ப்ரஹ்மம் – ஆத்மா – ஈச்வரன் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஸத்ய தத்வத்தை மறைத்து த்வைதக் காட்கிகளையும் அநுபவங்களையும் உண்டாக்கும் சக்தியைத்தான் மாயை என்பது. அந்த ஸத்யமான ஆத்ம தத்வத்துக்கு அந்ய வஸ்துவே கிடையாதாதலால் இந்தக் காட்சிகள், அநுபவங்கள் ஆகியவையும் அதனுடைய வேஷங்கள்தான். ஸத்ய தத்வத்தை மறைப்பதை ஆவரணம் என்றும், அந்த ஒன்றையே பல வேஷங்களில் காண்பிப்பதை விக்ஷேபம் என்றும் சொல்வார்கள். மாயைக்கு ஆவரண – விக்ஷேப சக்திகள் இருக்கின்றன என்று சொல்வார்கள். இப்படி மாயையால் வேஷங்கள் போடுபவன்தான் ஈச்வரன். அதாவது ப்ரஹ்மமே மாயையோடு கூடி ஈச்வரனாகி த்வைதங்கள் நிறைந்த ஜகத்தைத் தன்னிலேயே தோற்றுவித்துக் கூத்தடிக்கிறது.

அதென்ன ப்ரஹ்மம் என்றால் அது ஆத்மாதான். சின்ன ஜீவனுக்கு மூலம் என்ன என்று பார்க்கும்போது ஆத்மா என்று சொல்கிறோம். பெரிய ஜகத்துக்கு மூலம் என்ன என்று பார்க்கும்போது ப்ரஹ்மம் என்கிறோம். ஜீவ மூலமும் ஜகத் மூலமும் ஒன்றுதான். ஒன்றிலிருந்தேதான் ஜீவ – ஜகத்துக்கள் தோன்றியிருப்பது. ஜீவ மூலமான ஆத்மாவுக்கு அந்யமாக எதுவுமில்லை என்று சொன்னபின் ப்ரஹ்மம் மட்டும் அதற்கு வேறாக இருக்கமுடியுமா? ஆத்மாவும் ப்ரஹ்மமும் ஒன்றேதான். ஆனாலும் அந்த ஒரே ஸத்ய வஸ்துவை ஜீவனை மட்டும் குறித்ததாகச் சொல்லும்போது ஆத்மா என்றும், எத்தனையோ லக்ஷக்கணக்கான ஜீவராசிகளும் கோடாநு கோடி வஸ்துக்கள் கொண்டதான ஜட ப்ரபஞ்சமும் அடங்கிய ஜகத்தைக் குறித்ததாகச் சொல்லும் போது ப்ரஹ்மம் என்றும் சொல்வதாயிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஈசுவரன் : த்வைத - அத்வைதப் பாலம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  விடுவிப்பு ஈசனாலேயே
Next