யக்ஞம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

வேதத்தின் பல சிறப்புகளைச் சொன்னேன். அதிலே முக்கியமாகச் சொல்ல வேண்டிய இன்னொன்று யக்ஞம் என்ற வேள்வியாகும்.

மந்திரங்களை வாயால் சொல்லிக் கொண்டு, அதோடு கூட அதற்கான ஒரு காரியத்தையும் அக்னி முகமாகப் பண்ணுவதுதான் யக்ஞம்.

“யஜ்” என்கிற வேர்ச் சொல்லிலிருந்து வந்தது “யக்ஞம்”. அதனால் ‘யக்ஞம்’ என்பதை விஷயம் தெரிந்தவர்கள் ‘யஜ்ஞம்’ என்றே எழுதுகிறார்கள். ‘யஜ்’ என்றால் வழிபடுவது, பக்தி செலுத்துவது என்று அர்த்தம். பரமாத்மாவிடமும், தேவதைகளிடமும் ப்ரீதி பூர்வமான உணர்ச்சியுடன் ஒரு வழிபாடாகச் செய்யப்படுகிற கர்மமே யக்ஞம்.

யக்ஞம் என்பதை யாகம் என்றும் சொல்கிறோம்.

“மனனாத் த்ராயதே இதி மந்த்ர:” என்பது மந்திரத்துக்கு ஏற்பட்ட லக்ஷணம் ( definition ) . அதாவது, “மனனம் செய்தால் எது காப்பாற்றுகிறதோ அதுவே மந்திரம்” என்பது லக்ஷணம். ‘த்ராணம்’ என்றால் காப்பாற்றுவது. “பரித்ராணாய ஸாதூனாம்” (“நல்லவர்களை நன்றாகக் காப்பாற்றுவதற்காக”) என்ற கீதா வாக்கியம் எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். மனனம் செய்வதால் த்ராணம் (காப்பு) தருவதே மந்த்ரம். மனனம் என்றால் மனசுக்குள் உருட்டிக் கொள்வதுதான். வாய்விட்டுச் சொல்லக்கூட வேண்டாம். மனசுக்குள் மந்திர சப்தங்களைச் சொல்லிக் கொள்வதாலேயே உள்ளுக்குள்ளே (நான் முன்னே சொன்ன) க்ஷேமகரமான vibration -கள், நாடி சலனங்கள் உண்டாகும். அதையே வாய்விட்டு வேத கோஷமாகப் பண்ணினால், அர்த்தம் புரியாவிட்டாலும் அதன் காம்பீர்யமே கேட்கிறவர்களுக்கெல்லாம் ஒரு திவ்ய ஆனந்தத்தைத் தருகிறது. அந்த சப்தங்களுக்கு லோக க்ஷேமத்தை விளைவிக்கக் கூடிய சக்தியும் இருக்கிறது.

மனனமாக, மானஸிகமாக இருப்பது வாசிகமாக வாக்கில் வெளிவருவதோடு, காயிகமாக காயம் எனப்படும் சரீரத்தால் ஒரு கர்மாவோடு சம்பந்தப்பட்டு வருகிறபோது மனோ, வாக்கு, காயம் மூன்றும் வேதத்தில் அர்ப்பணிக்கப்பட்டதாக ஆகிறது. இப்படிப்பட்ட வேத கர்மாக்களில் முக்கியமானதுதான் யாகம் எனப்படுகிற யக்ஞம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is வேதத்தின் மகிமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  மற்ற மதங்கள்களில் இல்லாதது
Next