ஸ்மிருதிகள் சுதந்திர நூல்கள் அல்ல : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஸ்மிருதிகள் என்கிற தர்மசாஸ்திரங்களை மரியாதை உணர்ச்சியுடன் பார்க்கிற பலரிடத்தில்கூட அவற்றைப் பற்றி ஒரு தப்பான அபிப்பிராயம் இருக்கிறது. அதாவது ஸ்மிருதிகளைப் பண்ணினவர்களே சுதந்திரமாக இந்த தர்மங்களை, விதிகளை வகுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். ஸ்மிருதிகாரர்களை [ஸ்மிருதிகளை எழுதியவர்களை] law-givers என்று சொல்கிறார்கள். அதாவது அவர்களாகவே தங்கள் அபிப்பிராயப்படி இவற்றை சட்டம் (law) என்று போட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். சட்ட நிபுணர்கள் பலர் ஒன்று சேர்ந்து நம் தேசத்தில் இப்படியிப்படி இருக்க வேண்டும் என்று ‘கான்ஸ்டிட்யூஷன்’ [அரசியல் நிர்ணய சாஸனம்] செய்திருக்கிறார்களே, அது போலத்தான் தர்ம சாஸ்திரங்களையும் எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். ஸ்மிருதிகள் சுதந்திரமாகவே அபிப்பிராயம் சொல்பவை என்று நினைக்கிறார்கள்.

இப்படி நினைப்பதால் இன்னொன்றும் இதைத் தொடர்ந்து தோன்றுகிறது. இப்போது கான்ஸ்டிட்யூஷன் நாம் நடைமுறையில் செய்ய விரும்புகிற சில காரியங்களுக்கு இடம் கொடுக்காமலிருக்கிற போது, நமக்கு ஸாதகமாக அதைத் திருத்திவிடுவது (amend பண்ணுவது) என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா? இதே மாதிரி, பழைய சட்டங்களான தர்ம சாஸ்திரங்களையும் நம்முடைய இக்காலக் கொள்கைக்கு ஏற்றபடி மாற்றி விட்டால் என்ன என்று கேட்கிறார்கள்.

என்னிடமே பல பேர் கேட்டிருக்கிறார்கள், “காலத்தை அநுஸரித்து சாஸ்திரத்தை ஏன் மாற்றக் கூடாது?” என்று. “ஸர்க்கார் சட்டங்களை மாற்றவில்லையா?” என்று ஆதாரம் காட்டுகிறார்கள். என்னையே ரொம்ப ஸ்தோத்திரம் பண்ணி, “ஸ்மிருதிகளை பண்ணின ரிஷிகள் மாதிரிதான் இந்தக் காலத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். அதனால் நீங்கள் மனசு வைத்தால் சாஸ்திரங்களை இந்தக் காலத்துக்குத் தகுந்தாற் போல் மாற்றி விடலாம்” என்கிறார்கள். “நாங்கள் ஆசைப் படுகிற மாதிரி நீங்கள் சாஸ்திரத்தை மாற்றித் தாருங்கள்” என்பதையே இப்படி கௌரவமாகச் சொல்கிறார்கள்!

ஸ்மிருதிகள் அந்தந்த ஸ்மிருதிகர்த்தாவின் சொந்த அபிப்பிராயம்தான் என்றால் இவர்கள் நினைப்பதிலும் கேட்பதிலும் தப்பு இல்லை.

ஆனால் ரொம்பப் பேருக்கு – தர்ம சாஸ்திரங்களிடம் மதிப்புணர்ச்சி உள்ளவர்களுக்குக்கூட- என்ன தெரியவில்லையென்றால், இந்த ஸ்மிருதிகள் அவற்றைச் செய்தவர்களின் சொந்த அபிப்பிராயமே இல்லை. ஏற்கெனவே வேதங்களில் சொல்லியிருந்தவற்றையேதான் அவர்கள் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். வேத வாக்கை ஒருகாலும் எந்த சந்தர்ப்பத்திலும் மாற்றக் கூடாதாகையால், இந்த தர்ம சாஸ்திர விதிகளையும் மாற்றுவதற்கே இல்லைதான்.

சாஸ்திரப்படியே நீங்கள் நடக்கும்படிப் பண்ண எனக்கு சக்தியோ, யோக்யதையோ இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் அதை மாற்றுவது நிச்சயமாக என் காரியமில்லை. என்னை இங்கே [மடத்தில்] உட்கார்த்தி வைத்திருப்பது வேத தர்மங்களை ஜனங்கள் பரிபாலனம் பண்ணும்படியாகச் செய்வதற்குத்தான். ஆசார்யாள் ஆக்ஞை அது தான். அதனால் இந்தக் காலத்தின் ஸெளகரியத்துக்கு, புதுக் கொள்கைக்கும் போக்குகளுக்கும் ஸாதகமாக சாஸ்திரத்தை மாற்றிக் கொடுப்பதற்கு எனக்கு authority (அதிகாரம்) இல்லை.

ரிஷிகளாக இந்த ஸ்மிருதிகளை எழுதி வைத்திருக்கிறார்கள் என்றால் அதை நாம் அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதே இல்லை. வேண்டாம் என்றால் தூக்கி எறிந்து விடலாம். இவர்கள் வேதத்தில் இல்லாததை எல்லாம் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள், ஏதோ தாங்களாகவே உத்தேசித்து இப்படி இப்படி இருந்தால்தான் நல்லது என்று வரையறுத்து வைத்திருக்கிறார்கள் என்றால் அவை நமக்கு வேண்டியதில்லை. அப்படிப் பார்த்தால் அநேகம் பேர் தங்களுக்குத் தோன்றியதை எழுதி வைத்திருக்கிறார்கள்; நமக்குத் தோன்றுவதையும் நாமே எழுதி வைத்துக்கொண்டு விடலாமே!

உண்மையில் ஸ்மிருதிகள் வேத வாக்கியங்களையே அநுஸரித்துச் சொல்லியிருப்பதனால்தான் இந்த ஸ்மிருதிகளை நாம் இன்றைக்கும் என்றைக்கும் ஆதாரமாக வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

“சரி, அப்படியென்றால் வேதத்தில் இருப்பதையேதான் இவர்கள் பிரமாணமாகச் சொல்லியிருக்கிறார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?”

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is சின்னங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  வேதமே ஸ்மிருதிகளுக்கு அடிப்படை
Next