அக்ஷமாலை : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ருத்ராக்ஷ மாலை என்றால் ருத்ரன் கண்ணிலிருந்து உண்டானதான ருத்ராக்ஷத்தை கோத்துச் செய்த மாலை என்று அர்த்தம். ‘அக்ஷம்’ என்றால் இங்கே ‘கண்’ என்று பொருள். ‘திருக்கண்மணி’ என்றே ருத்ராக்ஷத்துக்குத் தமிழில் பேர் உண்டு. அது ஸரி, வெறுமே அக்ஷமாலை, ஸ்படிக அக்ஷமாலை, என்றெல்லாம் சொன்னால் என்ன அர்த்தம்? இங்கே ‘அக்ஷம்’ என்றால் கண் என்று பொருள் கொண்டால் சரியில்லை. ஆகவே இங்கே அக்ஷம் என்றால் அ -விலிருந்து க்ஷ – வரையிலான அக்ஷரங்கள் என்று அர்த்தம் பன்ணிக்கொள்ள வேண்டும். ஸம்ஸ்கிருதத்துக்கான லிபியில் முதல் எழுத்து அ; கடைசி எழுத்து க்ஷ. இங்கிலீஷில் ஒரு விஷயத்தை அடியோடு நுனி சொல்வதற்கு “A to Z” என்கிற மாதிரி ஸம்ஸ்கிருதத்தில் “அ-காராதி க்ஷ-காராந்தம்” என்பார்கள். இப்படி உள்ள மொத்த எழுத்துக்கள் 50. அதனால் 50 மணி கொண்ட ஜபமாலைக்கு அக்ஷமாலை என்று பெயர். 51‍-வது மணியாக ஒரு பெரிய மணி இருக்கும். அதற்கு மேரு என்று பேர். மேருவைத் தாண்டாமல் ஸூரியன் திரும்பிவிடுவதாக ஐதிகம். அம்மாதிரியே, ஜபம் செய்கிறவர்கள் இந்த மேரு வந்ததும் திரும்பி உருட்டினால், ஒரு தரம் இப்படி முன்னும் பின்னுமாக ஜபித்து முடிக்க நூறு ஆவிருத்தி மந்திரமாகியிருக்கும்.