ஆலோசித்து அறிய வேண்டியவை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அதனாலே, கொஞ்சம் உங்களையே ஆலோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இப்போது வாழ்க்கையில் உங்களுக்கு நிம்மதியாயிருக்கிறதா? ஏதோ அப்பப்போ கொஞ்சம் ஸந்தோஷம், த்ருப்தி ஏற்பட்டாலும், ஒன்று மாற்றி ஒன்று ஏதோ இழுபறிச் சக்திகளிடம் மாட்டிக் கொண்டு சாந்தியில்லாமல் ச்ரமப்பட்டுக் கொண்டே இருக்கும்படிதானே இருக்கிறது? ‘ஆஹா’ என்று, ‘அக்கடா’ என்று, ‘நமக்குக் கவலையே இல்லை, பயமே வராது, துக்கமே வராது’ என்றெல்லாம் சொல்லும்படியான உறுதிப்படுத்திய சாந்தியாயிருக்கிறதா? இல்லையோல்லியோ?

இல்லை என்றுதான் பதில் சொல்வீர்கள்.

ஸரி, எதனால் இத்தனை சலனம், பறப்பு? இழுபறி, ச்ரமம் எதனால்?

இதை யோசித்தீர்களானால், யாராலும் க்ஷணம்கூடச் சும்மா இருக்காமல் ஏதாவது கார்யம் செய்துகொண்டே இருக்கத் தோன்றுவதாயும், இந்தக் கார்யங்களினால்தான் சாந்தியைக் குலைக்கிற எல்லாம் வந்து சேருவதாயும் தெரியம். கார்யமேயில்லாவிட்டால்தான் சாந்தி என்பது இரண்டும் இரண்டும் நாலு என்கிற மாதிரி எவருக்கும் தெரியும்.

‘எதற்காகக் கார்யம்? என்பது அடுத்த கேள்வி. இதை யோசித்துப் பாருங்கள். பார்த்தால் பலவிதமான ஆசைகளில் எதுவோ ஒன்றின் பூர்த்தியை முன்னிட்டுத்தான் ஒவ்வொரு கார்யமும் என்று புரியும்.

கோபத்தினாலோ மோஹத்தினாலே வேறெந்த உணர்ச்சியினாலோ செய்கிற ஸகல கார்யங்களுங்கூட, அந்த உணர்ச்சிகளுக்கெல்லாம் அடியிலே மூலமாகப் பதுங்கியிருக்கிற ஒரு ஆசையினாலேதான் என்று கொஞ்சம் தீர்க்கமாக ஆலோசித்துப் பார்த்தால் புரிந்துவிடும்.

ஸரி, கார்யத்தை நிறுத்திவிடலாமா என்று பார்த்தீர்களானால், அது லேசில் ஸாத்யமில்லை என்பது தெரியும். ப்ரக்ருதி (நேச்சர்) ஒருத்தனை ஏதாவது கார்யத்தில் ஏவிக்கொண்டேதானிருக்கிறது என்று தெரியும்.

அதனாலேதான், சாஸ்த்ரம் இந்த ஸ்டேஜில் என்ன சொல்கிறென்றால், ‘கார்யம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டுச் செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஸ்வந்த ஆசைக்காகச் செய்வது என்றில்லலாமம் உலக நலனுக்காக கார்யங்களைப் பண்ண ஆரம்பியுங்கள்’ என்கிறது. உலகத்தில் பலதரப்பட்ட கார்யங்கள் நடக்கவேண்டியிருப்பதால், அவற்றை அழகாக ‘ஸ்வதர்ம்ம’ என்று பிரித்து ஒவ்வொருவருக்கும் பாரம்பர்யமாக ஒன்றைக்கொடுத்திருக்கிறது.

அந்தப்படி பண்ண ஆரம்பியுங்கள்.

அப்புறம் தெரியம், ஸொந்த ஆசைக்கு இடம் கொடுக்காமல்தான் இருக்கத்தான் கர்மாநுஷ்டானம் ஸஹாயம் செய்கிறதே தவிர, அந்த ஆசை எழும்பாமல் அழிந்து போவதற்கு நேராகப் போராடி ஜயித்துத் தரவில்லை என்று. ஸ்வதர்ம கார்யங்களானவை ஸ்வய ஆசைகள் படருவதற்கு அவகாசம் தராமல் ‘டைவர்ட்’தான் செய்கின்றனவே தவிர, அவற்றை அப்படியே அழித்துவிடுவதற்குப் பயன்படுவதில்லை என்று தெரியும்.

இந்த விஷயத்திலே ஸஹாயம் செய்யத்தான் சாஸ்த்ரங்க்ள் பக்தியைச் சொல்லியிருப்பது. ஆசை உண்டாவதற்கு உற்பத்தி ஸ்தானம் மனஸ். அதை இந்தரியங்களிலிருந்து ஈச்வரன்கிட்டே திருப்பினால்தான் நேராக ஸ்வய ஆசைகளை நிறுத்தமுடியும். ஆனாலும் முதலில் ஸ்தூல தேஹத்தில்தான் ஜனங்களுக்குத் ‘தான்’ என்ற எண்ணம் அதிகமிருப்பதால், தேஹத்தைக் கொண்டு செய்யும் கார்யத்தைத் தூய்மைப்படுத்தித் தருவதற்கே முதலில் முக்யம் கொடுத்து, அப்புறம் தான் ஸூக்ஷ்மமான மனஸை deal பண்ணுவதற்குப் பிராதான்யம் கொடுத்திருக்கிறது. இப்படி ரெண்டாவது கட்டத்திலே மனஸிலிருந்து ஆசைகளை எல்லாம் நீக்கி ஈச்வர பக்தி பண்ணிவந்தாலே ஸம்ஸார இழுபறி பெருமளவுக்குக் குறைந்து, பரிசுத்தமான ஆனந்தமும் சாந்தியும் ஒரு கணிசமான அளவுக்கு உண்டாகிவிடும்.

ஆனாலும்கூட அதற்கும் மேலே ஆலோசனை பண்ணிப் பார்த்தீர்களானால் இப்போதும் கூடப் பூர்ண அமைதியில்லை. சாச்வதமான சாந்தியில்லை என்று தெரியும். பக்தி பண்ணும் போதும் அதிலேயே எத்தனையோ தாபங்கள் இருப்பது தெரியும். ஈச்வரன் என்று ஒருத்தனைப் பக்தி பண்ணுகிறோமே, அவனை உள்ளுக்குள்ளே ஊறி அநுபவிக்கவில்லை என்று தெரியும். அவனுடைய நிஜமான தன்மை என்ன என்று பக்தியிலே தெரியவில்லை, நாம் எதை அவன் தன்னை என்று நினைத்தாலும் அப்படி மட்டும் வந்துதான் அவன் தன்னைக் காட்டிக் கொள்கிறாறென்று தெரியும். அதோடுகூட, இந்த பதியில் அவனுடைய உள் தன்மை என்னவென்று தெரியாதது போலவே நம்முடைய உள்தன்மை – நிஜ ஸ்வபாவம் – என்னவென்பதும் தெரிந்துவிடவில்லை என்று தெரியும். பக்தி பண்ணும் மனஸோடு நாம் முடிந்து விடவில்லை என்பது தன்னை மறந்து பக்தி ஆவேசத்தில் கிடக்கிற ஸமயங்களில் தெரிந்தாலும், அப்போதும் மனஸுக்கு மேலான அந்த நாம் என்ன என்பது அநுபவ பூர்வமாகத் தெரியவில்லை என்றே இருக்கும்.

இதைப் பற்றி நன்றாக ஆலோசனை பண்ணும்போது, ஆசை போவது மட்டும் ஸம்ஸாரப் போராட்டம் தீர்வதற்குப் போதாது என்பது தெரியும். பக்தி பண்ணும் மனஸுக்கும் குறை, தாபம், கஷ்டம் இருப்பது தெரிவதால் மனஸும் போனால்தான் யுத்தம் நிற்கும்; சாச்வதமான சாந்தி உண்டாக்கும் எனறு தெரியும். ஞான நூல்களை ச்ரத்தையோடு அப்போது பயின்றால், ஏகமான ஆத்மாவைப் பற்றியும், அதுவே ஈச்வரனாகவும் ஜீவனாகவும் ஆகியிருபப்தைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். தற்போது மனஸின் மேல் மட்டத்தில் தெரிந்துகொள்வது போலில்லாமல், அப்போது பரிசுத்தி பெற்றுவிட்ட அந்த மனஸின் உள்ளேயே ஆழமாகப் பதியும்படியாக வேதாந்த ஞான உண்மைகளைத் தெரிந்துகொள்ளலாம்.

இப்படியெல்லாம் புரிந்துகொண்டால்,

வெய்யிலில், வெள்ளத்தில் மாட்டிக்கொண்டால் ஒதுக்கிடம் வேண்டிக் கதவைத் தட்டுவதுபோல, strong -ஆன will – ஓடு way -யைத் தேடி, ஓடி, மோக்ஷ வாசல் கதவைத் தட்டுவதில் தீவிரம் பிறக்கும்.

அது ஏற்படுவதற்காகத்தான் ஆத்ம த்யானம் சிறிது முதலிலிருந்தே செய்யச் சொல்வது.

ஆத்மாவை த்யானிக்கவும் முடியாததுதான். த்யானம் உள்பட எதற்குமே விஷயமாகாமல் தனித்து நிற்பது ஆத்மா. ஆனால், அதை நம் மனஸுக்குக் கொஞ்சம் புரிய வைப்பதுபோல்க் கொஞ்சம் நினைக்க முடிகிறதோல்லியோ? ‘ஒரு பாதிப்பும் இல்லாமல், அலையெழாத மஹா ஸமுத்ரம் போல அகண்டமாகக் கிடக்கும் பரம சாந்தநிலை’ என்கிற மாதிரி வர்ணித்துப் பார்க்கும்போதே, ஸம்ஸாரப் போராட்டத்தின் பாதிப்பு நம்மைத் தொடாமல், நாம் ஆத்ம ஆகாசமாய் ஆனந்தமாயிருப்பது போன்ற ஒர் எண்ணம் ஏற்படுகிறதோல்லியோ? வெறும் பாவனை, ப்ரமை என்று வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்! எதுவானாலும் நமக்கு ஆறுதலைத் தந்து நம்மைச் சற்று சும்மாயிருக்கச் செய்கிற எண்ணமாக இது இருக்கிறவரையில் உசத்திதான். இந்த்ரியத்தாலும் மனஸாலும் கெடுதல் பண்ணிக்கொண்டேயிருக்கும் நம்மைக் கெடுதல் மாத்திரமின்றி நல்லது கூடப் பணணாமல் உட்கார்த்தி வைக்க வசதி செய்துதரும். இப்படிப்பட்ட எண்ணத்தில் சிறிது நேரமாவது தோய்ந்திருப்பதுதான் ஆத்ம த்யானம் என்பது. இப்படி ஏதோ ஒரு பாவனையில் ஆரம்பித்தாலே, பாவனை வலுத்து முதிர்ந்து தீவிரமாகும்போது வாஸ்தவ நிலை தன்னைத்தானே தெரியப்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கும்.

ஆக, ஜனங்கள் தாங்கள் ஒரு போராட்டத்திலே மாட்டிக்கொண்டிருக்கிறோம் என்று நன்றாக உணர்ந்து, போரிலே மாட்டிக்கொண்டவர்கள் அமைதி பிறக்காதா என்று எப்படி ஆர்வமாயிருப்பார்களோ அப்படி அமைதியை வேண்டினால், நிச்சயமாக ஆத்ம த்யானம் செய்ய்ம்பொழுது கிடைக்கும். அதிலே நன்றாக மனம் வைத்தபின் வழியும் பிறக்கும்.

மாயா ஸ்வரூபிணியாக இருந்து, தானே இத்தனை நாமாகவும் ஆகிப் போராட்டத்துக்கு ஆளாகி, அதே ஸமயம் அந்தப் போராட்டத்திலிருந்து விலகியிருந்து அதைப் பார்த்து லீலா விநோதம் கொள்கிறவளாயுமுள்ள அம்பாள் தன்னுடைய ஞான ஸ்வரூபத்தைக்கொண்டு, அதற்குள்ளேயே நம் எல்லோரையும் அடக்கிக்கொண்டு, நமக்குப் போர் தீர்ந்த பெரிய அமைதியை அளிப்பதற்கு ப்ரார்த்திப்போம். இதற்கு அவள் ஸங்கல்பிக்க வேண்டும், பெரிய மனஸ் பண்ணவேண்டும். அவளுக்கு Will -ம் Way -ம் ஒன்றுதான். (ஸங்கல்பமும், அதன் நிறைவேற்றத்துக்கான வழியும் ஒன்றுதான்.) அப்படிச் சொன்னால்கூடப் போதாது. அவளுடைய will -ஏ way -யின் முடிவான Goal –ம்கூடத்தான்! (ஸங்கல்பமே மார்க்க முடிவான லக்ஷ்ய ஸித்தியுமாகும்.) ஆனாலும், அவள் தன் ஸங்கல்ப மாத்ரத்தாலேயே எல்லாம் பண்ணாமல், நம்மையும் கருவி மாத்ரமாக்கி, நாமும் ஏதோ ப்ரயாஸைகள், ப்ரயத்னங்கள் செய்வதுபோலக் காட்டிக் காட்டியே பலன் தருவதாக லீலை செய்பவள், ஆனதால், ஆத்மானந்தத்துக்கான ஸாதனை மார்க்கத்தில் நாம் ப்ரவேசிப்பதற்கும், அப்புறம் விடாமல் ப்ரயாணத்தைத் தொடர்வதற்கும் நமக்கெல்லாம் உத்ஸாஹத்தை அருளுமாறு அவளிடம் ப்ரார்த்திக்கிறேன். முடிவிலே, ஞான வாசலைத் திறந்துவிட்டு அவளுடைய ஸத்ய நிலையிலே நாம் இரண்டறக் கரைந்து, எல்லாப் போராட்டமும் தீர்ந்து சாந்தானந்தமாக ஆவதற்கு அவளையே எல்லாரும் ப்ரார்த்தனை செய்துகொள்வோம். அந்த அம்மா நமக்கு ஊட்ட வேண்டிய பால், போட வேண்டிய பிக்ஷை இதுதான்.

ஞான வைராக்ய ஸித்த்யர்த்தம்
பிக்ஷாம் தேஹி ச பார்வதி ||*


* ஆதிசங்கரரின் ‘அன்னபூர்ணா ஸ்தோத்ரம்’.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஆத்ம சிந்தனை அனைவர்க்கும் அவசியம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அத்வைத தத்வமும் நடப்பு நிலையும்
Next