ச்ருங்கேரிச் சிறப்பு : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ரொம்ப தூரம் இப்படித் தெற்காக ஸஞ்சாரம் பண்ணி துங்கபத்ரா தீரத்தில் ச்ருங்கேரிக்கு வந்தார்கள். அங்கே நிறை கர்ப்பிணியாயிருந்த ஒரு தவளைக்கு வெயில் படாமல் ஒரு பாம்பு குடை பிடித்துக் கொண்டிருப்பதை ஆசார்யாள் பார்த்தார். ‘தவளையைக் கண்டால் நப்புக் கொட்டிக் கொண்டு பிடித்துத் தின்னுகிற பாம்பு இப்படி ப்ரியமாக ரக்ஷிக்கிறதே? த்வேஷம் தெரியாத இந்த ப்ரதேசத்தில் சாரதாம்பாள் கோவில் கொண்டால் எத்தனை நன்றாயிருக்கும்?’ என்று நினைத்தபடி ஆசார்யாள் நதிக்கரையில் போய்க் கொண்டிருந்தார்.

சட்டென்று ‘ஜல் ஜல்’லும் நின்றது. ‘என்ன ஆச்சு?’என்று திரும்பிப் பார்த்தார்.

என்ன ஆயிருந்ததென்றால் ஆற்றங்கரை மணலில் பாதம் புதைந்து, புதைந்து அவள் நடந்து வந்ததில்தான் சிலம்பு ஓசை பண்ணவில்லை!

இவர் திரும்பிப் பார்த்ததால் அவள் நின்றுவிட்டாள்.

‘எல்லாம் நல்லதற்கே! நாம் நினைத்ததற்கே அவளுடைய நிபந்தனையும் ஸாதகமாயிடுத்து!’ என்று ஆசார்யாள் ஸந்தோஷித்து அங்கேயே சாரதாம்பாளை பீடம் ப்ரதிஷ்டை பண்ணி அமர்த்திவிட்டார்.

அந்த இடம் அவருக்கு ரொம்பப் பிடித்துவிட்டதால் அங்கேயே மடம் ஸ்தாபித்து பஹுகாலம் வாஸம் பண்ணி அவளை உபாஸித்துக்கொண்டிருந்தார். புஸ்தகங்கள் எல்லாம் முதல் பதினாறு வயஸில் எழுதி முடித்த ஆசார்யாள், அப்புறம் இரண்டாம் பதினாறு வயஸில் தான் – பதினாறே வருஷத்தில்தான் – ஆஸேது ஹிமாசலம் மூன்று தரம் தேசம் முழுக்க ஸஞ்சாரம் செய்து, அநேக கார்யங்கள் பண்ணினது. இந்தக் குறைந்த காலத்துக்குள்ளேயே அவர் ‘மாக்ஸிமம்’ காலம் தங்கியிருந்தது ச்ருங்கேரியில்தான் என்று ‘சங்கர விஜய’ங்களிலிருந்து தெரிகிறது.

ச்ருங்கேரி மடத்துக்குத் தனி விசேஷம் என்னவென்றால்: மற்ற மடங்கள் ஆசார்யாள் உத்தேசித்து ஸ்தாபனம் பண்ணியவை. ‘சார்தாம்’ என்று பாரத தேசத்தின் நாலு கோடிகளில் நாலு புராதன க்ஷேத்ரங்கள் உண்டு – வடக்கே பதரிநாதம், மேற்கே த்வாரகாநாதம் (அல்லது ஸோமநாதம்), கிழக்கே ஜகந்நாதம் (புரி), தெற்கே ராம நாதம் (ராமேச்வரம்) என்று. இவற்றில் பத்ரி, த்வாரகா, புரி முதலியவற்றில் மூன்று ப்ரதான மடங்களை ஸ்தாபித்தார். தெற்கே மட்டும் ராமேச்வரத்தில் மடமில்லை. அதாவது தேசத்தில் ஐந்து ப்ரதான மடங்களும், இன்னும் அநேக சின்ன, சின்ன மடங்களுமாக ஆசார்யாள் ஸ்தாபித்ததாகத் தெரிவதில், ராமேச்வரத்தில் ப்ரதான மடம் எதுவும் அவர் அமைக்கவில்லை. சின்னதான மடம் அமைத்திருக்கலாம். பிற்காலத்தி துருக்கர்கள் முதலானவர்கள் ஹிந்து மத விஷயமாக ரொம்ப அக்ரமமாகத் தூள்பண்ணிக்கொண்டு போனபோது சின்ன மடங்களில் அநேகம் எடுபட்டே போய்விட்டதாக ஊஹிக்க முடிகிறது. ஆனால் ப்ரதான மடங்களுக்கும் பாதிப்பு இருந்தாலும் அவை எடுபட்டுப்போவது என்று இல்லாமல், வேற்று ஊருக்கு இடம் மாற்றப்பட்டு அங்கேயிருந்து நடந்து வந்திருக்கின்றன; அல்லது, ஒரு காலத்தில் மூடிப்போனாலும் பிற்பாடு மறுபடி புத்துயிர் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நம்முடைய (காஞ்சி) மடம் நவாபுகள் – இங்கிலீஷ்காரர்கள் – ப்ரெஞ்சுக்காரர்களின் ரகளையில் காஞ்சீபுரத்திலிருந்து முதலில் உடையார்பாளயதுக்கும், அப்புறம் கும்பகோணத்துக்கும் இடம் மாறிற்று. ‘ஜோஷி மட்’ என்று சொல்கிற (பதிரியிலுள்ள) இன்னொரு ப்ரதான மடமான ஜ்யோதிர் மடம் ஒரு காலத்தில் மூடப்பட்டு அப்புறம் புத்துயிர் பெற்றிருப்பதாக அந்த மடதுக்காரர்களே தெரிவித்திருக்கிறார்கள். ஆனபடியால் ராமேச்வரத்தில் ப்ரதான மடம் இருந்தால் அது இப்போது நமக்குத் தெரிந்த பல நூற்றாண்டுகளாக எடுபட்டுப் போயிருக்காது. அதனால்தான் துங்கபத்ரா தீரத்திலுள்ள ச்ருங்கேரியில் ஆசார்யாள் ஸ்தாபித்த மடமே தென் தேசத்துக்கான அவருடைய ப்ரதான மடம் என்று தீர்மானமாகிறது. ஆனாலும் மற்ற மடங்களை அவர் ‘ப்ளான்’ போட்டு ஏற்படுத்தின மாதிரி இது இல்லை. இவர் ‘ப்ளான்’ போட விடாமல், வித்யாதி தேவதையே ச்ருங்கேரியில் மடம் ஏற்படும்படியாகப் பண்ணிவிட்டாள்! அந்த மடத்துக்கெனத் குறிப்பாக ஏற்பட்ட க்ஷேத்ரம் ‘ராம க்ஷேத்ரம்’ என்று வைத்திருக்கிறார். அது ராமேச்வரம் என்றே நடைமுறையில் இருக்கிறது.

அப்புறம், காஞ்சீபுரம் லோகத்துக்கே நாபி என்ற மத்ய ஸ்தானமாக இருந்ததால் அங்கே மட ஸ்தாபானம் பண்ணினார். இவை முக்யமான மடங்கள். இன்னும் பலவும் ஸ்தாபித்தார். எல்லாம் அவர் உத்தேசப்படி. ச்ருங்கேரியில்தான் சாரதாம்பாள் தன் உத்தேசப்படி மடம் ஏற்படுத்திக் கொண்டது!

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is மண்டனர்-ஸரஸவாணி தம்பதியை வென்றது
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  ஸுரேச்வரரின் தனித்தன்மையும் சிறப்பும்
Next