கண்ணன் காட்டும் ஞானமேயான பக்தி : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

ஞானத்திற்கு பக்தி முக்யமான உபகரணம் என்பதற்கும் மேலே, ஞானமேதான் பக்தி என்று க்ருஷ்ண பரமாத்மா காட்டியிருக்கிறார். நாலு தினுஸு பக்தர்களை அவர் சொல்லி, யாரார் என்று பேர் கொடுக்கும்போது ஆர்த்தன், ஜிஜ்ஞாஸு, அர்த்தார்த்தி, ஞானி என்று சொல்கிறார்: ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்த்தீ ஞாநீ ச பரதர்ஷப.1 ஆர்த்தன் என்றால் கஷ்டப்படுகிறவன். ‘ஜிஜ்ஞாஸு’: ஞானத்திற்கு ஆசைப்படுகிறவன். அதாவது தத்வம் தெரியவேண்டுமென்று ஆசையுள்ளவன், அதற்காக முயற்சி பண்ணுபவன். ‘அர்த்தார்த்தி’ என்றால் பணம், காசு, வீடு, வாசல், பதவி முதலானவற்றை வேண்டுகிறவன். நாலாவதாகச் சொன்ன ‘ஞானி’ – ஞானியேதான்! பக்குவப்படி பக்தர்களை வரிசை செய்யும்போது ஆர்த்தன், அர்த்தார்த்தி, ஜிஜ்ஞாஸு, ஞானி என்பதுதான் சரி. ஆனாலும் ச்லோக ரூபத்தில் சொல்லிக் கொண்டு போகிறபோது, ரஸனை ஸமஞ்ஜஸமாயிருக்க வேண்டுமென்று [சொல்லமைப்பு முறைபாட்டழகோடு இருக்க வேண்டுமென்று] ஜிஜ்ஞாஸுவை முன்னேயும் அர்த்தார்த்தியைப் பின்னேயும் வைத்தார் போலிருக்கிறது. நமக்கு விஷயம், இதில் நாலாவதான உச்ச ஸ்தான பக்தனை அவர் ஞானி என்று வைத்துக் கொள்ளலாமே!’ என்று யாரும் திரிசமன் அர்த்தம் சொல்லமுடியாதபடி அவனை ‘ஏக பக்திக்காரன்‘ என்று அடுத்தாற்போலவே சொல்லி, ‘ஞானியும் நானும் ஒன்றே என்பது என் ஸித்தாந்தம்’ – “ஞானீ-த்வாத்மைவ மே மதம்”என்று முத்தாய்ப்பு வைக்கிறார். அப்புறம் ‘பக்தி யோகம்’ என்றே [ஸகுண, த்வைத உபாஸனையை] உபதேசம் பண்ணும்போது, பக்தனை ப்ரியன், அதீவ (அதி) ப்ரியன் என்கிறாரே2 தவிர “நானே அவன்”என்று சொல்லாததிலிருந்து இங்கே அத்வைத ஞானியைத்தான் சொல்கிறாரென்று தீர்மானமாகிறது. ‘பக்தியோக’ உபதேசத்தில், “நிர்குண ஸாதனை தேஹப் பிரக்ஞையுள்ளவர்களுக்கு க்லேசம் தருவது, துக்கமானது” என்று சொல்லி ஸகுண உபாஸனையான பக்தியை விஸ்தரிக்கிறார். அதாவது தேஹ ப்ரக்ஞை ஜாஸ்தியுள்ளவர்களுக்கு ஞான வழி லேசில் வராது என்பதால்தான் ஸகுண பக்தியைச் சொல்கிறாரேயன்றி, ஞானத்தைவிட அதுதான் உத்தமானது என்ற அபிப்ராயத்திலில்லை என்று நன்றாகத் தெரிகிறது. அது இருக்கட்டும். அப்புறம் அந்த பக்தி உபாஸகனின் லக்ஷணங்களை “அத்வேஷ்டா ஸர்வ பூதானாம்”3 [எந்தப் பிராணியிடமும் வெறுப்பில்லாமலிருப்பது] என்று ஆரம்பித்து ஏழெட்டு ச்லோகங்களில் சொல்லி “இப்படிப்பட்டவர்கள் எனக்கு அதி ப்ரியமானவர்கள்” என்று அத்யாயத்தை முடித்திருக்கிறார். இங்கே சொல்கிற லக்ஷணங்களெல்லாம் ஞானிக்குச் சொல்கிறவையாகத்தான் இருக்கிறது என்று நடுநிலையில் பார்க்கிற எவருக்கும் தெரியும். பக்தியிலே [பகவானின்] குண கணங்களை அநுபவிப்பது, அழுது சிரித்து ஆடிப் பாடி மெய் சிலிர்த்து மூர்ச்சை போடுவது, தாஸ்யம், வாத்ஸல்யம் முதலான பல பாவங்களில் உறவு கொண்டாடுவது, விதவித அபிஷேகம் அலங்காரம் பண்ணிப் பார்த்துப் பார்த்து ஸந்தோஷப்படுவது முதலானவற்றில் எதையுமே “பக்தியோக”த்தில் ஸ்வாமி சொல்லக் காணோம்! ஸகல ப்ராணிகளிடமும் அன்பு-அருள்; அஹங்கார மமகாரம் இல்லாமலிருப்பது; ஸுக-துக்கங்களில் ஸம த்ருஷ்டி; பூரிப்போ, பொறாமையோ, பயமோ, மனக்குழப்பமோ இல்லாமலிருப்பது; எது கிடைத்தாலும் அதில் ஸந்துஷ்டனாக வீடு வாசலை விட்டுவிட்டு இருப்பது என்றெல்லாம் அவர் கொடுக்கிற லக்ஷணங்கள் ஞான மார்க்கக்காரனுடையதாகத்தான் இருக்கிறது! பொதுவாக பக்தர்களை வர்ணிக்கிற மாதிரியும் ஒரு ச்லோகம் கீதையில் சொல்லியிருக்கிறார்:

மச்சித்தா மத்கதப்ராணா போதயந்த: பரஸ்பரம் |
கதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச ||4

‘சித்தத்தை என் விஷயமாகவே ஆக்கிக் கொண்டவர்கள், என்கிட்டே ப்ராணனையே வைத்தவர்கள், ஒருத்தருக்கொருத்தர் என்னைப் பற்றியே ஸதாவும் போதித்துக் கொண்டு என் கதைகளையே பேசிக்கொண்டு அதுவே த்ருப்தி, அதுவே ஆனந்தம் என்று இருப்பவர்கள்’ என்று சொல்கிறார். ஆனால் அப்படிச் சொல்வது ‘பக்தி யோக’த்தில் இல்லை; ‘பக்தர்கள்’ என்று பொதுவாக நினைக்கப்படுபவர்களைப் பற்றியும் இல்லை. ‘விபூதி யோகம்’ என்பதில் தம்முடைய ஐச்வர்ய சக்தியே ஸகல விஷயங்களிலும் வியாபித்திருப்பதைச் சொல்கிறபோது தான், இவ்வாறாகத் தம் ஐச்வர்யத்தை எங்கும் தெரிந்து கொண்ட ‘புதர்’கள் தம்மிடமே சித்தத்தையும் ப்ராணனையும் வைத்து கதை பேசிக் களிக் கூத்தாடுகிறார்கள் என்கிறார். புதர்கள் என்றால் அறிவு வழியில் போகிறவர்கள். ஆனாலும் வறட்டு வேதாந்திகளாக இல்லாமல் “பாவ ஸமன்விதர்கள்” என்று அவரே சொல்கிறபடி அன்பு கலந்த ஈடுபாட்டோடு கூடியிருப்பவர்கள். அதாவது ஆசார்யாள் ஞானவழிக்காரன் எப்படி இருக்கணும் என்கிறாரோ அப்படி இருப்பவர்கள். மேற்கொண்டு ஸ்வாமி சொல்கிற போது, இவர்களுக்கு பக்தி யோகத்தைத் தாம் கொடுக்கப் போவதாகச் சொல்லவில்லை; புத்தி யோகமாகிற ஞான மார்க்கத்தையே அநுக்ரஹித்து ஞான தீபத்தால் அவர்களிடம் பாக்கி சாக்கி இருக்கும் அஞ்ஞான தமஸை அழித்துவிடப் போவதாகவே ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறார்.

முடிக்கிற அத்யாயத்திலும் “பக்த்யா மாம் அபிஜானாதி”5 – பக்தியினால் என்னை ஸரிவர அறிகிறவர் – என்று ஞான ஸமாசாரமாகத்தான் சொல்கிறார். ‘(ஜ்)ஞா’ என்ற வேர்ச் சொல்லிலிருந்துதான் ‘(ஜ்)ஞானம், ‘ஜானாதி’ என்ற இரண்டும் உண்டாவது. “பக்தியினால் என்னை உள்ளபடி அறிந்து எனக்குள்ளேயே புகுந்து என் அநுக்ரஹத்தால் அழியாத சாச்வத பதத்தை அடைகிறான்” என்று அத்வைதமாகவே சொல்லியிருக்கிறார். தொடர்ந்து, அர்ஜுனனையும் அப்படி இருக்கும்படி உபதேசிக்கும் போது, “புத்தி யோகத்தைக் கைக்கொள்ளு” என்றே சொல்கிறார்; ‘பக்தி யோகம்’ என்றில்லை.

ஆக, மணியடித்து பூப்போட்டுப் பூஜையில்லை; பல தினுஸு பாவங்களில் உறவு கொண்டாடுவதில்லை. ஆனாலும் அன்போடு தன்னையே மூல உயிருக்குத் தந்து கொள்கிற உணர்ச்சியாகிய பரம உத்தம பக்தியானது ஞான வழியில் முக்யமான இடம் பெற்றிருக்கிறதென்று எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டியது.


1 கீதை VII. 16

2 கீதை XII. 14-20

3. கீதை XII. 13

4 கீதை X. 9

5 XVIII. 55

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ஸ¨த்ர பாஷ்யத்திலும் !
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  மூன்றாவது கட்டம்
Next