பவக்கடல் கடையும் பகவத் மத்து! : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இப்படி அநேகச் சிறப்புகள் பொருந்திய கோவிந்த நாமாவைச் சொல்லி பகவானை அழைத்து, ‘பவ ஜலதி மதன மந்தர’ என்கிறார் ஆசார்யாள்.

‘பவம்’ என்றால் ஸம்ஸாரம்; ‘ஜலதி’ என்றால் ஸமுத்ரம். ‘பவ ஜலதி’ என்றால் ஸம்ஸார ஸாகரம். ‘மதன’ என்றால் கடைவது. Mathana என்று சொல்லவேண்டும். Madana என்றால் மன்மதனுக்குப் பேராகிவிடும். Madana என்றால் போதை உண்டாக்குவது என்று அர்த்தம். அப்படிப் பண்ணும் மதனவேள் ஜனங்களின் மனஸை மதனம் (Mathanam) பண்ணுகிறார் போல் காமத்தினால் கடைந்து கொந்தளிக்கச் செய்வதால்தான் மன்மதன் (Manmathan) என்றும் பெயர் பெற்றிருக்கிறான். தயிரை மத(tha)னம் பண்ணுகிறபடியால்தான், தயிர் சிலுப்பும் குச்சியை ‘மத்து’ என்கிறோம். ‘மந்தர’ என்பது மந்தர மலை என்று பொருள்படும். ‘பவ ஜலதி மதன மந்தர’ என்றால் ‘ஸம்ஸார ஸாகரத்தைக் கடைகிற மந்தரமலையாக இருக்கிறவனே!’ என்று அர்த்தம்.

அம்ருத மதனத்துக்காகப் பாற்கடலை தேவாஸுரர்கள் கடைந்தபோது மந்தரமலையைத்தானே மத்தாகப்போட்டு, அதிலே வாஸுகிப் பாம்பைக் கயிறாகச் சுற்றிக் கடைந்தார்கள்? அந்த மாதிரி இப்போது நாம் மாட்டிக்கொண்டிருக்கிற இந்த சாவுக்களமான ஸம்ஸார ஸாகரத்திலிருந்தும் நித்யத்வமுள்ள மோக்ஷமான அம்ருதத்தைப் பெறுவதற்காக பகவானே மந்தர மலையாக வரவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார். பாற்கடலைக் கடைந்தபோது மந்தரமலை அலைகளில் நிலை தடுமாறாதபடி மஹாவிஷ்ணுதான் ஆமை ரூபத்தை எடுத்துக்கொண்டு அதைத் தூக்கிக் தாங்கிக்கொண்டார். அதுதான் கூர்மாவதாரம். இந்த ஷட்பதீ ஸ்தோத்திரத்திலேயே நாலாம் ச்லோகத்தில் ‘உத்த்ருத நக’ என்றபோது இப்படி பகவான் மலையைத் தாங்கியதைச் சொல்லியிருக்கிறது. (கூர்மாவதாரத்தில் மந்தர மலையைத் தாங்கினது, க்ருஷ்ணாவதாரத்தில் கோவர்த்தனகிரியைத் தூக்கினது என்ற இரண்டு ஸந்தர்ப்பங்களில் பகவான் ‘உத்த்ருத நக’னாக இருந்திருக்கிறான்.)

பாற்கடலில் மந்தர மலையைத் தாங்கினவனையே இங்கே, ‘பவஜலதி மதன மந்தர’ என்னும்போது ஸம்ஸார ஸாகரத்தைக் கடைய உதவுகிற ஒரு மந்தர மலையாக உருவகப்படுத்துகிறார், இங்கே மலையைத் தாங்குகிறவனாக அன்றி மலையாகவே வர்ணிக்கிறார். இதற்கு அர்த்தம் என்ன? ஸம்ஸார ஸாகரத்திலிருந்து கடத்துவிக்கிறான் என்று வழக்கமாய்ச் சொல்வதுபோல் சொல்லாமல், ஸம்ஸார ஸாகரத்தைக் கடைகிற மத்தாக இருக்கிறான் என்று ஏன் சொல்லவேண்டும்?

பாற்கடலைக் கடைந்தபோது முதலில் விஷம் வந்தது; அப்புறம்தான் அம்ருதம் வந்தது. கடைந்து கடைந்து முதலில் அதிலிருக்கிற கெட்டதை எல்லாம் விஷ ரூபத்தில் திரட்டி வெளிப்படுத்திய அப்புறந்தான், நல்லதான அம்ருதம் வந்தது. நம்முடைய வாழ்க்கையும், ஸம்ஸாரத்தையும் இப்படிக் கடையவேண்டும். தன்னாலே அது அலை அடித்துக் கொண்டிருப்பதுதான். காம, க்ரோதாதிகளான பல சலனங்களலால் அது அலைவீசிக்கொண்டிருக்கிறது. ஆனால், அதற்குள்ளேயே ஈச்வர தத்வமும் அம்ருதம் போல் இருக்கத்தான் செய்கிறது. இந்த ஸம்ஸாரக் கடலை நன்றாக கடைந்து காம, க்ரோதாதிகள் விஷமாகத் திரண்டு வெளியே போகும்படி செய்து விட்டால் அப்புறம் திவ்ய அநுபவம், ஈச்வர ஸாக்ஷாத்காரம் என்கிற அம்ருதம் வந்துவிடும். முதலில் கெட்டதை எல்லாம் திரட்டவேண்டும். எதற்காக என்றால், வைத்துக்கொண்டு அநுபவிப்பதற்காக அல்ல. வெளியிலே துரத்துவதற்காகத்தான்! குப்பையை எல்லாம் ஒரு இடமாக பெருக்கித் திரட்டி வெளியிலே கொட்டுவதுபோல! அப்படி வெளியிலே துரத்துகிறவரை கெட்டதுகள் இருக்கத்தான் செய்யும். அவற்றை பகவானே மத்தாக வந்து ஒன்றாகச் சேர்த்து ஒரு இடத்தில் concentrate செய்து (திரட்டிக்) கொடுக்கிறான். பூஜை, க்ஷேத்ராடனம், ஸ்தோத்ரம் படிப்பது, ஜபம், த்யானம் என்கிற ஸாதனையெல்லாம் பகவானின் அநுக்ரஹ ஸ்வரூபம்தான். இப்படிப்பட்ட ஸாதனைகளால் வாழ்க்கைக் கடலை கடந்து முதலில் விஷத்தைத் திரட்ட வேண்டும். பிறகு, அதை வெளியே அனுப்பிவிடவேண்டும். அப்புறம் அம்ருதத்தை அடையவேண்டும்.

ஆகக் கூடி, எடுத்தவுடன் அம்ருதம் வேண்டும் என்றால் முடியாது. விஷத்தை அநுபவித்து தீர்த்தபின்தான் அம்ருதம் வரும். வாழ்க்கையில் கெட்டது, கஷ்டம், காம, க்ரோதம் எல்லாம் இருந்துதான் ஆகவேண்டும். போகப் போக இதையெல்லாம் விலக்கிவிட்டு ஒரே நல்லதாக, பேரின்பமாக ஆகவேண்டும்.

கெட்டதுகள் இருக்கின்றனவே என்று நாம் ஓயாமல் அழுதுகொண்டும், பயந்துகொண்டும், நம்பிக்கை இழந்து கொண்டும் இருக்கவேண்டாம் என்று ஆறுதலாகத் தெம்பு ஊட்டுகிற விதத்தில் ‘பவஜலதி மதன மந்தர’ என்று ஆசார்யாள் சொல்கிறார். மத்து போட்டுக் கடைகிறபோது எத்தனை கொந்தளிப்பு, எத்தனை பாடுபடவேண்டியிருக்கிறது? அம்மாதிரி நம் பூர்வ கர்மா, பழைய வாஸனைகள் தீருவதற்கும் வாழ்க்கையைக் கடைகிற கடையில் மொத்துப்படவேண்டும். இப்படிப் பல சோதனைகளில், பரீக்ஷைகளில் தேறின பிறகுதான் விமோசனம் கிடைக்கும். அப்புறம் விமோசனம் கிடைப்பதற்காகவே, இப்போது ஸாக்ஷாத் பகவான்தான் இத்தனை கொந்தளிப்பை உண்டாக்குகிறான் என்று தெரிந்துவிட்டதானால் நம்முடைய பயம், அழுகை, நம்பிக்கைத் தளர்ச்சியெல்லாம் போய்விடும்.

மத்வாசார்யார் உடுப்பியிலே ப்ரதிஷ்டை பண்ணிய க்ருஷ்ணன் கையில் மத்து இருக்கிறது. பகவானே மந்தர மலை என்ற மத்தாக வந்து ஸம்ஸார ஸாகரத்தைக் கடைகிறான் என்று சங்கராசார்யார் சொல்கிறார்!

மத்தைக் கயிற்றால் சுற்றுகிற மாதிரி பகவானையே சுற்றிக் கட்டிப்போட்டிருந்தபோதுதான் அவன் தாமோதரனானது. மத்தைப்போட்டு யசோதை தயிர் கடைந்துகொண்டிருந்தபோது அவளிடம் பாலக்ருஷ்ணன் பால் குடித்துக் கொண்டிருந்தான். அடுப்பிலே பால் பொங்கி வந்தது. அதனால் குழந்தைக்குப் பால் கொடுப்பதை விட்டுவிட்டு அவள் எழுந்திருந்தாள். அதிலே ஏற்பட்ட ஆத்திரத்தால்தான் ஸ்வாமி தயிர்ச்சட்டியை உடைத்து, உறி வெண்ணெயை எடுத்துக் குரங்குகளுக்கு உபசாரம் பண்ணி, முடிவிலே யசோதை கட்டிப்போட, தாமோதரனாக ஆனது. ‘தாமோதர’ என்று ச்லோகத்தை ஆரம்பித்து, அப்புறம் அவனையே மத்தாகச் சொல்வதில், இந்த ஸ்தோத்ரம் பூராவும் ஒன்றிலிருந்து ஒன்றாக அபிப்ரயாங்கள் கிளைவிட்டுக்கொண்டு போகிற அழகில் இன்னொன்றைப் பார்க்கிறோம்!

ஸம்ஸார ஸாகரத்தைக் கடையும்போது முதலில் ஏன் விஷம் வரவேண்டும், லோக வாழ்க்கையில் ஏன் கஷ்டம் இருக்க வேண்டும், கெட்டது இருக்கவேண்டும் என்றால் அதுதான் பகவானுடைய விளையாட்டு. இயற்கை நியதியிலேயே இப்படித்தான் வைத்திருக்கிறார். காய் கசக்கத்தான் வேண்டும். அப்புறம் கசப்புக் காயே துவர்ப்பாக வேண்டும், அதற்கப்புறம் துவர்ப்பு, புளிப்பாக வேண்டும், கடைசியில் தான் புளிப்பு தித்திப்பாகவேண்டும் என்று வைத்திருக்கிறார். அப்படியே நம்முடைய காமம், க்ரோதம் முதலிய கசப்பு எல்லாம் படிப்படியாகத்தான் துவர்த்து, புளித்து அப்புறம் ப்ரசாந்த மதுரமாக வேண்டும். ஆதலால் நமக்கு இந்த தோஷங்கள் இருக்கிறதே என்று அழவேண்டாம். பகவானை நினைத்துக்கொண்டு, பக்தியோடு இருந்துகொண்டு, கர்மாநுஷ்டானங்களைப் பண்ணிக்கொண்டு, ஜனங்களுக்கு நம்மாலான தொண்டைச் செய்துகொண்டு இருந்தால் தன்னால் காலக்ரமத்தில் இந்த தோஷம் எல்லாம் போய்ப் பழுத்த பழமாக, அன்பு என்கிற ஒரே மதுரமயமாக ஆகிவிடுவோம். இம்மாதிரி பக்தி, கர்மாநுஷ்டானம், ஸேவை, த்யானம் முதலியவை இல்லாவிட்டால் கசப்பு மாறவே மாறாது.

இப்போது இத்தனை தோஷங்களோடு இருக்கிற மாதிரியே மனம் போனபடி இருந்துகொண்டு எப்போதும் கசப்பாக இருப்பதும் ஸரியில்லை. தோஷம் இருக்கிறதே என்று ஓயாமல் அழுதுகொண்டிருப்பதும் ஸரியில்லை. செய்ய வேண்டிய கர்மாக்களைப் பண்ணிக்கொண்டே போனோமானால் கசப்பு எல்லாம் மாறவேண்டியபோது மாறும்; மதுரமயமாய்விடும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is குரு - தெய்வ 'கோவிந்த'
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  சில உதாரணர புருஷர் போதும்
Next