அருள் பெறுவார்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

பத்தாம் பத்து

அருள் பெறுவார்

ஆழ்வாரைப் பெறவேண்டுமென்று எம்பெருமான் பெருவிடாய் கொண்டிருந்தும், ஆழ்வாரைக் கொண்டு அமுதுன்ன சொல்மாலைகள் பாடுவிக்க விரும்பியதால், தன் விடாயை அடக்கிக்கொண்டு, நேரத்தை எதிர்பார்த்திருக்கவேண்டியதாயிற்று. அந்தச் செயலும் ஒருவாறு முடிந்ததால், எம்பெருமான் மேலும் பொறுத்திருக்கமுடியாமல், திருவாட்டாற்றிலே ஆழ்வாருக்குப் பேறளிக்க விரும்புகிறார்.

'நெஞ்சே!மேன்மையுடைய எம்பெருமான் இப்போது நம்மிடம் தாழ நிற்கும் நிலையைக் கண்டாயா? நாம் பெற்ற பாக்கியம் தான் என்னே' என்று அகங்குழைத்து பேசுகிறார் ஆழ்வார்.

பரமன் அருளைப் பாராட்டி நெஞ்சோடு கூறல்

கொச்சக் கலிப்பா

மனமே!திருவாட்டாற்றான் திருவடி வணங்கு

3722. அருள்பெறுவார் அடியார்தம்

அடியனேற்கு, ஆழியான்

அருள்தருவான் அமைகின்றான்

அதுநமது விதிவகையே,

இருள்தருமா ஞாலத்துள்

இனிப்பிறவி யான்வேண்டேன்,

மருளழிநீ மடநெஞ்சே!

வாட்டாற்றான் அடிவணங்கே.

நெஞ்சே!நாரணனை நண்ணினம்

3723. வாட்டாற்றா னடிவணங்கி

மாஞாலப் பிறப்பறுப்பான்,

கேட்டாயே மடநெஞ்சே

கேசவனெம் பெருமானை,

பாட்டாய பலபாடிப்

பழவினைகள் பற்றறுத்து,

நாட்டாரோ டியல்வொழிந்து

நாரணனை நண்ணினமே.

நாரணன் விண்ணுலகு தர விரைகின்றான்

3724. நண்ணினம் நாரணனை

நாமங்கள் பலசொல்லி,

மண்ணுலகில் வளம்மிக்க

வாட்டாற்றான் வந்தின்று,

விண்ணுலகம் தருவானாய்

விரைகின்றான் விதிவகையே,

எண்ணினவா றாகாவிக்

கருமங்க ளென்னெஞ்சே!

பாண்டவர் துணைவன் நமக்கு அருள் செய்வான்

3725. என்னெஞ்சத் துள்ளிருந்திங்

கிருந்தமிழ்நூ லிவைமொழிந்து,

வன்னெஞ்சத் திரணியனை

மார்விடந்த வாட்டாற்றான்,

மன்னஞ்சப் பாரதத்துப்

பாண்டவர்க்காய்ப் படைதொட்டான்,

நன்னெஞ்சே!நம்பெருமான்

நமக்கருள்தான் செய்வானே.

கருடவாகனன் திருவடிகள் என் தலைமேல் உள்ளன

3726. வானேற வழிதந்த

வாட்டாற்றான் பணிவகையே,

நானேறப் பெறுகின்றேன்

நரகத்தை நகுநெஞ்சே,

தேனேறு மலர்த்துளவம்

திகழ்பாதன், செழும்பறவை

தானேறித் திரிவான

தளிணையென் தலைமேலே.

வாட்டாற்றான் திருவடிகளை நெருங்கிவிட்டோம்

3727. தலைமேல தாளிணைகள்

தாமரைக்கண் என்னம்மான்,

நிலைபேரான் என்நெஞ்சத்

தெப்பொழுதும் எம்பெருமான்,

மலைமாடத் தரவணைமேல்

வாட்டாற்றான், மதமிக்க

கொலையானை மருப்பொசித்தான்

குரைகழல்கள் குறுகினமே.

வாட்டாற்றான் திருவடிகளில் திருத்துழாய் மணம் வீசும்

3728. குரைகழல்கள் குறுகினம்நங்

கோவிந்தன் குடிகொண்டான்,

திரைகுழுவு கடல்புடைசூழ்

தென்னாட்டுத் திலைதமன்ன,

வரைகுழுவும் மணிமாட

வாட்டாற்றான் மலரடிமேல்,

விரைகுழுவும் நறுந்துளவம்

மெய்ந்நின்று கமழுமே.

வாட்டாற்றானுக்கு நான் எந்நன்றி செய்தேன்

3729. மெய்ந்நின்று கமழ்துளவ

விரையேறு திருமுடியன்,

கைந்நின்ற சக்கரத்தன்

கருதுமிடம் பொருதுபுனல்,

மைந்நின்ற வரைபோலும்

திருவுருவ வாட்டாற்றாற்கு,

எந்நன்றி செய்தேனோ

என்னெஞ்சில் திகழுதுவே?

வாட்டாற்றான் என்னெஞ்சை விடுத்துப் பிரியான்

3730. திகழ்கின்ற திருமார்பில்

திருமங்கை தன்னோடும்,

திகழ்கின்ற திருமாலார்

சேர்விடம்தண் வாட்டாறு,

புகழ்கின்ற புள்ளூர்தி

போரரக்கர் குலம்கெடுத்தான்,

இகழ்வின்றி என்னெஞ்சத்

தெப்பொழுதும் பிரியானே.

ஆ!நான் பெரும் பயன் பெறப்போகிறேன்!

3731. பிரியாதாட் செய்யென்று

பிறப்பறுத்தாள் அறக்கொண்டான்,

அரியாகி இரணியனை

ஆகங்கீண் டானன்று,

பெரியார்க்காட் பட்டக்கால்

பெறாதபயன் பெறுமாறு,

வரிவாள்வாய் அரவணைமேல்

வாட்டாற்றான் காட்டினனே.

இப்பாடல்கள் தேவர்கட்கும் தெவிட்டாமல் இனிக்கும்

3732. காட்டித்தன் கனைகழல்கள்

கடுநரகம் புகலெழித்த,

வாட்டாற்றெம் பெருமானை

வளங்குருகூர்ச் சடகோபன்,

பாட்டாய தமிழ்மாலை

யாயிரத்துள் இப்பத்தும்,

கேட்டு,ஆரார் வானவர்கள்

செவிக்கினிய செஞ்சொல்லே.

நேரிசை வெண்பா

மாறனுக்கு வீடளிக்க மாயவன் காத்திருந்தான்

அருளா லடியி லெடுத்தமா லன்பால்,

இருளார்ந்த தம்முடம்பை யிச்சித்து, - இருவிசும்பில்

இத்துடன்கொண் டேகவிவ ரிசைவுபார்த் தேயிருந்த,

சுத்திசொல்லும் மாறன்செஞ் சொல்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is கண்ணன் கழலிணை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  செஞ்சொற்கவிகாள்
Next