ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – பூர்ணவர்மன் விஷயம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

வெள்ளைக்காரர்கள் கால நிர்ணயம் பண்ணியிருப்பதற்குச் சொல்லும் அடுத்த பாயின்டைப் பார்க்கலாம். ஸூத்ர பாஷ்யத்தில் ஆசார்யாள் பூர்ணவர்மன் என்று ஒரு ராஜாவின் பெயரைச் சொல்லி, “அவனுக்கு முன்னால் ஒரு வந்த்யா புத்ரன் (மலடி மகன்) ஆண்டான் என்று சொல்வது எவ்வளவு அஸம்பாவிதம்” என்று சொல்வதைக் கொண்டு, ‘மகதத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆட்சி நடத்தியவன் ஒரு பூர்ணவர்மன்; அவனைத்தான் அவர் குறிப்பிடுகிறார்’ என்று காட்டுவதாகச் சொன்னேன்.

ஆனால் நிஜமாகவே இருந்த ராஜாவைத்தான் அவர் சொல்லியிருக்கவேண்டும் என்று அடித்துச் சொல்ல முடியுமா? முடியாது. ஜெனரலாக மநுஷ்யர்களைக் குறிப்பிடும்போது, ‘யாரோ ராமன் – கிருஷ்ணன் அல்லது சேஷன் – சுப்பன்’ என்று நாம் பேச்சிலே சொல்கிறோம். Tom, Dick and Harry என்று இங்கிலீஷில் சொல்கிறார்கள். இந்தப் பெயர்கள் வாஸ்தவத்தில் உள்ள எவரையும் குறிப்பிடுவன அல்ல. உதராணத்திற்கு ஏதோ பெயர் காட்டணும்; இந்தப் பேர்களைக் காட்டுகிறோம்! ஆசார்யாளே இப்படி பாஷ்யங்களில் தேவ தத்தன், யஜ்ஞ தத்தன் என்றெல்லாம் பெயர்கள் சொல்லியிருக்கிறார். அவர்கள் யார் என்று இது மட்டும் யாரும் ஆராய்ச்சி பண்ணிப் பார்க்கவில்லை! பொதுப் பேர்கள் என்றுதான் ஸரியாகப் புரிந்துகொண்டு, அதோடு விட்டிருக்கிறார்கள். அப்படி (பூர்ணவர்மனைச் சொல்லும்) இந்த இடத்திலும் இருக்கலாம். ஸத்தை அஸத்தோடு (உள்ளதை இல்லாததோடு) ஸம்பந்தப்படுத்த முடியாது, அப்படிச் செய்வது அஸம்பாவிதம் என்று காட்ட வருகிறார். அப்போது பூர்ணவர்மன் என்ற பெயரில் பொதுவாக ஒரு ராஜாவைக் குறிப்பிட்டு, அந்த யாரோ ஒரு ராஜாவுக்கு முன்னால் என்றைக்குமே இருக்கமுடியாத — அ-ஸத்தான — ஒரு மலடி மகன் இருந்தான் என்றால் பொருந்துமா என்று கேட்கிறார். ஆகையால் இவனுக்கு ‘ஸத்’தைக் குறிப்பதான பேர் வைத்தால் ரொம்பப் பொருத்தமாயிருக்குமல்லவா? அ-ஸத் என்பது சூன்யம். ஸத் அதற்கு நேரெதிர் என்றால் சூன்யத்துக்கு நேரெதிர் பூர்ணம்தானே? அதனால் ‘பூர்ணவர்மன்’ என்று போட்டிருப்பார் என்று சொல்லலாம்.

பூர்ணவர்மன் என்கிற மகதராஜா தீவிரமான பௌத்தனென்று ஹுவான் த்ஸாங் சொல்வதிலிருந்து தெரிகிறது. புத்த கயையில் போதி வ்ருக்ஷத்தை மறுபடி துளிர்க்கப் பண்ணியவன் என்று சொன்னேனல்லவா? வேதாந்தத்தை நிலை நாட்டிய ஆசார்யாள் ஒரு பௌத்த ராஜாவை ஸூத்ர பாஷ்யத்தில் குறிப்பிட வேண்டிய அவச்யமில்லை. பௌத்த நூல் எதிலாவது அவன் பெயர் சொல்லியிருக்கிறதென்றால் அர்த்தமுண்டு. அப்படியாவது அவன் நிகழ்காலத்திலிருந்த ஒரு பெரிய சக்ரவர்த்தியாயிருந்தாலும் குறிப்பிட்டிருக்கலாம். அதுவுமில்லை. அவனோ கி.பி. 650-ஐ ஒட்டி இருந்தவன். அதுவும் ஒரு சிற்றரசனாகவே இருந்தவன். ஆசார்யாளின் காலம் என்று அவர்கள் சொல்வதோ கி.பி. 800ஐ ஒட்டி. அதாவது அவனுக்கு 150 வருஷத்திற்கு அப்புறம். ஸூத்ர பாஷ்யம் படிக்கிறவர்கள் 150 வருஷம் முந்தி இருந்த ஒரு பௌத்தச் சிற்றரசனையா நினைவு வைத்துக்கொண்டிருப்பார்கள்? ஆசார்யாள் அவனை எதற்குக் குறிப்பாக நினைவு வைத்துக்கொண்டு குறிப்பிடணும்? [சிரித்து] சூன்யவாதியான பௌத்த ராஜாவுக்குப் பூர்ணவர்மன் என்று பேர் இருப்பதை வைத்து ஹாஸ்யம் வேண்டுமானால் பண்ணியிருக்கலாம்! ஆனால் இங்கே ஆசார்யாள் ஜாடைமாடையாகக் கூட அப்படியொன்றும் பண்ணாமல் factual-ஆகத்தான் சொல்லிக்கொண்டு போகிறார்.

ஒன்றும் யோசனை செய்யாமல் ‘ரிஸர்ச்’ என்று எதையாவது சொல்லிவிட்டால் கேட்பவர்களும் யோசனை செய்யாமல் ‘ஆமாம்’ போட்டுவிடுவதாக இருக்கிறது.

அதனால்தான் அவர்களும் தீர்க்காலோசனை பண்ணாமல் எதையும் கேட்கலாமென்று சில ஆர்க்யுமென்ட்கள் எழுப்பியிருக்கிறார்கள். இப்படியொன்று: ‘ஹுவான்-த்ஸாங் சங்கரர் என்ற பெயரையே சொல்லவில்லையே! இவர் எப்படி அவருக்கு முந்தி இருந்திருப்பார்?’ என்பது. ஹுவான்-த்ஸாங்குக்கு பௌத்த மதத்தில்தான் அபிமானம். அவர் உபநிஷத்துக்கள், ப்ரஹ்ம ஸூத்ரம், கீதை என்ற நம்முடைய ப்ரஸ்தான த்ரயங்களைக்கூடத்தான் குறிப்பிடவில்லை. ஆனால் இந்த ரிஸர்ச்காரர்களே அவையெல்லாம் அவருக்கு எத்தனையோ ஸெஞ்சுரி முற்பட்டவைதானென்று ஒப்புக் கொண்டிருக்கிறார்களா, இல்லையா?

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is 17. அநுக்ரஹமே லக்ஷ்யம், ஆராய்ச்சி அல்ல
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  19. 'அபிநவ சங்கரர்'
Next