தவறான குற்றச்சாட்டு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அதர்மம் மாதிரியே தர்மமும் மாயை என்கின்ற அத்வைதத்தால் இந்த லோக வாழ்க்கையில் இருப்பவர்கள் அதர்மமாகப் போவதற்கு இடம் கொடுத்துவிடுகிறது என்று யாராவது சொன்னால் அது அத்வைத சாஸ்த்ரங்களைக் கொஞ்சங்கூடப் புரிந்துகொள்ளாமல் பேத்துவதுதான்.

அப்படியேதான், ‘ஜீவாத்ம – பரமாத்ம பேதமில்லை என்று சொல்லிக்கொண்டு அத்வைதிகள் ஈச்வரோபாஸனையை விடச்சொல்வதால் பக்திக்கு ஹானி ஏற்பட்டுப் பெருவாரியான ஜனங்களுக்குப் பிடிப்பு இல்லாமல் கஷ்டப்படும்படி ஆகிறது’ என்று க்ரிடிஸைஸ் பண்ணுவதும் விஷயம் தெரியாமல் செய்கிற குற்றச்சாட்டுதான்.

ஞான மார்க்கத்துக்கு அதிகாரிகளாகப் பக்வப்பட்டவர்களுக்கென்று பரம அத்வைதமாக எழுதப்பட்டுள்ள சாஸ்த்ர நூல்களில் இப்படிப்பட்டவர்களை முன்னிட்டு, அவர்கள் கொஞ்சங்கூட சித்தம் சிதறாமல் அத்வைதத்திலேயே ஒரு முகப்பட வேண்டுமென்பதற்காக கர்மா – பக்திகளின் த்வைதம் அடியோடு எடுபட்டுப் போகும் அடிப்படையிலேயே வழிபோட்டுக் கொடுத்திருப்பது வாஸ்தவம். ஆனால் பரம அத்வைதிகளும் ஸகல ஜனங்களையும் முன்னிட்டுப் புஸ்தகம் எழுதும்போதோ, கார்யம் செய்யும்போதோ அவர்கள் புஷ்கலமாக ஸ்வதர்ம கர்மாநுஷ்டானமும், ஸகுண உபாஸனையும் பண்ணுவதில்தான் ஆரம்பிக்கவேண்டுமென்று தீர்மானமாகக் காட்டியிருக்கிறார்கள்.

ஆசார்ய பாஷ்யங்களில் திரும்பத் திரும்ப உத்தமாதிகாரிகளுக்கே ஸ்வச்சமான ஞான மார்க்கம் மட்டுமென்றும், மத்யம- அதம அதிகாரிகள் ஒருகாலும் கர்மாநுஷ்டானத்தையும், ஈச்வேராபாஸனையையும் விடாமல் பின்பற்றத்தான் வேண்டுமென்றுமே சொல்லியிருக்கிறது.

அத்வைதிகளான மதுஸூதன ஸரஸ்வதிகள், அப்பைய தீக்ஷிதர் முதலானவர்கள் ஏராளமான பக்தி நூல்களை உபகரித்திருக்கிறார்களென்றால், கோவிந்த தீக்ஷிதைரைப்போன்றவர்கள் நிறைய யஜ்ஞ கர்மாநுஷ்டானங்களும், ஸமூஹ நலனுக்காக அநேகப் பரோபகாரப் பணிகளும் செய்திருக்கிறார்களென்றால் எதனால்? கர்மா, பக்திகளை ஸாதாரண தசையிலுள்ள ஜனங்களெல்லாம் அநுஷ்டானம் செய்ய வேண்டுமென்று வழிகாட்டிக் கொடுப்பதற்குத்தான்!

அத்வைதம் என்றாலே கரித்துக் கொட்டிக் கண்டிக்கிற த்வைதிகளின் பலவிதமான ஸித்தாந்தங்களுக்குங்கூட ஒவ்வொரு நிலையில் நியாயமுண்டு என்று மனஸார நினைத்து, அந்த நிலைக்கே பக்வப்பட்ட ஜனங்களை அவற்றிலேயே நிலை நிறுத்த வேண்டுமென்ற உயர்ந்த ‘ஸிம்பதி’யோடு (அநுதாபத்தோடு) அந்த ஸித்தாந்தங்களை எடுத்துச் சொல்லும் புஸ்தகங்களையும் எழுதிய அத்வைதப் பெரியார்கள் உண்டு.

ஸாங்க்யம், பூர்வ மீமாம்ஸை, ந்யாய (தர்க்க) சாஸ்த்ரம் முதலானவை அத்வைதத்துக்கு வித்யாஸமானவை. யோக சாஸ்த்ரம்கூட அத்வைதத்துக்கு அப்படியே ஒத்துப்போகாதுதான். ஆனலும் அத்வைத சாஸ்த்ர கர்த்தர்களில் முக்ய ஸ்தானம் வஹிக்கும் ஒருவரான வாசஸ்பதி மிச்ரா மற்ற இந்த எல்லா சாஸ்த்ரங்களை விளக்கியும் புஸ்தகங்கள் எழுதியிருக்கிறார்.

வித்யாரண்யாள் (அத்வைத) ஆசார்ய பீடத்திலேயே இருந்தவர். அவர் ‘ஸர்வ தர்சன ஸங்க்ரஹம்’ என்று ஒரு நூல் எழுதியருக்கிறார். அதிலே லோகாயதம் என்கிற நாஸ்திகம் உள்பட, எல்லா ஸித்தாந்தங்களின் கருத்துக்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதை எல்லா விதமான ஸ்மப்ரதாயங்களுக்கும் digest என்று சொல்லலாம்.

இதையெல்லாம் விட வேடிக்கை – விசேஷம் என்றும் சொல்லலாம் – இப்போது மத்வரின் த்வைத ஸித்தாந்தம், ராமாநுஜரின் விசிஷ்டாத்வைதம், ஸ்ரீ கண்டாசார்யாரின் சைவ ஸித்தாந்தம் முதலியவற்றை அறிய விரும்பும் ஸம்ஸ்க்ருத ஞானமுள்ளவர்கள் அவற்றுக்காகக் படிக்கும் திட்டவட்டமான நூல்கள் எவை என்றால் அத்வைதியான அப்பைய தீக்ஷிதர் அவை ஒவ்வொன்றையும் அநுஸரித்து ப்ரஹ்ம ஸூத்ரத்துக்கு எழுதியுள்ள பாஷ்ய நூல்கள்தான்!

த்வைதத்துக்கு இவ்வளவு இடம் தந்து “அகாமடேட்” பண்ணும் அத்வைதிகள் ஒருபோதும் கர்மாநுஷ்டானம், பக்தி ஆகியவை கலகலத்துப் போகும்படிப் பண்ணி லோகப்ராயாமான பெருவாரி ஜனங்கள் தர்மத்தில் பிடிப்புவிடும்படியாகவோ, அன்பு முதலான குணாபிவ்ருத்தியில் அக்கறை காட்டாதபடியோ செய்யவே இல்லை.

ஆசார்யாள் செய்துள்ள பக்தி ஸாஸ்தரங்கள் எத்தனை? அவர் க்ஷேத்ராடனம் செய்து பண்ணியுள்ள ஆலய புனருத்தாரணம், யந்த்ர ப்ரதிஷ்டை முதலானவற்றுக்கு கணக்கு உண்டா? இன்றைக்கும் அவர் பேரில் நடக்கிற மடங்களில் வைதிக கர்மாநுஷ்டான, வேத அத்யயனாதிகளுக்கும், ஸகல ஜனங்களும் சாஸ்த்ர வழிப்படி தர்மாசரணை பண்ணவும், பூஜை, ஆலய கும்பாபிஷேகம் முதலியன நடக்கவுந்தானே விசேஷமாக ஊக்கம் கொடுத்தும், உபதேசம் செய்தும் வருகிறோம்?

லக்ஷ்யம் மறக்கப்படாது என்ற இப்போது ஏதோ அத்வைத உபந்நியாஸம் பண்ணுகிறேனே தவிர, நீங்கள் தனியாக என்னிடம் வந்தால், வந்து மாட்டிக்கொண்டால், ‘ஸந்த்யாவந்தனம் பண்ணுங்கள், ஒளபாஸனம் பண்ணுங்கள், அம்பாள் ஸந்நிதியில் நெய் தீபம் போடுங்கள், ப்ரகாரத்தில் முள்ளை பிடுங்குங்கள், குளம் வெட்டுங்கள், ஆஸ்பத்திரிகளில் ப்ரஸாதம் விநியோகியுங்கள், பிடி அரிசித் திட்டத்தை ஏற்று நடத்துங்கள்’ என்றெல்லாம் சொல்லித் தானே கஷ்டப்படுத்துகிறேன்? இப்படியெல்லாம் த்வைதமாகக் கஷ்டப்படுத்தியே, ஏற்னெவே ஸம்பாதித்துக் கொண்டுள்ள த்வைதக் கஷ்டத்தைப் போக்குவதற்கு ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசார்யாள் உத்தரவு போட்டு விட்டுப் போயிருப்பதால்தான் இந்த மாதிரி (செய்கிறேன்) .

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is தர்ம மருந்து
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தர்ம - அதர்மங்களும் அத்வைதியும்
Next