கிரஹங்களும் மனித வாழ்வும் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

பிரபஞ்சத்தில் நவக்ரஹங்களின் ஸ்திதிகளைப் போலவே மனிதர்களுடைய ஸ்திதியும் மாறிக்கொண்டே வருகிறது. கஷ்டம், சௌக்கியம், துக்கம், ஸந்தோஷம், உன்னத பதவி, தாழ்ந்த பதவி என்று இப்படி எல்லோருடைய ஸ்திதியும் மாறி வருகிறது. இப்படி மாறிக் கொண்டே இருப்பவன் மனிதன் மட்டும் அல்லன். ஸ்தாபனங்களுக்கும் அப்படியே. தேசங்களுக்கும் உயர்ந்த காலம், தாழ்ந்த காலம் என்று வருகிறது.

லோகத்தில் நடக்கும் ஸுகதுக்கங்களுக்கும் கிரஹங்களுக்கும் ஸம்பந்தம் உண்டென்று கண்டு மஹரிஷிகள் இன்ன இன்ன மாதிரி கிரஹங்கள் இருந்தால் இன்ன இன்ன பலன் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு காரியம் ஆரம்பித்தால், அதன் ஆரம்பகால கிரஹரீதிகளைக் கொண்டு, மேலே நடக்கும் ஸுகதுக்கப் பலன்களைச் சொல்லும் பாகத்திற்கு “ஹோரா ஸ்கந்தம்” என்று பெயர். ஜனன காலத்தை ஆரம்பமாக வைத்துக் கொண்டு ஜாதகம் கணித்து வாழ்நாள் முழுவதற்கும் சுகதுக்க பலன்களைச் சொல்லிவிடலாம்.

சுகதுக்க பலன்களுக்குக் காரணம் பலவிதமாகச் சொல்லப்படுகிறது. இது பலபேர் ஒரே வியாதிக்கு வெவ்வேறு காரணம் சொல்கிற மாதிரிதான். வைத்தியர்கள் தாது வித்யாசத்தால் இந்த வியாதி உண்டாயிற்றென்று சொல்கிறார்கள். மந்திரவாதி தெய்வக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லுகிறான். ஜ்யோதிஷன் கிரஹ கதியால் அது வந்தது என்கிறான். தர்ம சாஸ்திரமோ பூர்வ கர்ம பலன் என்று சொல்லுகிறது! உணர்ச்சி மாறுதல்களாலேயே தேக ஸ்திதியும் மாறிவிடுகிறது என்று மனோ தத்துவ நிபுணர்கள் சொல்லுகிறார்கள்! இப்படி ஒன்றுக்கே பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. உண்மையில், கிரஹ கதியால் வருகிறதா? தாதுக்களால் வருகிறதா? மனத்தின் சலனத்தால் வருகிறதா? மற்றவைகளால் வருகிறதா?

இவற்றில் ஒன்றும் பொய்யில்லை. எல்லாம் காரணங்களே. எல்லாம் ஒன்றின் அடையாளங்களே. நாம் தெரிந்து கொள்ளுவதற்காக இப்படிப் பலவகையிலும் காரணங்கள் ஏற்பட்டு ஒன்றாகக்கூடி அநுபவத்தைக் கொடுக்கின்றன. ஒவ்வொருவர் ஒவ்வொரு காரணத்தை எடுத்துக் கொள்கிறார்கள். மழை பெய்தால் ஈரம் உண்டாகிறது; ஈசல் உண்டாகிறது; தவளை கத்துகிறது. இவ்வளவும் மழை பெய்ததற்கு அடையாளங்கள். அதுபோல் நம் பூர்வ கர்மாவின் பலன் உண்டானதற்கு அநேக அடையாளங்கள் அமைகின்றன. ஒவ்வொன்றும் அதற்கு அடையாளந்தான். எல்லாவற்றிற்கும் ஸம்பந்தம் உண்டு. கர்மாவை அநுஸரித்து கிரஹகதி ஏற்படுகிறது, வியாதி ஏற்படுகிறது, மனசஞ்சலம் உண்டாகிறது, பிசாசாதிகளின் பீடை உண்டாகிறது. எல்லாம் ஒரு கர்மாவின் பலனாகவே உண்டாகின்றன. ஒவ்வொரு வழியிலும் தெரிந்து கொள்ளலாம். இவற்றில் க்ரஹரீதியாக உள்ள பலன்களைத் தெரிந்து கொள்ள கணக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is கிரஹமும், நக்ஷத்திரமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  சகுனம், நிமித்தம்
Next