தாந்தம்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஐந்தாம் பத்து

தாந்தம்

திருக்கூடலூர்

இவ்வூருக்கு ஆடுதுறைப் பெருமாள் கோயில் என்று பெயர். தேவர்கள் கூட்டமாக் கூடி பகவானை (இந்த எம்பெருமானை) வணங்கி வாழ்த்திய இடமாதலால் இவ்வூருக்குக் கூடலூர் என்று பெயர். இங்கிருக்கும் பெருமாளுக்கு வையம் காத்த பெருமாள் என்று பெயர். இவ்வூர் திருவையாற்றுக்குக் கிழக்கே ஏழு மைல் தொலைவில் உள்ளது.

கலி விருத்தம்

பாண்டவதூதர் பயிலும் ஊர் கூடலூர்

1358. தாம்தம் பெருமை யறியார், தூது

வேந்தர்க் காய வேந்த ரூர் போல்,

காந்தள் விரல்மென் கலைநன் மடவார்,

கூந்தல் கமழும் கூட லூரே. 1

நம்பின்னை நாயகர் தங்கும் ஊர்

1359. செறும்திண் திமிலே றுடைய, பின்னை

பெறும்தண் கோலம் பெற்றா ரூர்போல்,

நறுந்தண் தீந்தே னுண்ட வண்டு,

குறிஞ்சி பாடும் கூட லூரே. 2

அடியேனுள்ளம் புகுந்தவர் ஊர் இது

1360. பிள்ளை யுருவாய்த் தயிருண்டு, அடியேன்

உள்ளம் புகுந்த வொருவ ரூர்போல்,

கள்ள நாரை வலலுள், கயல்மீன்

கொள்ளை கொள்ளும் கூட லூரே. 3

குறளுருவாய பெருமான் வாழும் ஊர்

1361. கூற்றே ருருவின் குறளாய், நிலநீர்

ஏற்றா னெந்தை பெருமா னூர்போல்,

சேற்றே ருழவர் கோதைப் போதூண்,

கோல்தேன் முரலும் கூட லூரே. 4

தொண்டர் பரவும் அடிகள் அமரும் ஊர்

1362. தொண்டர் பரவச் சுடர்சென் றணவ,

அண்டத் தமரு மடிக ளூர்போல்,

வண்ட லலையுள் கெண்டை மிளிர,

கொண்ட லதிரும் கூட லூரே. 5

சிவனுக்குத் துணைவர் தங்கும் ஊர்

1363. தக்கன் வேள்வி தகர்த்த தலைவன்,

துக்கம் துடைத்த துணைவ ரூர்போல்,

எக்க லிடுநுண் மணல்மேல், எங்கும்

கொக்கின் பழம்வீழ் கூட லூரே. 6

உலகமுண்டான் உறையும் இடம்

1364. கருந்தண் கடலும் மலையு முலகும்,

அருந்தும் அடிக ளமரு மூர்போல்,

பெருந்தண் முல்லைப் பிள்ளை யோடி,

குருந்தம் தழுவும் கூட லூரே. 7

திருநீர்மலைப் பெருமான் வாழும் இடம்

1365. கலைவாழ் பிணையோ டணையும், திருநீர்

மலைவா ழெந்தை மருவு மூர்போல்,

இலைதாழ் தெங்கின் மேல்நின்று, இளநீர்க்

குலைதாழ் கிடங்கின் கூட லூரே. 8

என் உள்ளம் புகுந்தவன் எழுந்தருளிய ஊர்

1366. பெருகு காத லடியேன் உள்ளம்,

உருகப் புகுந்த வொருவ ரூர்போல்,

உருகு கைதை மலர, கெண்டை

குருகென் றஞ்சும் கூட லூரே. 9

பாவம் பறந்து போய்விடும்

1367. காவிப் பெருநீர் வண்ணன், கண்ணன்

மேவித் திகழும் கூட லூர்மேல்,

கோவைத் தமிழால் கலியன் சொன்ன,

பாவைப் பாடப் பாவம் போமே. 10

அடிவரவு: தாம் செறும் பிள்ளை கூற்றேர் தொண்டர் தக்கன் கருந்தண் கலை பெருகு காவி --- வென்றி.






 







 


 


 












 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is அறிவது
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  வென்றி
Next