நமஸ்கரிப்பதற்குக் காரணமில்லை ! : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இதுவரையில் சொன்னதிலிருந்து என்ன ஏற்பட்டது என்றால், ‘குருதான் ப்ரஹ்மா, விஷ்ணு, மஹேச்வரன். ஆனதினாலே அவருக்கு நமஸ்காரம் பண்ணணும், தஸ்மை ஸ்ரீ குரவே நம:‘ என்றால் அது தப்பு என்று ஆயிற்று! [சிரிக்கிறார்.] குருவுக்கு நமஸ்காரம் பண்ணு என்று சொல்லி அதற்கு வேறே என்ன காரணம் சொன்னாலும் ஸரி; ஆனால் ப்ரஹ்ம – விஷ்ணு – மஹேச்வரர்களாக இருக்கிறாரென்றால், அந்த மூன்று பேருக்குமே இப்படி ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹார மூர்த்திகளா இருக்கும் அவஸ்தையில் (நிலையில்) நமஸ்காரம் பண்ணுவதற்கில்லையாதலால், இவருக்கும் கிடையாது, [சிரித்து] கிடையவே கிடையாது!

குரு : ஸாக்ஷாத் பர ப்ரஹ்ம; தஸ்மை ஸ்ரீ குரவே நம:

‘குருதான் பரப்பிரம்மம், அதனால் அவருக்கு நமஸ்காரம்’ என்றால் அது ஸரியா, அதுவாவது ஸரியா?

ஊஹூம், அதுவும் ஸரியில்லை.

“ஏன் ஸரியில்லை?”

பரப்ரஹ்மம் மனஸ், வாக்கு எல்லாம் கடந்தது. அதை நீ புரிந்து கொண்டு நமஸ்காரம் பண்ணவும் முடியாது. பண்ணினாலும் நிர்குணமாக, நிஷ்க்ரியமாக (குணங்கள், செயல்கள் ஏதுமற்றதாக) இருக்கிற அது உன் நமஸ்காரத்தை வாங்கிக்கொள்ளாது. ஒன்றுமே பண்ணாமல், பண்ணத்தெரியாமல் கிடக்கிற ஸ்திதியைத்தான் ‘பரப்ரஹ்மம் ஜகந்நாதம்’ என்கிறோம். அதனிடம் போய் நமஸ்காரம் பண்ணி என்ன ப்ரயோஜனம்? பரப்ரஹ்மத்தை நீ புரிந்துகொள்ளும்போது நீயே அதுவாகிவிடுவாயாகையால் அப்போதும் நமஸ்காரத்துக்கு இடமில்லை. நீ உனக்கேயா நமஸ்காரம் பண்ணிக்கொள்வது?

ஆரம்ப ச்லோகமாக சிஷ்யனுக்குச் சொல்லிக் கொடுக்கிற குரு வந்தனமே இப்படித் தப்பும் தாறுமாக இருக்கிறது! குட்டிக்கொள்ளும்போதே பிடரியில் குட்டிக்கொள்வதுபோல ஒரே கோளாறாக இருக்கிறது! [நெடுநேரம் சிரிக்கிறார்.]

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is குரு பரம்பரையில் ப்ரம்மா
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  வித்யாஸமான முத்தொழில்கள்
Next