ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
எட்டாம் பத்து
இருத்தும் வியந்து
ஆழ்வார் பேறு பெற்றுக் களிக்கும் திருவாய்மொழி இது தமது நெஞ்சத்தில் விமலன் வீற்றிருக்கும் பான்மையை ஆழ்வார் மகிழிந்து கூறல்
கலி விருத்தம்
என் கருத்தறிந்து அமர்ந்தான் வாமனன்
3513. இருத்தும் வியந்தென்னைத் தன்பொன் னடிக்கீழென்று,
அருத்தித்தெனைத்தோர் பலநாள் அழைத்தேற்கு,
பொருத்த முடைவா மனன்றான் புகுந்து,என்றன்
கருத்தை யுறவீற் றிருந்தான் கண்டுகொண்டே.
கஜேந்திரனுக்கு அருள் செய்தவன் இனியவன்
3514. இருந்தான் கண்டுகொண் டெனதேழை நெஞ்சாளும்,
திருந்தாத வோரைவ ரைத்தேய்ந் தறமன்னி,
பெருந்தாள் களிற்றுக் கருள்செய்த பெருமான்,
தருந்தான் அருள்தான் இனியான் அறியேனே.
என் மன இருளைப் போக்கியவன் பரமன்
3315. அருள்தா னினியான் அறியேன் அவனென்னுள்,
இருள்தான் அறவீற் றிருந்தான் இதுவல்லால்,
பொருள்தா னெனில்மூ வுலகும் பொருளல்ல,
மருள்தானீ தோ?மாய மயக்கு மயக்கே.
சோதியை என்னுள் வைத்தான் எம்பெருமான்
3516. மாய மயக்குமயக் கானென்னை வஞ்சித்து,
ஆயன் அமரர்க் கரியே றெனதம்மான்,
தூய சுடர்ச்சோதி தனதென்னுள் வைத்தான்,
தேயம் திகழும்தன் திருவருள் செய்தே.
மாயன் மனத்தில் நின்றான். வேறு புகழே வேண்டாம்.
3517. திகழுந்தன் திருவருள் செய்துல கத்தார்,
புகழும் புகழ்தா னதுகாட்டித் தந்து,என்னுள்
திகழும் மணிக்குன்ற மொன்றே யத்துநின்றான்,
புகழும் புகழ்மற் றெனக்குமோர் பொருளே?
கண்ணன் தன்னை எனக்குத்தான் தருவான்
3518. பொருள்மற் றெனக்குமோர் பொருள்தன்னில் சீர்க்கத்
தருமேல்,பின் யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்?
கருமா ணிக்கக் குன்றத்துத் தாமரைபோல்,
திருமார்பு கால்கண்கை செவ்வாய் உந்தியானே.
கண்ணன் திருவருளையே யான் அறிவேன்
3519. செவ்வாயுந்தி வெண்பல் சுடர்க்குழை, தன்னோ
டெவ்வாய்ச் சுடரும் தம்மில்முன் வளாய்க்கொள்ள,
செவ்வாய் முறுவலோ டெனதுள்ளத் திருந்த,
அவ்வா யன்றியான் அறியேன்மற் றருளே.
பிரானார் வெறிதே அருள் செய்வர்
3520. அறியேன்மற் றருளென்னை யாளும் பிரானார்,
வெறிதே யருள்செய்வர் செய்வார்கட் குகந்து,
சிறியே னுடைச்சிந்தை யுள்மூ வுலகும்,தம்
நெறியா வயிற்றிற்கொண்டு நின்றொழிந் தாரே.
திருமாலை விழுங்கி வயிற்றில் இருத்தினேன்
3521. வயிற்றிற்கொண்டு நின்றொழிந் தாரும் யவரும்,
வயிற்றிற்கொண்டு நின்றெரு மூவுல கும்,தம்
வயிற்றிற்கொண்டு நின்றவண் ணம்நின்ற மாலை,
வயிற்றிற்கொண்டு மன்னவைத் தேன்மதி யாலே.
பரமனைக் கருத்தில் இருத்தித் தளர்ச்சி நீங்கினேன்
3522. வைத்தேன் மதியா லெனதுள்ளத் தகத்தே,
எய்த்தே யழிவேனல் லேனென்றும் எப்போதும்,
மொய்த்தேய் திரைமோது தண்பாற் கடலுளால்,
பைத்தேய் சுடர்ப்பாம் பணைநம் பரனையே.
இப்பாடல்கள் பிறவிப் HE நீங்கும்
3523. சுடர்ப்பாம் பணைநம் பரனைத் திருமாலை,
அடிச்சேர் வகைவண் குருகூர்ச் சடகோபன்,
முடிப்பான் சொன்னவா யிரத்திப்பத் தும்சன்மம்
விட,தேய்ந் தறநோக்கும் தன்கண்கள் சிவந்தே.
நேரிசை வெண்பா
தான் கண்ணனைக் கலந்தமை கூறினான் மாறன்
இருந்தவன்றான் வந்திங் கிவரெண்ண மெல்லாம்,
திருந்தஇவர் தந்திறத்தே செய்து,-பொருந்தக்
கலந்தினிய னாய்நிற்கக் கண்டசட கோபன்,
கலந்தநெறி கட்டுரைத்தான் கண்டு.