நோற்ற நோன்பு

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஐந்தாம் பத்து

நோற்ற நோன்பு

'சீரீவர மங்கலநகர்'எனப்படும் வானமாமலை திவ்யதேசத்திலுள்ள எம்பெருமானை ஆழ்வார் சரணம் புகுகிறார். வானமாமலையிலுள்ள பெருமாளுக்கும் வானமாமலை என்றே பெயர். இவ்வூர் பாண்டிய நாட்டில் இருக்கிறது.

வானமாமலை எம்பெருமானின் அருளை வேண்டல்

ஆசிரியத்துறை

அரவணையானே!நான் உனக்கு அதிக பாரமா?

3183. நோற்ற நோன்பிலேன் நுண்ணறி விலேனோ

கிலுமினி யுன்னைவிட்டு,ஒன்றும்

ஆற்ற கின்றிலேன் அரவினணை யம்மானே,

சேற்றுத் தாமரை செந்நெ லூடுமலர்

சிரீவர மங்கலநகர்,

வீற்றிருந்த எந்தாய்!உனக்கு மிகையல்லே னங்கே. 1

சங்கு சக்கரதாரீ!எனக்கு அருள் செய்

3184. அங்குற்றே னல்லே னிங்குற்றே னல்லேன்

உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து,நான்

எங்குற் றேனுமல் லேனிலங் கைசெற்ற அம்மானே,

திங்கள் சேர்மணி மாடம் நீடு

சிரீவர மங்கல நகருறை,

சங்கு சக்கரத் தாய்!தமி யேனுக் கருளாயே. 2

கருடவாகனா!நான் உனக்கு என்ன பதிலுதவி செய்வேன்?

3185. கருளப் புட்கொடி சக்க ரப்படை,

வான நாட!எங் கார்முகில் வண்ணா,

பொருளல் லாத என்னைப் பொருளாக்கி யடிமை கொண்டாய்,

தெருள்கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ்

சிரீவர மங்கலநகர்க்கு,

அருள்செய் தங்கிருந் தாயறி யேனொரு கைம்மாறே. 3

கண்ணா!எங்கு வந்து உன்னைக் கூவுவேன்!

3186. மாறு சேர்படை நூற்றுவர் மங்க வோரைவர்க்

காயன்று மாயப்போர் பண்ணி,

நீறு செய்த எந்தாய்!நிலங்கீண்ட அம்மானே,

தேறு ஞானத்தர் வேத வேள்வியறாச்

சீரீவர மங்கலநகர்,

ஏறிவீற் றிருந்தாய்!உன்னை எங்கெய்தக் கூவுவனே? 4

வானமாமலையில் உன்னை யாவரும் தொழுகின்றனரே!

3187. எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு?

எவ்வதெவ் வத்து ளாயுமாய் நின்று,

கைத வங்கள்செய் யும்கரு மேனியம் மானே,

செய்த வேள்வியர் வையத் தேவரறாச்

சிரீவர மங்கலநகர்,

கைதொழ இருந்தாய் அதுநானும் கண்டேனே. 5

வானமாமலையே!அடியேன் தொழ வந்தருள்க

3188. ஏன மாய்நிலங் கீண்டவென் அப்பனே!

கண்ணா!என்று மென்னை யாளுடை,

வானநா யகனே!மணிமா ணிக்கச் சுடரே,

தேன மாம்பொழில் தண்சிரீ வரமங்கலத்

தவர்கை தொழவுறை,

வான மாமலை யே!அடி யேன்தொழ வந்தருளே. 6

எந்தாய்!என்னை அகற்றிவிடாதே

3189. வருந்தருளி யென்னெஞ் சிடங்கொண்ட வானவர்

கொழுந்தே, உலகுக்கோர்

முந்தைத் தாய்தந்தை யே!முழு ஏழுலகு முண்டாய்,

செந்தொ ழிலவர் வேத வேள்விஅறாச்

சிரீவர மங்கலநகர்,

அந்தமில் புகழாய்!அடியேனை அகற்றேலே. 7

எந்தாய்!என்னைச் சேற்றில் வீழ்த்திவிடாதே

3190. அகற்ற நீவைத்த மாயவல் லைம்புலன்க

ளாமவை நன்கறிந்தனன்,

அகற்றி யென்னையும் நீஅருஞ் சேற்றில் வீழ்த்தி கண்டாய்,

பகற்கதிர் மணிமாடம் நீடு சிரீவர மங்கை

வாணனே, என்றும்

புகற்கரிய எந்தாய்!புள்ளின்வாய் பிளந்தானே! 8

எந்தாய்!எனக்கு உய்யுமாறு அருளாய்!

3191. புள்ளின் வாய் பிளந்தாய்!மருதிடை போயினாய்!

எருதேழ் அடர்த்த,என்

கள்ள மாயவனே!கருமாணிக்கச் சுடரே,

தெள்ளியார் திருநான் மறைகள் வல்லார்

மலிதண் சிரீவர மங்கை,

உள்ளிருந்த எந்தாய்!அருளாய் உய்யுமா றெனக்கே. 9

தெய்வநாயகா!என் உயிர் உன்னுடையது

3192. ஆறெ னக்குநின் பாதமே சரணாகத் தந்தொழிந்

தாய்,உனக் கோர்கைம்

மாறு நானொன் றிலேனென தாவியு முனதே,

சேறு கொள்கரும் பும்பெருஞ் செந்நெலும்

மலிதண் சிரீவர மங்கை

நாறு பூந்தண் துழாய்முடி யாய்!தெய்வ நாயகனே! 10

இவற்றைப் பாடினோர் தேவர்கட்கு அமுதமாவர்

3193. தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்

கிரமன் அடியிணைமிசை,

கொய்கொள் பூம்பொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன்

செய்த ஆயிரத் துள்ளிவை தண்சிரீ வரமங்கை

மேய பத்துடன்,

வைகல் பாட வல்லார் வானோர்க் காரா அமுதே. 11

நேரிசை வெண்பா

மாறன் பாடல்களைப் படித்தோர் தேவர்க்கு அமுதமாவர்

'நோற்றநோன் பாதியிலேன் நுன்றனைவிட் டாற்றகில்லேன்,

பேற்றுக் குபாயமுன்றன் பேரருளே - சாற்றுகின்றேன்,

இங்கென்னிலை'என்னும் எழில்மாறன் சொல்வல்லார்,

அங்கமரர்க் காரா அமுது. (47)

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is கடல்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  ஆரா அமுதே
Next