அதுவும் ஓர் அழகு! : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஸ்வய மரியாதை என்பது கொஞ்சம் கவனக் குறைவாக இருந்துவிட்டால் தற்பெருமையாகி விடும். அப்படிப்பட்ட ஸமயங்களில் மற்றவர்களைத் தூக்கி எறிந்து ஆணவமாகவே கூடப் பேசிவிடுவதுண்டு. அதாவது, மற்றவரின் ஸ்வய மரியாதையை பங்கப்படுத்துவதுண்டு. நல்ல கவிஞர்களாக, அறிந்தவர்களாக உள்ளவர்களும் இப்படி ஒவ்வொரு ஸந்தர்ப்பத்தில் பண்ணியிருக்கிறார்கள். காளிதாஸன், கம்பன் ஆகியவர்களைப் பற்றியே இம்மாதிரியான கதைகளும் இருக்கின்றன. அதிலும் கதா ரஸம் இருப்பதால் சொல்கிறேன்.

இந்த விஷயங்களை ‘deep’ -ஆக எடுத்துக்கொண்டு அவர்களை எடை போட்டுவிடக்கூடாது. அவர்களுடைய உயர்ந்த குணங்களும் பண்புகளும் பெரிய ‘ரிஸர்வாயர்’ மாதிரித் தேங்கியிருந்ததென்றால், அதிலே மேல் பரப்பிலே எப்போதோ எழுந்திருந்து அப்புறம் அமுங்கிப் போய்விடுகிற அலைகள் மாதிரிதான் இவற்றை நினைக்கவேண்டும். இப்படி அலை கொஞ்சம் வீசுவதே ரிஸர்வாயருக்கு அழகு. நம்மிடம் தற்பெருமை அலையடித்தால் அது சொம்பு மாதிரி, டம்ளர் மாதிரி இருக்கிற ஜலத்தில் அலை அடிப்பதுபோன்ற விபரீதமாக ஆகும்!

தங்களுடைய மேதாவிலாஸத்தைக் ‘கான்ஷஸாக’த் தெரிந்துகொண்டிருந்த கவிகளும் அறிஞர்களும் இப்படி மற்ற கவிகளையோ, பண்டிதர்களையோ, ஆதரவாளர்களான ப்ரபுக்களையோ அலக்ஷ்யமாகப் பேசி, பாடியிருப்பதாக அநேகத் துணுக்குகள் இருக்கின்றன.

ஸாதாரணமாக போட்டி, பொறாமை இருப்பது தப்புதான். ரொம்பத் தப்புதான். ஆனாலும் வித்யை வளர வேண்டுமானால் அதற்கு இதுவும் உதவி பண்ணுகிறது, ஸ்பர்தயா வர்ததே வித்யா என்பார்கள். ரன்னிங் ரேஸில் கலந்துகொண்டவன் போட்டி தப்பு என்று பின்னாடி நின்று விட்டால் எப்படியிருக்கும்? ஒரு மாணவன் மற்றவர்கள் rank எடுக்கட்டுமென்று போட்டிபோடாமல் இருந்தால் ஸரியா?

பொறாமையில்லாமல் போட்டி இருப்பதுதான் உத்தமம். அதுதான் ஸரி. ஆனால் பெரிய பண்டிதர்கள், கவிகள் விஷயத்தில் இந்தப் பொறாமைகூட மிஞ்சிப் போகாதபோது அவர்களுடைய குணசித்ரத்துக்கு ஒரு ‘கான்ட்ராஸ்ட்’ (வேறுபாட்டு ருசி) தருவதாகவே அழகு செய்கிறது. மிஞ்சிப் போகும்போது அவர்களுக்கும் ஒரு குட்டு விழுந்து பாடம் பெற்று அடங்கியும் போயிருக்கிறார்கள்.

காளிதாஸன் யாரை எடுத்தெறிந்து பேசினானென்றால், தன்னுடைய ஸஹ கவிகளையோ ராஜாவையோ அல்ல, அதற்கும் மேலே அம்பாளை, ஸாக்ஷாத் பராசக்தியையே அப்படிப் பேசிவிட்டான்!

அவளுடைய உச்சிஷ்ட தாம்பூலம்தான் அவனுக்கு கவித்வ சக்தியைக் கொடுத்தது! “காளி – தாஸன்” என்பதாக அவளுடைய அடிமை என்றே பேர் வைத்துக் கொண்டிருந்தான். அம்பாள் ஸ்தோத்ரம் என்றவுடன் யாரும் கற்றுக் கொண்டு செல்லும் “ச்யாமளா தண்டகம்” அவன் வாக்கிலிருந்து வந்ததுதான்.

ஆனாலும் என்ன ஆயிற்று என்றால் :

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is 'நம் பந்து'
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தெய்வத் தீர்ப்பு கோருவது
Next