திருப்பெயர்களின் பொருள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

‘கோவிந்தன்’ என்றால் ‘இந்த்ரியங்களை அடக்கி ஆளுகிறவன்’ என்றும் அர்த்தம் சொல்வார்கள். இந்த இடத்தில் ‘கோ’ என்றால் இந்த்ரியங்கள். ‘பார்ப்பார் அகத்துப் பாற் பசு ஐந்து’ என்று திருமூலர் சொன்ன இந்த்ரியப் பசுதான் ‘கோ’. ‘கேசவன்’ என்பதற்கும் இப்படியே தத்வார்த்தமாக ‘க + அ + ஈச + வ’ என்பதே கேசவன் என்று வ்யாக்யானம் செய்வார்கள். க என்றால் ப்ரம்மா. வேதத்திலேயே அப்படிப் பெயர் சொல்லியிருக்கிறது. அ என்பது விஷ்ணு. ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்றபடி விச்வத்தின் ரூபமாக இருக்கிற விஷ்ணுதான் அ! அ, உ, ம என்ற மூன்றும் சேர்ந்த ப்ரணவமான ‘ஓம்’ என்பதில்கூட அ என்பது விஷ்ணு, உ என்பது ஈச்வரன், ம என்பது ப்ரம்மா என்ற த்ரிமூர்த்தி ஸ்வரூபமாகத்தான் சொல்லியிருக்கிறது. அப்படியே “கேசவ” நாமாவிலும் க என்பது ப்ரம்மா, அ என்பது விஷ்ணு. ஈச என்பது ஈச்வரன் (சிவன்) – இந்த மூவரையும் தன் வசத்தில் வைத்துக் கொண்டிருக்கிற பரமாத்மாதான் ‘கேசவன்’ என்று அர்த்தம் பண்ணுவதுண்டு.

மது மாதிரி – தேன் மாதிரி – மதுரமான ரூபத்தோடும் ஸ்வபாவத்தோடும் இருப்பவன் மாதவன். இதுவும் விசேஷமாக க்ருஷ்ணன் பேராகவே இருக்கிறது, ஆனால் மஹாவிஷ்ணுவுக்கே இந்த பெயர் உண்டு. மது – கைடபர் என்ற இரண்டு அஸுரர்களை மஹாவிஷ்ணு ஸம்ஹாரம் பண்ணினார். மதுவைக் கொன்றதால் மாதவன் என்ற பெயர் வந்தது. இன்னொரு அர்த்தமும் உண்டு. ‘மா’ என்றால் லக்ஷ்மி. காமாக்ஷி என்று அம்பாளின் பெயர் இருக்கிறதே, அதில் நடுவே வருகிற ‘மா’வுக்குக்கூட ‘லக்ஷ்மி’ என்று அர்த்தம் பண்ணுவதுண்டு. ‘சிவ’ பத்னி ‘சிவா’ என்பதுபோல, ‘க’ என்ற ப்ரம்மாவின் பத்னியான ஸரஸ்வதிக்குக் ‘கா’ என்று பெயர். ‘கா’வான ஸரஸ்வதியும் ‘மா’வான லக்ஷ்மியும் எவளுக்கு இரண்டு அக்ஷங்களாக (கண்களாக) இருக்கிறார்களோ, அவளே ‘காமாக்ஷி’! தீக்ஷிதர்கூட ‘நீரஜாக்ஷி காமாக்ஷி’ க்ருதியில் லக்ஷ்மியும் ஸரஸ்வதியும் காமாக்ஷிக்கு இரண்டு கண்களாக இருப்பதை, ‘சாரதா ரமா நயனே’ என்கிறார். ‘மா’ என்றே தமிழிலும் லக்ஷ்மியைச் சொல்லியிருக்கிறது. ‘தவன்’ என்றால் புருஷன் (கணவன்). தவன், அதாவது புருஷன், இல்லாதவள் விதவா. லக்ஷ்மி நாயகனாதலால் மஹா விஷ்ணுவுக்கு மா+தவன்; மாதவன் என்று பேர். மாரமணன் என்றும் ஒரு பேர்.

பன்னிரண்டு நாமாக்களில் இன்னொன்றான ‘மதுஸூதன’ என்பதும் மது என்ற அஸுரனைக் கொன்றைதைத்தான் குறிப்பிடுகிறது. இது மஹாவிஷ்ணு பன்ணின கார்யமானாலும் க்ருஷ்ணன் பூர்ணாவதாரமானபடியால் பொதுவில் அவரையே மதுஸூதனன் என்று சொல்கிறோம்.

இப்படியே ‘ஹ்ருஷீகேசன்’ என்ற பெயரும். ‘ஹ்ருஷீகம்’ என்றால் இந்த்ரியங்கள். அவற்றை அடக்கி ஆளுகிற ஈசன் தான் ஹ்ரூஷீகேசன். கீதையில் ‘ஹ்ருஷீகேசன்’ என்ற பெயரையே அநேக இடங்களில் க்ருஷ்ணனுக்குக் கொடுத்திருக்கிறது.

பன்னிரண்டு நாமாக்களில் நாராயணன், விஷ்ணு, ஸ்ரீதரன், பத்மநாபன் என்ற நாலு பெயர்கள் நேராக மஹா விஷ்ணுவைக் குறிப்பதாக இருக்கின்றன. த்ரிவிக்ரம, வாமன என்ற இரண்டும் வாமன ப்ரம்மச்சாரியாகக் குட்டையாக வந்து அப்புறம் த்ரிவிக்ரமனாக வளர்ந்து உலகளந்த அவதாரத்தைச் சொல்கின்றன. கேசவன், மாதவன், கோவிந்தன், மதுஸூதனன், ஹ்ருஷீகேசன், தாமோதரன் என்ற பாக்கியுள்ள ஆறு பெயர்களும் லோக வழக்கில் க்ருஷ்ண நாமாக்களாகவே கருதப்படுகின்றன. ராமாவதாரம், நரஸிம்ஹாவதாரம் முதலிய மற்ற அவதாரங்களுக்கு ஏற்பட்ட தனிப் பெயர்கள் இந்தப் பன்னிரண்டில் இல்லை.

வேத ஸூக்தங்களில் மஹாவிஷ்ணு த்ரிவிக்ரமனாக வந்ததையே விசேஷமாய்ச் சொல்லியிருக்கிறது. பிற்பாடு புராணங்களிலும், பஜனை, ஸங்கீர்த்தனம் முதலானவைகளிலும் க்ருஷ்ணனையே பூர்ணாவதாரம் என்று விசேஷித்திருக்கிறது. த்வாதச நாமாக்களிலும் இந்த இரண்டு அவதாரப் பெயர்களே இருக்கின்றன!

இந்தப் பன்னிரண்டு பெயர்களில் தாமோதர, கோவிந்த என்ற இரண்டை “ஷட்பதீ”யின் ஆறாவது ச்லோகத்தில் ஆசார்யாள் ப்ரயோகித்திருக்கிறார். முதல் ச்லோகத்தில் “அவிநயம் அபநய விஷ்ணோ!” என்று விஷ்ணுவை அழைத்து இந்த ஸ்தோத்ரத்தை விஷ்ணுபரமாகவே ஆரம்பித்தாலும், இங்கே பூர்ணாவதாரமான க்ருஷ்ணனின் இரண்டு பெயர்களாலே கூப்பிட்டு முடிக்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is தாமோதரன்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  நிர்குணமும் குணநிலையமும்
Next