ஆசைவாய்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

நாலாம் பத்து

ஆசைவாய்

ஒவ்வொருவரும் பகவானின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும். நாள்தோறும் பகவந் நாமங்ளைச் சொல்லுகிறவர்கள் பெரும் பயனடைவார்கள். அவர்கள் பெருமை அளவு கடந்தது. "பகவந் நாமத்தைச் சொல்ல ஒரு காலத்தை எதிர்பார்க்க வேண்டா. உயிர் போகும் நேரத்தில் அவனை அழைக்கமுடியுமா? அவன் திருநாமத்தைச் சொல்லமுடியுமா? இப்போதே சொல்லுங்கள். இதயமாகிற கோயிலைக் கட்டி, அங்குப் பகவனை நிலைநிறுத்தி ஆர்வமாகிற மலரை இட்டு வணங்குங்கள்" என்கிறார் ஆழ்வார்.

பகவானிடம் மனம் செலுத்தாமல் காலங்கடத்தும் மக்களுக்கு நல்லுரை கூறல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கேசவா புருடோத்தமா என்று சொல்க

371. ஆசை வாய்ச்சென்ற சிந்தைய ராகி

அன்னை யத்தனென் புத்திரர் பூமி,

வாச வார்குழ லாளென்று மயங்கி

மாளு மெல்லைக்கண் வாய்திற வாதே,

கேச வாபுரு டோத்தமா என்றும்

கேழ லாகிய கேடிலீ யென்றும்,

பேசு வாரவ செய்தும் பெருமை

பேசு வான்புகில் நம்பர மன்றே. 1

நமோநாரணா என்று கைகூப்பி வணங்கு

372. YJ னால்செறிந் தேறிய புண்மேல்

செற்ற லேறிக் குழம்பிருந்து,எங்கும்

ஈயி னாலரிப் புண்டு மயங்கி

எல்லை வாய்ச்சென்று சேர்வதன் முன்னம்,

வாயி னால்நமோ நாரணா வென்று

மத்த கத்திடைக் கைகளைக் கூப்பிடப்

போயினால் பின்னை,இத்திசைக் கென்றும்

பிணைகொ டுக்கிலும் போகவொட் டாரே. 2

மனதில் மாதவனை நிலைநிறுத்து

373. சோர்வி னால்பொருள் வைத்ததுண் டாகில்

சொல்லு சொல்வென்று சுற்று மிருந்து,

ஆர்வி னாவிலும் வாய்திற வாதே

அந்த கால மடைவதன் முன்னம்,

மார்வ மென்பதோர் கோயி லமைத்து

மாத வனென்னும் தெய்வத்தை நாட்டி,

ஆர்வ மென்பதோர் பூவிட வல்லார்க்

கரவ தண்டத்தி லுய்யலு மாமே. 3

'ஓம்'என்று பிரணவத்தை மூன்று மாத்திரை அளவு நீட்டிக் கூறு

374. மேலெ ழுந்ததோர் வாயுக் கிளர்ந்து

மேல்மி டற்றினை யுள்ளெழ வாங்கி,

காலும் கையும் விதிர்விதிர்த் தேறிக்

கண்ணு றக்கம தாவதன் முன்னம்,

மூல மாகிய ஒற்றை யெழுத்தை

மூன்று மாத்திரை யுள்ளெழ வாங்கி,

வேலை வண்ணனை மேவுதி ராகில்

விண்ண கத்தினில் மேவலு மாமே. 4

இருடீகேசனையே எத்திப் புகழ்

375. மடிவ ழிவந்து நீர்புலன் சோர

வாயி லட்டிய கஞ்சியும் மீண்டே,

கடைவ ழிவாரக் கண்ட மடைப்பக்

கண்ணு றக்கம தாவதன் முன்னம்,

தொடைவ ழிஉம்மை நாய்கள் கவரா

சூலத் தாலும்மைப் பாய்வதுஞ் செய்யார்,

இடைவ ழியில்நீர் கூறையு மிழவீர்

இருடீ கேசனென் றேத்தவல் வீரேல். 5

இதயத்தில் மதுசூதனனை அமைத்து வழிபடு

376. அங்கம் விட்டவை யைந்து மகற்றி

ஆவி மூக்கினில் சோதித்த பின்னை,

சங்கம் விட்டவர் கையை மறித்துப்

பைய வேதலை சாய்ப்பதன் முன்னம்,

வங்கம் விட்டுல வும்கடல் பள்ளி

மாய னைமது சூதனை மார்பில்

தங்க விட்டுவைத்து,ஆவதோர் கருமம்

சாதிப் பார்க்கென்றுஞ் சாதிக்க லாமே. 6

மதுசூதனன் என்று அடிக்கடி கூறு

377. தென்ன வன்தமர் செப்ப மிலாதார்

சேவ தக்குவார் போலப் புகுந்து,

பின்னும் வன்கயிற் றால்பிணித் தெற்றிப்

பின்முன் னாக இழுப்பதன் முன்னம்,

இன்ன வன்இனை யாதென்று சொல்லி

எண்ணி யுள்ளத் திருளற நோக்கி,

மன்ன வன்மது சூதன னென்பார்

வான கத்துமன் றாடிகள் தாமே. 7

கௌஸ்துபமுடைய கோவிந்தனோடு கூடியாடு

378. கூடிக் கூடிஉற் றார்க ளிருந்து

குற்றம் நிற்கநற் றங்கள் பறைந்து,

பாடிப் பாடியோர் பாடையி லிட்டு

நரிப்ப டைக்கொரு பாகுடம் போலே,

கோடி மூடி யெடுப்பதன் முன்னம்

கௌத்து வமுடைக் கோவிந்த னோடு,

கூடி யாடிய வுள்ளத்த ரானால்

குறிப்பி டங்கடந் துய்யலு மாமே. 8

செங்கண்மாமலையே சுற்றமாகக் கொண்டு வாழ்

379. வாய ருபக்கம் வாங்கி வலிப்ப

வார்ந்த நீர்க்குழிக் கண்கள் மிழற்ற,

தாய ருபக்கம் தந்தையரு பக்கம்

தார முமொரு பக்க மலற்ற,

தீய ருபக்கஞ் சேர்வதன் முன்னம்

செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்ற

மாய்,ஒ ருபக்கம் நிற்கவல் லாருக்

கரவ தண்டத்தி லுய்யலு மாமே. 9

தேவபிரானின் பக்தராக இருப்பர்

380. செத்துப் போவதோர் போது நினைந்து

செய்யும் செய்கைகள் தேவபி ரான்மேல்,

பத்த ராயிறந் தார்பெறும் பேற்றைப்

பாழித் தோள்விட்டு சித்தன்புத் தூர்க்கோன்,

சித்தம் நன்கொருங் கித்திரு மாலைச்

செய்த மாலை யிவைபத்தும் வல்லார்,

சித்தம் நன்கொருங் கித்திரு மால்மேல்

சென்ற சிந்தை பெறுவர் தாமே. 10

அடிவரவு:ஆசைவாய் சீயினால் சோர்வு மேல் மடி அங்கம் தென்னவன் கூடி வாய் செத்து - காசும்.



 


 


 



Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is நாவ காரியம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  காசும் கறையுடை
Next