எட்டு வித விவாஹங்கள் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

மநுஸ்மிருதி உட்பட்ட தர்ம சாஸ்திரங்களில் எட்டு விதமான விவாஹங்கள் சொல்லியிருக்கிறது.

ப்ரஹ்மோ-தைவ-ஸ்ததைவார்ஷ:
ப்ராஜாபத்ய-ஸ்ததாஸுர:|
காந்தர்வோ ராக்ஷஸச்சைவ
பைசாசாஷ்டம: ஸ்ம்ருத:
– (ம‌நுஸ்மிருதி III.21)

அதாவது பிராம்மம், தைவம், ஆர்ஷம், பிராஜாபத்தியம், ஆஸுரம், காந்தர்வம், ராக்ஷஸம், பைசாசம் என்று கல்யாணத்தில் எட்டு தினுசு.

‘பிராம்மம்’ என்பது குருகுலவாஸம் முடித்து வந்த உத்தம பிரம்மசாரிக்காக அவனுடைய மாதா-பிதாக்கள் ஒரு நல்ல குலத்துப் பெண்ணின் மாதா பிதாக்களிடம் வந்து கன்யாதானம் பண்ணித் தரச்சொல்லிக் கேட்டுக்கொள்வது. பிள்ளைக்குப் பெண் வீட்டார் வரதக்ஷிணை தருவது, பெண்ணுக்குப் பிள்ளை வீட்டார் பரிசம் தருவது என்று இரண்டும் இதில் இல்லை. வியாபாரக் கொடுக்கல் வாங்கலாக இல்லாமல் இரண்டு குலங்கள் அபிவிருத்தியாக வேண்டும் என்ற உயர்ந்த லக்ஷ்யம் ஒன்றிலேயே பண்ணப்படுவது பிராம்ம விவாஹம். தர்ம சாஸ்திரங்கள் எட்டு வித விவாஹங்களில் இதைத்தான் மிகவும் சிரேஷ்டமாகச் சொல்லியிருக்கின்றன.

‘தைவம்’ என்பது ஒரு யாகத்திலேயே அதைப் பண்ணுகிற ரித்விக்குக்குப் பெண்ணைக் கல்யாணம் செய்து தருவது1 . உரிய காலத்தில் பெண்ணைத் தேடி வரன் வராததால், பெண் வீட்டுக்காரர்கள் அவனைத் தேடிப் போய் யாகசாலையிலே மாப்பிள்ளை பிடிப்பதென்பது, பிராம்ம விவாஹத்தை விடத் தாழ்த்தி என்பதே அபிப்ராயம். பெண்ணைப் பிள்ளை வீட்டுக்காரன் தேடிவருவதுதான் சிலாக்கியமான விவாஹம் என்பதாக ஸ்திரீகுலத்தை சாஸ்திரம் உயர்த்தி வைத்திருக்கிறது.

மூன்றாவதான ஆர்ஷ விவாஹம் என்பது ரிஷி ஸம்பந்தமானது என்று பொருள் படுவது; சியவன ரிஷிக்கு ஸுகன்யாவைக் கல்யாணம் செய்து கொடுத்த மாதிரி இருக்கும் என்று ‘ஆர்ஷ’ என்றே வார்த்தையைப் பார்த்தால் தோன்றுகிறது. ஆனால் தர்ம சாஸ்திரப்படி, வரனிடமிருந்து இரண்டு பசுக்களை வாங்கிக்கொண்டு பெண்ணை பதிலுக்குத் தருவது ‘ஆர்ஷம்’ என்று தெரிகிறது2 . ஆர்ஷம் என்றால் ரிஷிக்குக் கொடுப்பது என்று அர்த்தம் செய்துகொண்டால், இதுவும் உரிய காலத்தில் பிராம்ம விவாஹம் ஆகாத கன்னிகையை ஒரு வயசான ரிஷிக்காவது சுசுருக்ஷை செய்யும் பொருட்டுப் பத்தினியாக கொடுப்பது என்று ஆகும். வரனிடமிருந்து கோ வாங்கிக் கொண்டு கல்யாணம் செய்வது என்கிற போதும், அவனிடம் விசேஷமான சீலங்கள் இல்லாததால்தான் பசுவைக் கொடுத்துப் பெண் கேட்கிறான் என்றும், இந்தப் பெண் வீட்டுக்காரனுக்கும் பிராம்ம விவாஹப்படியான நல்ல ஸம்பந்தம் கிடைக்காததால்தான் திரவியத்தை வாங்கிக் கொண்டு பிரதியாகப் பெண்ணைக் கொடுக்கிறான் என்றும் ஏற்படுகிறது. உத்தமமான விவாஹத்தில் பண சம்பந்தமே, பிஸினஸ் அம்சமே கூடாது என்பது சாஸ்திர தாத்பரியம்.

நாலாவது பிராஜாபத்தியம். பிராஜாபத்தியம் பிஸினஸ் கொடுக்கல் வாங்கலாக இல்லாமல் ஒரு பிரம்மச்சாரிக்கு கன்யாதானம் பண்ணித் தருகிற விவாஹ முறைதான். ஆனால், பிராஜாபத்தியம் என்கிற பெயரில் பிரஜையை உண்டு பண்ணுவது என்ற நோக்கம் அவஸரமாகத் தெரிவதால், தன் குமாரி சீக்கிரமே ரிதுவாகிவிட இருக்கிறாள் என்பதால் அவளுக்குக் கல்யாணம் பண்ணித்தர அவளுடைய தகப்பனார் அவஸரப்பட்டு வரனைத் தேடிக் கொண்டு தாமே போகிறார் என்று ஏற்படுகிறது. அதாவது, பிராம்மம் மாதிரி இல்லாமல் இங்கே பெண் வீட்டுக்காரர்களே பிள்ளையைத் தேடிக்கொண்டு போய்க் கல்யாணம் செய்து தருகிறார்கள். இது இரண்டாம் பக்ஷந்தான். கிருஹலக்ஷ்மியாக இருக்க வேண்டியவனை வரனின் கிருஹத்தார் தேடிவந்து, கேட்டுப் பண்ணிக் கொள்கிற பிராம்மம்தான் இதைவிட உசத்தி.

‘ஆஸுரம்’ என்றால் ‘அஸுரத்தனமான’ அர்த்தம். ஒரு பெண்ணுக்குப் பொருத்தமில்லாத (மாட்ச் ஆகாத) ஒரு வரனானவன் நிறையப் பணத்தை அவளுடைய தகப்பனாருக்கோ பந்துக்களுக்கோ கொடுத்து, அவர்களை அதனால் வசப்படுத்திக் கட்டாயப்படுத்தி அவளைக் கொடுக்கும்படிப் பண்ணுவதுதான் ஆஸுரம்3 . ஆர்ஷப்படி கோவைக் கொடுத்துப் பெண் வாங்கினவன் வலுக்கட்டாயப் படுத்துபவனில்லை. ஆஸுரக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறவனைப் போல் அவனைப் பணமோ, அதிகாரமோ கொழுத்தவன் என்றும் சொல்ல முடியாது. ஆஸுரம் (அசுர சம்பந்தமானது) என்ற வார்த்தையே ஆர்ஷம் (ரிஷி சம்பந்தமானது) என்ற வார்த்தைக்கு விரோதமாகத்தானே இருக்கிறது? அநேக பணக்காரர்கள் இரண்டாந்தாரம் கல்யாணம் செய்து கொண்டது ஆஸுரம்தான்.

அடுத்ததான காந்தர்வ விவாஹம் என்றவுடன் சகுந்தலைக்கும் துஷ்யந்தனுக்கும் நடந்தது என்று உங்களுக்கு நினைவு வரும். இந்தக் காலத்தில் ‘ஒஹோ’ என்று கொண்டாடும் காதல் கல்யாணம் இதுதான்.

‘ராக்ஷஸம்’ பெண் வீட்டுக்காரர்களோடு யுத்தம் செய்து ஜயித்துப் பெண்ணை எடுத்து கொண்டு போய்க் கலியாணம் பண்ணிக் கொள்வது. கிருஷ்ண பரமாத்மா ருக்மணியை இப்படித்தான் விவாஹம் செய்து கொண்டார்.

கடைசி, எட்டாவது தினுசு விவாஹம், பைசாசம், அசுரத்தனமானது, ராக்ஷஸத்தனமானது, இவற்றுக்கெல்லாம் முடிவிலே பிசாசுத்தனமான பைசாசத்தைச் சொல்லியிருக்கிறது. ஆஸுரத்தில் பெண்ணின் ஸம்மதத்தை எதிர்பார்க்காவிட்டாலும், அவளுடைய மநுஷ்யர்களுக்காவது பணத்தைக் கொடுத்தான். ராக்ஷஸத்தில் அவளுடைய மநுஷ்யர்களை ஹிம்ஸித்த போதிலும் அவளுடைய இஷ்டத்தை மீறிக் கல்யாணம் செய்து கொள்ளமாட்டான். ருக்மிணி கிருஷ்ணரிடம் ஆசை வைத்துத் தானே இருந்தாள்? பைசாசத்திலோ பெண்ணுடைய இஷ்டத்தையும் பார்ப்பதில்லை. அவளுடைய பெற்றோர்களுக்கும் திரவியம் தருவதில்லை. பெண் வீட்டுக்காரர்களைப் பகைத்துக் கொண்டு, கல்யாணப் பெண்ணையும் பலவந்தப்படுத்தி விவாஹம் பண்ணிக் கொள்வதைத்தான் பைசாசம் என்று வைத்திருக்கிறது.

ஒரு பக்கம் பைசாசம், இன்னொரு பக்கம் பிராம்மம். பிராம்மம் என்பது தைவத்தைவிட உயர்ந்தது. ஆனாலும் லோகத்தில் எல்லாருக்கும் ஒரே மாதிரி வியவஸ்தை செய்துவிடக்கூடாது. இதை உணர்ந்து அதிகாரி பேதம் சொல்லியிருப்பதுதான் நம் சாஸ்திரத்தின் பெருமை. இதை உணராத இக்காலத்திய அபேத வாதங்களால்தான் எல்லா அனர்த்தங்களும் வந்திருக்கின்றன.

காட்டுக் கட்டைகளாக, கடூரமான பழக்க வழக்கங்களோடு உள்ள வனவாஸிகளும் இருக்கிறார்கள். உள்ளூர அவர்களிடம் நாகரிகவாஸிகளைவிட உயர் பண்புகள் இருக்கும். இவர்களாலும் சமூகத்துக்கு அநேகப் பிரயோஜனம் இருக்கும். ஆனால் இவர்களுக்குள் எப்போதும் தங்களுக்குள்ளே சண்டை சச்சரவு, family feud நிறைய இருப்பதுண்டு. இம்மாதிரி சந்தர்ப்பங்களில் இவர்களுக்கு ராக்ஷஸ, பைசாச விவாஹங்களைக் கூட அநுமதித்தாக வேண்டியிருக்கிறது. விவாஹத்துக்கு பிற்பாடு தன்னால் சண்டையெல்லாம் போய் ஸெளஜன்யமாகி விடுவார்கள். இதே மாதிரி சரீர புஷ்டி, பௌதிகமான ஸந்தோஷங்கள் முதலியவற்றை விசேஷமாகக் கொண்ட க்ஷத்ரியர் போன்றவர்களுக்கு காந்தர்வமும் அநுமதிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்கள் தாங்களாகவே விவரமறிந்து புருஷனைத் தேடி மாலையிடுகிற ‘ஸ்வயம்வர’ உரிமையைக் கூடப் பெற்றிருக்கிறார்கள்.

இதனால்தான் வேதத்தை அடியொற்றிய Hindu Law -ஆன தர்மசாஸ்திரங்களில் எட்டு விதமான விவாஹங்களையும் அநுமதித்திருக்கிறது. மந்திர பூர்வமாக விவாஹம் செய்து கொள்வதற்கு இந்த எட்டு விதமான வதூவரர்களுக்கும் ‘ரைட்’ கொடுத்திருக்கிறது.

இவற்றிலே பிராம்ம விவாஹம் தான் சிரேஷ்டமானது. அது பெண்ணானவள் ரிதுவாவதற்கு முன்பே செய்யப்பட வேண்டியது. “ப்ரதானம் ப்ராக் ரிதோ:” என்று தர்ம ஸூத்திரத்திலேயே இருக்கிறது. பையனின் உபநயன ஸ்தானத்தில் பெண்ணுக்கு ஏழாவது வயசில் (கர்ப்பத்தைக் கூட்டி எட்டாவது வயசில்) செய்ய வேண்டிய விவாஹம் அது.

துரதிருஷ்டவசமாகச் சில பெண்களுக்குப் பிள்ளையாகத் தேடி வந்து செய்துகொள்ளும் பிராம்ம விவாஹம் நடக்காதபோது வயசு ஏறிவிடுகிறது. பிறகு தைவமாகவோ, ஆர்ஷமாகவோ, பிராஜாபத்யமாகவோ நடக்கிறது. இவை மட்டுமே பிராம்மணருக்கு ஏற்பட்டவை. இதரர்களுக்கு இவற்றோடு வேறு விதமான கல்யாணங்களும் – வயசு வந்த பெண்ணே ஸ்வயம்வரமாகத் தேர்ந்தடுப்பது, அல்லது காந்தர்வமாகச் செய்து கொள்வது உள்பட – அநுமதிக்கப் பட்டிருக்கிறன்றன.

கல்யாண மந்திரங்களில் பல எட்டு வகையாரையும் உத்தேசித்தவை. அவை எல்லாருக்கும் பொதுவாக இருக்கப்பட்டவை. அதாவது ரிதுமதியான பெண்ணை விவாஹம் செய்து கொடுப்பதற்கும் உரியனவான மந்திரங்கள் விவாஹ பிரயோகத்தில் வருகின்றன.

இம் மாதிரி அனைவருக்கும் பொதுவாக இருக்கிற மந்திரங்களில்தான் முன்னே சொன்ன இரண்டும் இருக்கின்றன. ஸோமன், கந்தர்வன், அக்னி ஆகியோரின் ஆதீனத்திலிருந்து தன்னை வந்தடைந்த ரிதுமதியான வதூவைப் பற்றி வரன் சொல்கிற அந்த மந்திரங்கள், பிராம்மமாக மட்டுமின்றி மற்ற எல்லா விதமான விவாஹங்களையும் உத்தேசித்துச் சொல்லப்பட்டவையே ஆகும்.

அதையே பால்ய விவாஹம் செய்துகொள்ளும் வரனும் சொல்கிறான். இப்போது குழந்தையாயிருப்பவளை இவன் பாணிக்கிரஹணம் செய்து கொண்டாலும், பிற்பாடு அவள் யுவதியாக ஆன பிறகுதானே இவன் தாம்பத்தியம் நடத்தப் போகிறான்? அப்போது ஸோமன்-கந்தர்வன்-அக்னி ஆகிய மூவரின் ஆதிக்கத்திலிருந்தும் தனக்குக் கொடுக்கப்பட்டவளாகதானே அவளை இவன் அடையப் போகிறான்? அதனால் அப்போது சொல்ல வேண்டிய மந்திரத்தை முன்கூட்டியே (in advance) இப்போது விவாஹத்தில் சொல்லி விடுகிறான்.

நாம் இக்காலத்தில் பிள்ளை பிறந்தவுடன் செய்ய வேண்டிய ஜாதகர்மா, நாம கர்மா, சௌளம் முதலியவற்றை யெல்லாம் சேர்த்து வைத்து அவனுடைய விவாஹத்துக்கு முன் இருபது, இருபத்தி இரண்டு வயசில் பூணூல் போடும் போது காலம் தள்ளிச் சொல்லுகிறோமல்லவா? இப்படிப் பின்னால் காலம் தள்ளுவதற்குப் பதில், முன்பாகவே (அட்வான்ஸாகவே) பிராம்ம விவாஹக்காரன் இந்த மந்திரங்களைச் சொல்லி விடுகிறான்.

இதற்கு ஒரு example (உதாரணம்) சொல்கிறேன். பிரம்மச்சாரி செய்கிற ஸமிதாதானத்தில் தனக்கு நல்ல பிரஜை ஏற்படவேண்டும் என்பதும் அநேக வேண்டுதல்களில் ஒன்றாக வருகிறது. இதைப் பார்த்து நம் சீர்திருத்தக்காரர்கள், “பிரம்மச்சாரியாக இருக்கும்போதே தகப்பனாராகிவிட்டு அப்புறம்தான் விவாஹம் பண்ணிக் கொண்டு கிருஹஸ்தனாக வேண்டும் என்பதே வேதத்தின் அபிப்ராயம்” என்று சொன்னால் எத்தனை அஸம்பாவிதமாக இருக்கும்? பிற்பாடு என்றைக்கோ உண்டாக வேண்டியதற்கு இப்போதே ஒரு பிரம்மச்சாரி பிராத்தனை பண்ணுகிறான் என்பதுதானே சரியான அர்த்தம்? அப்படித்தான் விவாஹ விஷயமாகச் சீர்த்திருத்தக்காரர் காட்டும் வேத வாக்கியமும்.

இந்த மந்திரங்கள் பெண்ணுக்கு வயசு வந்த பின் நடக்கிற மற்ற விதக் கல்யாணங்களிலோ விவாஹ ஸந்தர்ப்பத்திலேயோ யதார்த்தமாகச் சொல்வதற்குப் பொருத்தமாக இருக்கின்றன.

இதுதான் ரைட் ஆனரபிள் சாஸ்திரி கட்சிக்கு நாம் சொல்கிற பதில். பெண்ணுக்கு வயசு வந்த பின்னும் செய்யப்படும் சில வகைக் கல்யாணங்களை அங்கீகரித்து மேற்படி மந்திரங்கள் விவாஹத்தில் சேர்க்கப்பட்டிருப்பதால், எல்லா விவாஹமும் வயசு வந்த பின்தான் செய்ய வேண்டும் என்று அர்த்தம் ஆகாது என்று சொல்கிறோம்.

விவாஹங்களில் மிக உத்தமமானதாக சாஸ்திரங்களில் சொல்லப்படும் ‘பிராம்மம்’ என்பதன்படி, கல்யாணப் பெண் ரிதுவாகாதவளே என்பதற்கு அழுத்தமான சான்றாகவும் விவாஹச் சடங்கின் கடைசியில் ஒரு வேத மந்திரமே இருக்கிறது4.

வஸ்திரம் கட்டிக் கொள்ளத் தெரிந்த பின் ரிதுவாகும் வரையுள்ள இடைக்காலத்தில் ஒரு பெண் குழந்தை கந்தர்வனின் ஆதிக்கத்தில் இருக்கிறாள் என்று சொன்னேனல்லவா? அந்த கந்தர்வனின் பெயர் விச்வாவஸு. இந்த விச்வாவஸுவைப் பார்த்து கல்யாணப் பிள்ளை சொல்கிற மந்திரம் தான் நான் இங்கே குறிப்பிடுவது. “ஏ விச்வாவஸுவே! உன்னை நமஸ்காரம் பண்ணுகிறேன். நீ இந்தப் பெண்ணை விட்டு எழுந்திருந்து போ. வேறொரு பெண் குழந்தையிடம் போய்ச் சேரு. இவளுக்கு நான் பதியாகி விட்டேன் அல்லவா? அதனால் என்னிடம் இவளைக் கொடுத்து விட்டு நீ, தகப்பனாரின் வீட்டில் இருப்பவளும் விவாஹம் ஆகாதவளுமான இன்னொரு பெண்ணைச் சென்றடைவாயாக” என்று இங்கே கல்யாணப்பிள்ளை வேண்டிக் கொள்கிறான்.

வரனானவன் விவாஹத்தின் போது கல்யாணப் பெண்ணை விட்டுப் போகுமாறு கந்தர்வ பூஜை பண்ணி அந்த கந்தர்வனிடம் பிரார்த்திக்கிறான் என்பதிலிருந்து அவள் இன்னம் அக்னியின் ஆதிக்கத்தின் கீழே வரவில்லை, கந்தர்வனின் ஆதிக்கத்தில் இருக்கிறாள், அதாவது வயசுக்கு வரவில்லை என்றுதானே தீர்மானமாக முடிவாகிறது?

“எல்லாம் சரி. ஆனால் மநுஸ்மிருதியிலிருந்து சீர்திருத்தக்காரர்கள் quote செய்தார்களே! ரிதுவாகி மூன்று வருஷம் வரனை எதிர்பார்த்துவிட்டு, அப்புறம் ஒரு பெண் தானே புருஷனைத் தேடிக் கொள்ளலாம் என்று அந்த ச்லோகம் சொல்கிறதே! அதற்கென்ன ஸமாதானம்?”

ஸமாதானம் இருக்கிறது. “வயசுக்கு வருமுன் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிட வேண்டும்” (ப்ரதானம் ப்ராக்ரிதோ:) என்பதே தர்மசாஸ்திரத்தின் பொது விதி. அந்த விதி தப்பிப் போகிற கேஸ்களில் என்ன செய்வது? ஒரு பெண்ணை வரனாகத் தேடி வராவிட்டால் அவளுடைய பிதாவோ, பிராதாவோதான் பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணித் தரவேண்டும். ஆனால் இப்படிச் செய்யாமல் அவர்கள் பாட்டுக்கு பொறுப்பில்லாமலிருந்தால்? அல்லது ஒரு பெண் நாதியில்லாமல், கார்டியன் இல்லாமல் இருந்தால்? அப்படிப்பட்டவளைப் பற்றித்தான் ரிதுவானதற்கு மூன்று வருஷத்திற்கு பின் தானே புருஷனைத் தேடலாம் என்று மநுஸ்மிருதியில் சொல்லியிருக்கிறது. அதாவது, நாதியே இல்லாதவளுங்கூட, வயசுக்கு வந்தபின் உடனே தானாக புருஷனுக்காகப் புறப்படாமல், யாராவது பந்து மித்ரர்களோ, அண்டை அசலாரோ, அபிமானமுள்ளவர்களோ தனக்காக மாப்பிள்ளை தேட மாட்டார்களா என்று பொறுத்திருந்து பார்த்துவிட்டு, அப்புறம்தான் தானாகவே தேடலாம் என்று சொல்லியிருக்கிறது.

Context [ஸந்தர்ப்பம்] -ஐப் பார்க்காமலும், முன்னுக்குப் பின் வருவதை comparitive -ஆக [ஒப்பிட்டு]ப் பார்க்காமலும் சாஸ்திர வசனங்களையும் வேத மந்திரங்களையும் துண்டாக எடுத்து வைத்துக்கொண்டு பார்ப்பதால்தான் சீர்திருத்தக்காரர்கள் ஆசாரசீலர்களாக உள்ளவர்களின் வழக்கத்திலிருப்பதற்கு மாறானதையே சாஸ்திரோக்தமானது என்று வாதிக்கும்படி ஆகியிருக்கிறது.

சாக்ராயண உஷஸ்தி என்ற ரிஷிக்கு பால்ய (ரிதுவாகாத) மனைவியிருந்ததாக உபநிஷத்திலேயே [சாந்தோக்யம் 1.10.1] இருக்கிறது. இம்மாதிரி விஷயங்களை ஆர அமர சரியாகப் பார்க்காமல் சீர்த்திருத்தக்காரர்கள் பதட்டப்பட்டுப் பேசி விடுகிறார்கள்.

இருந்தாலும் முன்பெல்லாம் சீர்திருத்த வாதங்களுக்கு எதிர் வாதம் செய்ய ஜனங்களுக்குத் தெரியாவிட்டாலுங்கூட, “இதுவரை பெரியவர்கள் எப்படிப் பண்ணி வந்திருக்கிறார்களோ அப்படியே போவோம்; புதிதாக ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்ற அபிப்ராயம் இருந்தது. அதனால்தான் ஸ்ரீநிவாஸ சாஸ்திரி இந்த கல்யாண வயசு reform விஷயமாக இரண்டு முறை கவுன்சிலில் மசோதா கொண்டு வந்தும் அது நிறைவேறவில்லை. அப்புறம் தான் ஸார்தா என்பவர், இப்போது நாம் “சாரதா சட்டம்” என்று ஒரு அம்மாள் போட்ட சட்டம் மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிற இந்த சட்டத்தைக் கொண்டு வந்தார். அதற்குக்கூட சரிக்குச் சமன் ஆதரவாக 50%, எதிர்தரப்பில் 50% என்றுதான் வோட் விழுந்தது. அந்த ஸந்தர்ப்பத்தில் பிரிட்டிஷ் ஸர்க்காரானது, “காங்கிரஸ் கேட்கிற ஸ்வயராஜ்யத்தைத்தான் நாம் தரவில்லை; அவர்களுக்குத் திருப்தியாக, மதத்தைக் கெடுப்பதற்காவது ஸஹாயம் செய்யலாம்” என்று நினைத்து நாமினேட்டட் மெம்பரை வைத்து இந்த மசோதாவுக்கு ஆதரவாக வோட் பண்ணச்சொல்லி, விவாஹ வயதை உயர்த்தியேயாக வேண்டும் என்பதைச் சட்டமாகச் செய்து விட்டார்கள். அதாவது public opinion (பொது ஜன அபிப்ராயம்) -ஐ மீறி கவர்மென்ட் பலத்தினாலே அந்த மசோதா ‘பாஸ்’ ஆயிற்று.

இப்போது நிலைமை ரொம்பவும் மாறிவிட்டது பழைய பழக்கங்களில் பக்தி விச்வாஸம் போய்விட்டது. பிரிட்டிஷ் ராஜ்யத்தில் சாரதாச் சட்டம் அமுலானவுடன், அவர்கள் கொடுத்திருந்த மஹாமஹோபாத்யாய டைட்டிலை “வேண்டாம்” என்று துறந்த பண்டிதர்கள் உண்டு. வங்காளத்திலிருந்த பஞ்சாணன தர்க்க ரத்ன பட்டாசார்யரும், திருவிசநல்லூரிலிருந்து காசிக்குப் போய் ஸெட்டில் ஆகிவிட்ட லக்ஷ்மண சாஸ்திரி (தமிழ்நாட்டு பிராம்மணர் என்று தெரிவதற்காக ‘லக்ஷ்மண சாஸ்திரி திராவிட்’ என்றே பெயர் வைத்துக் கொண்டவர்) என்பவரும் இப்படிப்பட்ட தியாகத்தைச் செய்தார்கள். இப்போது நம் ஸ்வதந்திர இந்தியாவில் ராஜாங்கத்தால் சாஸ்திர விஷயங்களில் செய்யப்படும் மாறுதல்களைப் பார்த்து இப்படிக் குமுறி எழுகிற உணர்ச்சி யாருக்கு இருக்கிறது?

நம் குழந்தைகளுக்கு சாஸ்திர தாத்பரியங்களை முழுக்கவும் நன்றாகச் சேர்த்துப் பிடித்துப் பார்த்துச் சொல்ல வேண்டும். இங்கே ஒன்றும், அங்கே ஒன்றும் பார்த்தால் conflicting -ஆக [முரணாக] த்தான் இருக்கும். ‘வேதத்தில் love marriage தான் சொல்லியிருக்கிறது’ என்கிற அளவுக்கு அரை குறை ரிஸர்ச் கொண்டு விட்டு விடுகிறது! சாஸ்திரங்களைப் பூராவாகப் பார்க்கவேண்டும். ஒன்றை எடுத்துக் கொள்ளும்போது அது சொல்லப்பட்ட ஸந்தர்ப்பத்தைப் பார்க்க வேண்டும்; அதற்கு முன்னும் பின்னும், மற்றும் இதே விஷயமாக இதர இடங்களிலும் என்ன சொல்லியிருக்கிறது என்றெல்லாம் தீர்க்கமாகப் பார்த்து, விசாரித்தே, முடிவு சொல்ல வேண்டும்.

பிராம்ம விவாஹம் எல்லா ஜாதியாருக்கும் உண்டு. ஆனால் பிராம்மணர் தவிர மற்ற ஜாதியாருக்கு வேறு விதமான விவாஹமும் உண்டு. அதாவது ரிதுமதி விவாஹமும் அநுமதிக்கப்பட்டிருக்கிறது. சரீர ஸம்பந்தமான ஸெளக்கியங்களுக்கு முக்கியத்வம் தருவதானால் மற்ற விவாஹங்களும் செய்யலாம். ஆத்மாபிவிருத்திக்கு பிராம்ம விவாஹமே எடுத்தது.


1 ய‌ஜ்ஞ‌ஸ்ய‌ ரித்விஜே தைவ‌: (யாஜ்ஞ‌வ‌ல்கிய‌ ஸ்மிருதி I.59)

2 ஆகாயார்ஷ‌ஸ்து கோத்வ‌ய‌ம் (யாஜ்ஞ‌வ‌ல்கிய‌ ஸ்மிருதி I.59)

3 ஆஸுரோ த்ர‌விணாதானாத் (யாஜ்ஞ‌வ‌ல்கிய‌ ஸ்மிருதி I.61)

4 உதீர்ஷ்வாத‌ : ப‌திவ‌தீ ஹ்யேஷா விச்வாவ‌ஸூம் ந‌ம‌ஸா கீர்பிரீடே|
அந்யாம் இச்ச‌ பித்ருஷ‌தாம் வ்ய‌க்தாம் ஸ‌ தே பாகோ ஜ‌நுஷா த‌ஸ்ய‌ வித்தி||
உதீர்ஷ்வாதோ விச்வாவ‌ஸோ ந‌ம‌ஸேடாம‌ஹே த்வா|
அந்யாம் இச்ச‌ ப்ர‌ப‌ர்வ்ய‌ம் ஸ‌ம்ஜாயாம் ப‌த்யா ஸ்ருஜ|
-(ரிக் X.85.21-22)

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is விவாஹ வயது குறித்த விவாதம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  ஏன் பாலிய விவாஹம்?
Next