நான் சொல்வதன் நோக்கம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

கைத் தொழில்கள் போய் ஆலைத் தொழில்களும், ஸமூஹம் சின்ன சின்னதாக வாழ்ந்த கிராம வாழ்க்கை போய் நகர வாழ்க்கையும் உண்டாகி, தேவைகளும் தொழில்களும் கணக்கில்லாமல் பெருகி, வாழ்முறையே சன்ன பின்னலாக ஆகிவிட்ட இப்பொழுது பழையபடி பாரம்பரியத் தொழிலையே ஏற்படுத்துவதென்பது அஸாத்யமாகத் தான் தோன்றுகிறது. க்ஷத்ரியர்கள்தான் மிலிடரியில் இருக்கலாம், வைசியர்தான் வியாபாரம் பண்ணலாம், நாலாம் வர்ணத்தார் தொழிலாளிகளாக உழைப்பது தவிர வேறே செய்யக்கூடாது என்றால் இப்போது நடக்கிற காரியமா? அப்படி நடத்தப் பண்ணுகிறது முடியக் கூடியதா? இந்தப் பிரத்யக்ஷ நிலைமை எனக்குத் தெரியாமலில்லை. பின்னே ஏன் வர்ண தர்மத்தை இப்படி நீட்டி முழக்கி ஸ்தோத்ரம் பண்ணுகிறேன் என்றால் இரண்டு காரணமுண்டு:

ஒன்று – இப்போது நாம் எப்படியிருந்தாலும் சரி, பழைய வழிக்கு நாம் போகவே முடியாவிட்டாலும் சரி, “அந்த வழி ரொம்ப தப்பானது; அது சில vested interest -களால் (சுயநல கும்பல்களால்) தங்கள் ஸெளகரியத்துக்காகவே பக்ஷபாதமாக உண்டாக்கப்பட்ட அநீதியான முறை” என்று இப்போது எல்லாரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்களே, இப்படிச் சொல்வது சரியே இல்லை என்று உணர்த்துவது. அவனவனும் சித்த சுத்தி பெறவும், ஸமூஹம் கட்டுக்கோப்புடன் க்ஷேமத்தை அடையவும், கலாசாரம் வளரவும் தர்மத்தைப் போல் ஸஹாயமான ஸாதனம் எதுவுமில்லை என்று புரிந்து கொள்ள வைப்பது ஒரு காரணம்.

இதைவிட முக்கியமான இன்னொரு காரணம்; இப்போது க்ஷத்ரிய, வைச்ய, சூத்ர ஜாதிகளின் தொழில் முறை மாறிக் கலந்தாங்கட்டியாக ஆகியிருந்தாலுங்கூட, எப்படியோ ஒரு தினுசில் ராஜ்ய பரிபாலனம் – ராணுவ காரியம், பண்ட உற்பத்தி – வியாபாரம், தொழிலாளர் செய்ய வேண்டிய ஊழியங்கள் ஆகியவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. முன் மாதிரிச் சீராயில்லாமல் போட்டியும் பொறாமையும் போராட்டமுமாக இருந்தாலும் இந்த மூன்று வர்ணங்களின் காரியங்கள் வர்ணதர்மம் சிதைந்த பின்னும் ஒரு விதத்தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தேசத்தின் practical necessity-யாக (நடைமுறைத் தேவைகளாக) அன்றாட வாழ்வுக்கும் ராஜாங்கம் நடத்துவதற்கும் இந்தக் காரியங்கள் நடந்தே ஆகவேண்டியிருப்பதால், கோணாமாணா என்றாவது நடந்து விடுகின்றன. ஆனால் இவற்றுக்கெல்லாம் பூர்த்தியை உண்டாக்குவதான பிராம்மண வர்ணத்தின் காரியம் மட்டும் அடியோடு எடுபட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. ஸகல காரியங்களுக்கும் ஆதாரமாக இருக்கிற தர்மங்களை எடுத்துச் சொல்லியும் வாழ்ந்து காட்டியும் பிரசாரப்படுத்துவது, வேதங்களைக் கொண்டு தேவ சக்திகளை லோகக்ஷேமார்த்தமாக அநுக்கிரஹம் பண்ணவைப்பது, தங்களுடைய எளிய தியாக வாழ்க்கையால் பிறருக்கும் உயரந்த லட்சியங்களை ஏற்படுத்துவது, ஸமூஹத்தின் ஆத்மிக அபிவிருத்தியை உண்டாக்குவது, கலைகளை வளர்ப்பது – என்பதான பிராம்மண தர்மம் போயே போய்விடுகிற ஸ்திதியில் இருக்கிறோம். இது ஸூக்ஷ்மமானதால், practical necessity என்று எவருக்கும் தெரியவில்லை. மற்ற மூன்று வர்ணங்களின் தொழில் நடக்காவிட்டால் நமக்கு வாழ்க்கை நடத்துவதற்கே முடியாது என்பதுபோல இது தோன்றவில்லை. ஆனால் வாஸ்தவத்தில் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்து அது நிறைவான வாழ்க்கையாவதற்கு வழி செய்வது இதுதான். இதை விட்டு விட்டு மற்றவற்றில் மட்டும் கவனம் வைக்கிறோம். அவற்றில் உயர்வை அடைந்தால் prosperity, prosperity (ஸுபிக்ஷம்) என்று பூரித்துப் போகிறோம். ஆனால் ஆத்மாபிவிருத்தியும், கலாசார உயர்வுமில்லாமல் லௌகிகமாக மட்டும் உயர்ந்து என்ன பிரயோஜனம்? இந்த உயர்வு உயர்வே இல்லை என்று அமெரிக்கர்களுக்கு இப்போது ஞானம் வந்திருக்கிற மாதிரி நமக்கும் ஒரு நாள் வரத்தான் செய்யும். அதனால், மற்ற ஜாதிக் குழப்பங்கள் எப்படியானாலும், தேசத்தின் ஆத்மாவைக் காப்பாற்றிக் கொடுக்க பிராம்மண ஜாதி ஒன்று மட்டுமாவது, ஒழுங்காக ஸகல ஜனங்களுக்கும் வழிகாட்டிகளாக இருந்து கொண்டு, எளிமையாக, தியாகமாக வாழ்ந்து கொண்டு, வைதிக கர்மாக்களைச் செய்து லோகத்தின் லௌகிக-ஆத்மிக க்ஷேமங்களை உண்டு பண்ணிக் கொண்டு இருக்கும்படியாக செய்யவேண்டும். இந்த ஒரு ஜாதியை நேர்படுத்திவிட்டாலே மற்ற ஜாதிகளில் ஏற்பட்டிருக்கிற குழப்பங்களும் தீர ஆரம்பித்துவிடும். எந்த தேசத்திலும் இல்லாமல் தர்ம ரக்ஷணத்துக்கென்றே, ஆத்மாபிவிருத்திக்கென்றே யுகாந்தரமாக ஒரு ஜாதி உட்கார்ந்திருந்த இந்த தேசத்தில் அது எடுபட்டுப் போய் ஸகலருக்கும் க்ஷீணம் உண்டாக விடக்கூடாது என்று, இந்த ஒரு ஜாதியை உயிர்பித்துக் கொடுப்பதற்காகத்தான் இவ்வளவும் முக்யமாகச் சொல்கிறேன். தங்களுக்கு உசத்தி கொண்டாடிக் கொண்டு, ஸெளகர்யங்களை ஏற்படுத்திக் கொண்டு, ஹாய்யாக இருக்கிறதல்ல நான் சொல்கிற பிராம்மண ஜாதி, ஸமூஹ க்ஷேமத்துக்காக அநுஷ்டானங்களை நாள் பூரா பண்ணிக் கொண்டு, எல்லாரிடமும் நிறைந்த அன்போடு, பரம எளிமையாக இருக்க வேண்டியதே இந்த ஜாதி. இதை குல தர்மப்படி இருக்கப் பண்ணிவிட்டால் நம் ஸமூஹமே தர்ம வழியில் திரும்பிப் பிழைத்துப் போய்விடும் என்கிற உத்தேசத்தில் தான் இத்தனையும் சொல்வது.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is மரியாதைக் குறைவல்ல;அஹம்பாவ நீக்கமே!
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  ஸர்வரோக நிவாரணி
Next