சித்திர ஆதிசங்கரர் - பகுதி 20 - Illustrated Adi Shankara | Sri Kanchi Kamakoti Peetham
  1. Home
  2. Articles
  3. சித்திர ஆதிசங்கரர்
  4. சித்திர ஆதிசங்கரர் - பகுதி 20
சித்திர ஆதிசங்கரர்

சித்திர ஆதிசங்கரர் - பகுதி 20

Sri Kanchi Kamakoti Peetham

மற்ற சீடர்களுக்கு இப்போதுதான் கிரியின் அருமை பெருமைகள் தெரிந்தன. தோடகவிருத்தத்தில் துதி செய்த அவர் 'தோடகர்'என்ற விருதைப்பெற்றார். அவர் இயற்றிய 'தோடகாஷ்டகம்'இன்னும் ஆசாரியார்கு நமஸ்கரிக்கும் போது பாடப்படுகிறது

தமிழகத்தின் க்ஷேத்திரங்கள் தோறும் சங்கர பகவத் பாதர் விஜயம் செய்தார் என்றறிய நமக்குப் பூரிப்பாக இருக்கிறது. இந்த யாத்திரையில் அவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் என்ற மகாக்ஷேத்திரத்தை வந்தடைந்தார்.

அங்கிருந்த சைவப்பெரும் பண்டிதர்கள், "சிவன்தான் உலகை ஆக்கிப் படைத்து அழிக்கும் கடவுள். அவனால் படைக்கப்பட்ட நாம் அற்பமான ஜீவன்கள் அப்படியிருக்க நானும் அவனும் ஒன்றே என்று செல்லும் உமது அத்வைதத்தை நாங்கள் ஏற்க மாட்டோம். எங்கள் சிவபெருமானே கூறினாலன்றி அத்வைதம் உண்மையாகாது என்பதை நாங்கள் ஏற்கமுடியாது"என்று சங்கரரிடம் கூறினார். "சரி, அப்படியானால் என்னுடன் சுவாமி சந்நிதிக்கு வாருங்கள்"என்று அவர்களை அழைத்தார் ஆசாரியர்.

அவரது உறுதியைக் கண்டு அவர்களுக்கு ஆச்சரியமாயிற்று. அனைவரும் திருவிடை மருதுரில் கோவில் கொண்டுள்ள மகாலிங்கமான சிவபெருமானின் முன் நின்றனர். அப்போது லிங்கத்தினின்று அமுதம் போன்ற ஒருகம்பீரமான குரல் எழுந்தது."சத்தியம் அத்வைதம்"என்று மும்முறை கோஷித்து கைதுக்கித் சத்தியம் செய்வதே வழக்கமல்லவா இதற்கேற்ப, மகாலிங்கனார் குரல் எழுப்பியது மட்டுமின்றி, அந்த லிங்கத்துள்ளிருந்து ஒரு கரம் வெளிவந்து ஓங்கி நின்றது.

கூடியிருந்த அனைவரும் புல்லரித்தது. ஆசாரியரோ ஜய்யனுக்கு உள்ளுருகி நன்றி கூறினார். சைவப் பெறுமக்கள் யாவரும் சங்கரரை குருவாகக் கொண்டனர். திருவிடைமருதூரில் இன்றளவும் ஒரு சங்கர மடம் உள்ளது. சமீபத்தில் அம்மடத்து முகப்பில், லிங்கத்தினின்று கை வெளிப்படுவது போன்ற சிற்பத்தை வடிக்கச் செய்துள்ளார். இன்று நம் கண்முன் ஆதிசங்கரரின் அவதாரமாக வாழும் காஞ்சி காமகோடிப் பெரியவர்கள்.

சித்திர ஆதிசங்கரர் - பகுதி 20