ஆத்ம சிந்தனை அனைவர்க்கும் அவசியம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஞான வாசல் கதவு திறந்து உண்மையைக் காண்பது மநுஷ்ய ப்ராணி ஒன்றுக்குத்தான் உரியது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ப்ராணி வர்க்கங்களில் மநுஷ்யன் ஒருத்தன்தான் தன்னையே பரப்ஹம்மாகத் தெரிந்துகொள்கிற ஞானத்துக்கு முயல முடியுமென்பதால்தான் ‘அரிது அரிது மானுடராய்ப் பிறத்தலரிது’ என்று சொன்னது. இதையேதான் ஆசார்யாளும் ‘விவேக சூடாமணி’யில் ‘ஜந்தூநாம் நரஜந்ம துர்லபம்’ என்றார்.

இதனால், மநுஷ்ய ஜன்மா எடுத்த எல்லாரும் சற்றேனும் ஆத்ம விசாரம் செய்து ஞானத்தை அடைவதற்கு ப்ரயத்னம் பண்ணவேண்டும்.

இதற்கு பொழுது கிடைக்கவில்லை என்று சொல்வது கொஞ்சங்கூட ஸரியில்லை. ‘ரொம்பவும் தாற்காலிகமான ஸந்தோஷங்களை உத்தேசித்தே செய்கின்ற ஸகல கார்யங்களையும் பண்ணப் பொழுது இருக்கிறது. எது சாச்வதமான ஆனந்தமோ, ஸெளக்யமோ அதற்கு ப்ரயத்னம் பண்ணப் பொழுது இல்லை’ என்று சொன்னால் நம்மைப்போல அசடு இல்லை என்றுதான் அர்த்தம்.

மாயை, இயற்கை, nature, மனஸ் என்று தினுஸு தினுஸாக இத்தனையை வைத்து பகவான் லீலை செய்கிறது எதற்காக? இவற்றைக் கொண்டு செய்கிற கார்யங்களைக் கொண்டே இவற்றுக்கு அப்பாற்பட்ட ஸதாநந்தத்துக்கு நாம் வழி தேடிக் கொள்கிறோமோ என்று பரீக்ஷை பார்க்கிறதற்காகத்தான். ஆகையால் கர்மா கழிகிற வரையிலே இந்த லோகத்திலே நாம் கடமைகளை, கர்மாக்களை அநுஷ்டானம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டியதுதான். இதிலே தாம்பத்யம், சாப்பிடுகிறது, பொழுதுபோக்குகளை ரஸிக்கிறது எல்லாங்கூட அடக்கந்தான். வரம்பு மீறாமலிருக்கிறவறை எதுவுமே அந்ததந்த வயஸுக்கட்டம், வாழ்க்கை நிலைகளில் தள்ளுபடியில்லை. எல்லாம் நாம் பக்வமாதவற்குப் படிப்படியாக உதவி செய்கிறவைதான்.

ஆனால் இதுகளோடேயே நின்று விட்டு ஆத்ம சிந்தனைக்குப் பொழுதே இல்லை என்றால் – நாம் எத்தனை பீ.ஏ., எம்.ஏ., படித்திருந்தாலும், டாக்டர் பட்டம் வாங்கியிருந்தாலும் – அசடு என்றுதான் அர்த்தம். ஸம்பாதிப்பது, படிப்பது, குடும்ப வாழ்க்கை நடத்துவது முதலான எல்லாவற்றுக்கும் ‘டயம்’ இருக்கிறது, நிறைந்த நிறைவைத் தரமுடியாத இதற்கெல்லாம் நிறைவைத் தருகிற ஞானத்துக்கு முயற்சி பண்ண ‘டயம்’ இல்லை என்பது, ‘குப்பை செத்தையை எல்லாம் சேர்த்து மூட்டி எரிப்பதற்கு ‘டயம்’ இருந்தது, ஆனால் குளிர் காய ‘டயம்’ இல்லை’ என்கிற மாதிரிதான்! ‘வேலை செய்யப் பொழுதிருந்தது, கூலி வாங்கப் பொழுதில்லை’ என்று சொல்வது போலத்தான் மற்ற ஸகல கார்யத்துக்கும் முடிவு, லக்ஷ்யம் ஆத்மாவில் கொண்டு சேர்ப்பதுதான். அப்படிப்பட்ட ஆத்மாவைப் பற்றி பாவனையாகவாவது த்யானம் செய்வது, அஞ்சு பத்து நிமிஷமாவது இப்படி த்யானம் செய்வது என்று வைத்துக் கொள்ளாவிட்டால் நாம் செய்யும் அத்தனை கார்யமும் தங்களையே முடிவாக்கிக்கொண்டு த்வைதத்தின் அசாந்திகளையே கொடுத்துக்கொண்டிருக்குமேயொழிய ஆத்மாவுக்கு ஏற்றிவிடாது. அந்த முக்கியமான கார்யத்தைக் கொஞ்சம் ‘ட்ரை’ பண்ணிப் பார்ப்பதற்கு ‘டயம்’ இல்லை. இல்லாவிட்டால் மனஸ் பக்வப்பட்டு வரவில்லை என்று சொல்வதெல்லாம் நொண்டி ஸால்ஜாப்புகள்தான். முயற்சி பண்ணி பண்ணித்தான் மனஸைப் பக்வப்படுத்த வேண்டுமே தவிர, பக்வமில்லை என்பதால் முயற்சி பண்ணுவதற்கில்லை என்பது தலைகீழ் வாதம்.

ஸங்கல்ப பலம் இல்லாததால் தான் இப்படி வாதிப்பது நம்மைப் பற்றியே நமக்குத் தன்னம்பிக்கையோ, ஈச்வராநுக்ரஹத்தில் நம்பிக்கையோ இல்லாததால்தான் சாக்குச் சொல்லத் தோன்றுகிறது.

Where there is a will there is a way: மனமிருந்தால் வழியுண்டு. பொய்யான மனஸைப் போக்கிக்கொண்டு மெய்யான ஆத்ம ஸ்வரூபமாவதற்கு முயற்சி பண்ண வேண்டுமென்று மனமிருந்தால் ஞான வாசல் திறக்க நிச்சயம் வழி உண்டு.

Will -ஸங்கல்ப உறுதி – ஏற்படாததற்கு என்ன காரணம்? வழி திறந்து ஞான பூமிக்குப் போகணும் என்பதன் அவச்யம் நமக்குத் தெரியாமலிருப்பதுதான். பெரிய மழையிலே, அல்லது கொளுத்துகிற வெயிலிலே நட்ட நடுத் தெருவிலே மாட்டிக் கொண்டோமானால் எந்த வீட்டிலாவது வாசல் கதவு திறந்திருக்காதா என்று எத்தனை தவிப்போடு தேடுவோம்? எங்கேயாவது உள்ளே போய் ஒதுங்கியாக வேண்டுமென்று அப்போது தீவ்ரமாக எண்ணம், அதாவது ஸங்கல்பம் இருப்பதால், மூடியுள்ள ஏதாவதொரு கதவை இடித்தாவது திறக்கப் பண்ணி வழி ஏற்படுத்திக் கொள்கிறோம். இம்மாதிரி ஆத்மாவுக்குள்ளே போய் ஸ்வஸ்தமாக ஸம்ஸார வெய்யில், அல்லது ஸம்ஸார ப்ரளயம் பாதிக்காமல் இடம் தேடிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணமில்லாததால்தான் விமாசனத்துக்கான ப்ரயாஸை பண்ணாமலே இருக்கிறோம்.

இப்படியிருப்பவர்களுக்கு ஸம்ஸாரத்திலிருக்கிற கஷ்டத்தை, பொய்யை எடுத்துக்காட்டி, விடுதலைக்கான ஆர்வத்தை ஸங்கல்பத்தை ஏற்படுத்தி, அப்புறம் மார்க்கத்தையும் சொல்லிக் கொடுப்பதற்குத்தான் மடாலயங்கள் இருக்கின்றன. உங்களை இவ் விஷயமாகச் சிந்தனையைத் திருப்பச் செய்வதுதான் எங்கள் மாதிரியானவர்களின் கடமை.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is நல்லதற்கும் மேலே செல்க
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஆலோசித்து அறிய வேண்டியவை
Next