த்வைத ‘மோக்ஷ’மும் ப்ரக்ருதி (மாயை)யும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

எந்த ஸித்தாந்தப்படியும் மோக்ஷம் என்பது கர்மாவின் கதியிலிருந்தும், இந்த்ரிய மனோ இழுப்புக்களிலிருந்தும் விடுபட்டு ஸம்ஸார சக்ரத்திலிருந்து தப்பி சாச்வத ஸுகத்தை அநுபவித்துக்கொண்டிருப்பதுதான். இப்படிப்பட்ட சாச்வத ஆனந்த நிலையான மோக்ஷம் என்பது இந்த லோகத்தைவிட்டு, புனர் ஜன்மா இல்லாமல் பரமாத்மாவின் ஸ்தானத்துக்குப் போய் அவரோடேயே என்றென்றைக்கும் இருந்து கொண்டிருப்பதுதான் என்று மற்ற ஸித்தாந்திகள் சொல்கிறார்கள். அவர்கள் கொள்கைப்படி, பரமாத்மா என்பதாகத் தனக்கு வேறாக உள்ள ஒருத்தனோடு இருப்பது, பக்தி பண்ணுவது, அவனுக்கு தாஸ்யம் (பணிவிடை) செய்வதென்பதெல்லாம் மோக்ஷ நிலையில் தன்னுடைய நிஜமான உள் ஸ்வரூபமான ஆத்மாவாக இருக்கிறபோதும் ஜீவனுக்கு இருக்கிறது. அதாவது பக்தி முதலான எண்ணங்களும் உணர்ச்சிகளும், தாஸ்யம் புரிவது முதலான செயல்களும் ஜீவாத்மாவுக்கு எப்போதும் இருப்பதாக இந்தக் கொள்கையிலிருந்து ஏற்படுகிறது.

இப்படி நினைக்க மனஸும், கார்யம் செய்ய தேஹமும், செய்கிற இடமாக ஒரு லோகமும் (வைகுண்டமோ, கைலாஸமோ எதுவோ ஒரு லோகம்) இருந்தாலும், ‘இவை எல்லாமே அப்ராக்ருதம், அதாவது ப்ரக்ருதி (மாயை)யின் ஸம்பந்தமில்லாதவை. அதனால் அங்கே நம்முடைய ப்ராக்ருதமான லோகத்தில் மாயா வசப்பட்ட மனஸாலும் தேஹத்தாலும் நாம் உபத்ரவம் வரவழைத்துக் கொள்கிறது போல இருக்காது. எல்லாமே நல்லதாயிருக்கும்’ என்கிறார்கள்.

நல்லதாயிருக்கும் என்றாலும் அது ஆத்மாவாயிருப்பதற்கில்லை என்றுதான் நாம் பார்க்கிறோம். தூக்கத்தில், மூர்ச்சையில், ஸமாதியில் கெட்டதோடு நல்லதும் இல்லாமலே ஆத்மா இருப்பது தெரிகிறது. ‘நல்லது’ என்பதும், இருக்கிற ஆத்மாவின் ஜீவாபாஸத்தினால் அறியப்படுகிற இன்னொன்றாகத்தான் இருக்கமுடியும். அதாவது, ஜீவாத்மாவால் அறிந்து அநுபவிக்கப்பட வேண்டிய அநேக த்வைத வஸ்துக்களில் ஒன்றாகத்தான் நல்லது என்பதும் இருக்கும். இன்னொன்றை ஜீவாத்மா அறிந்தநுபவிக்கும் நிலையில் இருந்தால் அப்போது தன்னை அறிந்தநுபவித்துக் கொள்ள முடியாது. இரண்டு விஷயங்களை எப்படி ஒரே ஸமயத்தில் அறியவும் அநுபவிக்கவும் முடியும்? நம்முடைய மனஸ் ஒருமைப்பட்டு, புத்தி ‘ஸ்டெடி’யாக இல்லாதபோது பல நினைப்பு, பலவற்றை மேல்வாரியாக அறிவது, ஆழமாயில்லாமல் பல அநுபவங்களை அடுத்தடுத்துப் பெறுவது – என்றெல்லாம் உள்ளது. மனஸ் ஒன்றிலேயே குறியாகக் குவிந்து விட்டால் அந்த ஒன்றுதான் நினைப்புக்கும் அறிவுக்கும் அநுபவத்துக்கும் வரும். அக்கம்பக்கத்தில் என்ன நடந்தாலும் தெரியாமல் இப்படி ஒன்றிலேயே ஈடுபட்டிருப்பதுதான் அதைக் குறித்த பூர்ணமான, நிஜமான அறிவும் அநுபவமும் ஆகும். அதாவது, ஒரே ஸமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வஸ்துக்களை அநுபவிக்க முடியாது. எனவே அப்ராக்ருதமே ஆனாலும், வைகுண்ட கைலாஸாதிகளில் ஜீவாத்மா என்பது தனக்கு இன்னொன்றான நல்லதை, இன்னொன்றான ஈச்வரனை அறிந்து அநுபவித்துக் கொண்டிருக்கிறவரையில் தன்னை அறிந்து அநுபவித்துக் கொள்ளவில்லை என்றே அர்த்தம். தன்னையே தெரிந்துகொள்ளாத இப்படிப்பட்ட நிலையாகவா ஜீவனின் ஸத்ய நிலை இருக்கும்? அவனுடைய ஸத்ய நிலையில் அவனைச் சேர்க்காமலிருக்கும் ஒரு ஸ்தானம் மோக்ஷமாக இருக்கமுடியமா? ஆத்ம ஞானம், ஆத்மாநுபவம் (இரண்டும் ஒன்றேதான்) இல்லாத ஒரு ஸ்திதியை ஜீவனின் நிஜ ஸ்திதி என்றோ, மோக்ஷமென்றோ ஒப்புக்கொள்வதறக்கில்லை, இப்படி அத்வைதிகள் சொல்கிறார்கள்.

கார்யம், நினைப்பு என்பவை, இவை இல்லாத ஆத்மாவில் அதற்கு அந்யமாக ஏற்பட்டவையான க்ருத்யங்கள்தான், ‘க்ருதம்’ என்றால் ‘செய்யப்பட்டது’. ‘செய்யப்பட்டது’ என்றால் இயற்கையாய் இல்லாததுதானே? இந்த ‘க்ருத’த்தை வைத்தே ப்ரக்ருதி என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. ‘ப்ர’ என்பது அப்புறம் வருகிற ‘க்ருதி’ என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து உறுதிப்படுத்துவதே. ‘இயற்கை’ என்று ‘ப்ரக்ருதி’யைச் சொன்னாலும், ஸ்வபாவமாக உள்ள குணமற்ற, செயலற்ற ஆத்ம ஸ்திதியல் குணங்களையும் செயல்களையும் உண்டாக்குவதால் செயற்கைதான் ப்ரக்ருதி. எத்தனை உத்தமமான கார்யம் ஆனாலும், அதாவது பகவானையே த்யானித்து பக்திபண்ணுவதான, அவனுக்கே தாஸ்யம் பண்ணுவதான, பரம உத்தமமான கார்யமானாலும் – அதுவும் ஆத்மாவின் ஸ்வபாவ ஸ்திதிக்கு அந்யமாக ஏற்பட்டதுதான். அது ப்ரக்ருதிக்கு மேற்பட்ட அப்ராக்ருதம் என்று சொல்வதில் ஸாரமில்லை. பகவான் (கீதையின் ஏழாம் அத்யாயத்தில்), கீழ்ப்பட்ட அபரா ப்ரக்ரதிக்கு மேற்பட்டதாக பரா ப்ரக்ருதி என்று ஒன்றைச் சொல்கிற மாதிரி வேண்டுமானால், விஷய ஸுகத்தில் இழுத்துவிடும் கீழ்ப்பட்ட ப்ரக்ருதியாயில்லாமல், பகவானிடமே இழுத்து சேர்ப்பிக்கும் ப்ரக்ருதியாக மோக்ஷத்தில் இருக்கிறது என்று த்வைதிகள் சொல்லிவிட்டுப் போகலாம். பகவானே இப்படித்தான் உசந்த ப்ரக்ருதி என்ற ஒன்றைச் சொல்லி, அப்புறம் குணமும் கார்யமுமில்லாத ப்ரஹ்ம நிலையைச் சொல்லியிருக்கிறாரே தவிர, குணங்களோடேயே கார்யங்களோடேயே இருக்கும்போதிலும் ப்ரக்ருதி ஸம்பந்தமில்லாமல் அப்ராக்ருதம் என்று ஒன்று இருப்பதாகச் சொல்லவில்லை.

ஏதோ ஒரு லோகத்துக்குப் போய் வஸிப்பது என்று வந்துவிட்டால் அது ப்ரக்ருதி ஸம்பந்தமானதுதான், அதாவது மாயா ஸம்பந்தமானதுதான். மாயை உள்ளவரை மோக்ஷம் எப்படி ஸாத்யம்? ‘இது நல்லதே செய்கிற மாயையாதலால் நாங்கள் இதிலேயே இருந்துகொண்டு இருக்கிறோம். இதையே மோக்ஷமாக வைத்துக்கொள்கிறோம்’ என்று வேண்டுமானால் சொல்லிவிட்டுப் போகட்டும். ‘இதுதான் மோக்ஷம்’ என்று எப்படிச் சொல்லலாம்? அத்வைதிகள் சொல்கிறபடி ஜீவனும் ப்ரஹ்மமும் அபேதமாகப் போய்விடுகிற ஒரு மோக்ஷம் கிடையாது என்று எப்படிச் சொல்லலாம்?

தமக்கு த்வைதந்தான் பிடித்திருந்தபோதிலும் அதுவே முடிவான மோக்ஷம் என்று ஸாதிக்காதவர்களாகவும் சில பெரியவர்கள் இருந்திருக்கிறார்கள். அத்வைதம் தான் மோக்ஷம்; ஆனால் ஈச்வரபக்தி இல்லாத அந்த மோக்ஷம் எங்களுக்கு வேண்டாமென்று அவர்கள் சொல்வார்கள். திருவாரூரில் இருந்த பரம சாம்பவர்களான ‘திருக்கூட்டத்தார்’ இப்படித்தான் இருந்தார்கள் என்று சேக்கிழார் சொல்கிறார்:

கூடும் அன்பினில் கும்பிட லேஅன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்

என்கிறார். அதாவது, ‘ப்ரேமையில் ஈச்வரனோடு கலந்து அவனை பக்தி பண்ணிக்கொண்டேயிருக்க வேண்டும்; இதை விட்டு விட்டு ‘வீடு’ என்கிற மோக்ஷத்துக்குப் போகவேண்டாம்’ என்று அந்த சிவனடியார்கள் நினைத்தார்களாம். இப்படிச் சொன்னதாலேயே கைலாஸம் மாதிரியான ஒரு லோகத்தில் போய் த்வைதமாக ப்ரேம பக்தி பண்ணிக்கொண்டிருப்பதை அவர்கள் (சேக்கிழாரும் கூடத்தான்) வீடாக (மோக்ஷமாக) நினைக்கவில்லை என்று தெரிகிறது.

இந்தப் பாட்டின் முதல் இரண்டு வரிகளிலிருந்து இன்னொரு ஸ்வாரஸ்யமான ஸமாசாராமும் தெரிகிறது. அத்வைத மோக்ஷம் வேண்டாமென்று இவர்கள் சொல்வபர்களாயிருந்தாலும், அவர்களை அத்வைதமான ஸமரஸபாவத்திலேயே லோகத்தில் எல்லாவற்றையும் ஒன்றாகப் பார்த்திருக்கிறார்கள்! ஜீவ-ப்ரஹ்ம ஐக்யம் தவிர மற்றவற்றில் அத்வைதிகளாக இருந்திருக்கிறார்கள். மண்ணாங்கட்டியும் தங்கமும் அவர்களுக்கு ஒன்றாக இருந்திருக்கிறது:

ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்.

ஆக்கல், அழித்தல் என்ற வித்யாஸமே தெரியாத லக்ஷ்மீகரமான மனோபாவத்தில் அவர்கள் இருந்தார்களாம்:

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்.

அழிவு, கேடு அவர்களைத் தொடாது. உசந்த ஸம்பத்துள்ள வாழ்வு, ஆக்கமும் அவர்களைத் தொடாது. ஸமபாவம் என்ற பரமமங்கள வஸ்து நிறைந்த ‘திருவினார்’. மங்களந்தான் லக்ஷ்மி, அதுவே திரு.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஈசன் -ஜீவன் அவித்யை - அந்தஃகரணம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  த்வைத ருசிக்குத் துன்பம் தவிர்க்கவொண்ணாதது
Next