மௌனத்துக்குரிய நாட்கள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

வயிற்று உபவாஸம் மாதிரியே இதற்கும் தர்ம சாஸ்திரத்தில் அநேக காலங்களை விதித்திருக்கிறது. “மௌநேந போக்தவ்யம்” என்று கேள்விப்பட்டிரூப்பீர்கள். சாப்பிடுகிற காலங்களில் பேசப்படாது என்று அர்த்தம். வாய்க்கு உள்ள இரண்டு வேலைகளில் ஒன்றாகச் சாப்பிடும் போது, இன்னொரு வேலையான பேச்சையும் தரப்படாது. இப்படி விதித்தபோதே ருசியையும் கட்டுப்படுத்தியதாக ஆகிறது. மௌனமாக போஜனம் செய்யும் போது, ‘இது வேண்டும், அது வேண்டாம். இதற்கு உப்புப் போடு, அதற்கு நெய் விடு’ என்றெல்லாம் சொல்ல முடியாதல்லவா?

ஸோம வாரம், குருவாரம், ஏகாதசி முதலிய நாட்களில் ஒன்றில் மௌனம் அநுஷ்டிக்கலாம்.

ஸோமவாரம், குருவாரம் ஆஃபீஸ் இருப்பதால் ஞாயிற்றுகிழமைகளில் மௌனமிருக்கலாம். பாதி நாளாவது இருக்கலாம்.

எத்தனையோ கார்யங்களை வைத்துக் கொண்டிருந்தார் காந்தி. ஒரு வீட்டிலே அப்பா என்றாலே எவ்வளவோ கார்யம் இருக்கும். அவரை தேசபிதா, Father of the Nation என்கிறார்கள். அப்படியிருந்தும் வாரத்தில் ஒருநாள் மௌனம் வைத்துக் கொண்டிருந்தார். ‘மௌனமாயிருக்கக் கட்டுப்படி ஆகாது’ என்று எவரும் சொல்ல முடியாதபடி அவர் ஒரு எக்ஸாம்பிள்.

மௌனமும், பட்டினியும் சேர்ந்தால், அதாவது வாய்க்கு இரண்டு காரியமுமே இல்லாமலிருந்தால் அன்று மனஸ் பாரமார்த்திகத்திலே நன்றாக ஈடுபடுவதை அநுபவத்தில் தெரிந்துகொள்ளலாம். அதனால் அவரவர் இஷ்ட தெய்வத்துக்காக சிவராத்ரியோ, ஷஷ்டியோ, ஏகாதசியோ பட்டினி கிடக்கிறபோது மௌனமாகவும் இருக்கலாம். அம்பாளை உபாஸிக்கிறவர்கள் நவராத்ரி பூராவும் மௌனமிருப்பார்கள்.

நாம் பலவிதமான பேச்சுகளைப் பேசி கெட்ட விஷயங்களை விஸ்தாரம் பண்ணியும், பல பேரைத் திட்டியும் வாக்தேவியான ஸரஸ்வதிக்கு அபசாரம் பண்ணுகிறோம். இதற்குப் பிராயசித்தமாக ஸரஸ்வதியின் நஷத்ரமான மூலத்தில் மௌனம் இருப்பதுண்டு*.

தினமுமே அரைமணியாவது மௌனமாக த்யானம் பண்ண வேண்டும்.


*ஸ்ரீசரணர்களே இவ்வாறு மூல நக்ஷத்ரம் தோறும் மௌனம் அநுஷ்டிப்பவர்கள்தாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is முனிவன் இயல்பு மௌனம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  கண் விழிப்பது
Next