அம்பாள் அருள்வாளாக! : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

நான் எத்தனை சொன்னாலும், அதில் கொஞ்சமாவது உங்கள் மனஸிலே பட அம்பாள்தான் அநுக்ரஹம் செய்யவேண்டும்.

ஸர்வஜ்ஞனான ஈச்வரனோடு கலந்திருக்கிற அம்பாள்தான் சோபைகளிலெல்லாம் பரம சோபையோடு ப்ரகாசிப்பதான வித்யையின் ஸ்வரூபம் என்று ஆசார்யாள் கேநோபநிஷத் பாஷ்யத்தில் சொல்கிறார். அவள்தான் நம் எல்லார் மனஸிலும் புகுந்து நம்முடைய புராதன வித்யைகளை ரக்ஷிப்பதில் நம்மைச் செலுத்தவேண்டும். வித்தம்தான் (பணம்தான்) குறி என்று நம்முடைய மனப்பான்மையை மாற்றி வித்யையே லக்ஷ்யம் என்ற ஈடுபாட்டை அவளுடைய அநுக்ரஹம்தான் உண்டாக்கித் தரவேண்டும். இதுவரை யுகாந்தரமாக வித்யா ப்ரகாசம் விளங்கி வந்த இந்த தேசத்தில் இருள் மூடுமாறு விடப்படாது. வித்யைதான் பெரிய ப்ரகாசம் என்று சொன்ன ஆசார்யாள், ‘உமா பரமேச்வரி மாத்ரம்தான் இப்படி வித்யையால் ஜ்வலித்துக்கொண்டு ஹைமவதி என்று பெயர் பெற்றாள் என்று இல்லை, எவன் வித்யையைப் பயின்று வித்வானாலும் அந்த வித்யையே அவனுக்கு ஒரு தேஜஸ் மெருகைக் கொடுத்துவிடும்’ என்று முடித்திருக்கிறார்.

“ஹைமவதி” என்று இந்த இடத்தில் உபநிஷத்திலே அம்பாளுக்குப் பெயர் சொல்லியிருப்பதற்கு இரண்டு விதமாக அர்த்தம் பண்ணலாம். ஒன்று, ‘ஹிமம்’ என்பது ‘பனி’ ஆதலால் பனி மலையான ‘ஹிமவா’னுக்குப் பிறந்த இவள் ‘ஹைமவதி’ என்பது. ‘ஹிம’த்தைக் குறித்தது ‘ஹைமம்’ – ‘சிவ‘த்தைக் குறித்தது ‘சைவம்’ என்கிறாற்போல. இங்கே ‘இ’காரம் ‘ஐ’காரமாகிறது. இதே மாதிரி ஸம்ஸ்க்ருத இலக்கணத்தில் ‘ஏ’காரமாக ஆரம்பிக்கும் வார்த்தையிலிருந்து உண்டாகிற derivative -களும் ‘ஐ’ஆகிவிடும். “ஏக”த்திலிருந்து “ஐக்யம்”, “கேகயன்” பெண் “கைகேயி”. இந்த ரூல்படி ‘ஹிமம்’ போலவே ‘ஹேமம்’ என்ற சொல்லின் அடியாகவும் ‘ஹைமவதி’ப் பெயர் ஏற்படும். ஹேமம் என்றால் தங்கம். தங்கமாக ஜ்வலிப்பவள் ஹைமவதி. ‘பஹுசோபை உள்ளவள்’ என்று உபநிஷத்தே இங்கு அம்பாளைக் குறிப்பதால் ஸ்வர்ண காந்தியாய் ஜ்வலிப்பவள் என்று பொருள் கொள்வதும் ரொம்பப் பொருத்தந்தான். ஆசார்யாள் இரண்டு அர்த்தங்களையும் ஒப்புக்கொண்டு, இந்த சோபைக்கு, ஜ்வலிப்புக்கு அவள் வித்யா ரூபிணியாயிருப்பதே காரணம் என்கிறார். அப்புறம் தம் வாக்ய பாஷ்யத்தை முடிக்கிற இடத்தில், “வித்யாவானாக (வித்வானாக) ஒருவன் இருந்தால், அவன் அங்கலக்ஷணப்படி குரூபியாயிருந்தாலும்கூட பஹுசோபையுடனே ப்ரகாசிக்கிறான் : விரூபோ (அ)பி வித்யாவாந் பஹு சோபதே” என்கிறார். ஸதாசாரத்தோடு படிப்பாளிகளாக இருக்கப்பட்டவர்களைப் பார்த்த மாத்திரத்தில், “முகத்திலேயே என்ன அறிவுக் களை, என்ன தேஜஸ்!” என்று சொல்ல முடிகிறது. அதேபோல், “மூஞ்சியைப் பார்த்தாலே சோதாக் களை” என்றும் சொல்கிறோம். முன்னே சொன்ன ஸைகிள் பெடல் உதாரணப்படி நம் பூர்விகர்களின் வித்யா ப்ரகாசத்தின் பலத்தில் இப்போதும் நம்மில் சிலர் முகத்திலாவது இந்தத் தேஜஸ் இருக்கிறது. ஸைகிள் நின்று போகாமல் அவள் க்ருபைதான் ஓட்டுவித்து, எல்லோர் முகத்திலும் சோபையை உண்டாக்கி, தேசம் முழுதிலும் அறிவொளி பரவச் செய்ய வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is எல்லாத் துறையிலும் குருகுல வாஸம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  வேதத்திலும் ஜனநாயக அம்சம்
Next