புராணங்கள் பொய்யா, உருவகமா ? : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

புராணத்தை நம்ப முடியாது என்று சொல்லி அதற்குக் காரணம், ‘அதிலே இப்பொழுது நாம் பார்க்கிற யதார்த்த நிலவரங்களுக்கு வேறான விஷயங்கள் இருக்கின்றன’ என்கிறார்கள். தேவர்கள் வந்தார்கள், போனார்கள், வரம் கொடுத்தார்கள் என்றால் அதெல்லாம் இந்தக் காலத்தில் நடக்காததால், புரளி என்று தோன்றுகிறது. பெண்ணைக் கல்லாகச் சபித்தார்கள், கல்லைப் பெண்ணாகும்படி வரம் கொடுத்தார்கள், சூரியன் உதிக்காமல் நிறுத்தி வைத்தார்கள் என்றெல்லாம் பார்த்தால் – இதெல்லாம் நம் சக்தியில் இல்லாத காரியங்களாக இருப்பதால் ‘வெறும் புரட்டு’ என்று நினைக்கத் தோன்றுகிறது.

இந்தக் காலத்தில் முடியவில்லை, இந்தக் காலத்தில் நடக்கவில்லை என்பதற்காக எந்தக் காலத்திலும் நடக்கவில்லை, நடக்கமுடியாது என்று எப்படிச் சொல்லலாம்? வேத மந்திர சக்தியும், உயர்ந்த தபஸும், யோகாநுஷ்டானமும் பூர்வத்தில் நிறைய இருந்தன என்பதற்கு எந்தப் பழைய புஸ்தகத்தைப் பார்த்தாலும் நிறைய ஆதாரம் இருக்கிறது. இவை இருந்த மட்டும் தேவசக்திகளெல்லாம் இந்த லோகத்தினராலேயே ஸுலபமாக கிரஹிக்கும்படி இருந்திருக்கின்றன. வெளிச்சம் இருந்தால் கூடவே நிழலும் இருக்கும் என்கிற ரீதிப்படி தேவசக்திகளைப் போலவே அஸுர ராக்ஷஸ சக்திகளும் ஸ்தூலமாகத் தெரிகற மாதிரி லோகத்தில் இருந்திருக்கிறார்கள். இப்போதும் தேவாஸுர யுத்தம் முதலானவை மநுஷ்யனின் கண்ணுக்குத் தெரியாமல் (நல்லது கெட்டதுகளின் மோதலாக) நடந்துகொண்டேதான் இருக்கிறது. அந்தக் காலத்தவர்களுக்கு இந்த நல்ல சக்திகளையும் கெட்ட சக்திகளையும் தபோ சக்தியால் கண்கொண்டு பார்க்க முடிந்தது. எல்லா விதமான light waveகளும் sound waveகளும் [ஒளி, ஒலி அலைகளும்] மநுஷ்யக் கண்ணின் லென்ஸுக்கு அகப்பட்டு விடாது என்று விஞ்ஞானிகளே சொல்கிறார்கள். அதில் சில விஞ்ஞானிகள் இன்னும் ஒருபடி மேலே போய் occult என்கிற இயற்கைக்கு அதீதமான மர்ம சக்திகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து, ‘தேவதைகள் இருக்கின்றன; நல்ல தேவதைகள், துர்த்தேவதைகள் எல்லாம் இருக்கின்றன’ என்றுகூட எழுதி வைத்திருக்கிறார்கள்.

இப்போதும் அநேக யோகிகள், ஸித்த புருஷர்கள் இருக்கிறார்கள். ஐஸில் கிடந்தாலும் நெருப்பில் கிடந்தாலும் அது அவர்களுடைய சரீரத்தை பாதிப்பதில்லை. மழையை வரப்பண்ணுகிறார்கள்; பெய்கிற மழையை நிறுத்தவும் செய்கிறார்கள். இப்படிப் பலர் அதீந்திரியமான சக்தியோடு இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நமக்குத்தான் எதிலும் நம்பிக்கையில்லை. எல்லாவற்றிலும் ஸம்சயம்! பூர்வ காலத்தில் இப்படிப்பட்ட விசேஷ சக்திகளை இன்றைவிட ஏராளமானவர்கள் பெற்றிருந்தபடியால்தான் புராணங்களைப் பார்த்தால் ஏகப்பட்ட ‘மிராகிள்’களை சொல்வதாக இருக்கிறது.

மிராகிள் வந்தால் ஹிஸ்டரி இல்லை என்று ஒதுக்கி விடுகிறார்கள். கூன் பாண்டியனுக்குப் பஞ்சாக்ஷர பஸ்மாவின் மகிமையால் ஞானஸம்பந்தர் வெப்பு நோயை நீக்கினார், கூனை நீக்கி ‘நின்றசீர் நெடுமாறன்’ ஆக்கினார் என்றால் அதை ஹிஸ்டரியாகச் சேர்ப்பதற்கில்லை என்கிறார்கள். மஹேந்திரப் பல்லவன் அப்பர் ஸ்வாமிகளை கல்லிலே கட்டி கடில நதியில் போட்டும் அது மிதந்ததைப் பார்த்துத்தான் ஜைனமதத்தை விட்டு வைதிகத்திற்கு மாறினான் என்றால் அதை ஹிஸ்டரியாக எடுத்துக் கொள்ள முடியாது என்கிறார்கள். ஆனாலும் இப்படியொரு பல்லவ ராஜாவும், பாண்டிய ராஜாவும் நாற்பது ஐம்பது வருஷங்களுக்குள் ஜைனமதத்தை விட்டு சைவத்துக்கு வந்திருக்க வேண்டுமென்பது மட்டும் மற்ற circumstantial evidence (ஸந்தர்ப்ப ஸாக்ஷியம்) எல்லாவற்றையும் பார்த்தால் உறுதியாகத் தெரிகிறது. ஆறு ஏழாம் நூற்றாண்டுகளில், தமிழ்நாட்டில் சமண மதம் வெகுவாக நலிவடைந்து வைதிக மதம் (குறிப்பாக சைவம்) பிரகாசமாக ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறது என்று சரித்திர நிபுணர்களே ஒப்புக்கொள்ளும்படித் தெரிகிறது. இப்படி ஒரு பெரிய மாறுதல் நடக்க வேண்டுமானால், இரண்டு பெரிய ராஜாக்கள் தங்கள் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமானால் அதற்குக் காரணமாக அப்பர் ஸ்வாமிகளின் கதையிலும் ஞானஸம்பந்தர் கதையிலும் வருகிற மாதிரியான அற்புதங்கள் நடந்திருக்கக்கூடும்தான் என்பதை எப்படி ஆக்ஷேபிக்கலாம்? இந்த விஷயங்களை அந்த ராஜாக்கள் கல்வெட்டிலோ செப்பேட்டிலோ எழுதி வைக்கவில்லை என்பதால் அவை நடக்கவில்லையென்று சொல்லி விடலாமா?

ராமாநுஜாசாரியார் கன்னட தேசத்தை ஆண்டு கொண்டிருந்த ஜைனனான பிட்டி தேவன் என்ற ஹொய்ஸள வம்ச ராஜாவுடைய பெண்ணுக்குப் பிடித்திருந்த பேயை ஓட்டினதாலேயே அவன் ஜைனத்தை விட்டு வைஷ்ணவனானான் என்று குரு பரம்பரைக் கதையிலிருந்து சொல்கிறார்கள். சரித்திரக்காரர்கள், ‘பேய் ஓட்டுகிற ஸமாசாரத்தையெல்லாம் எடுத்துக் கொள்ள மாட்டோம்’ என்கிறார்கள். ஆனாலும் ராமாநுஜர் ஜீவித்த பதினொன்றாம் நூற்றாண்டில் கன்னட ராஜ்யத்தில் ஜைனம் மங்கி வைஷ்ணவ வழிபாடு, கோவில் முதலியன அதிகமானதையும், பிட்டி தேவனே பிற்பாடு விஷ்ணுவர்த்தன தேவன் என்று பெயர் பெற்றதையும் சரித்திரத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இது குரு பரம்பரைக் கதையில் சொன்னதன் விளைவாகவே இருக்கலாம் என்பதை எப்படி ஆக்ஷேபிக்க முடியும்?

இங்கிலீஷ் படிப்புப் படித்து விட்டதால், ஸயன்ஸில் நிரூபிக்க முடியாததெல்லாம் புரளியென்று சொல்லிப் புராணங்களைத் தள்ளுவது கொஞ்சங்கூட சரியான மனப்பான்மையாகாது.

இப்போதுங்கூட அங்கங்கே பத்துப் பன்னிரண்டு அடி நீளமுள்ள மனித எலும்புக் கூடுகள், புராண வர்ணனைப்படியான – தற்போது இல்லாத – பெரிய பெரிய மிருகங்களின் எலும்புக் கூடுகள் அகப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இதைப் பார்த்தால் பனை மர, தென்னை மர உயரமுள்ள ராக்ஷஸர்கள், சிங்கம் மாதிரியான உடம்பும் யானை மாதிரியான தும்பிக்கையும் கொண்ட யாளி போன்ற மிருகங்கள் பூர்வத்தில் இருந்திருக்கக் கூடுமென்றே ஏற்படுகிறது. காலெலும்பு மாத்திரம் பதினாறு அடி நீளமுள்ள ஒரு மநுஷ்ய எலும்புக்கூடு, யானையைப் போல பத்து மடங்குகள் உள்ள ஒரு மிருகத்தின் எலும்புக்கூடு முதலானதுகளை ஐஸ்பெர்க்கில் ஆர்க்டிக் ரீஜனில் பனிக்கட்டிக்குள்ளிருந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். இதைப் பெரிய archaeological find (புதைபொருள் கண்டுபிடிப்பு) என்று கூத்தாடினார்கள். ஆர்க்கியாலஜியோடு, ஜியாலஜி (பூ-இயல்) யையும் சேர்த்து, இவை இத்தனை லட்சம் வருஷத்திற்கு முன் இருந்தவை என்கிறார்கள். இதோடு ‘மைதாலஜி’ (புராண இயல்) யையும் சேர்த்தால் நம்முடைய பழைய கதைகள் நிஜந்தான் என்றாகிவிடும்.

ஒரு காலத்தில் பனை மர உயர ஆள், இப்போது ஆறடி உயர ஆசாமி, வேறொரு காலத்தில் அங்குஷ்டப் பிரமாண (கட்டை விரல் அளவேயான) ஆள் என்றிப்படி கால வித்யாஸத்தில் பல தினுசாக ஆகிறது. ஜீவராசிகள், படைப்பினங்களும் மாறுகின்றன. இந்த வித்யாஸங்களையும் புராணங்கள் சொல்லுகின்றன.

“வானரர்கள் என்று குரங்கு மநுஷ்யர்களாம்! மிருகத்தின் உடம்பும் மநுஷ்ய முகமுமாம்! இரண்டு தலை, பத்துத் தலைக்காரர்களாம்! எல்லாம் வெறும் பொய்” என்று புராணங்களைப் பார்த்துச் சொல்லுகிறார்கள். அல்லது இப்படித் திட்டாதவர்களும். “இதெல்லாம் ஒவ்வொரு symbol (தத்வ ரூபகம்). தத்துவங்களைத்தான் பாத்திரங்களைக் கொண்டு விளக்கியிருக்கிறது; allegorical representation” என்கிறார்கள்.

கதாத்வாரா [கதை மூலமாக] தத்வமும் போதிக்கப் படுவது வாஸ்தவம்தான். அதற்காகக் கதையைப் பொய்யென்று சொல்ல முடியாது. இப்போது கூட எப்போதேனும் நியூஸ் பேப்பரில் பார்க்கிறோம் – இரண்டு தலையும் நாலு கையுமாக ஒரு குழந்தைப் பிறந்தது; மிருகத்திலும் சேராமல் மநுஷ்ய இனத்திலும் சேராமல் நடுவாந்தரமாக ஒரு விசித்திரக் குழந்தை பிறந்தது – என்றிப்படி! Freak என்று இதைச் சொல்கிறார்கள். தப்பவே முடியாத இயற்கையும் கொஞ்சம் தப்பிப் போவதைத்தான் freak என்கிறார்கள். இப்பொழுது freak ஆகச் சொல்லப்படுவதே பூர்வகாலங்களில் ஒரு உத்தேசத்தோடு இப்போதை விட அதிகமாகவும் ஸ்ருஷ்டிக்கப் பட்டிருக்கலாம். இக் காலத்தில் நமக்கிருப்பதைவிட அதிகமாக அவர்களுக்கு இயற்கைக்கு அதீதமான சக்திகள் இருந்ததால் இயற்கையிலும் இப்படிப்பட்ட அதிசயப் பிறப்புக்கள் அதிகம் நேர்ந்திருக்கலாம். அதனால் ‘இப்போதுள்ள நமக்குத் தெரிவதுதான் ஸகலமும், இதற்கு வித்தியாசமாக எதுவும் இருந்திருக்க முடியாது’ என்று நாம் ஆக்ஷேபிப்பதற்கே இல்லை.

நமக்குத் தெரியாதது, தெரிய முடியாதது எல்லாவற்றுக்கும் பொய்யென்று பெயர் வைத்து விடுவது நியாயமில்லை. புராணத்திலே நம்பமுடியாதது என்று நாம் தள்ளிவிடுகிற ஒன்றே அவ்வப்போது நம் காலத்தில் நடந்துவிடுகிறது. பூர்வ ஜன்மத்தைச் சொல்வது முதலான அதிசயங்கள் இப்போதும் நியூஸ் பேப்பர்களில் வந்து கொண்டேதான் இருக்கின்றன. அதுவும் ஸமீப காலமாக இம்மாதிரி அதிசயச் செய்திகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. ஒன்று சொல்கிறேன்:

புராணத்தில், ‘காச்யபருக்கு கத்ரு என்று ஒரு பத்தினி இருந்தாள். அவளுக்குப் பாம்புகள் குழந்தையாகப் பிறந்தன’ என்று பார்த்தால் உடனே இதெல்லாம் ஒரே அஸம்பாவிதம் என்று தள்ளிவிடுகிறோம். ஆனால் போன வருஷம் (1958) பேப்பரிலேயே [செய்தித்தாள்] வந்ததை ரொம்பப் பேர் பார்த்திருப்பீர்கள். ஒரு மார்வாடிப் பெண்ணுக்கு பாம்பு பிறந்தது என்று அந்த ‘ந்யூஸ்’ இருந்தது. அதைப் பார்த்த போது தான் எனக்கே இந்த மாதிரி இன்னொரு விஷயம் உறுதிப்பட்டது .

நான் ஸ்வாமிகளாக ஆகிறதற்கு முந்தி ஒரு குடும்பத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வீட்டில் பிறந்த பெண்களும் ஸரி, அந்த வீட்டுப் பிள்ளைகளுக்கு வாழ்க்கைப்படுகிற பெண்களும் ஸரி, தாழம்பூ வைத்துக் கொள்ள மாட்டார்கள். பின்னாளில் நான் ஸ்வாமிகளான அப்புறம் அவர்களிடம் ஏனென்று கேட்டபோது அவர்கள் ஒரு கதை சொன்னார்கள். கதையென்றால் இட்டுக் கட்டினது இல்லை.

“பத்துப் பதினைந்து தலைமுறைகளுக்கு முன்னாடி எங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு பாம்பு குழந்தையாகப் பிறந்து விட்டது. இதை வெளியில் சொல்லிக் கொள்ள வெட்கம். ஆனாலும் வீட்டோடு வளர்த்து வந்தார்கள். பாம்புக்குப் பால் போட்டி (புகட்டி) குழந்தை மாதிரியே வளர்த்தார்கள். அதுவும் யாருக்கும் ஹிம்ஸை பண்ணாமல் தன்பாட்டுக்கு வீட்டோடு விளையாடிக் கொண்டிருந்ததாம். இந்த விசித்திரக் குழந்தையை எங்கேயும் எடுத்துக் கொண்டு போக முடியவில்லை, விட்டு விட்டும் போக முடியவில்லையென்பதால் அம்மாக்காரி ரொம்ப அவசியமானால் ஒழிய எங்கேயும் வெளியே போகவே மாட்டாள். ‘கல்லானாலும் கணவன்’ என்கிற மாதிரி ‘பாம்பானாலும் குழந்தை’ தானே?அந்த வாத்ஸல்யம்! எங்கேயும் போக மாட்டாளாம். ஆனால் ரொம்பவும் நெருங்கின பந்துக்களின் கல்யாணமொன்று வந்தபோது அவளால் போகாமல் இருக்க முடியவில்லை.

“அப்போது வீட்டில் ஒரு வயசான கிழவி இருந்தாள். (அவள் பாம்புக் குழந்தையின் பாட்டியா என்பது தெரியவில்லை. அந்தக் காலத்தில் தூர பந்துக்களில்கூட நாதியற்றவர்களை வைத்துப் பராமரிக்கிற நல்ல பழக்கம் இருந்து வந்தது. இப்போதுதான் தாயார் தகப்பனாரோடேயே சேர்ந்தில்லாமல் தனிக்குடித்தனம் போகவேண்டுமென்று நவீன நாகரிகத்தில் பறக்கிறார்கள். முன்னெல்லாம் அவிபக்த குடும்பம்தான் (joint family ). அதிலே யாராவது ஒரு அத்தை பாட்டி, ஒன்று விட்ட சின்ன தாத்தா என்று வைத்துக் கொண்டு ரக்ஷிப்பார்கள். இந்த கதை நடந்த அகத்தில் ஒரு கிழவி இருந்தாள்.) அவளுக்குக் கண் தெரியாது.

“அந்தக் கிழவியின் பாதுகாப்பில் பாம்புக் குழந்தையை விட்டுவிட்டு அதன் தாயார் தவிர்க்க முடியாத நிலைமையில் வெளியூருக்குப் போனாள்.

“பாம்புக்கு விசேஷமாக என்ன செய்ய வேண்டும்? குளிப்பாட்ட வேண்டுமா? தலை வார வேண்டுமா? சட்டை போட வேண்டுமா? இல்லாவிட்டால், தூக்கி வைத்துக் கொள்ள வேண்டுமா? இதெல்லாம் இல்லை. வேளைக்கு அதற்குப் பால் விட்டால் மட்டும் போதும். அதனால் அம்மாக்காரி அந்தக் கிழவியிடம், “காய்ச்சின பாலை, கை நிதானத்திலேயே கல்லுரலைத் தடவிப் பார்த்து அதன் குழியிலே விட்டு வைத்து விடுங்கள். நேரத்தில் குழந்தை (பாம்பு) வந்து அதைக் குடித்து விடும்” என்று சொல்லிவிட்டு ஊருக்குப் போனாள். அந்தப் பாம்பை இப்படிப் பழக்கியிருந்திருப்பாள் போலிருக்கிறது.

“கிழவி அப்படியே செய்தாள். பாம்பும் தாயார் சொன்னபடியே வந்து குடித்துவிட்டுப் போயிற்று. அப்புறம் ஒரு வேளை நாழி தப்பிப் போயிற்று. கிழவி அசந்து போய் விட்டாளோ என்னவோ? கல்லுரலில் பார்த்த பாம்புக்குப் பாலில்லை. அது ரொம்ப ஸாது. கொஞ்ச நேரம் காத்துப் பார்த்தது. அப்புறம் அதுவும் அசந்துபோய் அந்தக் கல்லுரல் குழியிலேயே சுருட்டிக் கொண்டு படுத்துக்கொண்டு விட்டது.

கிழவி அதற்கப்புறந்தான், கொதிக்க கொதிக்கப் பாலைக் காய்ச்சி எடுத்துக் கொண்டு கல்லுரலுக்கு வந்தாள். அதிலே பாம்புக்குட்டி படுத்துக் கொண்டிருப்பது அவளுக்குத் தெரியவில்லை; வழக்கம்போலவே கொதிக்க கொதிக்க இருந்த பாலை அப்படியே ஒரு நிதானத்தில் குழிக்குள்ளே விட்டு விட்டாள்.

“பாம்பின் மேலேயேதான் விட்டுவிட்டாள். பாவம்! அந்தக் குட்டி பாம்பு அப்படியே… செத்துப்போய் விட்டது.” *

அங்கே ஊருக்குப் போயிருந்த அம்மாக்காரிக்கு ஸொப்பனமாச்சு. ஸொப்பனத்திலே அந்தப் பாம்புக்குட்டி வந்து, ‘நான் செத்துப் போய் விட்டேன். நீ போய் என்னை எடுத்து தாழங் காட்டிலே தஹனம் பண்ணிவிடு. இனிமேல் உங்கள் அகத்தில் பிறக்கிற பெண்களும், வாழ்க்கைப் படுகிற பெண்களும் தாழம்பூ வைத்துக் கொள்ள வேண்டாம்” என்று சொல்லிற்று. (தாழம் புதர்தான் பாம்புக்கு ரொம்ப ப்ரீதி.)

“அதிலிருந்து எங்கள் குடும்பத்தில் யாரும் தாழம்பூ வைத்துக் கொள்வதில்லை” என்று அந்த அகத்துப் பெண்கள் சொன்னார்கள்.

இந்தக் கதையைப் பற்றி எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது, இப்படிக்கூட நடந்திருக்குமா என்று.

நான் ஸ்வாமிகளாகிவிட்ட பிற்பாடு, அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் என்னைப் பார்க்க வந்ததற்கு முக்யமாக ஒரு காரணம் இருந்தது. அது பாம்பு பூர்விகத்தைச் சொல்வது இல்லை. அவர்கள் குடும்பத்தில் ஒரு பழைய செப்பேடு இருந்தது. எனக்கு இதில் ‘இன்டரஸ்ட்’ உண்டு என்பதால் அதைக் கொண்டு வந்து காண்பித்தார்கள்.

அது கிருஷ்ண தேவராயருக்குப் பிறகு ஆட்சி பண்ணிய அச்சுத தேவராயர் காலத்து தாம்ர சாஸனம் (செப்பேடு) . அதில் எழுதியிருந்ததிலிருந்து, பிராமணன் ஒருத்தன் வேறே 108 பிராமணர்களுக்கு தானம் கொடுத்த விவரம் தெரிந்தது. ராஜாவுக்காகவே இந்த ஒரு பிராமணன் இப்படி 108 பேருக்கு தானம் பண்ணியிருக்கிறான்.

அது ஏன், எதற்காக என்று சொல்கிறேன். பிராமணன் ஸதாஸர்வகாலமும் வேத அத்தியயனமும், கர்மாநுஷ்டானமும் பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டுமென்பதால் அவன் உத்தியோகத்தில் போய் ஸம்பாதிக்கக் கூடாது. ஆனால் அவன் குடும்பம் நடக்கவேண்டுமே! அவன் பெரிய பெரிய யக்ஞங்களும் பண்ண வேண்டுமே! இவற்றுக்காக அவன் தானம் வாங்கலாம் என்று சாஸ்திரம் அநுமதித்தது. ராஜாக்களும் மற்றப் பிரபுக்களும் இப்படியே அவர்களுக்குக் கொடுத்து ஆதரித்து வந்திருக்கிறார்கள். ஆனால் தானம் வாங்குகிற ‘ரைட்’ இருக்கிறது என்பதற்காக, இந்தக் காலத்தில் சிலர் தப்பாக நினைப்பது போல, பிராமணர்கள் மற்றவர்களைச் சுரண்டவில்லை. ரொம்பவும் மானஸ்தர்களாக இருந்து கொண்டு அவசியமானால்தான், அதுவும் தங்களுக்கு வேண்டிய அளவுக்கே, தானத்தை அங்கீகரித்தார்கள். ஒரு ராஜாவின் பரம்பரை உத்தமமானதாக இருந்தால்தான், அவன் நல்ல க்ஷத்ரியனாக இருந்தால்தான் அவனுடைய மான்யத்தை ஏற்றுக்கொள்வார்கள். இவர்கள் பிடுங்கித் தின்பதால் ராஜாக்கள் கஷ்டப்படாமல், ‘நாம் கொடுப்பதை வாங்கிக்கொள்ள மாட்டேன் என்கிறார்களே! ஸத்பாத்திரத்துக்கு தானம் செய்கிற புண்ணியம் நமக்குக் கிடைக்காமல் போகிறதே! என்றுதான் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். இம்மாதிரி ஸந்தர்ப்பங்களில் ராஜாக்களும் பிரபுக்களும் ஒரு யுக்தி பண்ணியிருக்கிறார்கள். அதாவது, தீன தசையில் உள்ள ஒரு பிராமணனை ‘மசிய’ வைத்து அவனுக்கு ஏகப் பட்டதாக தானம் செய்துவிடுவார்கள். ஆனால் அது முழுவதும் அவன் ஒருத்தனை உத்தேசித்தேயில்லை. அவன் வழியாக மற்ற பிராம்மணர்களுக்கும் தானம் பண்ணி விடவேண்டுமென்பதே உத்தேசம். அதாவது இந்த ஒரு பிராம்மணன் ‘பேருக்கு’ அவ்வளவு தானத்தையும் வாங்கிக் கொள்வதுபோல வாங்கிக் கொண்டு, அதில் கொஞ்சத்தை மட்டும் தனக்கே தனக்கென்று வைத்துக்கொண்டு, பாக்கியையெல்லாம் மற்ற பிராமணர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். அந்த மற்ற பிராமணர்கள் இன்னொரு பிராமணன் கொடுப்பதையே வாங்கிக் கொள்வதால் அவர்களுக்கு ‘ப்ரதிக்ரஹ தோஷம்’ (‘ஏற்பது இகழ்ச்சி’ என்ற குறை) ஏற்படாது. எனவே மற்ற பிராம்மணர்கள் இவன் செய்கிற தானத்தை ஏற்பார்கள். பிரபுவின் உத்தேசம் இப்படியாக நிறைவேறிவிடும்.

இப்படித் தந்திரம் பண்ணினது நடுவிலே வருகிற அந்த ஒரு பிராம்மணனுக்கு தோஷமாகாதா? பிரபு நல்ல எண்ணத்தில் எப்படியாவாது வேதவித்துக்களை ஆதரிக்க வேண்டுமென்று இப்படி யுக்தி செய்வதில் தப்பில்லைதான். ஆனால் இப்படி ஒரு தந்திரத்துக்கு உடன்பட்ட பிராமணனுக்கு பாபமில்லையா என்றால், இல்லை. எப்படியென்றால், பிரபு கொடுத்த தானம் சட்டப்படி இவனுடைய சொத்தாகத் தான் ஆகிறது. இவன் பேரிலேதான் அவன் தத்தம் செய்திருக்கிறான். அதனால் அப்புறம் இவன் அதற்கு உரிமை கொண்டாடாமல் அதிலே முக்கால்வாசிக்கு மேல் மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டுத் தான் ஸ்வல்ப பாகமே வைத்துக் கொள்வதால் இவனுக்கும் தோஷம் போய்விடுகிறது.

ராஜப் பிரதிக்ரஹமே தோஷமானது – அரசனிடமிருந்து வாங்குவதே தப்பு- என்றுதான் தியாகையர் மாதிரியானவர்கள், சரபோஜி போன்றவர்கள் “கொடுத்தே தீருவேன்” என்று வலுக்கட்டாயப் படுத்தினால்கூட அதை உதறித்தள்ளிவிட்டு, “நிதி சால ஸுகமா?” (பணமா சௌக்கியம் தருவது?) என்று சீறியிருக்கிறார்கள்.

நாட்டுக்கோட்டை செட்டிப்பிள்ளைகள் (நகரத்தார்) அநேக சத்திரங்களைக் கட்டினபோது, பிராம்மணர்கள் அவற்றில் போய் சாப்பாட்டுக்கு உட்காருவதற்குத் தயங்கிய போது, இதே போலத்தான் ஒரு பிராம்மணனைத் தேடிப் பிடித்து அவன் பேரில் சத்திரத்தின் கட்டளைகளை எழுதி, அவன் மற்றவர்களுக்குப் போடுகிற மாதிரிப் பண்ணியிருக்கிறார்கள்.

நான் மேலே சொன்ன செப்பேட்டில் இப்படித்தான் ஒரு பிராம்மணன், ராயரிடமிருந்து வடார்க்காட்டிலுள்ள மாம்பாக்கம் என்ற கிராமத்தை பூதானம் வாங்கிக் கொண்டு அதை 108 பிராம்மணர்களுக்கு விநியோகம் செய்திருக்கிறான். அந்த 108 பிராமணர்களுடைய பேரையும் சொல்லி, அவர்கள் இன்ன வேத சாஸ்திரம் படித்தவர்கள், அவர்களுக்கு இத்தனை நிலம் கொடுக்கப்படுகிறது என்ற விவரங்கள் அந்த ஸாஸனத்தில் எழுதியிருந்தது.

அப்படி நூற்றெட்டுப் பேரை உத்தேசித்து கிராம தானம் வாங்கிக் கொண்ட பிராமணர் பாம்புக் குழந்தைக் குடும்பத்தில் வந்தவர்தான். அவரிடமிருந்து தானம் பெற்ற மற்றவர்களின் வம்சம் எதுவும் இப்பொழுது தெரியவில்லை. இவர்கள் குடும்பத்தில் மட்டும் இந்தச் செப்பேடு தலைமுறை தலைமுறையாக வந்திருக்கிறது.

இதிலே குறிப்பிட்டு சொல்லவேண்டியது, செப்பேட்டில் சொல்லியிருக்கிற மூதாதையின் பெயர் ‘நாகேச்வரன்’ என்று இருப்பதுதான். இப்போது இந்தத் தலைமுறையில் இதை என்னிடம் கொண்டு வந்த குடும்பத் தலைவர் பெயரும் நாகேச்வரன். விசாரித்துப் பார்த்ததில் அவர்கள் குடும்பத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் நாகேச்வரன் என்ற பெயரை வைத்துக் கொண்டு வருகிறார்களென்று தெரிந்தது.

உடனே ஊகிக்க முடிந்தது – பாம்புக் குழந்தையின் ஸம்பந்தத்தால்தான் இந்த ‘நாகப்’ பெயர் ஏற்பட்டிருக்கிறதென்று. அதோடுகூட அச்சுத தேவராயர் காலத்திலேயே அவர்கள் சொன்ன கதைக்கு ஆதாரம் இருக்கும்படியாக இந்தப் பெயர் இருந்திருப்பதும் தெரிந்தது.

‘இப்படியும் இருக்குமா?’ என்று நான் முன்பு நினைத்ததற்கு இது பதில் சொல்கிறாற்போல் இருந்தது. அப்புறம் போன வருஷம் ஒரு பெண்ணுக்குப் பாம்பு பிறந்த ந்யூஸைப் பார்த்தபின் இதைப் பற்றி ஸந்தேஹப்பட வேண்டாம் என்று மேலும் உறுதியாயிற்று.

உங்களுக்கு புராண நம்பிக்கைப் போதவில்லை என்று நான் கண்டிப்பது தப்புத்தான். எனக்கே ந்யூஸ் பேப்பரில் வருவது நிஜம் என்று தோன்றின மாதிரி, ஐதிஹ்யமாக ஒரு குடும்பத்தில் சொன்னதில் நம்பிக்கை போதாமல் ந்யூஸைக் கொண்டுதானே ஐதிஹ்யத்தை confirm செய்து கொள்ள வேண்டியிருந்தது?

இதுதான் இப்போது நாம் இருக்கிற ஸ்திதி: பேப்பரில் வந்து விட்டால் எத்தனை நம்பத் தகாததானாலும் பொய் என்று தோன்றவில்லை. ஆனால் புராணம் என்றாலே கட்டுக் கதை என்று அலக்ஷ்யம். “அவர்களுக்கு வேலையில்லை. ஏடு இருந்தது, எழுத்தாணி இருந்தது, கதை கதையாகக் கட்டி வைத்து விட்டார்கள். இதில் சிலதில் கெட்டிக்காரத்தனமாவது இருக்கிறது. பாக்கியெல்லாம் அபத்தம்” என்று நினைக்கிறோம்.


* ஸ்ரீ பெரியவர்கள் அற்புத நாடகச் சுவையோடு இக்கதையைச் சொல்லி வருகையில் இவ்விடத்தில் பலர் ‘த்ஸொ’, ‘த்ஸொ’, என்று விசன ஒலிகளை எழுப்ப, பெரியவர்கள், ‘இதுதான் காவ்ய ரஸம் என்பது! எங்கேயோ எப்போதோ, யாருக்கோ நடந்தது – அல்லது நடந்ததாக இட்டுக்கட்டிச் சொல்வது- நம் மனஸை உருக்கிவிடுகிறது. துக்கமாயிருந்தாலுங்கூட, தினமும் நாம் நிஜத்தில் படுகிற துக்கங்கள் மாதிரி இல்லாமல், இதிலே அலாதியாக ஒரு ரஸ மும் இருக்கிறது’ என்றார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is புராணமும், சரித்திரமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  கற்பனையேயானாலும் கருத்துள்ளதே !
Next