நல்லதில் கெட்டது கலக்காமலிருக்க : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

தப்புக் கார்யம், தப்பு எண்ணமான காம க்ரோதம் ஆகியன போவதற்கே சாஸ்த்ர ரீதியான ஸத் கார்யங்களை வர்ணாச்ரமப்படி செய்வது, அன்பு பரோபகாரம், பக்தி, பணிவு முதலான நல்ல எண்ணங்களை வளர்த்தக் கொள்வது இவை எல்லாம். தப்புக் காரியங்கள், அஸத் வ்ருத்திகள் என்பவையே ஆரம்பத்தில் சொன்ன தேவாஸுர யுத்தத்தில் அஸுர கணங்கள். நல்ல கார்யங்கள், ஸத் வ்ருத்திகள் தேவ கணங்கள். இந்தச் சண்டையில் தேவர்களுக்கும் கொஞ்சம் கொஞ்சம் அஸுர குணங்கள் ஏற்படுவதுண்டு! அஸுரர்களின்மீது க்ரோதம் ஏற்படுவது, அவர்களை இவர்கள் சில ஸமயங்களில் வஞ்சனையாக ஏமாற்றிக்கூட ஜயிப்பது, அம்ருதம், லக்ஷ்மி போன்ற உத்தம வஸ்துக்களைப் பெறுவதில் அஸுரர்களுக்குப் போட்டியாக தேவர்களுக்கும் ஆசை (காமம்) உண்டாவது- என்றிப்படி நல்லதிலேயே கெட்டவையும் கலப்பதைப் புராணங்களில் பார்க்கிறோம். பரமார்த்த ஸத்யம் என்பது நல்லது என்பதற்குங்கூட அப்பாற்பட்டது என்று காட்டவே இப்படியிருக்கிறதென்று சொல்லலாம்.

தேவர்களுக்கு ஏற்படும் அஸுரத்தனங்களில் ரொம்பவும் துஷ்டத்தனமான ஒன்றை உபநிஷத்திலேயே சொல்லியிருக்கிறது. அஸுரர்களை ஜயித்து முடித்தபின், தேவர்கள், ‘நமக்குப் பரமாத்மா கொடுத்திருக்கிற சக்தியைக் கொண்டும், அவனுடைய க்ருபையாலும்தான் நாம் ஜயித்தோம்’ என்று உணராமல், ‘நம் சக்தி கொண்டே ஜயித்து விட்டோமாக்கும்’ என்று கர்வப்பட்டார்களாம். இப்படி ஒரு உபநிஷத்தில்* கதை சொல்லியிருக்கிறது. இது போல நாம் பண்ணும் ஸத்கர்மா, உபாஸனை முதலியவற்றிலுமேகூட கொஞ்சம் தப்புகளுக்கும் இடம் கொடுத்துப் போகக்கூடும்தான். முடிவிலே நாம் ஸாதிக்கும் ஸாதனைக்கும் அவனருளே காரணம் என்பதை மறந்து, ‘நாமாக்கும் ஸாதித்தோம்’ என்று தற்பெருமை ஏற்படலாம். அதற்காகத்தான் இவை எல்லாம் வராமல் முடிந்தமட்டும் பாதுகாத்துக் கொள்வதற்காக ஆரம்பதிலிருந்தே கெட்டதோடு நல்லதற்கும் அப்பாற்ப்பட்டதான அத்தைவ நிலையின் நினைப்பு வேண்டும் என்பது. ‘நாம் பண்ணுகிற இந்த எதுவுமே நிஜமான நமக்காக இல்லை; ஏதோ ஒரு வேஷத்தில் மாட்டிக்கொண்டு விட்டோம்; அது ராஜ பார்ட்டாகத்தான் இருக்கட்டும்; இல்லாவிட்டால் ஆண்டிப் பரதேசியாகத்தான் இருக்கட்டும்; ராஜ வேஷமானாலும் அந்த கீரிடம், குண்டலம், பீதாம்பரம் எல்லாவற்றையும் அவிழ்த்துப் போடத்தான் வேண்டும்; ஆண்டி வேஷமானாலும் பொய்ததாடி, ஜடாபாரம் எல்லாவற்றையும் எடுத்துப் போடத் தான் வேண்டும்’ என்று ஒரு நினைப்பைக்கொஞ்சம் கொஞ்சம் வைத்துக்கொண்டேயிருக்க வேண்டும். அப்போது இந்தப் பொய் வேஷத்துக்குள்ளேயே நாம் நல்லவன் வேஷம் போடும்போது கெட்டவை வந்து சேர்ந்துவிடாமல் காப்பாற்றிக் கொள்ளலாம். இதெல்லாமே நிலைத்து நிற்கக் கூடாதவைதான் என்ற நினைப்பு ஏற்படும்போது நல்ல நாடக பாத்ரமாக, அதாவது தேவர்கள் மாதிரி வேஷம் போடும்போதுகூட, அதையே ஸ்திரமாகக் காப்பாற்றிக் கொள்வதற்காக எதுவும் செய்யாமலிருப்போம். தாங்கள் தேவர்களாக இருக்கிற நிலையிலேயே ஸ்திரமாக இருக்க வேண்டும் என்ற அபிமானப் பிடிப்பினால்தான் புராணங்களில் வரும் தேவர்களும் அவ்வப்போது தப்பில் போனது. எல்லாமே பொய் வேஷம், நிஜ நாம் இல்லை என்று நாம் அறிந்தால் தேவர்களுக்கு உண்டான அஹம்பாவ கர்வம் நமக்கு உண்டாவதற்கு இடம் இல்லை.

‘அஹம்பாவம்’ என்றால் ஒரு அர்த்தம் ‘நான் என்பது என்ன என்று உணர்வது’. ‘அது இப்போது நமக்குத் தெரியவேயில்லை. தெரியவிடாமல் நம்முடைய கர்மா அழுக்காகப் படிந்திருக்கிறது. அதைத் துடைக்கவே இத்தனை பாடும் படுகிறோம்’ என்ற எண்ணத்தை அன்றன்றும் கொஞ்சம் வளர்த்துக்கொண்டு விட்டால், அப்புறம் அஹம்பாவமும் கர்வமும் எப்படி உண்டாகும்? மனஸினால் உண்டாகும் அஹம்பாவம் போகச்செய்கிற ஸாதனையிலேயே அஹம்பாவப் படாமிலுருக்க ஆத்ம சிந்தனை அவசியம். ஆனால், அது ஆரம்பப் படிகளில் அதிகம் ஸாத்யமில்லாததால் அஹம்பாவம் போவதற்கும், ஸத்குணம் வளர்வதற்கும், ஸத் கர்மா பண்ணுவதற்கும் ஆதாரமாக அப்போது இருக்கிற பெரிய துணை ஈச்வர பக்தியே. மனஸைக் கண்டபடி அலையவிடாமல், ஜீவனுக்குக் கர்ம மார்க்கமானது அநேக ஸத் கார்யங்களைக் கொடுத்து சுத்தி பண்னினாலும் அது (அந்த மனஸ்) அன்பிலே வளர்வதற்கு ஈச்வர பக்திதான் ஆதாரமாக இருக்கிறது.


* கேநோபநிஷத்

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is 'ரவை ஸல்லா' உவமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அன்பின் பல பெயர்கள்
Next