முருகனும் மூத்தோனும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

தாத்தா, அப்பா, அம்மா, மாமா எல்லாரும் ரொம்பவும் பெரியவர்களாக இருக்கிறார்கள்.அது மட்டுமில்லை. கூடப் பிறந்தவரும் ரொம்ப மஹிமையுள்ளவர். கூடப் பிறந்தவரென்றால் இவருக்கு அண்ணா கிடையாது. இவர்தான் “மூத்த பிள்ளையார் மும்மணிக்கோவை” என்றே இவர்மேல் ஒரு ஸ்தோத்ரம் இருக்கிறது. ப்ரபஞ்சத்துக்கே முதல் குழந்தை அவர். “ஜ்யேஷ்ட ராஜா” என்பது வேதமே அவருக்குக் கொடுத்திருக்கிற பெயர். கணபதிதான் எல்லாருக்கும் அண்ணா. அவருக்குத் தம்பிதான் உண்டு.

தமையன் பெரிய ஆஸாமியாயிருந்தால் அவன் பெயரை வைத்துக்கொண்டே தம்பி தடபுடல் பண்னுவதுண்டு இப்படியே தம்பிக்காரன் பிரமுகனாயிருந்தாலும், தனக்காக யோக்யதையில்லாத அண்ணன்காரன் அதைக்காட்டி அதிகாரம் பண்ணவதுண்டு. இங்கேயோ ஈச்வர புத்ரர்கள் இரண்டு பேருமே சக்தி, ஸாமர்த்யங்களிலும் அநுக்ரஹத்திலும் ரொம்பவும் உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் பிள்ளையாருக்கு உறவுகளைச் சொல்லிப் பெருமை காட்டும்போது தம்பியையும் சொல்ல வேண்டியிருக்கிறது.

பிள்ளையாருக்கு விசேஷமாகப் பதினாறு பெயர்கள் உண்டு. ஷோடச நாமாக்கள் என்று சொல்வார்கள். (ஷோடசம் என்றால் பதினாறு) அஷ்டோத்தர (சத)ம் சொல்லிப் பூஜை பண்ண முடியாவிட்டாலும் இந்தப் பதினாறு நாமாக்களையாவது சொல்ல வேண்டும்.

ஸுமுகச்ச ஏகதந்தச்ச கபிலோ கஜகர்நக: |

லம்போதரச்ச விகடோ விக்நராஜோ விநாயக: ||

தூமகேதுர் கணாத்யஷோ பாலசந்த்ரோ கஜாநந: |

வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸகந்தபூர்வஜ: ||

கடைசிப் பெயர் ‘ஸ்கந்தபூர்வஜர்’ – அதாவது ‘ஸ்கந்தனுக்கு முன்னாடிப் பிறந்தவர்.’ தம்பியை வைத்துத் தமையனாருக்குப் பெருமை கொடுக்கும் பெயர்!

இப்படி இவருடைய பல உறவுக்காரர்களைப் பார்த்தாலும் இவர் ரொம்ப பெரிய இடத்துப் பிள்ளை என்று தெரியும். அதனால் அந்தப் பிள்ளையை நாம் மனங் குளிர்ந்திருக்கும் படியாகப் பண்ணவேண்டும். அதற்குக் கோபம் உண்டாகும்படியாக எதுவும் பண்ணாமல் ஜாக்கிரதையாயிருக்கவேண்டும். மூவுலகத்தின் மூத்த குழந்தையுடைய ப்ரீதியை நாம் முக்யமாக ஸம்பாதித்துவிட வேண்டும். நல்ல மனஸ், அருள் உள்ளம், இரக்க குணம் உள்ள அவர் எளிதிலே த்ருப்தி கொண்டுவிடுவார். எப்போதுமே ஆனந்தமாயிருக்கும் அவரை நாமும் கொஞ்சம் குஷிப்படுத்தி விட்டால், அவருடைய மாதா பிதாக்களான பார்வதீ பரமேச்வரர்களின் மனஸையும் குளிரப்பண்ணி அவர்களிடமிருந்து ஸகல நலன்களையும் பெற்றுவிடலாம்.*


* அடுத்த உரையும் இதன் தொடர்புடையதே.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பெற்றோர் பெருமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  மரியாதைக்குறிய குழந்தை
Next