அதிகார புருஷர் வரிசையே ஆசார்ய பரம்பரை : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

பூர்வாசார்யர்களின் கதைகளைத் தெரிந்துகொண்ட பிறகே ஆசார்யாள் கதையைத் தெரிந்துகொள்வது முறை என்பதால் தெரிந்துகொண்டோம்.

நம்முடைய அறிவாகிய ஆத்ம ஜ்யோதிஸைப் பூர்ணமாக ப்ரகாசிக்கச் செய்து, நம்மைத் துக்கமில்லாமல் ஆக்குவதற்கான ஸாதனங்களைக் கொடுக்க நமக்கு ஆசார்யர் அவச்யம் வேண்டும். இப்படி ஒரு காலத்தில் வருகிற ஆசார்யர் பிற்காலத்தில் இந்தக் கார்யத்தைத் தொடருவதற்காக இன்னொருவருக்கு அதிகாரம் கொடுக்கிறார். தம் அறிவையும் அநுபவத்தையும் அவருக்குள்ளே செலுத்துவதால் இப்படிப்பட்ட அதிகாரத்தை அளிக்கிறார். இப்படியே வரிசையாக அதே ஞானக் கரண்ட் தொடர்ச்சியாக அதிகாரம் பெற்றவர்களின் வழியாக குரு பரம்பரை என்பதாகப் பாய்வதால்தான் லோகத்துக்கு எல்லாக் காலத்திலும் விடாமல் ஞான வெளிச்சம் கிடைக்கிறது. எலெக்ட்ரிஸிடியை ‘சார்ஜ்’ ஆவது என்கிறோம். ஒருத்தர் இன்னொருத்தருக்கு அதிகாரம் கொடுப்பதையும் ‘சார்ஜ்’ கொடுப்பதென்றே சொல்கிறோம்! ஒரு குரு தம் சிஷ்யருக்குள் ஞான எலெக்ட்ரிஸிடியைச் சார்ஜ் பண்ணி அப்புறம் ‘என் மாதிரி நீ இனிமேல் குருவாயிரு’ என்று பதவியை ஒப்படைத்தும் அவருக்கு சார்ஜ் கொடுக்கிறார்! அதிகார பூர்வமாக சார்ஜ் வாங்கிக்கொண்டவர்தானே ஆபீஸ் பண்ணமுடியும்? குருவின் ஆபீஸும் அப்படித்தான். யார் வேண்டுமானாலும் குரு என்று உட்கார்ந்துவிட முடியாது. வரிசை க்ரமத்தில் இப்படி அதிகாரம் பெற்றவர்களைத்தான் குரு பரம்பரை என்பது. அவர்களே ஞான ப்ரகாசத்தைத் தொடர்ந்து லோகத்துக்குக் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள். இந்தப் பரமோபகாரத்தைப் பண்ணுபவர்கள் என்பதால்தான் ஆசார்ய பரம்பரையைப் பற்றி ஆசார்யாள் கதையில் தெரிந்துகொள்ள வேண்டியது அவச்யம் என்று கேட்டோம்.

இனிமேல் அவருடைய அவதாரக் கதைக்குப் போகலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is கோவிந்தரின் சிறப்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  வேண்டுதலும் வரமும்
Next