சகுனம், நிமித்தம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஜ்யோதிஷ சாஸ்திரத்தில், “ஸம்ஹிதா ஸ்கந்தம்” என்று ஒரு பிரிவு இருக்கிறது என்றேனல்லவா? ஜலம் எங்கே ஓடுகிறது? பூமிக்குள் நதி under-current ஆக எங்கெங்கே போகிறது? உள்ளே ஜலம் இருப்பதற்கு மேலே என்ன என்ன அடையாளம் இருக்கும்?- என்பவைகளைப் போன்ற பல விஷயங்கள் அதில் சொல்லப்பட்டிருக்கின்றன. வாசனைத் திரவியங்கள் செய்யும் விதம், வீடு கட்டும் அளவு, சகுன சாஸ்திரம், நிமித்த சாஸ்திரம் முதலிய எல்லாம் இந்த ஸம்ஹிதையில் சொல்லப்படும்.

சகுனம் வேறு, நிமித்தம் வேறு. நிமித்தம் என்பதுதான் வரப்போவதை ஏதோ ஒரு தினுஸில் அடையாளம் காட்டுவதற்குப் பொதுப் பெயர். அதில் ஒரு வகையே சகுனம். சகுனம் என்பதற்கு ‘பக்ஷி’ என்பது அர்த்தம். பக்ஷிகளால் ஏற்படும் நிமித்தங்களுக்குத்தான் சகுனம் என்று பெயர். உலகத்தில் ஒன்றுக்கொன்று ஸம்பந்தமில்லாத வஸ்து ஒன்றும் இல்லை. நடக்கும் காரியங்களும் அப்படியே. ஸரியான கணக்குத் தெரிந்தால் எல்லாம் தெரிந்து கொள்ளலாம். உலகத்தில் நடப்பவை எல்லாம் ஒரே ஒருவருடைய ஆக்ஞையால்தான் நடக்கின்றன; ஒரே கணக்காக நடக்கின்றன. அதனால் ஒரு காரியத்தைக் கொண்டு மற்ற எல்லாவற்றையும் கண்டு பிடிக்கலாம். கை ரேகை, ஆரூடம், க்ரஹநிலை முதலிய எல்லாம் ஒன்றுக்கொன்று ஸம்பந்தம் உடையனவாகவே இருக்கின்றன. எல்லாம் நிஜம்தான். இவற்றில் ஒன்றே நிமித்தம். அதில் ஒரு அங்கமே சகுனம்.

ஒரு பக்ஷி வலமிருந்து இடம்போனால் இன்ன பலன்; இன்ன பக்ஷி கத்தினால் இன்ன விளைவு ஏற்படும் என்று சகுன சாஸ்திரம் கூறும்.

‘நிமித்தம்’ என்பதிலேயே, நாம் ‘சகுனம் பார்ப்பது’ என்று சொல்வதிலுள்ள மற்ற எல்லாம் வரும். Omen என்று பொதுவாகச் சொல்வது நிமித்தம்தான். [கீதை ஆரம்பத்தில்] ” நிமித்தானி ச பச்யாமி விபரீதானி கேசவ” என்று யுத்தம் ஆரம்பிக்குமுன் அர்ஜுனன் பகவானிடம் சொல்கிறான். ‘கெட்ட சகுனங்களைப் பார்க்கிறேன்’ என்று நாம் சொல்வதைத்தான், ‘விபரீதமான நிமித்தங்களைப் பார்க்கிறேன்’ என்கிறான். அவன் ‘நிமித்தம்’ என்பதுதான் சரி. நாம் சகுனம் என்பதே நல்லது அல்லது கெட்டதற்குச் சூசகமான பொதுப்பெயர் என்று நினைப்பது தப்பு. இந்த சூசகங்களில் பக்ஷிகளால் விளைவது மட்டுமே சகுனம். ஒரு பூனை குறுக்கே போனால் அது நிமித்தம். கருடன் குறுக்கே போனால் அது சகுனம்.

பிற்பாடு பகவானும் அர்ஜுனனிடம் ‘நிமித்த’த்தைப் பற்றிச் சொல்கிறார். “நிமித்த மாத்ரம் பவ ஸவ்யஸாசின்” [XI.33.] “சத்ருக்களை வதைப்பதாவது, அதனால் பாவம் வருமே!” என்று அழுத அர்ஜுனனிடம், “இந்த யுத்தத்தில் இவர்களை வதைப்பதாக நான் ஏற்கெனவே ஸங்கல்பம் பண்ணியாகிவிட்டது. அதனால் இவர்கள் இப்போதே செத்துப்போனவர்கள்தான். இவர்களைக் கொல்பவன் நான் தான். நீ வெறும் கருவி மாத்திரமாக இரு” என்று பகவான் சொல்கிறபோது, ‘நிமித்த மாத்ரம் பவ’ என்கிறார்.

அதனால் நிமித்தம் என்பது அதுவே பலனை உண்டாக்குவதில்லை; இன்னொன்று நிச்சயம் பண்ணிவிட்ட பலனை இது வெளிப்படத் தெரிவிக்கிறது என்றே ஆகிறது. இதே போல, நம்முடைய பூர்வகர்ம பலனைத்தான் நிமித்தங்கள் யாவும் தெரிவிக்கின்றன.

சுருக்கமாகச் சொன்னால், மூன்று ஸ்கந்தங்களில் பொதுவாக கணிதத்தையும் கிரஹகதிகளையும் சொல்லுவது ‘ஸித்தாந்தம்’. தனித்தனியாக மனிதனுடைய ஸுகதுக்க பலனைச் சொல்லுவது ‘ஹோரை’ அல்லது ஜாதகம். ‘ஹோரா’விலிருந்துதான் ஜாதகமே ‘ஹாரஸ்கோப்’ எனப்படுகிறது. மிச்சம் உள்ளவை எல்லாம் ‘ஸம்ஹிதை’.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is கிரஹங்களும் மனித வாழ்வும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  புராதன நூல்களில் நவீனக் கண்டுபிடிப்புக்கள்
Next