நம் அறிவை மீறிய மஹான்களின் போக்கு : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

மகான்களின் போக்கு, ஈச்வரனின் போக்கு நம்முடைய சின்ன புத்திக்குப் புரியாது. ஆகையால், நாம் இந்த புத்தியைக் கொண்டு முடிவு பண்ணி அபசாரத்துக்கு ஆளாகிவிடக்கூடாது. நம் புத்திக்கும் புரிகிற மாதிரி சிலவற்றுக்குக் கதை, புராணங்களில் பெரியவர்கள் காரணம் காட்டியிருக்கிறார்கள். அவற்றை நம்பி எடுத்துக் கொள்ளவேண்டும்.

ஸுந்தரமூர்த்தி பரவை, சங்கிலி ஆகியவர்களிடம் ப்ரேமையாயிருந்தாரென்பதால் சட்டென்று அவரைப் பற்றிக் கன்னாபின்னா என்று நினைத்துவிடக்கூடாது. அவர்கள் அன்ய ஜாதி, அதிலும் ஒருத்தி போகப்படாத தெருவை, வீட்டைச் சேர்ந்தவள், என்பதால் அவர்களையும் குறைவாக நினைத்துவிடக் கூடாது. பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் என்று அவர்களை நிரம்ப மரியாதை கொடுத்தே தொன்று தொட்டுச் சொல்லி வருவதிலிருந்து அவர்கள் எத்தனை உயர்ந்த சீலமும் பக்தியும் உள்ளவர்களாயிருந்திருக்க வேண்டுமென்று புரிந்துகொள்ளலாம் ‘அவர்கள் யார்? ஸுந்தரமூர்த்தி யார்? சாஸ்த்ரோக்தமாக அவர் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போனபோது வ்ருத்த வேதியராக வந்து ஓலையைக் காட்டி அவரைத் தன் அடிமை என்று ரூபித்து அவர் க்ருஹஸ்தாச்ரமம் போகாமல் தடுத்த ஈச்வரனே அப்புறம் அவரை இந்தப் பெண்களிடம் சேர்த்து வைப்பானேன்? அதற்காகப் போகப்படாத இடத்துக்குத் தானே தூது போவானேன்?’ என்பதற்கெல்லாம் ‘பெரிய புராண’ த்தின் ஆரம்பத்திலேயே பதிலிருக்கிறது.

ஸுந்தரமூர்த்தி பூலோகத்தில் பிறப்பதற்கு முன்பு கைலாஸத்தில் ஈச்வரனுக்கு நெருங்கிய பார்ஷதராக (கிங்கரராக) இருந்தவர். அப்போது பரவை நாச்சியாரும் சங்கிலி நாச்சியாரும் அம்பாளுக்கு ஸகிகளாக இருந்தனர். ஒரு நாள் அவர்கள் இரண்டு பேரையும் ஸுந்தரர் – அப்போது ஆலால ஸுந்தரர் என்று அவருக்குப் பெயர்- அவர்களை நந்தவனத்தில் பார்த்தார். பரஸ்பரம் அவர்களுக்குள் ப்ரேமை ஏற்பட்டுவிட்டது. கைலாஸத்தில் இந்த மாதிரி காதல், கீதல் என்று நடப்பது ரொம்பத் தப்பு என்றுதான் ஈச்வரன் அவர்களை பூலோகத்தில் பிறக்கும்படிச் சபித்து, அதிலேயே கருணையோடு அந்த ஜன்மாவில் அவர்கள் தங்கள் ஆசையையும் பூர்த்தி செய்துகொள்ளட்டும் என்று அநுக்ரஹம் பண்ணினான்.

இம்மாதிரி, நமக்கு விசித்ரமாக, ஒவ்வாததாகத் தோன்றுகிற பலவற்றுக்குக் காரணம் புராணங்களில் கொடுத்திருக்கிறது. நாம்தான் அவஸரப்பட்டு, ஒன்றையும் பார்க்காமல் ‘க்ரிடிஸைஸ்’ பண்ண ஆரம்பித்துவிடுகிறோம். சிலவற்றுக்குக் காரணம் சொல்லியிருப்பதிலிருந்தே, சொல்லாமல் விட்டவற்றுக்கும் ஏதாவது காரணம் இருக்க வேண்டுமென்று புரிந்துகொள்வதுதான் முறை.

பரவை, சங்கிலி விஷயமாக ஸுந்தரமூர்த்தியைப் பற்றிக் குறைத்து நினைப்பவர்கள் இன்னம் சில விஷயங்களையும் சேர்த்துப் பார்க்கவேண்டும். பத்னி என்று ஒரு கன்னிகைக்கு அவர் சாஸ்த்ரோக்தமாகத் தாலிகட்டி தாம்பத்தியம் ஆரம்பிக்கவிருந்த ஸமயத்தில்தான் ஈச்வரன் அவரை இழுத்தான். அவரும் உடனே அவனுக்கு “மீளா அடிமை” என்று சொல்லிக்கொண்டு குடும்ப வாழ்க்கையைத் துச்சமாகத் தள்ளிவிட்டு கோவில் கோவிலாகச் சுற்றப் புறப்பட்டுவிட்டார். அப்போது ஒரு ஊருக்கு அவர் போன போது அங்கேயிருந்த கோட்புலி நாயனார் என்ற பெரியவர் நல்ல குணவதிகளாகவும், ஸெளந்தர்யவதிகளாகவும் இருந்து தம்முடைய இரண்டு புத்ரிகளையும் ஸுந்தரமூர்த்திக்கு அர்ப்பணம் பண்ணி, “இவர்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். சிங்கடி, வனப்பகை என்ற அந்தப் பெண்களும் வந்து அவரை நமஸ்கரித்தார்கள். அப்போது ஸுந்தரர் பரம சுத்தமான மனஸோடு, “இவர்களை என் புத்ரிகளாக ஏற்றுக்கொள்கிறேன்” என்றே சொன்னார். இதற்கு அகச்சான்றாக அவ்வூரிலே பாடிய பதிகத்தில் தம்மை “சிங்கடியப்பன்” என்றே சொல்லிக்கொள்கிறார்1.

இன்னொரு angle – ல் (கோணத்தில்) சொல்கிறேன்: மஹான்களுடைய சரித்ரம், வாழ்க்கை வரலாறு என்பதில் வெளியிலே நடக்கிற ஸம்பவங்களைப் பார்க்கிறோம். அந்த ஸம்பவங்கள் அவர்கள் மனஸை எப்படித் தொட்டது, – தொட்டதா தொடாமலே இருந்ததா? – என்றும் பார்க்கிறோம். ஆனால் இதற்கெல்லாம் உள்ளே அவர்களுடைய ஹ்ருதய அந்தரங்கம் எப்படியிருந்தது என்று தெரிந்தால் தான் அவர்களுடைய உண்மையான பெருமை தெரியும். அது இந்த வெளிவாழ்க்கையில் தெரியாது. தெரிந்தாலும் கொஞ்சம் ஏதோ லேசாகத்தான் தெரியும். பின்னே அவர்களுடைய அந்தரங்கம், உயிர்நிலையான பண்பு, எதிலே தெரியுமென்றால் அவர்கள் தங்களுடைய அந்தராத்மாவிலிருந்து பொங்கி வருவதாக அருள் வேகத்தில் எழுதி வைத்திருக்கிறார்களே, அந்த நூல்களில் – பாடி வைத்திருக்கிறார்களே, அந்தப் – பாட்டுகளில் தான் தெரியும்.

ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுடைய வெளிவாழ்க்கை எப்படி வேணுமானால் இருக்கட்டும். அவருடைய உள் மனஸ், அந்தரங்கம் எப்படி இருந்தது என்றால் அதற்கு அவருடைய பாடல்களைத்தான் பார்க்கவேண்டும். இப்படியும் ஒரு உத்தமமான பக்தியா என்று நாம் குழைந்து போகிற மாதிரி அவர் தேவாரம் பாடியிருக்கிறார். எத்தனையோ நூற்றாண்டுகளாக, எத்தனையோ தலைமுறைகளை இப்படிக் குழைத்து வருகிறவர் பரம பக்த சிகாமணியாகத்தான் இருந்திருக்க வேண்டுமென்று நாம் புரிந்துகொள்ளாவிட்டால் நம்மை விட அசடு இல்லை என்றே அர்த்தம்.

“அன்னே ! உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே “

” அத்தா ! உனக்காளாய் …”

“… உனை நான் மறக்கினும் சொல்லு (ம்) நா நமச்சிவாயவே”2

என்று இப்படி அநேகம், நம்முடைய கருங்கல் மனஸையும் நெகிழச் செய்கிற மாதரி பாடி வைத்திருப்பவரைப் பற்றி அபசாரமாக நினைத்துவிடப்படாது.

ஈச்வரனையே ஏவினார், ஏசினார் என்றால் அதுவும் அவன் எவ்வளவு ஸெளலப்யன் என்று காட்டுவதற்குத்தான். அவனே தன்னை வழிபடுவதிலுள்ள பல மார்க்கங்களில் இவரை ஸகா மார்க்கத்தில் ஸ்நேஹிதனாகப் பழக வைத்ததால்தான் அவனிடம் உரிமையோடு சண்டைகூடப்போட்டார். ‘ தம்பிரான் தோழர்‘ என்றே அவருக்கு ஒரு பேர். ஸாக்ஷாத் ஈச்வரனிடம் இப்படி வன்தொண்டராக இருந்த அவரேதானே அவனுடைய அடியார்களான அறுபத்து மூவருக்கும் தம்மை “அடியேன், அடியேன்” என்று ஒரே அடக்கமாகத் தெரிவித்துக்கொண்டு, நமஸ்காரம் பண்ணித் ‘திருத்தொண்டைத் தொகை’ பாடியிருக்கிறார்?


1 திருநாட்டியத்தான் குடிப் பதிகமான” பூணாணாவதோர்”

2முறையே “பொன்னார் மேனியனே”, “பித்தா பிறை சூடி”, “மற்று பற்று” என்ற பதிகங்களில் வருபவை.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is ஸ்வாமியிடம் ஸ்வாதீனம் கொண்ட ஸ்வாமிகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  தூதுபோன தூதுவளை!
Next