மண்டனரின் பண்டித நகரம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

மண்டனமிச்ரரைப் பார்ப்பதற்காக ஆசார்யாள் மாஹிஷ்மதீ நகரத்திற்கு வந்தார். ‘ஐயோ, இந்தக் கர்ம மார்க்கக்காரர்கள் நித்யமான ஆனந்தம் என்ன என்பதில் புத்தியைச் செலுத்தாமல் அநித்யமான ஆனந்தத்தையே தரும் கர்மாவைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்களே! மோக்ஷமார்க்கத்தில் சேராமல் திருப்பித் திருப்பி ஜன்மா எடுக்கிறார்களே! (வாதச்) சண்டை போட்டாவது இவர்களை நல்ல வழிக்குத் திருப்பணும்’ என்ற கருணையிலேயே ஆசார்யாள் அலையாய் அலைந்தது. கருணையினாலேயே சண்டை!

ஊருக்குப் வெளியிலே ஆற்றங்கரையில் ஸ்த்ரீகள் தீர்த்தம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். “மண்டனமிச்ரரின் க்ருஹம் எங்கே இருக்கிறது?” என்று ஆசார்யாள் அவர்களைக் கேட்டார்.

அந்த ஊர் முழுவதையும் எப்படி மண்டன மிச்ரர் பண்டித லோகமாக்கியிருந்தார், மீமாம்ஸை, ந்யாயம் முதலான சாஸ்த்ர விஷயங்கள் பாமரப் பெண்டுகளுக்கும், இன்னும் கிளி மாதிரியான பக்ஷிகளுக்குங்கூட அற்றுபடி ஆகிற விதத்தில் எப்படி ப்ரசாரம் பண்ணியிருந்தார் என்பதை ‘சங்கர விஜய’ங்கள் இந்த இடத்தில் நயமாகச் சொல்கின்றன.

வழி கேட்ட ஆசார்யாளிடம் அந்தப் பெண்கள் ச்லோக ரூபமாகவே பதில் சொன்னார்களாம். சாஸ்த்ரக் கொள்கைகளில் பலவற்றை ஒவ்வொன்றாக அந்த ச்லோகங்களில் முதல் பாதத்தில் சொல்லி, மற்ற மூன்று பாதங்களில் ஒரே போல, “எந்த வீட்டு வாசலில் உள்ள கூண்டுகளிலிருந்து பெண் கிளிகள் இந்தக் கொள்கைகளைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றனவோ, அதுதான் மண்டனமிச்ரரின் வீடு” என்று முடித்தார்கள். முதல் பாதத்தில் ஏதாவது ஒரு ஸித்தாந்தத்தின் பெயர் வரும். அப்புறம் மூன்று பாதங்களில் பொதுவாக,

சுகாங்கநா யத்ர கிரம் வதந்தி
த்வாரே து நீடாந்தர ஸந்நிருத்தா:
அவேஹி தம் மண்டநமிச்ர தாம 1

என்று வரும்.

‘சுகாங்கனா’ என்றால் பெண் கிளி. (ஆசார்யாளிடம் இச் ஸ்லோகங்களைச்) சொல்பவர்களும் பெண்கள்; அவர்கள் மண்டனமிச்ரனின் வாசல் குறட்டில் சாஸ்த்ர விசாரம் செய்வதாகச் சொல்கிறவையும் பெண் கிளிகள். புருஷர்கள் அளவுக்கு ஸ்த்ரீகள் வித்யாப்யாஸம் பண்ணாத காலமானதால் அந்த ஊரின் பாண்டித்ய விசேஷம் தெரிவதற்காக இப்படிச் சொல்லியிருக்கிறது!

ப்ரமாணங்களைப் பற்றிய ரொம்பவும் சிக்கலான விஷயங்களைக்கூட அந்தக் கிளிகள் வாதம் பண்ணிக்கொண்டிருக்கும் என்று அந்த ஸ்த்ரீகள் சொன்னதாக ‘மாதவீய சங்கர விஜய’த்தில் வருகிறது:

ஸ்வத: ப்ரமாணம் பரத: ப்ரமாணம்
கீராங்கநா யத்ர ச ஸங்கிரந்தே |
த்வாரஸ்த நீடாந்தர ஸந்நிருத்தா
ஜாநீஹி தந்-மண்டந பண்டிதௌக: ||

(பின் மூன்று பாதங்களைப் பார்த்தால் ‘ஆனந்த கிரீய’த்தை ‘மாதவீயம்’ எவ்வளவு நெருக்கமாக அநுஸரிக்கிறதென்பது தெரியும்.)

இது ப்ரமாணம், இது ப்ரமாணமில்லை என்று நிர்ணயிப்பது ப்ராமாண்ய வாதம் என்பது. ஸ்வத: ப்ரமாணம், பரத:ப்ரமாணம் என்று இரண்டு. ஒரு வஸ்துவை அது இன்னது என்று தெரிந்துகொள்கிறபோதே ‘ஸரியாகத் தெரிந்கொண்டுவிட்டோம்’ என்றும் தெரிந்துகொள்கிறோம்; சில ஸமயங்களில், ‘இல்லை, தப்பாகத் தெரிந்து கொண்டிருக்கிறோம்’ என்றும் தெரிந்துகொள்கிறோம்- உதாரணமாக, தகர டப்பா மேல் பளீரென்று வெய்யில் விழுந்து பார்க்கும்போது அது பளபளப்பதில் வெள்ளிப் பாத்ரமாகத் தெரிந்தாலும், ‘இல்லை, நம்மாத்துத் தகர டப்பாவை அலம்பி வெயிலில் வைத்திருப்பதுதானே?’ என்றும் தெரிந்துகொள்கிறோம். வெள்ளியாக அது மினுக்குவதாக அறிவுக்குத் தெரிந்தாலும், தெரிகிறபோதே இந்த அறிவு ப்ரமாணமில்லை, அப்ராமணந்தான் என்றும் தெரிகிறது! இப்படியே ஒரு வெள்ளிப் பாத்ரத்தையே வெள்ளியாக உள்ளபடித் தெரிந்து கொள்ளும்போது, அல்லது தகர டப்பாவைத் தகரம் என்றே ஸரியாகத் தெரிந்துகொள்ளும்போது நமக்குத் தெரிவது ப்ரமாணம் தான் என்றும் தெரிகிறது. இப்படி ஒன்று தெரியும்போதே அது நிஜமான (ப்ரமாணமான) அல்லது பொய்யான (அப்ரமாணமான) ஞானம் என்றும் தெரிகிறதே, இது நம் அறிவிலிருந்தே – ‘ஸப்ஜெக்டி’வாக, ‘ஸ்வதா’வாக-ஏற்படுவதா, அதாவது ஸ்வத: ப்ரமாணமா, அல்லது வெளி வஸ்துவிலிந்து – ‘ஆப்ஜெக்டி’வாக,’ பரத’ஸாக – ஏற்படுகிறதா, அதாவது பரத: ப்ரமாணமா என்பது பற்றி ந்யாயம், மீமாம்ஸை முதலான தர்சனங்களில் வித்யாஸமாக அபிப்ராயங்கள் உள்ளன. ந்யாய சாஸ்த்ரத்தின்படி ப்ரமாண ஞானம், அப்ராமாண ஞானம் இரண்டுமே பரத: ப்ரமாணம்தான், மீமாம்ஸகர்களோ ‘நாம் தெரிந்து கொள்வது ஸரியானது என்கிற ப்ரமாண ஞானமும் நம் அறிவிலிருந்தே உண்டாவதுதான்; அதாவது ஸ்வத: ப்ரமாணம்தான். ஆனால் நாம் தப்பாகத் தெரிந்துகொள்கிறோம் என்கிற அப்ரமாண ஞானம் வெளி வஸ்துவைப் பொறுத்தே ஏற்படுவது அதாவது பரத: ப்ரமாணம்’ என்பார்கள்.2

இம்மாதிரி ஸமாசாரங்களை மண்டனமிச்ரருடைய அகத்துக் கிளிகள்கூட டிஸ்கஸ் பண்ணிக்கொண்டிருக்குமாம்.

இந்த அடையாளத்தை வைத்துக்கொண்டு ஆசார்யாள் அந்த வீட்டைத் தேடிக்கொண்டு போய்க் கண்டுபிடித்தார்.


1 ‘ஆனந்தகிரீயம்’ 56-வது ப்ரகரணம்.

2 இவ்விஷயம் மேலும் விளக்கமாக “தெய்வத்தின் குரல்” — இரண்டாம் பகுதியில் “ந்யாயம்: யுக்தி சாஸ்திரம்” என்ற உரையில் ‘சில கதைகளும் வாதங்களும்‘ என்ற பிரிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is குமாரிலபட்டர் கதை;கர்மமும் ஞானமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  மண்டனர்-ஸரஸவாணி தம்பதியை வென்றது
Next