணுவது’ என்று இன்னொரு அர்த்தம். இரண்டு அர்த்தத்தையும் கூட்டி இங்கே எடுத்துக் கொள்ளலாம். புத்தியானது, ‘இது தன்னுடைய எல்லைக்கு அப்பாற்பட்டது’ என்று தன்னை லிமிட் பண்ணிக் கொண்டு, சாஸ்திர-குருவாக்யங்கள் ஸத்யமே என்ற ஆழ்ந்த உறுதியோடு இருப்பதே ச்ரத்தை என்று எடுத்துக் கொள்ளலாம்.

ச்ரத்தையாலேயே ஸத்யத்தைப் பிடிக்க முடியும் என்பதைத்தான் ‘யயா வஸ்து உபலப்யதே’ என்கிறார். ‘யயா’ – எவளால்; ச்ரத்தையைப் பெண்ணாகத்தானே’ சொல்லியிருக்கிறது? அந்த ச்ரத்தையால் என்பதைத்தான் ‘எவளால்’ என்றிருக்கிறது. எவளால் “வஸ்து” என்கிற மெய்ப்பொருள் அடையப்படுமோ – “உபலப்யதே” என்றால் ‘அடையப்படும்’ – எவளால் மெய்ப்பொருள் அடையப்படுமோ அவளே ‘ச்ரத்தை’ எனப்படுபவள்; “ஸா” – அவளே : “ச்ரத்தா” – ச்ரத்தை.

‘வாஸ்தவம்’ என்று ஒரு வார்த்தை சொல்கிறோம். ‘நிஜந்தான்’ என்று சொல்கிறதற்குப் பதில் ‘வாஸ்தவந்தான்’ என்கிறோம்.

‘நிஜம்’ என்ற வார்த்தைக்கு [சிரித்து] நிஜமான, வாஸ்தவமான அர்த்தம், நாம் சொல்கிற அர்த்தமில்லை! நாம் ஸத்யம், உண்மை என்ற அர்த்தத்தில் ‘நிஜம்’ என்ற வார்த்தையைச் சொல்கிறோம். அதற்கு அப்படி அர்த்தமில்லை. ‘தன்னியற்கையாக இருப்பது’, ‘தனக்கே சொந்தமானது’ என்பதுதான் அதற்கு ஸரியான அர்த்தம்.

பின்னே நாம் ஏன் இப்படி அர்த்தம் பண்ணிக் கொள்கிறோமென்பதற்கு ஒரு காரணம் தோன்றுகிறது. ஒருத்தர் வேஷம் போடும்போது இயற்கையாக இல்லாமல் செயற்கையாகப் பண்ணுகிறார். வேஷம் கலைந்தால் இயற்கையாக, அதாவது நிஜமாக ஆகிறார். வேஷம் என்பது பொய். ‘எல்லாமே வெறும் வேஷம்’ என்கிறபோது பொய் என்ற அர்த்தத்தில்தானே சொல்கிறோம்? ‘வேஷம்’ பொய் என்றால், அதற்கு எதிர்பதமாக இருக்கும் ‘நிஜம்’ மெய் என்று எடுத்துக் கொண்டுதான் நாம் ‘நிஜம்’ என்பது ஸத்யம் என்பதற்கு இன்னொரு வார்த்தையே என்று நினைத்துச் சொல்லி வருகிறோம். அது இருக்கட்டும்……

‘வாஸ்தவம்’ பற்றிச் சொன்னேன். ‘வாஸ்தவம்’ என்றால் ஸத்யமான விஷயம் என்று எடுத்துக் கொள்கிறோம். அது சரிதான். அந்த வார்த்தை ‘வஸ்து’ என்பதிலிருந்து உண்டானது. ‘வஸ்து’வின் தன்மை எதுவோ அது ‘வாஸ்தவம்’. ‘வஸ்து’ என்றால் பொருள்கள், things என்று மட்டுமே நாம் அர்த்தம் பண்ணிக் கொண்டாலும், அந்த அர்த்தமும் ஸரிதான் என்றாலும், அதற்கு முக்கியமான அர்த்தம் ‘ஸத்யமாக இருக்கும் ஒன்று’ என்பதுதான். பொருள்கள் வெறும் கல்பனையில்லாமல் உண்மையிலேயே இருப்பதால் அவற்றுக்கும் ‘வஸ்து’ என்று பெயர் ஏற்பட்டது. வஸ்து என்றால் ஸத்யமாக இருக்கும் ஒன்றாகையால்தான் உண்மைத்தன்மை உள்ளதை ‘வாஸ்தவம்’ என்கிறோம்.

நாம் பார்த்துக் கொண்டிருக்கும் ச்லோகத்தில் ச்ரத்தையாலேயே ஸத்யப்பொருள் அடையப்படும் என்பதை ‘யயா வஸ்து உபலப்யதே’ என்று சொல்லியிருக்கிறது. நாம் கல்பனையாக இல்லாமலிருக்கும் எல்லாப் பொருள்களையும் வஸ்துக்கள் என்று சொன்னாலும் ஞானம் வரும்போது இவை அத்தனையும் மாயா கல்பனைதான் – என்பதாக அடிபட்டுப் போய்விடும். ஸத் என்றும் மெய்ப்பொருள் என்றும் சொல்லப்படும் பிரம்மம் ஒன்றுதான் ஸத்யமாக உள்ளது என்பதாக அப்போது நிற்கும். அதாவது அது ஒன்றுதான் நிரந்தரமான வஸ்து என்பதாக நிற்கும். அதை அடைவதற்கு ச்ரத்தை அவசியம், அத்யாவசியம் என்பதைத்தான் ச்ரத்தையினாலேயே வஸ்து அடையப்படுகிறது என்கிறார்.

இங்கே, புத்தி தன்னுடைய குறுகிய எல்லையைப் புரிந்து கொண்டு சாஸ்த்ர வாக்யமும் குரு வாக்யமும் ஸத்யமென்று உறுதி கொள்வதுதான் ச்ரத்தை என்றவர், ‘அபரோக்ஷாநுபூதி’யில் டெஃபனிஷன் கொடுக்கும்போது புத்தியின் கார்யத்தைப் பற்றி நாம் புத்திசாலித்தனமாகவோ அசட்டுத்தனமாகவோ ஒன்றும் வியாக்யானம் பண்ணிக் கொள்ள இடம் கொடுக்காமல் ஸிம்பிளாக, எல்லோரும் பொதுவாக நினைக்கிறபடியே லக்ஷணம் சொல்லியிருக்கிறார்.

நிகமாசார்ய வாக்யேஷு பக்தி: ச்ரத்தேதி விச்ருதா13

‘நிகமம்’ என்கிற வேத சாஸ்திரங்களின் வாக்கிலும் ஆசார்யனின் வாக்கிலும் பக்தி காட்டுவதுதான் ச்ரத்தை என்று அர்த்தம். பக்தி என்றால் ப்ரியத்தோடு நம்பிக்கை வைத்து ஒன்றில் ஈடுபட்டிருப்பது.

பக்தி-ச்ரத்தை என்று சேர்த்துச் சொல்வது வழக்கம். அங்கே ‘பக்தி என்பதில் ப்ரிய ஆஸ்பெக்டையும், ‘ச்ரத்தை’ என்பதில் நம்பிக்கை ஆஸ்பெக்டையும் மட்டும் எடுத்துக் கொண்டு அப்படிச் சொல்கிறோம். ஆனால் ஒன்றிடம் ப்ரியம் இருந்தால்தான் அதனிடம் நம்பிக்கை வரும்; ஒன்று நம்பகமானதாகயிருந்தால்தான் அதனிடமும் ப்ரியமும் வரும். இப்படி இரண்டும் பிரிக்க முடியாமலிருப்பதால் பக்தியும் ச்ரத்தையும் ஒன்றே என்றாகி விடுகிறது. சாஸ்திரங்களிலும், ஆச்சார்ய உபதேசத்திலும் இந்த அன்போடு கூடிய நம்பிக்கை, அல்லது நம்பிக்கையோடு கூடிய அன்பு இருப்பதே ச்ரத்தை என்று இங்கே சொல்கிறார். அன்பு என்பது நம் ஹ்ருதயத்தை ஒரு வஸ்து ஈடுபடுத்துவது. இப்படி சாஸ்திரமும் குருவும் சொல்லும் விஷயங்களில் நாம் ஹ்ருதய பூர்வமாக ஈடுபட்டிருப்பதுதான் ச்ரத்தை.


1 இரண்டாம் அத்யாய உபக்ரமத்தில் (முகவரில்)

2 கீதை IV.39

3 சாந்தோக்யோபநிஷத் VI.8.7லும், தொடர்ந்து வரும் பகுதிகளிலும். 4 கீதை IV.40

5 கீதை IX.3

6 இவ்விஷயமாக “தெய்வத்தின் குரல்”, இரண்டாம் பகுதியில், “சரணாகதியே முக்கியம்” எனும் உரை பார்க்க.

7 “தெய்வத்தின் குரல்”, இரண்டாம் பகுதியில், ‘நிருக்தம்: வேதத்தின் காது’ என்ற உரை பார்க்கவும்.

8 VII.19.1

9 III.2.10. ‘க்ரியவண்டர்’- கர்மானுஷ்டானமுள்ளவர்; ‘ச்ரோத்ரியர்’- வேதத்தில் சிறந்த பாண்டித்யம் பெற்றவர். 10 கீதை XVI.23,24

11 கீதை XVII.2

12 “விவேக சூடாமணி”, ச்லோ 25 (அ) 26

13 ச்லோ 8

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is திதி¬க்ஷ
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ஸமாதானம்
Next